valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 July 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிதலேவின் மனைவி பரம சாது; பிரேமையும் பக்தியும் சிரத்தையும் நிரம்பியவர். அவர் தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு பாபாவையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.

அவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தபோதே அவருடைய கண்களில் நீர் நிரம்பிவிடும். இது தினமும் நிகழ்ந்தது. அவருடைய அற்புதமான அன்பைப் பார்த்து, பாபா மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இறைவன் எப்படியோ அப்படியே ஞானிகளும், இருவருமே அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். பராதீனமாகவும் (சுதந்திரத்தை இழந்தும்) வேறெதிலும் நாட்டமின்றியும் எவரெல்லாம் வழிபாடு செய்கிறார்களோ , அவர்களெல்லாருக்கும் அருள்புரிகின்றனர்.

பிதலே குடும்பத்தினர் பம்பாய் திரும்புவதற்கு முன், பாபாவை தரிசனம் செய்வதற்காக மசூதிக்கு வந்தனர். பாபாவிடம் இருந்து உதீயும் அனுமதியும் பெற்றுக்கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமானவர்கள்.

திடீரென்று பாபா பிதலேவை கூப்பிட்டுக்கொண்டே மூன்று ரூபாய்களை (நாணயங்களை) தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்தார். அப்பொழுது பாபா என்ன சொன்னார் என்பதை கேளுங்கள்.

"பாபு! நான் இரண்டு ரூபாய் ஏற்கனேவே கொடுத்திருக்கிறேன். இந்த மூன்றையும் அவற்றுடன் சேர்த்து வைத்துக்கொண்டு முறை தவறாது பூஜை செய்வீராக. அது சகல மங்களங்களையும் அளிக்கும்".

ஹரிச்சந்திர பிதலே பெருமகிழ்ச்சியுடன் அந்த நாணயங்களை பிரசாதமாக ஏற்றுக்கொண்டார். பாபாவின் பாதங்களை நமஸ்காரம் செய்த பின், "கிருபை செய்வீர் மஹாராஜா!" என்று வேண்டினார்.

இருந்த போதிலும், அவருடைய மனதில் ஒரு கேள்வி உடனே எழுந்தது. "இப்பொழுதுதான் நான் முதன்முறையாக பாபாவிடம் வந்திருக்கிறேன். அப்படியிருக்க, பாபா சொன்னதற்கு என்ன பொருள்? எனக்குப் புரியவில்லையே !-

"நான் பாபாவை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. எனக்கு எப்படி ஏற்கனவே அவர் இரண்டு ரூபாய் கொடுத்திருக்க முடியும்!" பிதலே மனதுள் வியப்படைந்தார்.

பாபா சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. ஆனால், பாபா வேறு குறிப்பு ஏதும் அளிக்காததால், அந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

ஞானிகள் சகஜமாக ஏதாவது பேசுவார்கள்; ஆயினும் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். பிதலேவின் உள்மனத்திற்கு இது தெரிந்திருந்ததால், அவருடைய ஆர்வம் அதிகமாகியது.

அவர் பம்பாய்க்கு திரும்பி வீடு சேர்ந்தவுடன் அகத்தில் இருந்த ஒரு மூதாட்டி இப்புதிருக்கு விளக்கமளித்தார்.

அம் மூதாட்டி பிதலேவின் தாயார். ஷீர்டி சென்று வந்த அனுபவங்களை பற்றி அவர் கேட்டறிந்தபொழுது மூன்று ரூபாய் சமாசாரம் வெளிவந்தது. அதற்கும் , ஏற்கெனவே கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு ரூபாய்க்கும் இருந்த சம்பந்தன்தான் பிடிபடவில்லை.