valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தர்ப்பத்தில் தேவ் கேட்டார், "இங்கே கந்தல் துணி ஏதாவது இருக்கிறதா என்ன?" பாபா இருக்கையிலிருந்து எழுந்தவாறே சொன்னார், "நீர் அதைத் தேடும். உம்முடைய திருட்டுப்புத்தி கெடுதலானது.-

"குறும்புத்தனமான குழந்தை ஏதாவது அதை எடுத்திருக்கலாம். பாரும் பாரும்; இங்கேதான் எங்காவது இருக்கும்". இதைக் கேட்ட தேவ் மேலும் தேட ஆரம்பித்தார்; ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சாயி புருவங்களைச் சுருக்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு, தேவை முறைத்துப் பார்த்துச் சத்தம் போட்டார். அவர் ஏசியதாவது,-

"நீர் ஒரு பித்தலாட்டக்காரன். உம்மைத் தவிர வேறு யார் இந்த நேரத்தில் கந்தல் துணியைத் திருட இங்கு வருவான்? நான் உம்மை, உம்மைதான், திருடனென்று கொள்கிறேன்.-

"இவ்வாறு இங்கு நீர் வந்தது திருடுவதற்காகவா? தலைமயிர் கறுப்பிலிருந்து வெளுப்பாக மாறியும் உம்முடைய கெட்ட பழக்கத்தை நீர் லவலேசமும் (சிறிதளவும்) கைவிடவில்லை. -

"நான் உம்மைக் கோடரியால் வெட்டுவேன்; கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவேன்; உயிரைப் பறிப்பேன்! நீர் என்னுடைய கைகளிலிருந்து எங்கே தப்பிச்ச செல்ல முடியும்? நீர் எங்கே சென்றாலும் அங்கே வந்து உம்மைக் கொல்வேன்!-

"உம்முடைய இல்லத்திலிருந்து நெடுந்தூரம் கடந்து ஷிர்டிக்கு வந்தது திருடுவதற்காகவா? உம்முடைய பணத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளும். என்னுடைய கந்தல் துணியைத் திருப்பிக் கொடும்."

சாயி கோபத்தால் முகம் சிவந்து கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார். வசைமொழியும் சாபங்களும் கொட்டுமழையாகப் பொழிந்தன. பாபா கோபத்தாலேயே பாலாசாஹேப் தேவை எரித்துவிடுவார்போல் தோன்றியது.

சாயிநாதரின் கோபத்தை தேவ் வியப்பும் ஆச்சரியமும் நிரம்பியவராய் பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தார்; செய்வதறியாது திகைத்து நின்றார்.

அப்பொழுது பாபாவின் அண்மையில் தேவ் மட்டும் இருந்தார். அடி கிடைக்கும் போலிருந்தது; அல்லது பாபா விசுவரூப தரிசனம் காட்டுகிறாரோ! அந்த எண்ணமே அவருக்கு ஆனந்தத்தை அளித்தது.

"சட்காவை எடுத்து பலமாக அடிக்கப்போகிறாரோ? நான் தனியாக இவரிடத்தில் மாட்டிக்கொண்டேனே! சரி, அவர் இஷ்டப்படி எதுவும் செய்யட்டும்.-

"ஆயினும் இது என்ன கந்தைத் துணி விடுகதை?" அதை மாத்திரம் தேவால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதே சமயம், "போம், இங்கிருந்து போய்விடும்!" என்று பாபா சொன்னவுடன் அவர் படிகளை நோக்கி நடந்தார்.

"கந்தல் துணி' என்ற வார்த்தையின் ரகசியமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் எனக்கு இல்லை. ஆயினும், சாயியின் கிருபையால் அதைத் தெரிந்துகொண்டபின் கேட்பவர்களுக்குச் சொல்லுவேன்."