ஷீர்டி சாயி சத்சரிதம்
உப்பு, மிளகாய், ஜீரகம், மிளகு போன்ற மாளிகைச் சரக்குகளையும் காய்கறிகளையும் கொப்பரைத் தேங்காய்களையும், எவ்வளவு தேவைப்படும் என்பதுபற்றிப் பூரணமாக சிந்தித்து அவரே வாங்குவார்.
மசூதியில் உட்கார்ந்துகொண்டு எந்திரக்கல்லை எடுத்துவைத்து அவருடைய கைகளாலேயே கோதுமை, பருப்பு வகைகள், கேழ்வரகு, இவற்றை மாவுகளாக அரைத்துக்கொள்வார்.
ஹண்டிபிரீத்தி (அன்னதானம்) செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பாபாவே அயராது செய்தார். மசாலா அரைக்கும் வேலைகளையும் தாமே மிகுந்த சிரத்தையுடன் செய்தார்.
அடுப்பின் ஜுவாலையைக் குறைப்பதற்கும் பெருக்குவதற்கும் விறகுக்குச்சிகளைக் கீழும் மேலும் தாமே தள்ளுவார்.
பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துப் பெருங்காயம், ஜீரகம், கொத்தமல்லி போன்ற பொருள்களை சேர்த்து அரைத்துக் காரசாரமான பண்டமொன்றைச் செய்வார்.
பிசைந்த கோதுமை மாவை ஒன்றேகால் முழ நீளத்திற்கு வட்ட உருவில் நீட்டிச் சிறிய உருண்டைகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சப்பாத்தியாகக் குழவியால் விஸ்தீரணம் செய்வார்.
ஏற்கெனவே, அளந்துவைக்கப்பட்ட தண்ணீருடன் கேழ்வரகு மாவையும் மோரையும் சேர்த்து ஹண்டியில் அம்பீலையும் தயார் செய்வார்.
பிறகு, இவ்வாறு தயார் செய்த அம்பீலை (மோர்க் குழம்பு) மிகுந்த அன்புடன் தம்முடைய கைகளாலேயே மற்ற உணவுப்பண்டங்கள் பரிமாறப்படும்போது மரியாதையுடன் எல்லாருக்கும் பரிமாறுவார்.
இவ்வாறாக, உணவு நன்றாக வெந்துவிட்டது என்பதை பரிசோதித்தபின் ஹண்டியை அடுப்பிலிருந்து இறக்கி மசூதிக்குள் எடுத்துச் செல்வார்.
மௌல்வியின் மூலம் விதிகளின்படி பாதியா ஓதி, இவ்வுணவு புனிதமாக்கப்படும். அதன் பிறகு, பிரசாதம் முதலில் மகால்சாபதிக்கும் தாத்யாவுக்கும் அனுப்பப்படும்.
பின்னர் இவ்வுணவைப் பாபாவே எல்லாருக்கும் பரிமாறுவார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் ருசியான உணவளித்து திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவார்.
அன்னத்தை நாடியவர்கள் வயிறு நிரம்புவரை திருப்தியாகச் சாப்பிடுவார்கள். பாபா அவர்களை, "போட்டுக்கொள்; இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்" என்று வற்புறுத்துவார்.
ஓ, இவ்வுணவை உண்டு திருப்தியடைந்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! பாபா தம்முடைய கைகளாலேயே பரிமாறிய உணவை உண்டவர்கள் மஹா பாக்கியசாலிகள்!
பாபா, மாமிசம் கலந்த உணவை பிரசாதமாகப் பல பக்தர்களுக்கு தங்குதடையில்லாமல் ஏன் விநியோகம் சிஎதார்? இந்த சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே.