valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 November 2021

 ஷீர்டி சாயி சத் சரிதம்

பாபாசாகேப் தர்கட் என்ற பக்தரும் அங்கும் உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ  அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள்.

"இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு?" தர்கட் பதிலுரைத்தார், "நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம்". சேட் குறுக்குச்சால் ஓட்டினார், "ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?"

ஆகவே, தர்கட் சொன்னார், "என்னுடைய பாவனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் சித்தியாகிறது."

காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையை கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.

மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ  சேட்டுக்கும் சில திராட்சைகளை கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.

விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டது! அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை.

திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.

ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்! ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தை களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.

சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், "இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?"

இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.

அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், "அவற்றைத் தின்றுவிடும்". சேட்ஜீ  இந்த ஆணையை நிறைவேற்றினார்.

"அவற்றைத் தின்றுவிடும்" என்று பாபா சொல்லி முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தன! சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.