ஷீர்டி சாயி சத்சரிதம்
தேவ் ஆச்சார நியமத்தின்படியும் சம்பிரதாயத்தின்படியும் சந்தனம், மலர்கள், தாம்பூலம், பன்னீர், அத்தர், ஆகிய பொருள்களை மிகுந்த மரியாதையுடன் அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சியடைந்தார்.
இவ்விதமாக நடந்து முடிந்த பிறகு அனைவரும் தம் தம் இடங்களுக்குத் திரும்பினர். சந்நியாசியும் தம்முடன் வந்த இரண்டு பையன்களுடன் அவருடைய ஊருக்குச் சென்றுவிட்டார்.
அழைக்கப்படாமல் சந்தர்ப்பவசமாக மூவரும் வந்தனர். எனினும், சரியான நேரத்திற்கு வந்து உணுவுண்டனர். ஆனால், தேவுக்கு சந்நியாசி பாபாவாகத் தெரியவில்லை; மனத்தில் சந்தேகமே நிறைந்திருந்தது.
ஈதனைத்தும் அவருக்குப் பிரதட்சயமாக நடந்தபோதிலும், எதிர்பாராமலேயே, அழைக்கப்படாத விருந்தாளிகள் மூவருக்கு அவருடைய கண்ணெதிரில் உணவளிக்கப்பட்டபோதிலும், தேவின் மனத்தில் சந்தேகமே நிலவியது. பாபா வந்ததற்குச் சாட்சி என்னவென்று ஜோக் கை கேட்டார்.
சந்தேகத்தின் விளைவாக, உத்தியாபன விழா நடந்து முடிந்த பிறகு ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். "பாபா எப்படி என்னை இவ்வாறு ஏமாற்றலாம்? டஹானுவிற்கு வருவதாக ஏன் உறுதியளித்தார்?
"அந்த உறுதி, நீங்களும் அவருடன் சேர்ந்து வருவீர்கள் என்றும், அவருடைய வார்த்தை மாறாது என்றும், என்னுடைய ஆசை நிறைவேறுமென்றும் என்னை நம்பவைத்ததா, இல்லையா?
"ஆயினும் நடந்தது என்ன? என்னுடைய ஆசை ஏன் நிராசையாகிவிட்டது? பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தேன். ஒருவரும் சொன்னவாறு வரவில்லை.
"ப்ரேமையுடன் பாபாவை அழைத்தேன். சரணாகதியடைந்த எனக்கு, வருவேன் என்று அவரும் சொன்னார். ஆனால், நடந்ததோ வேறுவிதமாக. இது எவ்வாறு இப்படி நடந்தது என்று எனக்கு விளங்கவில்லையே !-
"நான் உத்தியோகம் செய்து பிழைப்பவனாதலால், என்னால் நேரில் வர இயலவில்லை. மனப்பூர்வமாக மன்றாடிக் கடிதம் எழுதினேன். என் கடிதத்தையும் மதித்து நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து நான் பெரும்பேறு பெற்றவனென்று நினைத்தேன். -
"ஏதோவொரு சாக்குப்போக்கை வைத்தோ, ஏதாவதொரு மாறுவேஷத்திலோ வருவீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறு, எப்படி நடக்காது போயிற்று என்பது எனக்கு விசேஷமான ஆச்சரியத்தை அளிக்கிறது".
"ஜோக் கடிதத்தின் முழு விவரத்தையும் சாயியின் பாதங்களில் நிவேதனம் செய்தார். பாபா ஆச்சரியமடைந்து என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
"என்னெதிரில் ஒரு கடிதம் பிரிக்கப்படும்போதே கடிதம் எழுதியவரின் எண்ண ஓட்டத்தை நான் அறிகிறேன். ஆதியிலிருந்து அந்தம்வரை எழுதியவரின் எண்ணங்கள் என்முன்னே உருவெடுத்து நிற்கின்றன.
"நான் வாக்குறுதி அளித்தபிறகு அவரை ஏமாற்றிவிட்டேன் என்று சொல்கிறார். என்னை அடையாளம் கண்டும்கொள்ள முடியாதவர், எனக்கு ஏன் அழைப்பு விடுத்தார் என்று அவரைக் கேளும். -