valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"இவ்வாறான சமரசநிலையைக் கண்டவுடன் சித்தம் உருவத்தையும் பெயரையும் மறந்துவிடுகிறது. தன நிஜமான இயல்பால் சுய இயக்கத்தாலேயே என்னைப் பார்க்கிறது. என்னைத் தவிர அதற்கு வேறு இடம் இல்லாமற்போகிறது. -

"நான் ஸ்பர்சவேதி (பரிசனவேதி) இல்லை என்றும், சாதாரணக் கல்தான் என்றும், மக்களுக்கு நிரூபிப்பதற்காக புத்தகப் பண்டிதர்கள் ஆரவாரம் செய்துகொண்டு இரும்புக் கடப்பாரைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். -

"கடப்பாரைகள் என்னைத் தாக்கியபோது, பண்டிதர்களுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாக அவை பொன்னாக மாறின. நான் வெறும் கல் இல்லை என்பது நிரூபணமாகியது. அந்த அனுபவத்தால் அவர்கள் திகைப்பில் மூழ்கினர்.-

"அணுப் பிரமாணமும் 'நான், எனது' என்ற உணர்வின்றி, உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும்.  உடனே, உம்மிடமிருந்து அவித்யை (அறியாமை - மாயை) விலகும். சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.-

"தேகபுத்தி (உடல்தான் நான் எனும் உணர்வு) அவித்யையின் பிரசவம். தேகபுத்தியிலிருந்துதான் எல்லா மனோவியாதிகளும் உடலுபாதிகளும் தோன்றுகின்றன.  தேகபுத்திதான் மனிதனைச் 'செய்ய உகந்தது எது , செய்யத் தகாதது எது' என்னும் சட்டதிட்டங்களின்மீது மோதச் செய்கிறது.  இம் மோதல் ஆத்மசுத்திக்குத் தடையாகும். -

"நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்க வருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மை சந்திப்பேன். -

"நீர் கேட்கலாம், 'யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய லக்ஷங்கள் (அடையாளங்கள்) யாவை? எந்த சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காணமுடியும்' என்று.-

"இப்பொழுது , யாரிடம் சென்று சரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பனபற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும். -

"இந்த சிருஷ்டி நானாவிதமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்கமுடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள். -

"அதுபோலவே, சத்துவம், ராஜரசம், தாமசம்  ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளூர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ, அப்பொருளின் உருவத்தையே உமது இதயவாசியமாக அறிவீராக!-

"பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முல் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியின் (இறைவனின்) அடையாளம். இதையறிந்து அவனிடம் சரணடைவீராக. -