ஷீர்டி சாயி சத்சரிதம்
"உம்முடைய காலை மிதித்தாரே, அவர் இப்பொழுது வரவில்லை? அவர்தான் உம்மைக் கொத்திவிட்டுப் புண்ணின் வலியையும் குறைத்துவிட்டுப் பறந்துபோன காக்கை"-
காக்கையாவது, கொத்தலாவது! இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்தவர் அவரே. காக்கை அப்துல்லாவின் உருவத்தில் தோன்றியது. பாபா தாம் சொன்னது உண்மையென்பதை நிரூபித்துவிட்டார்.!
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. அற்ப அவகாசத்திற்குள் (சிறிய இடைவெளியில்) பாவூ குணமடைந்தார்.
உதீயைத் தடவுவதும் நீருடன் சேர்த்து உட்கொள்ளுவதுமே மருந்தும் அனுபானமும் (மருந்துக்கு வீரியம் சேர்க்க இணைத்து அருந்தும் பானமும்). பத்தாவது நாளன்று பொழுது விடிந்தபோது வியாதி வேரோடு அறுக்கப்பட்டது.
புண்ணிலிருந்து ஏழு நரம்புச்சிலந்திப் புழுக்கள் உயிரோடு வெளிவந்தன. பொறுக்க முடியாத வேதனை ஒழிந்தது. டாக்டர் பிள்ளையின் உடைய துன்பம் ஒரு முடிவுக்கு வந்தது.
பிள்ளை இந்த அற்புதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். பாபாவின் லீலையை நினைத்து நினைத்துக் கண்களிலிருந்து பிரேமதாரை வடித்தார்.
பிள்ளை பாபாவின் பாதங்களில் விழுந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்குத் தொண்டை அடைத்தது. வாயியிலிருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.
இன்னும் ஒரு அனுபவத்தைச் சொல்லிவிட்டு, உதீயின் பிரபாவம் பற்றிய விவரணத்தை முடித்துவிடுகிறேன். இந்தத் தொடரின் சாராம்சம் என்னவென்றால், 'மனத்தின் பாவம் எப்படியோ, அப்படியே அனுபவம் !' என்பதே.
இரு சகோதர்களில் மூத்தவர் மாதவராவ்; இளையவர் பாபாஜீ. ஒருசமயம் துன்பம் நேர்ந்தபோது, உதீயை உபயோகித்து பாபாஜி எவ்வாறு விடுதலையடைந்தார் என்பது பற்றிக் கேளுங்கள்.
இந்த உதீயின் பிரபாவம் சொல்லுக்கடங்காதது.அதை நான் எவ்வாறு தகுந்த அளவிற்குப் புகழ்வேன்? பிளேக் நோய் வீக்கங்களுக்கும் மற்றெல்லா வியாதிகளுக்கும் உதீயைப் போன்ற சர்வரோக நிவாரணி வேறெதையும் நான் கண்டதில்லை.
பாபாஜீ சாவூல் விஹிரில் வசித்துவந்தபோது, அவர் மனைவிக்கு ஜுரம் கண்டு வயிற்றுக்கு கீழே இரண்டு வீக்கங்கள் தோன்றின. பாபாஜீ மனக்கலக்கம் அடைந்து அரண்டு போனார்.
அந்த பயங்கரமான இரவு நேரத்தில் மனைவி பட்டபாட்டைப் பார்த்த பாபாஜீ பீதியடைந்து தைரியமிழந்தார்.
திகிலாலும் பயத்தாலும் நடுநடுங்கியவாறு இரவோடிரவாக ஷிர்டிக்கு ஓடிவந்தார். தம் அண்ணனிடம் விவரங்களைத் தெரிவித்தார்.