ஷீர்டி சாயி சத்சரிதம்
இதைக் கேட்ட பாபாஜி பயந்தார்; தைரியமிழந்துபோனார். மாதவராவுக்கு மூலிகை மருந்துகள் பற்றிய ஞானம் இருந்தது; ஆனால், அது அந்த சமயத்தில் உபயோகப்படாது.
எது எப்படி இருந்தாலும் மாதவராவ் பாபாவின் குறிப்பைப் பூரணமாக அடையாளம் கண்டுகொண்டார். எந்த மருந்தும் பாபாவின் அருளின்றி வேலை செய்யப் போவதில்லை!-
ஆகவே அவர் பாபாவின் ஆக்ஞய்க்கு கீழ்ப்படிந்து, தம்பியிடம் உதியைக் கொடுத்தனுப்பிவிட்டுத் தாம் அமைதியாக ஷிர்டியில் இருந்தார். பாபாஜீ மனமுடைந்தவராக கவலையுடன் வீடு திரும்பினார்.
உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்கு கொடுத்துவிட்டு வீக்கங்களின்மேலும் பூசினார். மனைவி சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி, நித்திரையில் ஆழ்ந்தார்.
சூரியோதய காலத்தில் அவருக்குத் தெம்பு வந்துவிட்டது. ஜுரமோ வீக்கங்களோ இருந்த இடம் தெரியவில்லை! பாபாஜி ஆச்சரியமடைந்தார்.
மாதவராவ் காலையில் எழுந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி சாவூல் வித்திருக்கு கிளம்புவதற்கு முன், தரிசனம் செய்வதற்கு மசூதிக்கு வந்தார்.
பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தபின், உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டவுடன் சாவூல் விஹிரை நோக்கி நடந்தார்.
மசூதியின் படிகளில் இறங்கும்போது பாபா ஆணையிட்டது கேட்டது. "சாமா, நீ போனவுடனே திரும்பிவிடு! தாமதம் செய்வதற்கு அங்கு ஒரு வேலையும் இல்லை".
போகும் வழியில் மாதவ்ராவ், "தம்பியின் மனைவி என்ன பாடுபடுகிறாளோ! எப்படி இரண்டு வீக்கங்களின் எரிச்சலைப் பொறுத்துக்கொள்ளப்போகிறாள்! ஓ, பெரும் துன்பத்தால் வாடிப் படுத்துக்கிடக்கிறாள் போலும்!" என்று கவலைப்பட்டுக்கொண்டே சென்றார்.
"ஆயினும், பாபா எதையோ குறிப்பால் உணர்த்தினார் போலிருக்கிறதே! இல்லையெனில் என்னை ஏன் போனவுடனே, திரும்பிவிடு என்று சொன்னார்?" இவ்வாறு சாமா கலவரமடைந்து காலை எட்டிப்போட்டு வழி நடந்தார்.
நேரம் கடப்பதுபற்றிப் பொறுமை இழந்து வேகவேகமாக சாவூல் விஹிரை நோக்கி நடந்தார். வீடு வாயிற்படியை மிதித்தபோது, அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை!
முன்னாள் இரவு பிளேக் நோயால் படுத்திக்கிடந்த பெண்மணி, வழக்கம்போல் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்ததை பார்த்தார். பெண்மணியின் நிலைமையில் ஏற்பட்டிருந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சாமா வியப்படைந்தார்.
அவர் பாபாஜியிடம் கேட்டார், "எப்படி உன் மனைவி தினப்படி வேலைகளை செய்துகொண்டிருக்கிறாள்?" பாபாஜி பதில் சொன்னார், "அனைத்தும் பாபாவின் உதீ செய்த அற்புதமே.-