ஷீர்டி சாயி சத்சரிதம்
இக் கேள்விக்கு ஒரே பதில்தான் உண்டு. சாயி பாபா எது தர்மம், எது அதர்மம் என்பதை நிரந்தரமாக அறிந்திருந்தார்.
ஹண்டியில் தயாரிக்கப்பட்ட பதார்த்தத்தை எல்லாரும் சாப்பிடவேண்டுமென்று பாபா என்றுமே சிறிதளவும் வற்புறுத்தியதில்லை.
பிரசாதத்தை அடையவேண்டுமென்று எவரெவர் தம்மிச்சையாகவே விரும்பினார்களோ, அவர்களுடைய ஆசையே பாபாவால் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டது. அவர் யாரையும் ஏமாற்றவில்லை!
மேலும், அவர் எந்த ஜாதியென்பதை யார் அறிவார்? மசூதியில் வாழ்ந்தாரென்பதால் அவர் ஒரு முஸ்லீம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆயினும், அவருடைய வாழ்க்கைநெறியைக் கண்டு ஜாதியென்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவரைக் கடவுளாக ஏற்று பக்தர்கள் பாததூளியில் புரளுகின்றனரோ, அவருடைய ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்யவேண்டுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!
எவரிடம் இகபர நாட்டமின்மை உட்பொதிந்திருந்ததோ, இவருக்கு விவேகமும் வைராக்கியமுமே செல்வமோ, அவருடைய ஜாதியை ஒரு பிரச்சினையாக எழுப்பவேண்டுமா! அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டவரும் சுத்த ஆனந்தத்தில் சதா மூழ்கியவருமானவரின் ஜாதி என்னவென்று தெரிந்துகொள்ள வேணுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!
இவ்வாறே பாபாவின் சரித்திரம். நானோ நிஜமான சுகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே அவருடைய சரித்திரத்தைப் பாடுகிறேன். கேட்க வேண்டுமென்று விரும்புபவர்களின் ஆவலை என் பாட்டு பூர்த்திசெய்யும்.
ஹண்டிக் கதையின் நூலை வழியில் எங்கோ விட்டுவிட்டோம். இப்பொழுது, பாபா தாதாவிடம் என்ன கேட்டார் என்பதைச் சொல்கிறேன்; கவனத்துடன் கேளுங்கள்.
"சுவையான புலாவ் கொஞ்சம் சமைக்கப்பட்டிருந்தது. அது எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்தீரா?" "ஆஹா, ஆஹா, மிகச் சுவைக்காக இருக்கிறது" என்று தாதா உபசார வார்தையைச் (புகழ் மொழியாக) சொன்னார்.
தாதா கேள்கர் வயதான பக்த சிரேஷ்டர். ஸ்நானம், சந்தியாவந்தனம் போன்ற தினசரிச் சடங்குகளை நியம நிஷ்டையுடன் செய்துவந்தவர். எந்த காரியமும் சாஸ்திரிவிதிகளுக்கு உட்பட்டதா, உடன்படாததா என்று பார்த்து சதா அனுசரித்துவந்தவர். அவருக்கு இச்செயல் (மாமிசம் கலந்த உணவைச் சுவைத்துப் பார்த்தல்) முறையானதாகத் தோன்றவில்லை.
பாபா தாதாவிடம் சொன்னார், 'நீர் எப்பொழுதும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. எப்பொழுதும் சுவைத்தும் பார்த்ததில்லை. அவ்வாறிருக்க, அது சுவையாக இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்?-