valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 30 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஒரு பானையைக் கல்லால் அடித்தால், அதனுடைய உருவம் அழிந்து போகிறது; உடைந்துபோன துண்டுகளே மீதி.  பானையின் உருவம் மறைந்துவிட்ட போதிலும், அது இருந்ததை ஓட்டாஞ்சில்லுகள் காட்டுகின்றன. 

பானையின் உபயோகம் நாசமாகிவிட்டிருக்கலாம்.  ஆனால், பானையின் இருப்புக்கு முடிவென்பதே இல்லை.  பானை இருந்ததற்கும்  அதற்கு ஓர் உபயோகம் இருந்தது என்னும் உண்மைக்கும் ஓட்டாஞ்சில்லுகளே சாட்சி. 

எந்தச் செயலின் முடிவும் சூனியமாகாது!  முடிவு என்பதே, இருந்தது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது அன்றோ?  மனச்சாட்சியை மதிக்கும் நற்குணம், நற்புத்தியைக் குறிப்பால் உணர்த்துவதே இதற்குப் பிரமாணம். 

எல்லா க்ஷேத்திரங்களும் (புனிதத் தலங்களும்) தீர்த்தங்களும் விரதங்களும் புனிதமானவையே.  ஆனால், புனிதத்தில் புனிதமானது ஞானம்.  பிரம்ம ஞானம் இல்லாது செய்யப்படும் பஜனையும் பூஜையும் அர்த்தமற்ற செயல்கள். 

சித்தம் அஞ்ஞானத்தால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.  இறைவனிடம் பக்தி செலுத்தாமல் சித்தத்தைத் தூய்மைப்படுத்த முடியாது.  பக்தியின்றி ஞானம் முளைப்பதில்லை!

ஆகவே, முதலில் அஞ்ஞானம் எதுவென்று அடையாளம் கண்டுபிடி.  அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டுமெனில், அதன் இயல்பையும் விவரங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்.  பக்தியே இதை அறிய உதவும் சாதனம். 

கால்கள் முதலாக வெளிவந்து பிறந்த குழந்தையின் கண்களுக்கு மை தடவினால், பூமியினடியில் இருக்கும் புதையல் அதன் கண்களுக்குப் புலப்படும்.  அதுபோலவே, பக்தியிடம் சரணடைந்து கைதூக்கிவிடும்படி வேண்டிக்கொண்டால், அஞ்ஞானம் அகலும்;  ஞானம் உதயமாகும். 

ஞானம் பெறுவதே தன்னையறிதல். அதற்கு மூலாதாரம் அஞ்ஞான நிவிர்த்தி.  ஆனால், இறைவனிடம் பக்தி ஏற்படாமல் மாயையின்  சக்தியை வெல்லமுடியாது. 

ஞானமும் அஞ்ஞானமும் கலந்து இருக்கின்றன.  கற்களைப் பொறுக்கி எடுத்த பின்னரே அரிசியைக் கொதிநீரில் இடுவதைப்போல, அஞ்ஞானத்தை  ஜாக்கிரதையாகப் பிரித்தெடுக்க வேண்டும். 

எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பதோடல்லாமல், ஞானக்யம் போன்ற உபாசனைகளைச் செய்பவர், பிரபஞ்சத்தையே முகமாக உடைய ஸ்ரீகிருஷ்ணனைக் காண்கிறார்.  ஞானத்தைப் பெற அவர் அஞ்ஞானத்தை எரித்துவிடுகிறார். 

இப்பொழுது ஞானயாகத்தின் சொரூபத்தைக் கவனியுங்கள்.  "அஹம் ப்ரம்ம அஸ்மி (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்)" என்னும் வேதவசனமே இதன் வேள்வித்தூண்.  பஞ்சபூதங்களே (நிலம், நீர், தீ, காற்று, வானம்)  யாகமண்டபம்.  ஜீவேசுவர பேதமே (இறைவனுக்கும் அவனுடைய படைப்பான ஜீவராசிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே) வேள்விக்குரிய விலங்கு. 

ஐம்புலன்களும் பஞ்சபிராணன்களும் இந்த யாகத்தில் இடவேண்டிய பண்டங்கள்.  மனமும் புத்தியும் யாககுண்டம்.  ஞானமெனும் அக்கினியால் யாககுண்டத்தில் வேள்வித்தீ மூட்டப்படுகிறது.