ஷீர்டி சாயி சத்சரிதம்
வந்தனம் செய்தபோது, அவர்களுள் ஒரு பெண்மணி தம் முகத்திரையைச் சற்று விலக்கினார். பேரெழில் வீசிய அந்த முகத்தைக் கண்ட நானா தம் உள்ளத்துள் மோகங்கொண்டார்.
சுற்றியிருந்தவர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது அவ்வழகிய முகத்தை உற்றுப் பார்ப்பதற்கு நானா சங்கடப்பட்டார். தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? மோகமென்னவோ கட்டுக்கடங்கவில்லை!
பாபாவின் முன்னிலையில் நானா பெருங்கூச்சமடைந்தார். தலையை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும், தயங்கித் தயங்கி கண்வீச்சு அந்தத் திசைக்குத் திரும்பியது. நானா இருதலைக்கொள்ளி எறும்பானார்.
இதுவே நானாவின் உள்மன நிலை. எல்லோருக்குள்ளும் உறையும் பாபா இதை அறிந்துகொண்டார். மற்றவர்களால் இதை எப்படி உணர முடியும்? சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றுதான் அவர்களால் மல்லுக்கட்ட முடியும்!
நானாவின் உள்மனத்தையும் அதில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் நன்கு உணர்ந்த பாபா அவரை சுயநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஓர் உபதேசம் செய்தார். அதைக் கேளுங்கள்.
"நானா, எதற்காக மனக்கலக்கம் அடைகிறீர்? எது தன்னுடைய தர்மத்தின்படி இயல்பாகச் செயல்படுகிறதோ, அது யாராலும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. ஏனெனில், அதில் கேடு ஒன்றும் இல்லை.-
"பிரம்மதேவருடைய சிருஷ்டியைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், அவருடைய புத்தி சாதுர்யமும் திறமையும் வீணாக்கப் போய்விடும். நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். -
"வாயிற்கதவு திறந்திருக்கும்போது புறக்கடைக் கதவை ஏன் அணுகவேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால், சங்கடம் ஏதும் இல்லை.-
"மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவன், எதற்காக, யாரைப் பார்த்து பயப்பட வேண்டும்? கண்கள் அவற்றின் வேலையாகிய காண்பதைச் செய்கின்றன. அதுபற்றி நீர் ஏன் சங்கடப்படுகிறீர்?"
இயல்பாகவே விஷய ஆர்வம் அதிகம் கொண்ட மாதவ்ராவ், அப்பொழுது அங்கிருந்தார். தம்முடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, "இந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்" என்று நானாவைக் கேட்டார்.
இவ்வாறு மாதவ்ராவ் கேட்டபோது நானா சொன்னார், "ஓய், கொஞ்சம் நிழலும்! நாம் வாடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, பாபா விளம்பிய வார்த்தைகளில் உட்கருத்து என்னவென்பதை விவரமாகச் சொல்கிறேன்".
வழக்கம்போல க்ஷேமகுசல விசாரிப்பு முடிந்தது. நானா சமர்த்த சாயியை வந்தனம் செய்தார். தாம் தங்கியிருந்த இடத்திற்கு நானா திரும்பியபோது மாதவராவும் அவருடன் சென்றார்!
உடனே மாதவ்ராவ் வினவினார், "நானா, நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று பாபா சொன்னதற்கும், அதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பதை எனக்குத் தெளிவுப்படச் சொல்லுங்கள்".






