ஷீர்டி சாயி சத்சரிதம்
"அங்கேதான் நாம் வளையவருவோம்; பேசுவோம், அங்கேதான் நாம் ஒருவரையொருவர் அன்புடன் அணைத்துக்கொண்டு விளையாடுவோம்; எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்போம்."
மாதவராவ் ஸ்ரீசாயியைக் கேட்டார், "இதுதான் நிச்சயமான ஆணையென்றால் அஸ்திவாரத்தை சுபதினமான இன்றே போட்டுவிடுவோம்.-
"தேவா! இது முஹூர்த்த வேளையா? உடனே சென்று ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைக்கட்டுமா?" பாபா உடனே சென்றார், "உடை, உடை". மாதவராவ் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைத்தார்.
பின்னர் ஒரு கர்பக்கிருஹம் எழுப்பப்பட்டது. முரளீதரனுக்கு ஒரு மேடையும் அமைக்கப்பட்டது. சிலை செதுக்கும் வேலை ஒரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், பின்னர் இவ்வாறு நிகழ்ந்தது. பாபாவின் உடல்நலம் தீவிரமாக குன்றியது. அந்திமகாலம் நெருங்கியது. பக்தர்கள் மனம் குழம்பினர்.
பாபுஸாஹிபும் அமைதியிழந்தார். 'வாடாவின் கதி என்ன ஆகப்போகிறதென்று நிச்சயமாகத் தெரியவில்லையே' என்றெண்ணி வருத்தமுற்றார்.
"கடைசியில், பாபாவின் பாதங்கள் கோயில் தரையை மிதிக்கப்போகின்றனவா, இல்லையா? லட்சக் கணக்கில் பணம் செலவழித்தாகிவிட்டது; இப்பொழுது பெரிய தடங்கல் வந்துவிட்டதே!-
"பாபா தேகத்தை உதிர்த்துவிட்டபின், முரளீதரன் எதற்கு? வீடு எதற்கு? வாடா எதற்கு? கோயில் எதற்கு? என்றெண்ணி புட்டி மனமுடைந்து போய் சோகமுற்றார்.
பின்னர், கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்தாலும் வாடா செய்த பெரும் பாக்கியத்தாலும் முடிவில் எல்லாமே பக்தர்களின் விருப்பப்படியும் சாயியின் ஆணைப்படியுமே நடந்தன.
உயிர் பிரியும் நேரத்தில் பாபாவின் திருமுகத்திலிருந்து "என்னை வாடாவில் வையுங்கள்" என்று வெளிப்பட்ட திருவாய்மொழியைக் கேட்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பிறகு, சாயியின் புனிதவுடல் (முரளீதரனுக்காகக் கட்டப்பட்ட) கர்ப்பக்கிருகத்தில் (கருவறையில்) அடக்கம் செய்யப்பட்டது. வாடா, சமாதி கோயில் ஆயிற்று! சாயியின் வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக்கெட்டாதது அன்றோ!
எவருக்குச் சொந்தமான வாடாவில், காதால் கேட்பதற்கே பரமபுனிதமான பெயருடைய சாயியின் புனிதவுடல் அடக்கம் செய்யப்பட்டதோ, அந்த புட்டி மஹா பாக்கியசாலி; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்.
இந்தக் கதை அவ்வளவு பவித்திரமானது. கேட்பவர்கள் சந்தோஷத்தையும் செல்வத்தையும் பெறுவர். ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்; ஒரு கணமும் அவருடைய பாதங்களை விட்டுப் பிரியமாட்டேன்.
சாயி உபதேசித்த மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தி அவரை சந்தோஷப்படுத்தினால் , அனுபவங்கள் இஷ்டமாக இருப்பினும் கஷ்டமாக இருப்பினும், சந்தேகமில்லாமல் வாழ்க்கையின் அபீஷ்டங்கள் (தீவிரமான விருப்பங்கள்) நிறைவேறும்.