valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதில் சிரமம் ஏதும் இல்லை. மாமிசம் கலந்த உணவை வழக்கமாகச் சாப்பிடுபவர்களுக்குத்தான் பாபா அந்த உணவை அளித்தார்.

பிறந்ததிலிருந்து மாமிசம் சாப்பிடும் பழக்கமில்லாவதர்களை அவ்வுணவைத் தொடவும் விடமாட்டார். அம்மாதிரியான சாகசங்களை அவர் என்றுமே செய்ததில்லை. பிரசாதம் வேண்டுமென்று நாடியவர்களுக்கே மாமிச உணவு அளிக்கப்பட்டது.

குருவே ஒரு பிரசாதத்தை அளிக்கும்போது அது ஏற்றுகொள்ளத் தக்கதா, தகாததா, என்று விகற்பமாகச் சிந்திக்கும் சிஷ்யன் அதலபாதாளத்தில் வீழ்ந்து தன்னையே அழித்துக்கொள்கிறான்.

இந்தத் தத்துவத்தை பக்தர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதைக் கேலியாலும் நகைச்சுவை மூலமாகவும் பாபா தாமே நேரிடையாகத் தெரிந்துகொள்வார்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கதைகேட்பவர்களே! உங்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேள்கரைக் கேட்டார், "கோர் ஹாலாவிலிருந்து எனக்குக் கொஞ்சம் மாமிசம் வாங்கி வர முடியுமா?"

சாயி கொஞ்சம் பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்த்துவிட்டு தாதாவிடம் கொடுத்தார். "நீரே போய் வாரும். நீர்தான் இப்பணியைச் செய்யவேண்டும்"  என்றும் ஆணையிட்டார்.

கணேஷ் தாமோதர் என்ற பெயரும் கேள்கர் என்ற குடும்பப் பெயரும் கொண்டவரை அவருடைய மூப்பின் காரணமாக ஷீர்டி மக்கள் 'தாதா' என்றழைத்தனர்.

தாதா ஷிர்டியில் முதல் சத்திரம் கட்டிய ஹரிவினாயக் சாடேவின் மாமனார்; சாயிபாதங்களில் அளவுகடந்த பிரேமை கொண்டவர்; தம்முடைய ஆச்சார அனுஷ்டானங்களை சிரத்தையுடன் கடைபிடித்த பிராமணர்.

இரவுபகலாக பாபாவுக்கு சேவை செய்தும் திருப்தியடையாத இவர், பாபாவின் இந்த ஆணையைக் கேட்டு எப்படி ஆச்சரியப்படாதுபோனார் என்றுதான் எனக்கு விளங்கவில்லை!

உடல் வலிமை குறைவாக இருப்பினும், ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.

தனத்தையும் தானியத்தையும் வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணையாகிவிடாது. குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.

எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது.