ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆப்பாசாஹேப் பிற்பகலில் டானேவுக்குத்
திரும்பினார். அவர் இல்லாதிருந்தபோது என்ன நடந்ததென்பதைக் கேட்டவுடன்,
கோட்டைவிட்டதற்காக மனம் வருந்தினார்.
ஒரே ஒரு ரூபாய் தக்ஷிணையாகக்
கொடுக்கப்பட்டதை நினைத்து லஜ்ஜையடைந்தார். "நான் இங்கு இருந்திருந்தால்
தக்ஷிணையாக பத்து ரூபாயாவது கொடுக்காமல் அவரை அனுப்பியிருக்கமாட்டேன்".
ஆப்பாசாஹேப்
தமக்குத்தாமே இவ்வாறு சொல்லிக்கொண்டார். கொஞ்சம் மனம் வாடினார். பக்கீரை
ஒருவேளை மசூதியில் காணமுடியலாம் என நினைத்து, சாப்பிடாமலேயே அவரைத் தேடிக்
கண்டுபிடிக்கக் கிளம்பினார்.
மசூதியிலும் தகியாவிலும், எங்கெல்லாம் பக்கீர்கள் வழக்கமாகத் தாங்குவார்களோ அங்கெல்லாமும் தேடி அலைந்தார்.
தேடித் தேடிக் களைப்புற்றாரே தவிர, பக்கீரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பசியுடனும் ஏமாற்றத்துடனும் வீடு திரும்பியபின் உணவுண்டார்.
வெறும்
வயிற்றுடன் தேடும் வேலை எதையும் செய்யக்கூடாது என்பதை அவர்
அறிந்திராரில்லை. முதலில் ஜீவனைத் திருப்திசெய்ய வேண்டும். அதன் பிறகுதான்
தேடும் வேலையை ஆரம்பிக்கவேண்டும்.
இந்த யதார்த்தமான உண்மையாகிய தத்துவம், பாபா சொன்ன கதையிலிருந்தே விளங்கியிருக்கும். அதை மறுபடியும் சொல்வதால் என்ன பயன்?
சென்ற
அத்தியாயத்தில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் மனங்கவரும் கதையொன்று
சொல்லப்பட்டது. இக் கதையில், கருணை மிகுந்த ஸ்ரீ சாயி, தம் குருவின்
அறிவுரையைத் தம்முடைய திருவாய்மொழி மூலமாகவே விளக்கினார்.
அந்த
வார்த்தைகளின் சத்தியம் இப்பொழுது ஆப்பாவுக்கு அனுபவமாக கிடைத்தது.
உணவுண்டபின் சித்ரே என்னும் நண்பருடன் மறுபடியும் சகஜமாக வெளியே
கிளம்பினார் ஆப்பா.
சிறிது தூரம் சென்றபின், ஒருவர் தம்மையே
பார்த்துக்கொண்டிருந்ததையும் தம்மை சந்திப்பதற்காக தாமிருந்த இடத்தை
நோக்கி வேகமாக வந்ததையும் கண்டார்.
அவர் நெருங்கி வந்தபோது
ஆபாசாஹேப் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். காலையில் தமது வீட்டுக்கு வந்த
நபர் அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
"நான் இவ்வளவு
நேரம் தேடிய பக்கீர் இவர்தான் என்று தோன்றுகிறது. நகத்தின் நுனிவரை, நான்
வைத்திருக்கும் நிழற்படத்தை போலவேயிருக்கிறார். எனக்கு ஒரே வியப்பாக
இருக்கிறது".
இவ்வாறு ஆப்பா தமக்குள்ளேயே தெளிவு
தேடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று பக்கீர் கையை நீட்டினார். நீட்டிய
கையில் ஆப்பா ஒரு ரூபாயை வைத்தார்.
பக்கீர் மேலும் கேட்டபோது, ஆப்பா இன்னொரு ரூபாய் கொடுத்தார்; மேலும் ஒரு ரூபாயும் கொடுத்தார். அனால், பக்கீரோ இன்னும் வேண்டுமென்று கேட்டார். உண்மையான அதிசயம் இனிமேல்தான் மலரப்போகிறது.