ஷீர்டி சாயி சத்சரிதம்
51 . மூன்று பக்தர்களின் விருத்தாந்தம்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பக்தர்களின் ஆதாரமான சாயியே, ஜய ஜய! கீதையின் பொருளைப் பிரகாசப்படுத்திய குருவரரே (பரமகுருவே), எல்லா சித்திகளையும் அளிக்கும் கொடைவள்ளலே எனக்குக் கிருபை காட்டுவீராக!
உஷ்ணத்தை சமனம் செய்ய மலையகிரியில் (மேற்குத்தொடர்ச்சி மலைகளில்) சந்தனம் விளைகிறது. மேலும் உலகமக்களுக்கு சுகத்தை அளிப்பதற்காக மேகங்கள் பூமியின்மேல் மழையாகப் பொழிகின்றன.
தேவர்களைப் பூஜை பண்ணுவதற்காக எவ்வாறு வசந்தகாலத்தில் பூக்கள் ஏராளமாக மலர்கின்றனவோ, அவ்வாறே, கேட்பவர்களைத் திருப்தி செய்வதற்காக மேலும் ஒரு கதைத் தொடர் உருவாகிறது.
ஒரே ஒரு முறையானாலும், இந்த சாயி சரித்திரத்தை கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராரும் பவித்திரமானவர்கள். கேட்பவர்களின் காதுகள் தூய்மையடைகின்றன. சொல்பவர்களின் வாக்குத் தூய்மையடைகிறது.
கடந்த அத்தியாயத்தில், 'தத்வித்தி ப்ரணிபாதனே ' என்று ஆரம்பிக்கும் சுலோகத்தில் நிரூபணம் மூலமாக, அஞ்ஞானத்தை அழித்துவிட்டால் ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது விளக்கப்பட்டது.
பகவத் கீதையை முடிக்கும் தருவாயில், பதினெட்டாவது அத்தியாயத்தின் முடிவில், எழுபத்திரண்டாவது சுலோகத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைக் கேட்கிறார்.
"பார்த்தா (அர்ஜுனா), ஒருமுகப்பட்ட மனத்துடன் இதுவரை நான் செய்த பிரவசனம் கேட்கப்பட்டதா? தனஞ்சயா, உன்னுடைய அஞ்ஞானத்திலிருந்து விளைந்த குழப்பம் அழிந்ததா?" தெளிவாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுவே. "நீ ஞானம் பெற்றாயா?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்கவில்லை.
அர்ஜுனனின் பதிலும் அதுபோலவே அமைந்தது. "அச்சுதா, மோகம் அழிந்துவிட்டது. உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. ஐயங்கள் அகன்று உறுதியாக இருக்கிறேன். உமது சொற்படி செய்வேன்" என்று அர்ஜுனன் பதிலளித்தான். ஞானம் பெற்றேன் என்று சொல்லவில்லை; மோகம் ஒழிந்துவிட்டது என்றே பதில் சொன்னான்.






