ஷீர்டி சாயி சத்சரிதம்
"பாத்திரத்தின் மூடியைத் திறந்துவிட்டு உள்ளே கையை விட்டு நீரே பாரும்!" என்று சொல்லிக்கொண்டே, தாதாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்து பாத்திரத்தினுள்ளே பலவந்தமாகச் செருகினார்.
பிறகு பாபா சொன்னார், "இப்பொழுது உமது கையை வெளியே ஏதும். கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் பரிமாறிக்கொள்ளும். மடி ஆச்சாரத்தைபற்றிக் கவலைப்பட வேண்டா."
ஞானிகள் தம் சிஷ்யர்களை தூரசாரமான செயல்களில் ஈடுபடுத்துவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டா. ஞானிகள் கிருபையால் நிரம்பிவழிபவர்கள். அவர்களுடைய வழிமுறைகள் அவர்களுக்குத்தான் விளங்கும்!
ஒரு தாயும் தம்முடைய மனத்தில் பிரேமபாசம் அலையாகப் பொங்கியெழும்போது குழந்தையை கிள்ளிவிடுவார். குழந்தை அலறி அழும். தாய்தாம் உடனே அனைத்துக்கொள்ளவும் செய்வார்.
ஓர் உணவைத் தின்ன வேண்டுமென்று ஒருவர் மனத்தால் ஆசைப்பட்டபோதுதான் பாபா அவருடைய ஆசையை பூர்த்திசெய்தார். மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரே பாபாவின் ஆமோதிப்பை வென்றார்!
பாபாவின் ஆணையைப் பாவிக்கவேண்டும் என்ற உறுதி சில பக்தர்களின் விஷயத்தில் வரம்புமீறிச் சென்றது. ஜன்மம் முழுவதும் மாமிசத்தை தொட்டறியாதவர்கள் கூடத் தங்களுடைய விரதத்தில் தடுமாறினர்!
உண்மை நிலை என்னவென்று பார்த்தல், அதுமாதிரியான பக்தர்களை அவர்கள் தவறு என்று கருதிய செயல்களை செய்ய பாபா தூண்டியதில்லை; அனுமதிக்கவுமில்லை.
ஆக, 1910 ஆம் ஆண்டிற்கு முன்பாக ஹண்டி நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் அடிக்கடி நடந்தது.
அதன் பிறகு தாசகனு பம்பாய் நகரத்திற்குச் சென்றார். சாயியின் மஹிமையைக் கதாக்கீர்த்தனங்கள் செய்து எல்லாருடைய மனத்திலும் பதியும்படி செய்தார்.
அப்பொழுதிலிருந்து குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் பாபாவின் மகத்துவத்தை அறிந்தனர். கணக்கற்ற மக்கள் ஷிர்டிக்கு விஜயஞ்செய ஆரம்பித்தனர்.
பின்னர் ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை ஆரம்பித்தது. மதிய உணவையும் சிற்றுண்டிகளுமாகப் பல நைவேத்தியங்கள் வந்து குவிந்தன.
அரிசிச்சோறு, பருப்பு சூப்பு, பூரி, ரவாகேசரி, சப்பாத்தி, சட்டினி கோகமல்லி, பலவிதமான பாயாசங்கள், பஞ்சாமிருதம் - இவ்வகையான உணவுப்பண்டங்கள் மசூதிக்கு வந்துசேர்ந்தன.
அபரிதமான எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் வந்தனர். எல்லாரும் பாபாவை தரிசனம் செய்ய விழுந்தோடிச் சென்றனர். சாயிபாதங்களில் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இப் பண்டங்களெல்லாம் பசித்தவர்களைத் திருப்தி செய்யச் சென்றடைந்தது இயல்பே.