valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 24 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் தாதருக்கு போகவேண்டுமென்று விரும்பினேன். ஆனால், முக்கியமான வேலையொன்று இங்கிருப்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே, என்னுடைய தாதர் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்."

பணம் கொடுத்தாலும் வரிசையில் நின்று சிரமப்பட்டு வாங்கவேண்டிய பயணச் சீட்டு சுலபமாக கைக்கு வந்ததுபற்றி மாங்கர் மகிழ்ச்சியடைந்தார்.

சீட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகாப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுஇருந்தபோது, விவசாயி திடீரென்று கூட்டத்தினுள் முண்டியடித்துப் புகுந்து காணாமல் போய்விட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை மாங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயியைத் தேட பாலாராம் பலமாகப் பிரயத்தனம் செய்தார். அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இதற்கிடையே ரயில் வண்டி வந்துவிட்டது.

காலில் செருப்பில்லாமல், தலையில் ஒரு வேட்டியை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்துக்கொண்டு வந்த அந்த விவசாயி சகோதரர் யார்?

பயணச் சீட்டின் கட்டணம் சிறிதென்று சொல்லமுடியாது. அதையும் அவர் ரொக்கமாகத் தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொடுத்தார். ஏன், ஓ, எதற்காக இந்த தாட்சிண்ணியத்தின் பளுவை நான் சுமக்க வேண்டும்? இந்தப் புதிர் எனக்குப் புரியவில்லையே!

தோற்றத்தில் விவசாயி, ஆயினும் இவ்வளவு உதார குணமா! பணத்தாசை என்பதே கிடையாதா? யார் இந்த விவசாயி? கடைசிவரை இப்புதிர் விடுபடவே இல்லை;  மாங்கரின் மனம் குடைந்தது.

ஆச்சரியத்தில் நிரம்பிய மாங்கர், விவசாயி எந்நேரமும் வரலாம் என்ற நம்பிக்கையுடன் ரயில் புறப்படும்வரை ரயில் பெட்டியின் கதவுக்கு அருகில் வெளியே நின்று கொண்டிருந்தார்.

ரயில் புறப்பட்டபோது, இனிமேல் தேடிப் பயனில்லை என்று தெரிந்து கைப்பிடிக்கம்பியை பிடித்து, எகிறிக்குதித்துப் பெட்டியில் ஏறினார்.

கோட்டையில் பிரத்யக்ஷமான சந்திப்பு. வேறுவிதமாக இருந்தபோதிலும் இங்கும் சாயி சந்திப்பு. விவசாயி அணிந்திருந்த விசித்திரமான உடை மாங்கரின் மனத்தைக் குறுகுறுக்க செய்தது.

பின்னர், இந்த சத்தான பக்தர் சாயி பாதங்களில் பூரணமாக காதல் கொண்டு, திடமான சிரத்தையுடனும் பக்தியுடனும் அவருடைய வாழ்நாளை ஷிர்டியில் கழித்தார்.

ரீங்காரம் செய்துகொண்டே தாமரை மலையின் மகரந்தத்தை சுவைக்கச் சுற்றிச் சுற்றி வரும் தேனியைப் போல, சாயி நாமத்தைச் சொல்லிக்கொண்டே சாயியை சுற்றிச் சுற்றி வந்தார். பாலராம்ஜி அவ்விதமாகவே ஷிர்டியில் வாழ்ந்தார்.

எப்பொழுதாவது பாபாவின் அனுமதி பெற்றுக்கொண்டு முக்தாராம்ஜி என்ற சக பக்தருடன் ஷிர்டியை விட்டு வெளியே செல்வார்.

Monday 20 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ரம்மியமான இடத்தையும் பளிங்கு போன்ற சுத்தமான நீரையும் மந்தமாருதத்தையும் (தென்றலையும்) கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

சாயியால் ஆணையிடப்பட்டிருப்பினும், சாயியை எங்கோ வைத்துக்கொண்டு, அவர் விதித்தவாறும் சொல்லிக்கொடுத்த முறையிலும் மாங்கர் தம்முடைய தவத்தை ஆரம்பித்தார்.

பாபா புரிந்த விந்தையைப் பாருங்கள்! அந்தக் கோட்டையில் மாங்கர் தவத்தில் மூழ்கி இருந்தபோது, பாபா பிரத்யக்ஷமாக தரிசனம் அளித்தார். மாங்கர், கண்களுக்கு எதிரே பாபாவை தரிசனம் செய்தார்.

சமாதி நிலையில் தரிசனம் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், மாங்கரோ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது விழித்த நிலையிலேயே  சமர்த்தரைக் கண்டார்.

கண்ணால் கண்டது மட்டுமல்லாமல், பாலராம் சாயியைக் கேட்டார், "பாபா, என்னை ஏன் இங்கு அனுப்பினீர்கள்?" பாபா என்ன பதில் கூறினார் தெரியுமா?

"ஷிர்டியில் இருந்தபோது அநேக எண்ணங்கள் உமது மனத்தில் அலைகளாக எழும்பி மோதின. ஆகவே, உம்முடைய சஞ்சலமற்ற மனத்தைக் கோட்டைக்குப் போகும்படி நியமித்தேன். -

"நிலம், நீர்  ஆகிய பஞ்ச பூதங்களால் ஆகியதும் மூன்றரை முழம் நீளமுள்ளதுமான இவ்வுடலுக்கு வெளியேயோ, ஷிர்டிக்கு வெளியேயோ நான் இல்லை என்று நினைத்திருந்தீர்.-

"ஆனால், இப்பொழுது உம்மெதிரில் நிற்கும் நான்தான் ஷிர்டியிலும் இருக்கிறேன். இதை நீரே அமைதியான மனத்துடன் நிதானமாக நன்கு பார்த்துக்கொள்ளும். இந்நிமித்தமாகவே உமக்கு இப்பாடம் புகட்டினேன் என்றும் அறிவீராக."

உத்தேசம் செய்த காலம் கடந்தபின், மாங்கர் மச்சீந்திரக்கட்டை விடுத்துத் தம்முடைய இடத்திற்கு கிளம்பினார்.

அவருடைய வாசஸ்தலமான பாந்த்ராவிற்கு போகலாம் என்று நினைத்தார். ஆகவே, பூனாவிலிருந்து தாதர்வரை ரயில்வண்டியில் பயணம் செய்ய முடிவுசெய்தார்.

பூனா ரயில் நிலையத்தை அடைந்தார். பயணசீட்டு வாங்கவேண்டிய நேரம் வந்தவுடன், சீட்டு வாங்கும் முகப்புக்குச் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

இடுப்பில் லங்கோடு கட்டி ஒரு கம்பளியைப் போர்த்துக்கொண்டு விவசாயியை போல் ஆடையணிந்திருந்த, முன்பின் தெரியாத பிரயாணி ஒருவரை முகப்புக்கருகில் கண்டார்.

பயணசீட்டு வாங்கிக்கொண்டு விவசாயி திரும்பியபோது அவருடைய பார்வை பாலாராமின் பார்வையைச் சந்தித்தது. விவசாயி பாலாராமை நோக்கி நடந்தார்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்" என்று விவசாயி பாலாராமைக் கேட்டார். "தாதருக்கு" என்று பாலாராம் சொன்னவுடன், "இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாராமிடம் பயணசீட்டைக் கொடுத்தார். அவர் மேலும் சொன்னார், -