ஷீர்டி சாயி சத்சரிதம்
34 . உதீயின் பிரபாவம் (பகுதி 2 )
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ
குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம்
தாழ்த்தி வணங்குகிறேன்.
உதீயின் மஹிமைபற்றி நிகழ்ச்சிகள் நடந்தது
நடந்தவாறு கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. இந்த அத்தியாயத்திலும்
உதீயின் குணலக்ஷணங்களை விவரிக்கும் வகையில் உதீயின் மஹிமைபற்றி மேற்கொண்டு
பேசுவோம்.
கேட்பவர்கள் சுகத்தையும் சகல செல்வங்களையும்
பெறுவதற்காகக் கடந்த அத்தியாயத்தைப் போலவே இந்த அத்தியாயத்திலும் உதீயின்
வைபவத்தை அமைதியான மனத்துடன் கேட்பீர்களாக!
புரையோடிப்போய் எந்த
வைத்தியத்திற்கும் ஆறாமல் தீராத வியாதியாகிவிட்ட ரணம், பாபாவின் கையால்
அளிக்கப்பட்ட விபூதியைப் பூசியதால் நிர்மூலமாகியது.
இவ்வாறான
உதீயின் கதைகள் அநேகம். திசை காட்டுவதுபோல் ஒரு காதையை மட்டும் சொல்கிறேன்.
அனுபவபூர்வமான காதையானதால் கேட்பவர்கள் ரசித்து மகிழ்வார்கள்.
நாசிக்
ஜில்லாவில் மாலே காங்வ் என்னும் ஊரில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற
டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் அன்னான் மகனுக்கு எந்தச் சிகிச்சையாலும்
குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருந்தது.
அவரே ஒரு பட்டம் பெற்ற,
தேர்ச்சி பெற்ற டாக்டர். அவர் நண்பரும் ஒரு டாக்டர். இருவருமே திறமை
வாய்ந்த, புகழ்பெற்ற அறுவை மருத்துவ நிபுணர்கள். பலவிதமான அணுகுமுறைகளைக்
கையாண்டும், கடைசியில் களைத்துப்போய் செய்வதறியாது திகைத்தனர்.
வியாதி,
எலும்பில் புரையோடிய ஆறாத ரணம். ஹாட்யாவ்ரணம் என்று இந்த வியாதிக்கு
மராட்டி மொழியில் பெயர்; இச் சொல் திரிந்து ஹாட் யாவர்ணம் என்றாகியது. இது
எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஒரு விசித்திரமான, தீராத வியாதி.
மனத்திற்குத் தோன்றிய உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியமுறைகளனைத்தும் கையாளப்பட்டன; எதுவும் பலனளிக்கவில்லை. அறுவை மருத்துவமும் செய்யப்பட்டது. அதுவும் டாக்டருக்குப் பெருமைத் தேடித் தரவில்லை.