ஷீர்டி சாயி சத்சரிதம்
பகல் நேரத்தில் சுமார் பத்து மணி ஆகியது; நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் பாபா தாமே எழுந்து உட்கார்ந்தார். குழப்பமேதுமில்லாத தெளிவான மனத்துடன் இருந்தார்.
அப்பொழுது பாபாவின் முகத்தைப் பார்த்த பக்தர்களின் மனத்தில் சமுத்திரம் போன்ற பெரிய நம்பிக்கை எழுந்தது. பயங்கரமான அமங்கல வேளை கடந்துவிட்டது என்றே நம்பினர்.
அவர்கள் அனைவரும் சஞ்சலப்பட்டவாறே சோகமாக உட்கார்ந்திருந்தபோது பாபாவின் நிர்யாண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்ன நடந்ததென்று கேளுங்கள்.
உயிர் பிரியப்போவதற்கு முன்னாள் அவருடைய மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அது தர்மம் செய்யவேண்டிய வேளை என்றறிந்து தம்முடைய கப்னி பாக்கெட்டில் கைவிட்டார்.
சிறந்த லக்ஷணங்கள் பொருந்தியிருந்தவரும், பெயருக்கேற்ற நடத்தை கொண்டிருந்தவரும் , சாயி பாதங்களிலேயே எப்பொழுதும் மூழ்கியிருந்தவருமான, லக்ஷ்மி பாயி என்பவர் அப்பொழுது அவருடைய சந்நிதியில் இருந்தார்.
கணநேரத்தில் பூதவுடலை உதறிவிடப் போகிறோம் என்று அறிந்த பாபா, மிகுந்த கவனத்துடன் திரவிய தானம் அளித்தது இவருக்கே.
இந்த லக்ஷ்மி பாயி சிந்தேதான், பாபா வசித்த மசூதியில் எல்லா வேலைகளையும் குறையேதுமின்றி நியம நிர்பந்தங்களுக்கு உட்பட்டுச் செவ்வனே செய்தவர்.
தினமும் பகல் நேரத்தில் பாபாவின் தர்பார் எல்லாருக்கும் திறந்தவாறே செயல்பட்டது. பெரும்பான்மையான நேரத்திற்கு எவரும் தடைசெய்யப்படவில்லை. ஆனால், இரவிலோ கெடுபிடிகள் அதிகம்.
மாலை நேரத்தில் பாபா தம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மசூதிக்குத் திரும்பிய பிறகு, மக்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, மறுபடியும் மறுநாள் காலையில்தான் பாபாவை தரிசிக்க மசூதிக்கு வருவார்கள்.
ஆயினும், பக்த மகால்சாபதி, தாதா, லக்ஷ்மி பாயி ஆகியவர்களுடைய பக்தியை மெச்சி, இரவில் அவர்கள் வருவதை பாபா தடைசெய்யவில்லை.
மேலும், இந்த லக்ஷ்மி பாயீதான் பாபாவுக்கு தினமும் நேரம் தவறாது சோளரொட்டியும் காய்கறி பதார்த்தமும் அன்புடன் அனுப்பியவர். அவருடைய சேவையை யாரால் வர்ணிக்க முடியும்?
இந்தச் சோளரொட்டிக் கதையை கேட்டால் பாபாவுக்குப் பிராணிகளின்மீதும் இருந்த தயை விளங்கும். அவர் நாய்களிடமும் பன்றிகளிடமும் கூட தம்மை ஐக்கியம் செய்துகொண்டதைக் கேட்டுக் கதைகேட்பவர்கள் ஆச்சரியமடைவீர்கள்.
ஒருசமயம் பாபா தம்முடைய மார்பைச் சுவரின்மேல் சாய்த்துக்கொண்டு பிரேமையுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது லக்ஷ்மி பாயீ அங்கு வந்தார்.
தாத்யா பாடீல் அருகில் இருந்தார்; இன்னும் சிலரும் அங்கு இருந்தனர். லக்ஷ்மீ பாயீ பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். அப்பொழுது பாபா அவரிடம் சொன்னார். -