ஷீர்டி சாயி சத்சரிதம்
திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்சீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார்.
"என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு சாயி கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பானாகவும் இருந்தன.
அவர் ஆச்சரியத்தால் செயலிழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப்பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின் மேல் பிரீதி பொங்கியது.
ஏற்கெனெவே செய்துகொண்ட சங்கற்பங்கள் விலகின. சாயிபிரேமை இதயத்தில் பொங்கியது. ஷீர்டி செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.
பாபாசாகேப் தர்க்கடும் அப்பொழுது சாயி பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.
ஆகவே தரம்சீ அவரைக் கேட்டார், "உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன? தர்கட் "விதையுள்ளவை" என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.
பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். "நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெரும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்".
பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்து கொண்டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்!
சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்சீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.
மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், "காகாவின் எஜமானர் ஒரு சேட் உண்டே - அவர் இவர்தான்!"
"யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் எஜமானர் வேறு யாரோ ஆயிற்றே!" என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.
இதில் வினோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர் கொண்ட ஒரு சமையற்காரரை இந்தக் கேலியில் இழுத்துவிட்டதுதான்.
பாபா சொன்னார், "இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின் மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் ஷிர்டிக்கு வந்திருக்கிறார்".