ஷீர்டி சாயி சத்சரிதம்
எதிர்பார்க்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேவையான உணவு சமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் பரிமாற ஆரம்பித்தபோது எதிர்பார்க்கப்பட்டதுபோல் மூன்று மடங்கு விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்தது.
நெவாஸ்கரின் மருமகள் கதிகலங்கிப்போனார். தம் மாமியாரிடம் (பாலாஜி பாடீல் நெவாஸ்கரின் மனைவியிடம்) தம்முடைய பயத்தை மெல்லிய குரலில் கிசுகிசுத்தார். 'நாம் இந்த சங்கடத்திலிருந்து விடுபடுவது எப்படி?'
மாமியாருக்கு பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. "சமர்த்த சாயி நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்போது நமக்கென்ன கவலை? பயப்படாதே" என்று மாமியார் தைரியம் சொன்னார்.
இவ்வாறு மருமகளுக்கு தைரியம் அளித்துவிட்டு, மாமியார் ஒரு பிடி உதீயை எடுத்துகொண்டுபோய் உணவு சமைத்து வைத்திருந்த எல்லாப் பாத்திரங்களிலும் கொஞ்சம்கொஞ்சம் தூவிவிட்டு அவையனைத்தும் துணியால் மூடிவிட்டார்.
பிறகு அவர் சொன்னனர், "குஷியாக உணவை எடுத்துக் பரிமாறு. எந்தப் பாத்திரத்தையும் முழுவதும் திறக்காதே. உணவை முகப்பதற்குத் தேவையான அளவிற்குத் திறந்து, உடனே துணியால் மூடிவிடு. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் நீ உஷாராக செயல்பட வேண்டும்.
"இவ்வுணவு அனைத்தும் சாயியின் இல்லத்து அன்னம்; ஒரு பருக்கையும் நம்முடையது அன்று. அவமானம் வாராமல் காப்பவர் அவரே; பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே; நம்முடையதன்று!"
அந்த மாமியாரின் நிச்சயமான நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவருடைய அனுபவமும் ஆயிற்று. எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்லா விருந்தினர்களுக்கும் திருப்தியடையும் வரை உணவளிக்க முடிந்தது.
வந்தவர்கள் அனைவரும் விருந்துண்டு திருப்தியடைந்தனர். எல்லாம் நன்றாக நடந்துமுடிந்த பின்னரும் பாத்திரங்கள் முன்பு இருந்ததைப் போலவே உணவால் நிறைந்திருந்தன!
உதீயின் பிரபாவம் இதுவே. ஞானிகளுக்கு இதெல்லாம் சகஜமான சுபாவம். பக்தனைப் பொறுத்தவரை, பாவமும் எப்படியோ அப்படியே அனுபவம்.
உதீயின் மகிமையும் நெவாஸ்கரின் ஆழமான பக்தியைப் பற்றியும் பேசும்போது, இன்னுமொரு காதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை ஆடாத அசையாத மனத்துடன் கேளுங்கள்.
பிரதமமான கதையிலிருந்து பாதைமாறிச் செல்கிறேனோ என்னும் சிறிய சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அவ்வாறாகவே இருந்தாலும், அக் கதையை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
அவ்வாறு மனத்தில் முடிவெடுத்துவிட்டால், இப்பொழுது அக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அது இடம் மாறியிருக்கிறது என்று கதைகேட்பவர்கள் நினைத்தால், என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன்.