ஷீர்டி சாயி சத்சரிதம்
மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.
ஆகவே, சாயியின் உதீ பிரசாதத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு இருவரும் பம்பாய் திரும்பினர். விவாதங்கள் அனைத்தும் ஓய்ந்தன. சாயியினுடைய கியாதி எப்படியிருந்தது என்றால்,-
ஷிர்டியிலிருந்து புறப்படுவதற்கு முன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சாயியின் ஆக்ஞயைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும்.
உம்முடைய இஷ்டம்போல் ஷிர்டியிலிருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமும்தான் மிஞ்சும்.
ஷிர்டியிலிருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கத்தியும் அதுவே. "நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை." இது பாபாவின் திருவாய்மொழி.
"என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய வர முடியும்?"
நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.
ஷிர்டிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் இதுவே விதிமுறை. சாயியின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.
அவரை நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர் உதீயுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும்.
இப்பொழுது விபூதியின் ஒரு நவீனமான அனுபவத்தையும் நெவாஸ்கரின் பகுதி பிரபாவத்தையும் மஹானுபவரான சாயியின் கிருபையையும் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
பாந்தராவில் வாழ்ந்துவந்த காயஸ்தப் பிரபு ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தார் ஒருவரால் எவ்வளவு முயன்றும் இரவில் சுகமாகத் தூங்கமுடியவில்லை.
கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கும்போது, காலஞ்சென்ற அவர் தந்தை கனவில் தோன்றி அவரை தினமும் தூங்கமுடியாமல் செய்வார்.
நல்லதும் கெட்டதுமான பழைய சங்கதிகளையெல்லாம் ஞாபகப்படுத்தி சாபங்களாலும் வசைமொழியாலும் அவரைத் துளைப்பார். ரகசியமானதும் பலகோணங்களுள்ளதும் பீடைபிடித்ததுமான விஷயங்களைக் கடுமையான இகழ்மொழியில் கொட்டுவார்.