valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 28 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

32 . குரு மஹிமை - சாயி திருவாய்மொழி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில், சந்நியாசி விஜயானந்தர் நிர்வாணம் (முக்தி) அடைந்ததையும் பாலாறும் சாயியின் திருவடிகளில் கலந்ததையும் விவரித்தேன்.

அதுபோலவே, தாத்யாசாஹெப் நூல்கரும் மிக உன்னதமான பக்தராகிய மேகாவும் சாயியின் கண்முன்னே உடலை உகுத்த விவரமும் சொல்லப்பட்டது.

கொடிய மிருகமாகிய புலியொன்று உயிர்நீத்த பாணி இதையெல்லாம்விடப் பெரிய அற்புதம். செவிமடுத்தவர்கள் இதை விவரமாக கேட்டார்கள்.

இப்பொழுது வந்தடைந்திருக்கும் அத்தியாயத்தில், பாபாவே திருவாய்மொழிந்து வர்ணித்த விருத்தாந்தமொன்றைச் சொல்கிறேன். கேட்பவர்கள் அமோகமாக நன்மை அடைவார்கள்.

ஒருசமயம் காட்டில் இருந்தபோது, பாபா சற்றும் எதிர்பாராதவிதமாக குருதரிசனம் பெற்றார். குரு விளைவித்த அற்புதங்களை கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே திருவாய்மொழிந்ததும் பக்தி, சிரத்தை, முக்தி, இம்மூன்றையும் அளிக்கக்கூடியதுமான மிக அற்புதமான இக் காதையை என் போன்ற பாமரன் எவ்வாறு போதுமான அளவிற்கு விவரிக்க முடியும்?

அதுபோலவே, பாபாவை தரிசனம் செய்துவிட்டு மூன்று நாள்கள் ஷிர்டியில் தங்கி உபவாசம் இருக்கவேண்டும் என்ற விரத சங்கல்பத்துடன் வந்த ஒரு பெண்மணியை,-

விரதத்தை விடுத்து, பசியைக் கிளப்பிவிடுவதும் இனிமையானதுமான பூரணபோளியைச் செய்யவேண்டிய சூழ்நிலையை பாபா எவ்விதம் உருவாக்கினார் என்பதையும் சொல்கிறேன்.

போளியைச் சமையல் செய்ய வைத்ததுமல்லாமல், மனம் நிறையும்வரை  உண்ணவும் வைத்தார். பாரோபகரமாக நம்முடலைத் தேய்ப்பது போற்றத்தக்கது என்பதை அப் பெண்மணிக்கு விளங்கவைத்தார் பாபா.

உபவாசம் இருப்பதைவிடப் பாரோபகாரச் செயல்கள் மங்களம் தருபவை என்பதை, வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவாறு அப்பெண்மணியின் மனத்தில் பதியவைத்தார்.