ஷீர்டி சாயி சத்சரிதம்
அதிலிருந்து பெரியதும் அழகியதுமான பிரதியொன்றைத் தயார் செய்தார். அதை எடுத்துகொண்டுபோய் அப்துல் பாபாவைப் பேட்டி கண்டு, அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டுமென்று விரும்பினார். அவ்வாறு செய்தால் அப்துல் பாபா மகிழ்ச்சியடைவாரென்றும் உள்ளுக்குள் பிரேமையால் பொங்குவாரென்றும் எதிர்பார்த்தார்.
மேலும் சில பிரதிகளையும் எடுக்கவைத்து நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்தார். எனக்கும் ஒரு பிரதி கொடுத்தார்! நான் அதைச் சுவரில் மாட்டினேன்.
நூர் முஹம்மது (மைத்துனர்) அப்துல் ரஹிமானின் தர்பார் கூடியிருந்தபோது, மிக அழகான அப் படத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்காத தயார் நிலையில் இருந்தார்.
அப்துல் ரஹ்மான் பாபா தம்முடைய படத்தை பார்த்தவுடன் நூர் முஹம்மதின் உள்ளத்தை அறிந்து கடுங்கோபம் கொண்டார். அவரை அடிப்பதற்காக எழுந்தார்.
அவரை அவமரியாதையாகப் பேசியும் ஏசியும் விரட்டிவிட்டார். இதனால் நூர் முஹம்மதுவின் முகம் பரிதாபமாகச் சுண்டியது. அவர் பெருங்கவலையில் ஆழ்ந்தார்.
அவமானமும் பரிதாபமும் நிறைந்து அவருடைய மனம் குழம்பிச் சோர்ந்துபோயிற்று. 'பணம் வீணாகச் செலவானதுமல்லாமல் குருவருளுக்கு விக்கினம் வந்து சேர்ந்ததே!-
'குருவருள் பெற்ற நான் இன்று வீணாக அவருடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டேனே!' என்று சொல்லிக்கொண்டே விசனம் நிரம்பிய மனத்தினராய் படங்களைத் தூக்கியெறிய ஆரம்பித்தார்.
அவர் சொன்னார், 'ஞானிகளின் படங்களையும் சிற்பங்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது . எதற்காக இந்த வீண் முயற்ச்சி? அவற்றினால் நான் குருவின் பிரேமையை இழந்துவிட்டேன்!-
'எந்தப் படத்தால் குரு என்மேல் கோபமடைந்தாரோ, அந்தப் படம் எப்பொழுதுவாவது எனக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனக்கு அப் படம் தேவையில்லை.-
'அதுவும் ஒருவகையான உருவவழிபாடுதானே! என் குருவுக்குப் பிடிக்காததும் அவரைக் கோபமடையச் செய்ததுமான படத்தால் எனக்கு என்ன உபயோகம்?-
'மிகுந்த பணச்செலவில் செய்யப்ட்டவையாக இருப்பினும், இப்பொழுது அவற்றைத் தண்ணீரில் மூழ்கடிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று என் மைத்துனர் நினைத்தார்.
ஆகவே, என் மைத்துனர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதைத் தண்ணீரில் மூழ்கடிப்பதற்காகத் துறைமுகத்திற்குச் சென்றார். விரும்பிக் கேட்டாலும், அப் படத்தை அவர் யாருக்கும் கொடுப்பதாக இல்லை.