ஷீர்டி சாயி சத்சரிதம்
நானா சொன்னார், "குதிரை வண்டி அமர்த்தியபோது நேராக ஷிர்டிக்குச் செல்லவேண்டுமென்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது. -
"தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார்". -
"நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, ஷிர்டியிலிருந்து திரும்பிவரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -
"ஷீர்டி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால், பொறுமையிழந்து தத்தர் தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -
"பின்னர், கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறிவிட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில், பிரயத்தனம் செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப் போட்டேன்".
பாபா நானாவைக் கண்டித்தார், "உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதை புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக்கொண்டீர். -
"தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீர் எவ்விதமான பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா என்ன!"
இப்பொழுது மறுபடியும் ஹண்டியைப் பற்றி பேசுவோம். ஓ, மசூதியில் சாயியுடன் அமர்ந்து உண்ட அந்த மதிய உணவு எத்தனை புனிதமானது ! சாயி, பக்தர்களின்பால் எவ்வளவு பிரேமை செலுத்தினார்!
ஒவ்வொரு நாளும் பாபாவுக்குப் பூஜையும் ஆரத்தியும் முடிந்து பக்தர்கள் தம் தம் வீடுகளுக்குத் திரும்பும்போது,-
பாபா வெளியே வந்து மசூதியின் கைப்பிடிச்சுவர் முனையில் நிற்பார். பக்தர்கள் அனைவரும் முற்றத்தில் காத்திருப்பர். பிறகு, அவர்கள் ஒவ்வொருவராக பாபாவை வணங்கிவிட்டுச் செல்வர்.
பாதங்களில் வணங்கிவிட்டு எழுந்து எதிரே நின்றபோது பாபா ஒவ்வொருவருக்கும் நெற்றியில் உதீ இடுவார்.
"இப்பொழுது, குழந்தைகள் பெரியோர்கள் எல்லாரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்". பாபாவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைவரும் வீடு திரும்புவர்.
பாபா திரும்பியவுடன் படுதா இறக்கப்படும். தட்டுகளும் கரண்டிகளும் கணகணவென்று ஒலிக்கும். பிரசாத விநியோக நிகழ்ச்சி ஆரம்பிக்கும்.
சாயியின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிது கிடைக்கும் என்ற ஆசையுடன் சில பக்தர்கள் கீழே முற்றத்தில் காத்திருப்பர்.