valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, வாயிற்கதவு அடைக்கப்பட்டது. அன்னத்தை சுத்தம் செய்வதற்காக நெய் பரிமாறப்பட்டது. வைச்வதேவ நைவேத்தியமும் முடிந்துவிட்டது. சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.

போஜனம் செய்பவர்கள் பிராண ஆஹுதி செய்யப்போகும் சமயத்தில் வீட்டிற்கு வெளியே காலடி சத்தம் கேட்டது. "ராவ்சாஹிப் எங்கிருக்கிறார்?" என்று யாரோ வினவும் குரலும் கேட்டது. சாப்பிட உட்கார்ந்தவர்கள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

யாரோ வந்திருக்கிறார் என்று நினைத்து நான் வாயிற்கதவுக்குச் சென்றேன். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தேன்; படிகளில் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் அல்லீ முஹம்மது. மற்றவர் இஸ்மூ முஜாவர் என்ற பெயர் கொண்டவர்; முஸ்லீம் ஞானி மௌலானாவின் சிஷ்யர். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

போஜனத்திற்கு எல்லாம் தயார் நிலையில் இருந்ததையும் இலைகளில் உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டிருந்ததையும் எல்லாரும் சாப்பிடக் காத்துக்கொண்டிருந்ததையும் இருவரும் கண்டனர். இதையெல்லாம் பார்த்த அல்லீ முஹம்மது பணிவுடன் கேட்டுக்கொண்டார், 'நான் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னித்துவிடுங்கள்.-

"சாப்பிட உட்கார்ந்த நீங்கள் எனக்காக எழுந்து வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்களுக்காக மற்றவர்களும் காத்திருக்கின்றனர்.-

"ஆகவே, உங்களுடைய வஸ்துவை (பொருளை) ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை பின்னர் சந்திக்கிறேன். சமயம் வரும்போது இதுபற்றிய மிக ஆச்சரியமானதும் அற்புதமானதுமான விஷயத்தை விவரமாகச் சொல்கிறேன்".

இவ்வாறு சொல்லிக்கொண்டே, அல்லீ முஹம்மது கையிடுக்கிலிருந்த ஒரு பார்சலைத் தமக்கெதிரிலிருந்த மேஜையின் மீது வைத்துக் கட்டுகளைப் பிரிக்க ஆரம்பித்தார்.

மேலே சுற்றியிருந்த செய்தித்தாள் காகிதங்களைப் பிரித்த கணமே, சாயியின் மூர்த்தி (களிமண்ணாலான புடைச்சிற்பம் - BAS - RELIEF ) கண்களுக்குத் தென்பட்டது. அவர் சொன்னார், "என்னுடைய வேண்டுகோளை ஏற்று, இதை எடுத்துக்கொள்ளுங்கள்".