ஷீர்டி சாயி சத்சரிதம்
1917 ஆம் ஆண்டு பங்குனி மாதப் பௌர்ணமியன்று நான் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது விடியற்காலை நேரத்தில் கனவொன்று கண்டேன்.
சாயியின் விசேஷமான செயலைப் பாருங்கள்! அவர் எனக்கு அழகான சந்நியாசி உடையில் காட்சி தந்தார். என்னை எழுப்பி, "இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்!" என்று சொன்னார்.
கனவிலிருந்து விழித்துக்கொள்வது கனவின் ஒரு பகுதியே. ஆகவே, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பிறகு, நான் கனவில் கண்டதை ஞாபகத்திற்கு கொண்டுவர முயன்றேன்.
நான் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தேன். சாயியோ வேறெவருமோ அங்கு இல்லை. சற்று முன்பு நான் கண்டது கனவுதான்; கொஞ்சமும் விழிப்பில்லாத நிலையே.
இவ்விதமாக தெளிவடைந்தபிறகு, கனவை நினைவிற்குக் கொண்டுவர முயன்றேன். அவர் சொன்ன சொற்களைக் கொஞ்சமும் மறந்துவிடாமல், ஓர் எழுத்தையும் விட்டுவிடாமல் மனத்தில் திரும்பக் கொணர்ந்தேன்.
"இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்" என்ற சாயியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டு என்னுடைய ஜீவன் ஆனந்தம் அடைந்தது. இந்த விவரத்தை என் மனைவியிடம் சொன்னேன்.
மனத்திலும் இதயத்திலும் சாயி தியானமே இருந்தது. அதுவே நிரந்தரமான அப்பியாசம் ஆகிவிட்டது. ஆயினும், இந்த ஏழுவருட சகவாசத்தில், அவர் போஜனத்திற்காக என் இல்லத்திற்கு வருவார் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ என்றும் இருந்ததில்லை.
ஆயினும், நான் என் மனைவியிடம் சொன்னேன், "இன்று ஹோலிப் பண்டிகை. ஞாபகமாக ஒரு கால் சேர் அரிசி அதிகமாகப் பொங்கு".
இதை மாத்திரம் அவளிடம் சொன்னதால், அவள் காரணம் கேட்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன், "இன்று, இப் பண்டிகை நன்னாளில், ஒரு விருந்தாளி சாப்பிட வருகிறார்".
அவள் ஆர்வம் மேலிடக் கேட்டாள், "யாரென்று எனக்குச் சொல்லுங்கள்". நான் உண்மையைச் சொன்னால் அது பரிஹாசத்திற்குரிய விஷயமாக ஆகிவிடும்.
இதையும் நான் நன்கு அறிந்திருந்தேன். ஆயினும், உண்மையில்லாத விஷயத்தை சொல்லக்கூடாது என்று நினைத்து, நான் நடந்ததை நடந்தவாறு சிரத்தையுடன் அவளிடம் விவரித்தேன்.
இது ஒருவருடைய நம்பிக்கையைச் சார்ந்த விஷயமன்றோ! உள்ளே உணர்வு எப்படியோ அப்படியே பொய்யும் மெய்யும். ஈதனைத்தும் ஒருவருடைய மனத்தைச் சார்ந்தது.
நான் எவ்வளவு முயன்றபோதிலும் அவளை நம்பவைக்க முடியவில்லை. அவள் கேட்டாள், "பாபா ஷிர்டியிலிருந்து நெடுந்தூரம் கடந்து இங்கு எதற்காக வரவேண்டும்?-