valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பாபாவுக்கு எப்படி சம்ஸ்கிருத ஞானம் இருந்திருக்க முடியும்?  சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம்.  ஞானிகளுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றும், சந்தேகத்திற்குக் காரணம் வேறெங்கேயோ புதைந்து இருக்கிறது என்றும் அறிவீர்களாக.

கதை கேட்பவர்களே, 'ஒன்றைக் (பரம்பொருளைக்) கண்டவன் அனைத்தையும் கண்டவனாகிறான்' என்பது பிரமாணம்.  இந்த வேதவசனத்தை ஒப்புக்கொள்ளாதவர் எவரும் உளரோ?  இந்த அபரோட்ச ஞானம் (காட்சி அறிவு) சாயி பாபாவுக்கு இருந்தது. 

பிரபஞ்சம் முழுவதையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சம்பூரணமாக (முழுமையாகப்) பார்க்கும் சக்தி பெற்ற ஞானிகள் அறியாத விஷயம் ஏதும் உண்டோ?" சூரியன் பிரகாசிப்பதும் அவர்களாலேயே அன்றோ!

அத்தகைய ஞானம் படைத்தவர்களிடம் அஞ்ஞான இருள் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும்?  அவர்களிடம் அனைத்து வித்தைகளும் பொதிந்துகிடக்கின்றன. சம்ஸ்கிருத மொழி மட்டும் என்ன பெரிய கொக்கு?

ஆயினும், சாயி லீலா வாசகர்களில் சிலர் சொல்கின்றனர். "நானாவை நம்பமுடியாது.  ஞானம்  எனும் சொல்லை அஞ்ஞானமாக மாற்றும் அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்துக்கொள்வது.  நானா சுயமாகச் செய்த கற்பனையே. -

"தம்முடைய புலமையை முழுமையாகப் பறைசாற்றுவதற்காக அகாரம் தொக்கி நிற்கும் இந்த அஞ்ஞான காண்டத்தை அவரே ஜோடித்திருக்கிறார்.  அர்த்தமில்லாத ஒரு விதண்டாவாதத்தைக் கிளறி விட்டிருக்கிறார். -

"அகாரம் தொக்கி நிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்து, ஞானைத்தை அஞ்ஞானமாக்கி, கீதைக்கு விபரீதமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்."

ஆயினும், உண்மையான நிலையைக் கவனித்து சூட்சமமாக சிந்தித்தால், சாயி லீலா பத்திரிகையில் வெளிவந்த முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் கருத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது நன்கு விளங்கும். 

நானா நம்பத் தகுந்தவரா, நம்பத் தகாதவரா என்பதுபற்றி எவரெவருக்கு என்னென்ன அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும், அவர் அளித்திருக்கும் விருத்தாந்தத்தைப் பயனற்றதாகவோ அர்த்தமில்லாத பிதற்றலாகவோ நாம் கருதக்கூடாது. 

நானாவின் மீதிருக்கும் வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திரிபுக்கு உட்படாமல் கண்ணோட்ட தோஷத்தைத் தூர விரட்டிவிட்டால், சந்தேகிகளுக்கு குற்றமற்ற காட்சி முழுமையாக கிடைக்கும். 

சாயி லீலாவின் உத்தமோத்தமமான முப்பத்தொன்பதாவது  அத்தியாயத்தை மறுபடியும் படிக்காமல், இந்த அத்தியாயத்தில் மேற்கொண்டு சுலபமாக முன்னேற முடியாது. 

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவாய்மொழியாக வெளிவந்த ஸ்ரீ மத் பகவத் கீதையில் ஞானகர்மசந்யாச யோகம் என்னும் நான்காவது அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது சுலோகத்தில் 'அஞ்ஞானம்' தொடர்பான உபதேசம் நிகழ்ந்தது. 

தத்வித்தி ப்ரணிப்பாதேன பரிப்ரச்னேன சேவாய!
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சினஹ !! கீதை 4  - 34  (மூலம்)