ஷீர்டி சாயி சத்சரிதம்
சிந்தாமணியைக் கொடுத்தாலும், எப்பொழுதும் இருக்கும் கவலைகள் அதிகரிக்கத்தான் செய்யும். அந்தச் சிந்தனைக்கெட்டாத தானத்திற்குப் பிரதியாகச் சிந்தாமணியைக் கொடுத்துவிட்டேன் என்று யாராவது நினைத்தால், அவருடைய விவேகமும் விளக்கமும் குழந்தைத்தனமானவை.
கற்பக விருட்சத்தைக் கொடுத்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கலாம். ஆனால், இணையில்லாததும் விகற்பம் இல்லாததுமான தானத்தை அளிப்பதில் சாயி கைதேர்ந்தவர் அல்லரோ! அதை எப்படித் திரும்பிச் செலுத்த முடியும்?
ஆக, இவற்றுடன் சேர்த்துப் பரிசனவேதியைக் குருவுக்குக் கொடுத்தால், அந்தப் பரிசனவேதி தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாகத்தான் மாற்றும். இது இப்படி இருக்கையில், நாம் குடிப்பதற்கு பிரமானந்தத்தைக் கொடுக்கக்கூடியவர் அல்லரோ குரு!
காமதேனுவை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்குப் பதிலுதவி செய்துவிட்டோம் என்று நினைத்தால், உழைப்புதான் மிஞ்சும். மாறாக, பற்றேதும் இல்லாத குரு அளிப்பவற்றில் உழைப்போ சங்கடங்களோ இரா.
அகில உலகத்திலும் உள்ள சம்பத்துக்களை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்கு கைம்மாறு செய்துவிடலாம் என்று சிலர் விரும்பலாம். மாயையைக் கடந்த உண்மைப்பொருளை வழங்குபவருக்கு, மாயையால் விளைந்த பொருளைக் கொடுத்துக் கடனை என்றாவது அடைக்க முடியுமா?
பரமகுருவுக்கு தேகத்தை அர்ப்பணம் செய்வோமென்றால், அதுவும் கேவலம் அழியக்கூடிய பொருள். ஜீவனை சரணடையச் செய்தாலும், அது இயல்பிலேயே மித்தியம் (பொய்).
சத்குரு சத்தியவஸ்துவை (உண்மைப்பொருளை) வழங்குபவர். அவருக்கு மித்தியவஸ்துக்களை (பொய்யான பொருள்களை) அர்ப்பணம் செய்து எப்படிப் பிரதியுதவி செய்ய முடியும்?இது இயலாத காரியம் அன்றோ?
ஆதலின், அனன்னியமானதும் பூரணமானதுமான சிரத்தையுடன், சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, சத் குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து, அவர் செய்த அருட்செயல்களை மனத்தில் இருத்தி அவரை வழிபடுவோமாக.
குரு செய்த அருட்செயல்களை அகண்டமாக (இடையறாது) நினைவில் கொள்வதே சிஷ்யனுக்கு அணிகலன். கைம்மாறு செய்ய முயலும் சிஷ்யர்கள் தங்களுடைய சுகத்தை இழப்பர்!
கதைகளை இதுவரை கேட்டவர்கள் மேலும் கேட்கத் தாகம் கொண்டுள்ளனர். அவர்களுடைய பூரணமான விஷய ஆர்வத்தையும் பரபரப்பையும் காணும் நான், இப்பொழுது இன்னொரு காதையையும் சொல்கிறேன்.
சம்சாரிகளுக்குச் சமமாக, ஞானியரும் தம் சுற்றத்தின் மீதான பிரேமையை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, உலக மக்களை ஒன்று சேர்ப்பதிலும் நல்வழிப் படுத்துதலிலும், அவர்கள் நேரம் தவறாது செயல்படுவதை சூக்குமமாக தெரிவிக்கின்றனர்.






