ஷீர்டி சாயி சத்சரிதம்
புனிதஞானி சாயி பாபாவின் அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தை கேள்விபட்டுத் தம்முடைய சக்களத்தியின் மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவரை தரிசனம் செய்ய வந்தார்.
திருமணமாகி இருபத்தேழு ஆண்டுகள் கழித்தும் அவருக்கு மகப்பேறு இல்லை. எத்தனையோ தேவர்களையும் தேவிகளையும் பிரார்த்தனை செய்துகொண்டும் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டும் பலனேதும் இல்லை; அவர் மனமுடைந்துபோனார்.
ஆகவே, இந்த சுமங்கலி பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு வந்தார். இருப்பினும் அவருடைய மனத்தின் ஒரு விசாரம் எழுந்தது.
"அவரைச் சுற்றி எப்பொழுதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை அவரிடம் எப்படித் தெரிவிப்பேன்?-
"மசூதியோ திறந்தமயமாக இருக்கிறது; வெளிமுற்றமும் அவ்வாறே. பாபாவை சதா பக்தர்கள் சூழ்ந்திருக்கின்றனர். என்னுடைய மனக்குறையை எடுத்துச் சொல்லத் தனிமையில் ஒரு நிமிடம் எப்படி கிடைக்கப்போகிறது?"
அவரும், விசுவநாதன் என்ற பெயர் கொண்ட, சக்களத்தியின் மகனும் பாபாவுக்கு சேவை செய்துகொண்டு இரண்டு மாத பரியந்தம் (காலம்) ஷிர்டியில் தங்கினர்.
ஒரு சமயம், விசுவநாதனோ வேறெவருமோ இல்லாதபோது அவர் மாதவராவிடம் என்ன மன்றாடிக் கேட்டுக்கொண்டார் என்பதைக் கேளுங்கள்.
"ஐயா, நீங்களாவது பாபா சாந்தமாகவும் ஸ்திரமாகவும் இருக்கும் நேரம் பார்த்து என்னுடைய மனத்தின் ஏக்கத்தை அவருடைய காதுகளில் போடுங்கள்.-
"இந்த விஷயத்தை அவர் பக்தர்களால் சூழப்படாது தனிமையில் இருக்கும்போது யாரும் காதால் கேட்கமுடியாத வகையில் சொல்லுங்கள்."
மாதவராவ் பதில் கூறினார், "இதோ பாருங்கள். இந்த மசூதி காலியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாரவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்.-
"சாயி தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. நான் சொல்வதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!-
"முயற்சி செய்வது என்னுடைய கடமை; வெற்றியை அளிப்பவர் மங்களங்களுக்கு அடித்தளமானவர். கடைசியில் அவரே சாந்தியை அளிப்பார்; உங்களுடைய கவலை விலகும்.
"இருப்பினும், நீங்கள் பாபா சாப்பாட்டுக்கு அமரும் நேரத்தில் ஒரு தேங்காயையும் ஊதுவத்திகளையும் கையில் வைத்துக்கொண்டு கீழே சபாமண்டபத்தில் ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருங்கள்.-
"அவர் உணவுண்ட பிறகு, ஆனந்தமாக இளைப்பாறும் சமயம் பார்த்து நான் உங்களுக்குத் சைகை செய்கிறேன். அதன் பிறகே நீங்கள் படியேறி மேலே வரவேண்டும்."
இவ்வாறாகக் காத்திருந்து காத்திருந்து, ஒரு சமயம் சாயி உணவுண்டவுடனே பிராப்த காலம் (அடையவேண்டிய நேரம்) வந்ததும் ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது.