valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 March 2026

 

ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், "நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்."

"சரி சரி; அதே இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால் , எனக்குக் கேட்கும்படியாக தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்" என்று சாயி சொன்னார்.

நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிப்பாதென' என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குரலில் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.

பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாக்கப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாச்சார்யார்கள் (பண்டைய குருமார்கள் ) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.

பாபா நானாவை மறுபடியும் கேட்டார், "நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியை பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்' என்னும் சொற்களின் பொருள் பற்றிச் சிந்தனை செய்யும்.-

"ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச் சொல் 'அஞ்ஞானம்' என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும் யோசியும். -

"சங்கரானந்தர், ஞானேச்வரர் , ஆனந்தகிரி, ஸ்ரீதரர் , மதுஸூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்' என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.

"அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தை தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டை விடவேண்டும்?"

இவ்வாறு கூறியபின், கருணாமேகமான சாயி, சகோரபட்சிகளும் சாதகப்பட்சிகளுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39 )

ஆனால் , சாயி லீலா பத்திரிக்கை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆகவே, சில பிரமாணங்களால் , 'அஞ்ஞானம்' என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக melum ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்

 


 

Thursday, 12 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் சாயியைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார்.  இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. 

காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ?  சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

இந்தக் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது.  கேட்பவர்கள் தங்களை மனத்தால் சாயியாகவோ பாவித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர்.  அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக்க காப்பாற்றுங்கள். 

அந் நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் சாயியின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றும். நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ?  அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும்! 

அந் நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்;  கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொழிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர்.  இவ்வாறாக, இக் காவியம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்!

முன்னதாக, இந்த சத் சரித்திரத்தின் முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தில், ஓர் உத்தமமான பக்தருக்கு சமர்த்த சாயி உபதேசம் அளித்த விவரம் எடுத்துரைக்கப்பட்டது. 

ஆக, பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த பக்தர் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்து ஒப்பித்துக்கொண்டிருந்தார். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே மெல்லிய குரலில் கீதையை ஓதிக்கொண்டிருந்தார். முப்பத்துமூன்றாவது சுலோகம் முடிந்தபின் முப்பத்துநான்காவது சுலோகத்தை ஆரம்பித்தார். 

லயமடைந்த நிச்சலமான மனத்துடன் சன்னமான குரலில் ஓதுகை நிகழ்ந்ததால், மற்றவர்களுக்கு அது கேட்கவில்லை.  ஆகவே, ஓதுகையின் மூலநூல் எதுவென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

முப்பத்துநான்காவது சுலோகத்தை அவர் ஆரம்பித்தபோது, அந்த உத்தமமான பக்தருக்கு சன்மார்க்கத்தைக் காட்டி அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாபாவின் இதயத்தில் உதித்தது. 

அந்த பக்தரின் பெயர் நானா (நாராயண கோவிந்த சாந்தோர்கர்).  பாபா அவரிடம் கேட்டார், "நானா, நீர் எதை முணுமுணுவென்று ஓதுகிறீர் ஓய்?  அதை வாய்திறந்து ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஓதினால் என்ன?

"இத்தனை நேரமாக முணுமுணுவென்று ஏதோ ஓதுகை நடப்பதை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், சொற்களின் ஒலி தெளிவாக வெளிப்படவில்லை.  ஓய்! இவ்வாறு ஓதுவதன் சூக்குமம் என்ன?"

 


 

Thursday, 5 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது.  ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான்.  சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது.  ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன்.  சாயி எப்பொழுதும் சம்பூர்ணமானவர் அல்லரோ!

அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகிறேன்.  இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன். 

நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது .  ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும்.  கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும்.  ஆஹா! அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்!

சாலோக்யம் (இஷ்ட தேவதையின் உலகத்தில் உறைதல்)   போன்ற நான்கு வகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை.  சாயியிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும்.  அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர்! ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்?  'ஞானிகளின் மீது பக்தி' என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே, இதயத்தைப் பரிசுத்தமாகிவிடும். 

'நான்/நீ' என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக.  அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும்.  அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும்.  சாயியிடம் நாம் வேண்டுவது இதையே. 

போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும்.  இதுவே கதை கேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள். 

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்;  காரணம், சத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக சாயியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர். 

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துசிப்பையைத் தூக்கியெறிப்பவர் அதுனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார்.  நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது.  அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே! 


 

 

Thursday, 26 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சம்சார இருளை அகற்றும் சூரியனே! ஆத்மானுவபம் பெட்ரா ஞானிகளின் மணிமகுடமே! பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே; கற்பகத்தருவே! குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன். 

குருராயரின் மஹிமை எல்லையற்றது.  அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது.  ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று. 

பூர்வஜென்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்?  நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

சாயி பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார்.  தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர்.  அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

கிருபாளுவான சாயி, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ!

----------------------------------------------------------------------------

சாயியின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது.  'அதுவே நான்' என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது.  பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. 

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்?  அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் ? பக்தர்களின் மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அந்த சாயியின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன்.  கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன்.  ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன்.  அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன். (தழுவுகிறேன்)

சாயி சஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியாசந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபங்களைப் பெறுகின்றனர். 

 


 

Thursday, 19 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 

எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குடலில் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர். 

குருடனாகவோ முடவனாகவோ ஊமையனவாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரசவ வேதனையைக் கொடுக்கவில்லை.  ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன். 

எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன்.  இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது. 

நாம் கோடானுகோடி ஜென்மங்கள் எடுக்கிறோம்.  ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழலிருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது. 

ஜன்மத்திற்கு காரணமானவர் முதலாவது தந்தை.  பூணுல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை.  அன்னமளித்துப் பாவிப்பவர் மூன்றாவது தந்தை.  பயத்திலிருந்தும் பீதியிலிருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை. 

உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள்.  ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) சத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை.  சத்குருவின்  அற்புதமான லீலைகளைப் பாருங்கள்!

அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா.  ஆனால், சத்குருவோ உலகநடையிலிருந்து வேறுபட்ட பிதா. 

சத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அனுக்கிரஹம் செய்கிறார். 

நம்மை ஜனனமரணச் சுழலிலிருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை விளக்கி நமக்குப் புரியவைப்பவரும்  எங்கும் நிறைந்திருப்பவருமான சத்குருவை  நான் வணங்குகிறேன். 


 

Thursday, 12 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும் தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும். 

விஷயசுகங்களின் மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்து விடும்.  ஆகவே, அதை மிச்சம் மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். 

கை, கால் முதலிய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால் ஜனன மரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது.  விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை!

விவேகமுள்ள சாரதி கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா. 

சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சாமார்த்தியசாலியுமான மனிதன் தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால், விஷ்ணு பதம் வெகுதூரத்தில் இருக்கிறது?

அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலும் கப்பாலாய் இருக்கும் நிலை. 

ஆக, இந்த அத்தியாயம் முடிவடைகிறது.  அடுத்தாற்போல்  வரும் அத்தியாயம் இதைவிட வசீகரமானது. சான்றோர்களாகிய பக்தர்களின் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். கிரமமாக கேளுங்கள். 

பிரிவதற்கு முன்பாக - சிருஷ்டியை நிர்வகிப்பவரும் புத்திசக்தியைத் தூண்டிவிடுபவரும் எவரோ, அந்த சத்குருவின் சேவடிகளில் ஹேமாட் தலைசாய்த்து வணங்குகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், "மஹானை சோதித்தல் - மனத்தை அடக்குதல்' என்னும் நாற்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீஸத்குரு   சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


 

Thursday, 5 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அர்த்தத்தைத் தெளிவுப்படச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார்.  மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது!  அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது. 

பின்னர், மாதவ்ராவ் செய்த நிர்பந்தத்தால், நானா இதயம் திறந்தார்.  மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.  மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது! 

பாபா எவ்வளவு உஷாராக இருந்தார்!  யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருக்கும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாக) தெரிகின்றன!

இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள்.  இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளை ஆகாத சமநிலையும் கம்பீரமும் பெருகும். 

மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது.  அதைக் கட்டவிழ விடக்கூடாது.  புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம்.  ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும். 

புலன்களை நம்பக்கூடாது.  ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது.  கொஞ்சம்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும். 

புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம். 

ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம்.  அழகை பயமின்றி ரசிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை?  ஆனால், துர்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது. 

இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரசிக்கலாம்.  தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.  இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும். 

தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலங்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும். 

தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான்.  அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது. 

சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன் கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்!