valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உடலை உதறும் நேரம் நெருங்கிவிட்டது என்று அறிந்து, புட்டி, காகா , ஆகியவர்களிடம் பாபா சொன்னார், "போங்கள்; வாடாவிற்குச் சென்று போஜனத்திற்குப் பிறகு வாருங்கள்."

சுற்றியிருந்தவர்களின் முகத்தில் பிரதிபலித்த சஞ்சலமும் கவலையும் பாபாவின் மனத்தைத் தடுமாறச் செய்தது போலும். அவர் எல்லாருக்கும் ஆணையிட்டார், "போங்கள், போங்கள், போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்."

இவ்வாறாக, நிரந்தரமாக அவருடைய சங்கத்தை அனுபவித்தவர்களும், இரவுபகலாக அவருடன் இருந்த நண்பர்களும், பாபாவின் ஆணையை மீறமுடியாத நிலையில் மனம் குழம்பியவாறே அங்கிருந்து எழுந்து சென்றனர்.

பாபாவின் ஆணையை மீற அவர்கள் விரும்பவில்லை; அவருடைய சன்னதியிலிருந்து அகலவும் விரும்பவில்லை. பாபாவின் மனத்தைப் புண்படுத்த விரும்பாது போஜனத்திற்காக வாடாவிற்குச் சென்றனர்.

பாபாவின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தபோது, சோறென்ன; நீரென்ன! அவர்களுடைய பிராணன் பாபாவிடம் இருந்தது; பிரிவைப்பற்றிய நினைவை அவர்களால் ஒருகணமும் சகித்துக்கொள்ள இயலவில்லை.

எப்படியோ போய், வாடாவில் சாப்பாட்டிற்காக அமர்ந்தனர். சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே அவசர அழைப்பு வந்தது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர். இருந்தபோதிலும், கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்!

ஆயுளென்னும் எண்ணெய் தீர்ந்துவிட்டது; பிராணாஜ்ஜோதி  மங்கியது. அங்கே, பாயாஜி, ஆப்பா கோதேவின் மார்பின்மேல் சாய்ந்தவாறு மீளாத்துயில்கொண்ட பூதவுடல் கிடந்தது.

படுக்கையில் படுத்தவாறோ தூக்கத்திலோ உயிர் பிரியவில்லை. ஆசனத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு, தம்முடைய கைகளாலேயே தானம் கொடுத்த பிறகு பாபா தேகத்தை உதறினார்.

தம்முடைய மனோகதியை எவரும் அறியாதவாறு சட்டென்று தம் உடலை உதறினார்; முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாகிவிட்டார்.

ஞானிகள் மாயையின் சக்தியால் தங்களையே சிருஷ்டி செய்துகொண்டு அவதாரம் செய்கின்றனர். மக்களைத் துன்பத்திலிருந்து கைதூக்கிவிடும் காரியம் முடிந்தவுடனே தோன்றாநிலையோடு ஒன்றிவிடுகின்றனர்.

ஒரு நடிகன் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும், தான் யார் என்பதைப் பூரணமாக அறிந்திருக்கிறான். இவ்வாறிருக்க , தம்மிச்சையாக அவதாரம் செய்தவருக்கு மரணம் என்ன சங்கடம்?

உலகத்தின் க்ஷேமத்திற்காக அவதரித்தவர், வேலை முடிந்தவுடன் அவதாரத்தை முடித்துக்கொண்டார். அவரை எப்படி ஜனனத்தாலும் மரணத்தாலும் கட்டிப்போட முடியும்? அவர் லீலைக்காக மானிட உருவத்தை ஏற்றுக்கொண்டவர் அல்லரோ?

பர பிரம்மம் என்று பெருமை பெற்றவருக்கு முடிவு எப்படி சம்பவிக்க முடியும்? 'என்னுடையது என்று எதுவும் இல்லை' என்ற அனுபவம் பெற்றவருக்கு இருப்பதோ இல்லாமற்போவதோ என்ன துன்பத்தை அளிக்க முடியும்?