valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒவ்வொரு வீட்டிலும் குழப்பம் நிலவியது; மக்கள் கூக்குரலிட்டனர்; இதயம் படபடவென்று துடிக்க இங்குமங்கும் ஓடினர்.

மஹராஜ் தேகத்தை விடுத்துவிட்டார். கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உயிருக்கே உலைவந்தது போல் உணர்ந்தனர். "இறைவா! எவ்வளவு கொடுமையான வேளை இது! இதயத்தைப் பிளக்கிறதே !" என்று மக்கள் கூவினர்.

அனைவரும் மசூதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சபாமண்டபம் நிரம்பி வழிந்தது. இதயத்தைப் பிளக்கும் காட்சியைக் கண்டு மக்கள் துக்கத்தால் தொண்டை அடைக்க விம்மி விம்மி அழுதனர்.

'ஷிர்டியின் வைபவம் தொலைந்துபோயிற்று!  சுக சௌபாக்கியங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்' என்று நினைத்து எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியது. மக்கள் அனைவரும் தைரியம் இழந்தனர்.

அந்த மசூதியின் மஹத்துவந்தான் என்னே! முக்தி தரும் சப்தபுரிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்டதன்றோ ! 'துவாரகா மாயி' என்று பாபா சர்வ நிச்சயமாகப் பெயரிட்ட இடமன்றோ?

நிர்யாணமாக (கடைசிப் பயணமாக)  இருப்பினும், துவாரகா மாயியே இறையுடன் ஒன்றாகக் கலக்கக்கூடிய தலம். எவர் இறைவனை இடையறாது சிந்திக்கிறாரோ அவருக்கு அங்கு இடம் உண்டு.

காருண்யம் மிகுந்த தாயுந்தந்தையுமானவரும் , பக்கதர்களுக்கு விச்ராந்தி அளிக்கும் புகலிடமானவருமான குருராஜர், சாயீராயர், இத்தன்மை படைத்தவர்; என்றும் ஞாபகத்தில் இருப்பவர்.

பாபா இல்லாமல் ஷீர்டி பாழடைந்தது. பத்துத் திசைகளும் சூனியமாக தெரிந்தன. பிராணனை இழந்த உடல்போல் ஷீர்டி காட்சியளித்தது.

குளத்தில் நீர் வற்றிப்போகும்போது மீன்கள் துள்ளிப் புரண்டு துடிக்கும். அதுபோலவே ஷீர்டி மக்களும் துக்கத்தால் துடித்தனர்; களை இழந்தனர்.

தாமரை இல்லாத நீர்நிலையைப் போலவும், புத்திரன் இல்லாத இல்லதைப் போலவும், தீபம் இல்லாத கோயிலைப் போலவும், மசூதியும் சுற்றுப்புறமும் களையிழந்து போயின.

தலைவன் இல்லாத குடும்பத்தைப் போலவும், அரசன் இல்லாத நகரத்தைப் போலவும், செல்வம் இல்லாத கஜானா போலவும், பாபா இல்லாத ஷீர்டி வனமாகியது.

சிசுவுக்குத் தாயார் எப்படியோ, சாதகப் பறவைகளுக்கு மேகநீர் எப்படியோ, அப்படியே ஷிர்டியில் வாழ்த்த மக்களுக்கும் சகல பக்தர்களுக்கும் பாபாவின் அன்பு.

ஷீர்டி, ஹீனமும் தீனமும் அடைந்து மரணமுற்றதுபோல் ஒளியிழந்தது. நீரிலிருந்து அகற்றப்பட்ட மீன்களை போல மக்கள் வேதனையால் துடிதுடித்தனர்.

மக்களனைவரும், கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியைப் போலவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைப் போலவும், வழி தவறிய பசுவின் கன்றைப் போலவும் பரிதவித்தனர். 




Thursday 18 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களுக்குக் கைதூக்கி வாழ்த்துக் கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷிர்டியில் நீத்துவிட்டபோதிலும், நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமார்த்தியமுடையவர் அல்லரோ!

'சமர்த்த ஸாயிதான் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட்டாரே, இப்பொழுது ஷிர்டியில் என்ன இருக்கிறது?' இது போன்ற சந்தேகங்களுக்கு மனத்தில் இடமளிக்க வேண்டா. ஏனெனில், ஸ்ரீ சாயி மரணத்துக்கு அப்பாற்பட்டவர்.

ஞானிகள், பரோபகாரம் கருதி கர்ப்ப வாசம் இல்லாமல் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியவர்கள். ஞானிகள் பாக்கியவந்தர்கள்; பிரம்ம சொரூபமானவர்கள்; உருவமேற்று அவதாரம் செய்பவர்கள்.

அவதார புருஷர்களுக்கு ஜனன நிலையும் இல்லை; மரண நிலையும் இல்லை. வந்த வேலை முடிந்தவுடன் சொந்த ரூபத்திற்குத் திரும்பித் தோன்றாநிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

மூன்றரை முழ நீள உடல்தானா பாபா? அவருக்கு ஓர் உருவத்தையோ குறிப்பிட்ட வண்ணத்தையோ கற்பிப்பது அயுக்தமான (பொருத்தமில்லாத) பேச்சு அன்றோ?

அணிமா, கரிமா ஆகிய எட்டு மஹா சித்திகள் அவர் வருவதாலும் போவதாலும் குறைவதுமில்லை; நிறைவதுமில்லை. அகண்டமான சம்ருத்தி (நிறைவு) அவருக்குச் சொந்தமானது. அதுவே அவருடைய புகழ்.

இம்மாதிரியான மஹானுபாவர்களின் உதயம் உலக மங்களத்திற்காகவே. உதயம் நீடித்தலிலும் நிற்றலிலும் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். ஞானிகள் உலக மக்களைக் கைதூக்கிவிட எப்பொழுதும் தயார்.

ஆத்மாவில் ஒன்றி, அழிவில்லாத நிலையில் இருக்கும் இவர்களுக்கு ஜனனம்பற்றிய  பிராந்தியும் (மனா மயக்கமும் ) மரணம் பற்றிய பிராந்தியும், கனவில் ஏற்படும் சுகங்களையும் சம்பத்துக்களையும் போலாகும்.

இதையே வேறுவிதமாக பார்த்தாலும், ஞானச் சுரங்கமாகவும்  ஆத்மாவில் மூழ்கியவராகவும் வாழ்பவருக்கு, உடலைப் பேணுதலும் வீழ்த்துதலும் சரிசமானம்.

ஆக, அவர்களனைவரும் மலைபோன்ற துக்கத்தில் அமிழ்த்திவிட்டு பாபாவின் உயிரற்ற உடல் சாய்ந்தது. ஷீர்டி கிராமமெங்கும் 'ஹாஹா' என்ற அவல ஓலம் கட்டுக்கடங்காமல் எழும்பியது.

பாபா நிர்யாணம் அடைந்த செய்தி கிராம மக்களை அம்புபோல் துளைத்தது. தினசரி நடவடிக்கைகள் தடங்கி நின்றன. கலவரமடைந்த மக்கள் சிதறி இங்குமங்கும் திசை தெரியாது ஓடினர்.

அமங்கலச் செய்தி பரவி, மக்களின் தலைமேல் இடிபோல் விழுந்தது. சிந்தனையாளர்கள் திகைப்புற்று அமர்ந்தனர். மற்றவர்கள் ஓலமிட்டு அழுதனர்.

பேரன்பாலும் பொங்கும் துக்கத்தாலும் தொண்டை அடைத்தது; கண்களில் நீர் பெருகியது. மக்கள் 'சிவ சிவ ஹரே' என்று புலம்பினர்.

 


 

Thursday 11 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சூரியனை கிரஹணம் பிடித்திருக்கிறது என்றும், அது கண்ணக்குத் தெரியாமல் போய்விட்டது என்றும் மக்கள் சொல்லுகின்றனர். ஆனால், அது வெறும் பார்வையின் குணதோஷமே, ஞானியரின் மரணமும் அப்படியே.

ஞானிகளுக்கு உடல் என்பது கேவலம் ஒரு உபாதி.அவர்களுக்கு ஏது பிறவிப்பிணி? பழவினையால் ஏதேனும் பந்தம் இருப்பினும் அதை அவர்கள் அறியமாட்டார்கள்.

உருவமற்ற நிலையில் இருந்தபோது அடியவர்களின் பக்தியால் நிரம்பி வழிந்ததாலும், பக்தர்கள் பூர்வஜென்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தால், அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டார். பக்தர்களுக்கு கைதூக்கி வாழ்த்துக் கூறுவதற்காகவே ஷிர்டியில் காணப்பட்டார்.

'பக்தர்களுக்காகத் தோன்றிய காரியம் முடிவடைந்தது; ஆகவே, அவர் உடலை உதிர்த்துவிட்டார். ' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைகளை யார் நம்புவர்? யோகிகளுக்கு போவதும் வருவதும் உண்டோ?

இச்சாமரண சக்தி (விரும்பியபோது உயிர் பிறக்கும் சக்தி) படைத்த சமர்த்த சாயி, தேகத்தை யோகாக்கினியில் எரித்துவிட்டு மூலப்பிரகிருதியுடன் கலந்துவிட்டார். ஆயினும், பக்தர்களுடைய இதயத்தில் என்றும் வாசம் செய்கிறார்.

எவருடைய நாமத்தை நினைத்தால் ஜனனமரண எண்ணமே ஓடி மறைந்துவிடுகிறதோ, அவருக்கு மரண அவஸ்தை ஏது? முதலிலிருந்த தோன்றா நிலைக்கு அவர் திரும்பிவிட்டார் என்றே அறிதல் வேண்டும்.

பௌதிக நிலையிலிருந்து தாவி, தோன்றாநிலையில் பாபா கலந்தார். அந்த நேரத்தில், தம்மிலேயே மூழ்கிய நிலையை அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும் , பக்தர்களை விழிப்புடன் இருக்கச் செய்தார்.

எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த தேகம் மறைந்து போயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? மனம் அந்த வார்த்தைகளை ஏற்க மறுக்கிறது.

ஆதியும் அந்தமுமில்லாத இந்த சாயி பிரளய (ஊழிக்) காலத்திலும் இருப்பார். ஜனனமரண அபாயத்தில் என்றுமே மாட்டிக்கொள்ளமாட்டார்.

மஹராஜ் ஞானேச்வர் எங்கே போனார்? மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தரிசனம் தந்தார் அல்லரோ! ஞானி ஏகநாதர் அவரை சந்தித்தார். அந்த உபகாரத்துக்கு உலகம் அவருக்கு கடைமைப் பட்டிருக்கிறது.

கிருபாசனமுத்திரமான ஏகநாதர் பைடனின் ஜோதியாக எவ்வாறு பிரகாசித்தாரோ, அவ்வாறே துகாராம் மஹராஜ் தெஹூவிலும், நரசிம்ம சரஸ்வதி ஆலந்தியிலும் பிரகாசித்தனர்.-

பரளியில் சமர்த்த ராமதாசர்; அக்கல்கோட்டில் அக்கல்கோட் மஹாராஜ்; ஹுமானாபாத்தில் மாணிக்கப் பிரபு; அவ்வாறே ஷிர்டியில் இந்த சாயி.

மனம் எப்படியோ அப்படியே பாவம். பாவம் எப்படியோ அப்படியே என்றும் அனுபவம். புகழ் பெட்ரா சித்திகளை உடையவருக்கு மரண நிலை ஏது? 






Thursday 4 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தம்மிலேயே மூழ்கி எந்நேரமும் 'அல்லா மாலிக்' ஜபம் செய்பவருக்கு, சன்னிதானத்தில் பக்தர்கள் இருப்பது எப்படி ஒரு பிரதிபந்தமாக (மாற்றுத் தளையாக - தடையாக) ஆக முடியும்?

அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சமே இல்லாமற்போய் வீடுபேற்றில் உறைந்துவிட்டார். 'இரண்டுண்டு' என்னும் பாவம் வேருடன் பிடுங்கி எறியப்பட்டுவிட்டது. தம்முடைய நிஜமான சொரூபத்திலேயே மூழ்கியிருந்தார்.

இதில் ஒவ்வொரு அக்ஷரமும் சத்தியம்; அணுவளவும் அசத்தியம் இல்லை. ஆயினும் உலகத்திற்கு வழிகாட்டுவதால்தான், ஞானியர் தங்களுடைய அவதார நோக்கமான கடமையை நிறைவேற்றியவர்கள் ஆகின்றனர்.

ஞானிகள் ஆறு குணதோஷங்களிலிருந்தும் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை) விடுபட்டவர்கள். நிரந்தரமாக உருவமற்ற நிலையில் இருப்பவர்கள். பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே உருவம் ஏற்பவர்கள். அவர்களுக்கு ஏது மரணம்?

தேகமும் இந்திரியங்களும் ஒன்றுசேர்வது ஜனனம்; அவை பிரிவது மரணம். பாசபந்தங்களில் மாட்டிக்கொள்வது ஜனனம்; அவற்றிலிருந்து விடுபடுவது மரணம்.

பிறப்பை இறப்பு தவிர்க்கமுடியாதவாறு தொடர்கிறது; ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்கமுடியாது. ஜீவனுடைய இயற்கையான லக்ஷணம் மரணம் நிலை; ஜீவன் உயிருடன் இருப்பது செயற்கையான நிலை.

தம்மிச்சையாக அவதாரம் செய்பவர்களுக்கும், காலனின் தலைமேல் காலை வைத்து மரணத்தை அடித்து வீழ்த்தும் சக்தி பெற்றவர்களுக்கும், வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் என்பது பற்றி என்ன விசாரம்!

பக்தர்களுக்கு மங்களம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பத்தால் பல அவதாரங்கள் எடுப்பவர்களை ஜனனமும் மரணமும் எப்படிக் கட்டிவைக்க முடியும்? இரண்டுமே மாயையான கற்பனைகள் அல்லவோ?

தேகம் கீழே விழுவதற்கு முன்னமேயே தேஹத்தைச் சாம்பலாக்கிவிட்டவருக்கு மரணம் பற்றி என்ன பயம்? அவர் மரணத்தை வென்றவர் அல்லரோ?

மரணமே தேகத்தின் இயற்கையான நிலை. மரணமே தேகத்தின் சுகமான நிலை. உயிரோடு இருப்பதுதான் தேகத்தின் செயற்கையான நிலை. இது சிந்தனையாளர்களின் கருத்து.

ஜன்மமென்பது என்னவென்று அறியாத ஆனந்தமோஹனமான சமர்த்த சாயிநாதரின் உடல் எவ்வாறு மரணமடைய முடியும்? தேகம் என்று ஒன்று இருக்கிறது என்ற உணர்வை உதறியவல்லரோ சாயி!

சாயீ பூரணமான பாரா பிரம்மம். அவருக்கேது ஜனனமும் மரணமும்? 'பிரம்மமே சத்தியம்; ஜகமனைத்தும் மாயை' என்றுணர்ந்தவருக்கு உடலைப்பற்றிய உணர்வு ஏது?

அவர் பிராணனைத் தரித்ததும், ஒரு நிலையில் அதை விடுத்ததும், ஏறும் காணமுடியாதவாறு உலகெங்கும் சுற்றிவந்ததும், அவருடைய யோகசக்தியால் விளைந்த, பக்தர்களைக் கைதூக்கிவிடுவதற்காகவே செய்யப்பட்ட லீலைகள்.

 


 

Thursday 28 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பெற்ற சொற்களை அனைவரும் அறிவர். உலகவழக்கைக் காக்கும் ரீதியில் இறையடியார்கள் இந்த நியதின்படி நடந்துகாட்டினர்.

பாபாவின் முடிவு நெருங்கியது; இன்னும் நாள்களே இருந்தன. ஆகவே, பாபா வஜே அவர்களை ராமவிஜயம் (ராமாயணம்) படிக்கச் சொல்லி நியமித்தார்.

வஜே மசூதியில் அமர்ந்தார். போதி பாயராயணம் ஆரம்பித்தது. பாபாவும் செவிமடுக்க ஆரம்பித்தார். எட்டு நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா ஆணையிட்டார், "போதி பாராயணம் தடையின்றித் தெளிவாக நடக்கட்டும்." வஜே மேலும் மூன்று நாள்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டேயிருந்தார்.

மொத்தம் பதினொன்று நாள்கள் உட்கார்ந்து வாசித்தார். பின்னர் வலுவிழந்து சோர்ந்துபோனார். வாசித்துக்கொண்டிருத்தபோதே குரல் மங்கியது. இவ்வாறு மூன்று நாள்கள் கழிந்தன.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், போதி வாசிப்பை சமாப்தம் (முடிவு)  செய்துவிட்டு, வஜேயை அப் பணியிலிருந்து விடுவித்தார். தாம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்துகொண்டார்.

'வஜேயை விடுவித்து அனுப்பியதற்கு காரணம் என்னவென்று சொல்லுங்கள்" என்று கதைகேட்பவர்கள் கேட்கலாம். என் மதிக்கு எட்டிய அளவுக்குச் சிறப்பாகச் சொல்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.

ஞானிகளும் சாதுக்களும் சான்றோர்களும் தேகத்தை உதிர்க்கும் காலம் வரும்போது போதிபுராணத்தைப் படிக்கச் சொல்லிக் கவனத்துடன் கேட்பார்கள்.

ராஜா பரீக்ஷீத்திற்கு சுக மகரிஷி ஏழு நாள்கள் பாகவதம் (ஸ்ரீகிருஷ்ணரின் கதை) வாசித்தார். அதைக் கேட்டுத் திருப்தியடைந்த ராஜா தேகத்திலிருந்து விடுதலை பெற்றார்.

பகவானுடைய லீலைகளைக் கேட்டுக்கொண்டும், பகவானுடைய உருவத்தைக் கண்களால் பார்த்துக்கொண்டும் உயிர் நீப்பவர் நிச்சயமாக நற்கதியடைகிறார்.

இதுவே, உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலைமை, ஞானிகளோ நிரந்தரமாக இக் கோட்டபாட்டின்படி நடந்துகாட்டினர். உலக மக்களுக்கு வழிகாட்டும் பாதையிலிருந்து ஞானிகள் என்றும் விலகுவதில்லை. சிந்தித்துப் பார்த்தால், ஞானிகளின் அவதார நோக்கமே மக்களுக்கு வழிகாட்டுவதுதான்!

உடலை உதிர்க்கும்போது துக்கமோ சோகமோ படாதிருத்தல், பௌதிக உடலின்மேல் ஆசைகொள்ளாதவர்களின் சுபாவம் அன்றோ!

கதைகேட்பவர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் எழலாம். பிரம்மானந்த சுகத்தில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் மாயையாலும் மோஹத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லுவது பொருத்தமாகுமா?


 

Thursday 21 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஞானிகள் தம்முள் இருக்கும் தேஜஸைத் (ஒளியைத்) தூண்டிவிட்டு அதில் தங்களுடைய தேஹங்களை எரித்துவிடுவர். பாபாவும் அந்த விதமாகவே செயல்பட்டார்.

எது நேர்ந்திருக்கவே கூடாதோ அது நடந்து முடிந்துவிட்டது. மஹராஜ் சாயுஜ்யம் (முழுமுதற் பொருளுடன் ஒன்றுதல்) அடைந்துவிட்டார். மக்கள் அடியோடு மனமுடைந்து அழுது தீர்த்தனர்.

"அய்யகோ! நான் அவரை விட்டு விலகிப் போகாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! கடைசி சந்திப்பைக் கோட்டைவிட்டுவிட்டேனே! ஒருவேளை நான் உபயோகமாக ஏதாவது சேவை செய்திருப்பேனோ என்னவோ! ஓ, எப்படி, எப்படி என் மனம் நெருக்கடியான நேரத்தில் அவ்வாறு குழம்பியது?"

இதுபோன்ற நாலாவிதமான எண்ணங்கள் மக்களுடைய மனத்தை துக்கப்படவைத்தன. ஆயினும், பாபாவின் மனத்திலிருந்த எண்ணங்களை யாரால் அறிந்துகொள்ள முடிந்தது?

தொண்டையில் கரகரவென்று இழுக்கவில்லை; மூச்சும் திணறவில்லை; இருமலுமில்லை; ஜீவன் துடிக்கவுமில்லை. பாபா உல்லாசமாகப் பிரயாணம் கிளம்பிவிட்டார்!

அய்யகோ! இப்பொழுது சாயிதரிசனம் எங்கே? இனிமேல் கால்களை பிடித்துவிடுவது எப்படி? பாதங்களை அலம்புவது எங்கனம்? தீர்த்தத்தை அருந்துவது எவ்வாறு?

அந்திமவேளை நெருங்கிவிட்டதென்று தெரிந்து, சுற்றிலுமிருந்த, பிரேமை மிகுந்த பக்தர்களை கலைந்த போகச் சொல்லி அவர்களை மனவேதனை அடையச் செய்தது ஏன்?

ஒருவேளை இப்படி இருக்குமோ? நிர்யாணகாலத்தில் உயிருக்குயிரான பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தால்பாபாவின் மனத்தில் அந் நேரத்தில் அன்பின் அலைகள் போங்க வாய்ப்பு இருந்தது.

இம்மாதிரியான பிரேமபந்தங்கள் சாயுஜ்யம் அடைவதற்குத் தடையாக  அமையும். இவற்றை சரியான நேரத்தில் அறுத்தெரியாவிட்டால், மனம் எவ்வாறு வாசனைகளிலிருந்து (பற்றுகளிலிருந்து) விடுபடும்?

பற்றுகளிலிருந்து விடுபடாமல் ஜீவன் பிரிந்தால், அக்கணமே சம்சார வாழ்வில் ஒரு புதிய ஈடுபாடு ஜனனமாகிறது. கூடவே எத்தனையோ புதிய எதிர்பார்ப்புகளையும் அவாக்களையும் கூட்டிவருகிறது.

ஞானிகளும் சாதுக்களும் என்றும் இந் நிலையைச் சட்டென்று தவிர்த்துவிடுவர். அந்தப் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாபா மனத்தில் நிர்த்தாரணம் செய்துகொண்டார்.

அந்திமகாலத்தில் சாந்தியாக இருக்கவேண்டும்; ஏகாந்தமாக இருக்கவேண்டும்; அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அந் நிலையில்தான் மனம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்ய முடியும். இவ்வுணர்வை, வாழ்வின் இறுதிக்கு கட்டத்தில் எவரும் நிலைநிறுத்த வேண்டும்.

'அந்திமத்தில் மதி எப்படியோ, அப்படியே கதி'. (உயிர் பிரியும் நேரத்தில் மனம் எதை நினைக்கிறதோ அதற்கேற்றவாறு மறுபிறவி ஏற்படுகிறது.) இந்தப் பிரசித்தி 




Thursday 14 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த அத்தியாயத்தில், தம்முடைய முடிவு நெருங்கிய காலத்தில் பாபா எவ்வாறு ஒரு பிராமணரை ராமாயணம் படிக்கச் செவிமடுத்தார் என்ற விவரமும்,-

சமாதி அமைய வேண்டிய இடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விவரமும், நினைவுச்சின்னமாக பாபா பாதுகாத்துவந்த செங்கல் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து உடைந்த விவரமும் சொல்லப்படும். இவையனைத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

அதுபோலவே, முன்பொரு சமயம் பாபா பிரம்மாண்டத்தில் தம்முடைய பிராணனை மூன்று நாள்கள் வைத்தபோது (நிர்விகல்ப சமாதி நிலை), அது சமாதி நிலை இல்லை என்றும், பாபா இறந்துவிட்டார் என்றும் ஷீர்டி மக்கள் உறுதிபட நினைத்துப்பற்றியும் கேளுங்கள்.

உத்தரகிரியைகள் (இறுதிச் சடங்குகள்) செய்வதற்குத் தயார் செய்துகொண்டிருந்தபோது பாபா திடீரென்று உயிர்தெழுந்ததைக் கண்டு மக்கள் திடுக்கிட்ட விவரத்தையும் கேளுங்கள்.

ஆயினும், இது யாரும் கேட்க விரும்பாத நிர்யாணக் கதை. பாபா தேஹத்தை விடுத்தது பற்றிய சங்கதிகள், கேட்பவர்களுக்கு மனவேதனையையும் சிரமத்தையும் அளிக்கும்.

இருந்தபோதிலும், சாதுக்கள் மற்றும் ஞானிகளுடைய முக்தி சம்பந்தமான கதைகள், கேட்பவர்களையும் சொல்லுபவரையும் புனிதப்படுத்தும். ஆகவே, விஸ்தாரத்திற்கு (விரிவுக்கு) பயந்து, பகுதி பகுதியாக முடிந்தவரை கேட்டு சமாதானமடையுங்கள்.

பூதவுடலை உகுத்ததால், எளிதில் அடையமுடியாததும் மறுபிறப்பில்லாததும் என்றும் அழியாததுமான பேரின்ப நிலையை பாபா அடைந்தார்.

தேஹத்தை தரித்தபோது அவர் உருவ நிலையில் இருந்தார். தேஹத்தைத் தியாகம் செய்ததால், அருவ நிலைக்கு மாறிவிட்டார். ஓர் உடலில் எடுத்த அவதாரம் முடிந்தது; எல்லா உடல்களிலும் வியாபித்திருக்கும் நிலைக்குத் திரும்பிவிட்டார்.

ஓரிடத்தில் இருந்த நிலைமையை முடித்துக்கொண்டு எங்கும் நிறைந்த நிலைமைக்குத் திரும்பினார். ஆதியந்தமில்லாத முழுமுதற்பொருளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

எல்லாருடைய வாழ்க்கையையும் சாயியை மையமாக வைத்தே சுழன்றது; இல்லை; சாயியே அவர்கள் எல்லாருடைய பிராணன் என்று சொல்வதே பொருத்தம். சாயி இல்லாது, ஷீர்டி கிராம மக்கள் ஹீனர்களாகவும் தீனர்களாகவும் ஆயினர்.

தேகம் அசைவின்ரிச் சில்லிட்டுப்போக ஆரம்பித்தபோது ஒரு பெரும் ஓலம் எழுந்தது. பாலர்களிலிருந்து வயசாதிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே முடிவு வந்துவிட்டது போலப் பெருந்துயரத்தில் மூழ்கினர்.

ஜுரம் போன்ற உடல் உபாதிகள் உலகியல் வாழ்வில் கட்டுண்டவர்களைத்தான் பிடிக்கும். எக்காலத்திலும் யோகிகளை நெருங்கி அவமரியாதை செய்வதில்லை.