valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அர்த்தத்தைத் தெளிவுப்படச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார்.  மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது!  அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது. 

பின்னர், மாதவ்ராவ் செய்த நிர்பந்தத்தால், நானா இதயம் திறந்தார்.  மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.  மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது! 

பாபா எவ்வளவு உஷாராக இருந்தார்!  யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருக்கும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாக) தெரிகின்றன!

இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள்.  இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளை ஆகாத சமநிலையும் கம்பீரமும் பெருகும். 

மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது.  அதைக் கட்டவிழ விடக்கூடாது.  புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம்.  ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும். 

புலன்களை நம்பக்கூடாது.  ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது.  கொஞ்சம்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும். 

புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம். 

ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம்.  அழகை பயமின்றி ரசிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை?  ஆனால், துர்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது. 

இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரசிக்கலாம்.  தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.  இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும். 

தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலங்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும். 

தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான்.  அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது. 

சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன் கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்!

 


 

Thursday, 29 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தனம் செய்தபோது, அவர்களுள் ஒரு பெண்மணி தம் முகத்திரையைச் சற்று விலக்கினார்.  பேரெழில் வீசிய அந்த முகத்தைக் கண்ட நானா தம் உள்ளத்துள் மோகங்கொண்டார். 

சுற்றியிருந்தவர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது அவ்வழகிய முகத்தை உற்றுப் பார்ப்பதற்கு நானா சங்கடப்பட்டார்.  தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? மோகமென்னவோ கட்டுக்கடங்கவில்லை!

பாபாவின் முன்னிலையில் நானா பெருங்கூச்சமடைந்தார். தலையை நிமிர்த்த முடியவில்லை.  ஆனாலும், தயங்கித் தயங்கி கண்வீச்சு அந்தத் திசைக்குத் திரும்பியது.  நானா இருதலைக்கொள்ளி எறும்பானார். 

இதுவே நானாவின் உள்மன நிலை. எல்லோருக்குள்ளும் உறையும் பாபா இதை அறிந்துகொண்டார்.  மற்றவர்களால் இதை எப்படி உணர முடியும்?  சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றுதான் அவர்களால் மல்லுக்கட்ட முடியும்!

நானாவின் உள்மனத்தையும் அதில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் நன்கு உணர்ந்த பாபா அவரை சுயநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஓர் உபதேசம் செய்தார். அதைக் கேளுங்கள். 

"நானா, எதற்காக மனக்கலக்கம் அடைகிறீர்? எது தன்னுடைய தர்மத்தின்படி இயல்பாகச் செயல்படுகிறதோ, அது யாராலும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. ஏனெனில், அதில் கேடு ஒன்றும் இல்லை.-

"பிரம்மதேவருடைய சிருஷ்டியைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், அவருடைய புத்தி சாதுர்யமும் திறமையும் வீணாக்கப் போய்விடும்.  நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். -

"வாயிற்கதவு திறந்திருக்கும்போது புறக்கடைக் கதவை ஏன் அணுகவேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால், சங்கடம் ஏதும் இல்லை.-

"மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவன், எதற்காக, யாரைப் பார்த்து பயப்பட வேண்டும்? கண்கள் அவற்றின் வேலையாகிய காண்பதைச் செய்கின்றன. அதுபற்றி நீர் ஏன் சங்கடப்படுகிறீர்?"

இயல்பாகவே விஷய ஆர்வம் அதிகம் கொண்ட மாதவ்ராவ், அப்பொழுது அங்கிருந்தார். தம்முடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, "இந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்" என்று நானாவைக் கேட்டார். 

இவ்வாறு மாதவ்ராவ் கேட்டபோது நானா சொன்னார், "ஓய், கொஞ்சம் நிழலும்! நாம் வாடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, பாபா விளம்பிய வார்த்தைகளில் உட்கருத்து என்னவென்பதை விவரமாகச் சொல்கிறேன்".

வழக்கம்போல க்ஷேமகுசல விசாரிப்பு முடிந்தது. நானா சமர்த்த சாயியை வந்தனம் செய்தார். தாம் தங்கியிருந்த இடத்திற்கு நானா திரும்பியபோது மாதவராவும் அவருடன் சென்றார்!

உடனே மாதவ்ராவ் வினவினார், "நானா, நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று பாபா சொன்னதற்கும், அதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பதை எனக்குத் தெளிவுப்படச் சொல்லுங்கள்".



Thursday, 22 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் என்னிடம் காட்டிய கோபம் என்னுடைய ஆரம்ப நடத்தையால்தான் என்பது தெளிவு.  இது கோபமன்று; எனக்குப் புகட்டப்பட்ட ஒரு போதனை; கடைசியில் என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்".

ஆக, பின்னர் அவ்வாறே நிகழ்ந்தது! சுவாமி, பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டார். சாயியின் கிருபையால் தூயவராக ஆக்கப்பட்டார்.  பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாக தங்கிவிட்டார்!

சாயிபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளர்ச்சி செய்யட்டும்.  சாயி பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களை செய்தி மனநிறைவு அளிக்கட்டும். 

பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது.  பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பிருப்பினும்,-

அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை!

தாத்பர்யம் என்னவென்றால், மனித உருவமேற்காமல் சாயி விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதும் எப்படி?

இந்த அத்தியாயம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சமயத்தில், சாயி நல்லுபதேசம் செய்த விருத்தாந்தம் ஒன்று என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது.  உபதேசத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பயனடையவர். 

விருத்தாந்தம் மிகச் சிறியது. ஆயினும், இதைக் கருத்தில் கொள்பவர்களுக்கு மங்களம் விளையும்.  ஆகவே, சித்தத்தைச் சிறிது நேரம் என்னிடம் செலுத்துமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன். 

ஒருசமயம், பழுத்த பக்தரான மகால்சாபதி, நானா சாஹேப் சாந்தோர்கருடன் மசூதியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நடந்த அதிசயத்தைப்பற்றிக் கேளுங்கள். 

சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக வைஜப்பூர்வாசியான ஒரு பணக்காரர் குடும்ப சகிதமாக அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தார். 

முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் வந்ததைக் கண்ட நானா சங்கோசமடைந்தார்.  கோஷாப் பெண்டிர் கூச்சமின்றி தரிசனம் செய்வதற்காக, அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நானா வெளியே செல்ல நினைத்தார். 

ஆகவே, அங்கிருந்து நகர்வதற்காக நானா எழுந்தார். பாபா அவரைத் தடுத்து நிறுத்திச் சொன்னார், "வர விரும்புபவர்கள் படியேறி வருவார்கள்.  நீங்கள் அமைதியான மனத்துடன் உட்கார்ந்திருங்கள்".

அங்கிருந்தவர்களில் ஒருவர் வைஜாப்பூர்  கனவானிடம் சொன்னார், "இவர்களும் தரிசனத்திற்காகவே வந்திருக்கின்றனர்.  நீங்களும் மேலே வரலாம்.  தடை ஏதுமில்லை."  அவர்கள் அனைவரும் வந்து சாயிக்கு வந்தனம் செய்தனர். 


 

Thursday, 15 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது.  புத்தி அசைவற்று நின்றது.  வேற்றுமை உணர்வு விலகியது.  ஐக்கிய உணர்வு மேலோங்கியது. 

வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது.  கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்ச பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது!

ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார்.  ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின.  அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது.  பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினர். 

'எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாக!' தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்!

புவா மெல்ல மெல்ல முன்னேற, பாபாவின் கோபமும் படிப்படியாக ஓங்கியது. பாபா வசைமாரி பொழியப்பொழிய, புவாவின் பிரீதி இரட்டித்தது!

சமர்த்த சாயியின் செயல்கள்தாம் என்னே!  பாபா எடுத்த நரசிம்ம அவதாரம் தத்ரூபமாகவும் (முழுவதும் ஒற்றுமையான வடிவமாகவும்) பூரணமாகவும் அமைந்தது. 

"எங்களுடைய டம்பம் எங்களுடனேயே இருக்கட்டும்! போம் வெளியே; திரும்பிப் போம். மறுபடியும் என்னுடைய மசூதியில் கால்வைக்காதீர்; ஜாக்கிரதை!-

"மசூதியின்மேல் கொடி பறக்கவிடுபவரை எதற்காக தரிசனம் செய்யவேண்டும்?  கொடி பறக்கவிடுவது ஞானிக்கு லக்ஷணமா (அழகா)?  ஆகவே, ஒருகணத்தையும் இங்கு வீண் செய்யாதீர்!" என்று பாபா கர்ஜித்தார். 

பின்னர், பயமும் ஐயமும் நிர்மபிய மனத்துடன் சுவாமி சபாமண்டபத்துள் நுழைந்தார். தூரத்திலிருந்து சாயியின் உருவத்தைப் பார்த்த சுவாமியால் அங்கு நிம்மதியாக உட்கார முடியவில்லை. 

புவாவின் எண்ணங்களின் எதிரொலி, அவர்தம் காதுகளில் சொல்லுக்குச் சொல் துல்லியமாக மோதி  அவரை வெட்கப்படச் செய்தது.  உட்கார்ந்திருந்த இடத்திலேயே அவர் நினைத்தார், "மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர்!-

"ஓ, என்னுடைய சிற்றறிவு எங்கே; மஹாராஜின் பிரபஞ்ச பேரறிவு எங்கே! இவருடைய இதயத் தூய்மைதான் என்னே! என்னுடைய பழைய கற்பனை எவ்வளவு விபரீதமானது!-

"சாயி சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார்.  சிலர்க்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.-

"சிலரைப் பார்த்துப் புன்னகை போகிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரசாதம் அளிக்கிறார்.  இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார். - 





Thursday, 8 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அப்பொழுது, உடன் வந்தவர்கள் அவரிடம் கூறினார், "நீங்கள் எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?  கேவலம், கொடிகள் ஏன் உங்கள் மனத்தை இவ்வாறு கலவரமடையச் செய்கின்றன?-

"நாம் இப்பொழுது மிக அருகில் வந்துவிட்டோம்.  தேர், பல்லக்கு, குதிரை, இத்தியாதி பரிவாரங்களைப் பார்த்தால், நீர் இன்னும் எவ்வளவு கலவரமடைவீர்!"

இந்தக் கேட்ட சுவாமி மேலும் எரிச்சலுற்றார்.  "முரசுகளையும் பல்லக்குகளையும் குதிரைகளையும் வைத்துக்கொண்டு ஜம்பம் காட்டும் சாதுக்கள் - ஆஹா ! இவர்களை நான் கொஞ்சமாகவா பார்த்திருக்கிறேன்!"

இவ்வாறான எண்ணங்கள் மனத்துள்ளே ஓட, சோமதேவஜி திரும்பிவிடத் தயாரானார்.  அவர் நினைத்தார், "ஷீர்டி செல்வது பற்றிய எண்ணம் நல்லதில்லை. நதிக்குச் (கோதாவரிக்குச்) செல்லும் பாதையில் திரும்புவதே நல்லது!"

ஆனால், உடன் வந்தவர்கள் அவரை இல்லை. "நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் தயவுசெய்து திரும்பிச் செல்லாதீர்!-

"இவ்வளவு தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் வாருங்கள்.  தர்க்கம் செய்ய வேண்டா.  மசூதியின்மேல் பறக்கும் கொடிக்கும் சாதுவுக்கும் சம்பந்தம் இல்லை.-

"ஏனெனில், இந்த சாதுவுக்குக் கோடி தேவையில்லை; புகழ் தேவையில்லை; கௌரவமும் தேவையில்லை. கிராமத்தில் வசிக்கும் மக்கள்தாம் பக்திக்குப் பிரமாணமாக இம்மாதிரியான பூஷணங்களை (அணிகலன்களை) விரும்புகின்றனர். 

"ஆகவே, நீங்கள் கொடியைப் பார்க்க வேண்டா.  சும்மா சென்று தரிசனம் செய்யுங்கள்.  அங்கு ஒரு கணமும் அதிகமாகாத் தங்க வேண்டா; உடனே திரும்பிவிடுங்கள்."

இதனிடையே குதிரைவண்டி ஷிர்டியை நெருங்கிவிட்டது.  ஆகவே, மேற்கண்ட நேர்மையான உபதேசத்தைக் கேட்ட சுவாமி நினைத்தார், 'மனக்கலக்கத்தை ஒருவழியாக ஒழித்துவிடலாமே.  குற்றவுணர்ச்சியாவது இல்லாது போகும்!'

சமர்த்த சாயியின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது.  அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது.  பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது. 

சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன.  பாபாவின் பாததூளியில் ஸ்நானம்  செய்வதற்கு மனம் துடித்தது. 

அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன.  மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது.  தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது.  பாபாவின் சகுணரூபம் கண்களில் பதிந்தது.  புவா (சுவாமி)  ஆனந்தக்கடலில் மிதந்தார்!

கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார்.  தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார்.  அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார். 


 

Thursday, 1 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஆனால், சுவாமிஜியின் மனத்தியல்பு நானாவிதமான தர்க்கங்களையும் குதர்க்கங்களையுமே நாடியது.  தூரத்திலிருந்தே ஷிர்டியின் கொடிகளைப் பார்த்த அவருக்குக் கற்பனைகள் பல உதித்தன. 

அவருடன் கூட இருந்தவர்கள் மசூதியின் கலசத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கிடைக்கப்போகும் சாயிதரிசனம்பற்றி சுவாமிஜியின் மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கொடியை தரிசனம் செய்யும்போதே பக்தி பூரித்தெழுகிறது.  இதுதான் எல்லாரும் அடையும் அனுபவம். இதுவே பக்திப்பிரேமையின் லக்ஷணம் (இயல்பு).  இதில் வழக்கத்திற்கு மாறானது ஏதும் இல்லை. 

ஆனால், தூரத்திலிருந்தே கொடியைப் பார்த்த சுவாமியின் அற்பமனத்தில் கற்பனைக்குமேல் கற்பனையாக உதித்தன.  அவருடைய மனத்தின் விசித்திரமான இயல்பு அது!

பதாகைகளின் மீது (விருதுக்கொடிகளின்மீது)இவ்வளவு விருப்பம் வைத்தல் சாதுவின் குணமாகுமா?  தேவாலயத்தின்மேல் கொடி பறக்கவிடுவது சாதுத்துவத்திற்கு  கறை அன்றோ!

ஒரு சாது இவ் வழியில் மரியாதை தேடுவது, அவர், கேவலம் கௌரவத்தையும் புகழையும் நாடுவதையே காட்டுகிறது.  இவ்வகையான சாதுத்துவம் மனத்தை ஈர்ப்பதில்லை. உண்மையில் இது இவர்களின் பெருங்குறைபாடு!

சாராம்சம் என்னவென்றால், ஒருவரின் மனச்சாயல் எப்படியோ அப்படியே அவர் சாதுக்களை அணுகும் முறையும் அமையும்.  சுவாமியின் மனம் தீர்மானித்தது, ""எனக்கு ஸாயீயின் அனுக்கிரஹம் வேண்டா.-

"நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்." சுவாமி பாபாவின் மீது இழிவுணர்ச்சி கொண்டார்.  அங்கிருந்து உடனே திரும்பிவிட அவசர முடிவெடுத்தார். 

"இது புகழுக்கும் பகட்டுக்கும் ஆசைப்படும் வீண்பெருமையன்றி வேறெதுவும் இல்லை.  ஒரு சாதுவுக்குப் படாடோபம் எதற்கு? கொடியைப்பற்றி என்னால் வேறெந்த காரணத்தையும் அனுமானிக்க முடியவில்லை.-

"இந்த சாது கொடியைப் பறக்கவிட்டுத் தம்முடைய பெருமையைப் பீத்துகிறார்.  இதுவே இவருடைய சாதுத்வத்திற்குப் பெருங்குறையாக ஆகிவிட்டது.  இந்த சாதுவை நான் எதற்காக தரிசிக்கவேண்டும்?"-

"இம்மாதிரியான தரிசனத்தால் மனம் என்ன நிம்மதி பெரும்? ஆஹா! பறக்கும் இந்தக் கொடி டம்பத்தையே பறைசாற்றுகிறது! இதிலிருந்து எந்த விதமான மனவொருமைப்பாடும் கிடைக்காது."

ஆகவே, அவர் தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார், "நான் வந்தவழியே திரும்பிச் செல்வதே நல்லது.  தரிசனம் செய்ய நினைப்பது நற்சிந்தனையாகத் தெரியவில்லை.  அடடா! நான் எப்படி ஏமாறிப்போனேன்!" 

 


 

 

Thursday, 25 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

முதலில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  பின்னர், வழியில் பரஸ்பரம் சந்தித்தபோது குசலம் விசாரித்தனர்.  சந்தோஷமாக உரையாடினர். 

பேசப் பேச, நட்பு மலர்ந்தது; பிரேமை வளர்ந்தது; ஒருவரையொருவர், வசிப்பிடம் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டனர். 

"நீங்கள் ஹரித்துவாரில் வசிக்கிறீர்கள்.    நாங்கள் நாகபுரியில் (நாக்பூரில்) வசிக்கிறோம்.  நீங்கள் எப்பொழுதாவது அந்தப் பக்கம் வரும்படி நேர்ந்தால் எங்களுக்கு தரிசனம் தாருங்கள். -
 
"திருத்தலப் பயணமாக நாகபுரிக்கு வந்தால், எங்களுடைய இல்லதைப் புனிதப்படுத்துங்கள்.  மறுபடியும் தரிசனம் தாருங்கள்.  சிறிய சேவைகள் செய்ய எங்களை அனுமதியுங்கள்.-

"எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  எங்களுடைய இல்லத்தில் பாதம் பதித்து அதை புனிதமாக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை." (பாயீஜி) சுவாமிஜி பதில் கூறினார். "நாராயணர் உமது இச்சையைப் பூர்த்திசெய்வாராக."

1906 ஆம் ஆண்டு, உத்தரகாசிப் பிரதேசத்தில் இவ்விருவருக்குமிடையே நடந்த சம்பாஷணை மேற்கண்டவாறு. 

பரஸ்பரம் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.  மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரிந்தனர். 

ஐந்தாண்டுக் காலம் கழிந்தது.  சுவாமிஜி சாயியை சந்திக்கவேண்டிய வேளை நெருங்கியது.  பாயீஜியைக் காணவேண்டுமென்ற உந்துதல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. 

ஆகவே, 1911 ஆம் ஆண்டு,  சுவாமிஜி நாக்பூருக்கு வந்தார்.  சாயீநாதரின் பவித்திரமான சரித்திரத்தை கேட்டு ஆனந்தமடைந்தார். 

ஷீர்டி க்ஷேத்திரத்தை சுவாமிஜி சென்றடைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின்,  பாயீஜி ஒரு சிபாரிசு கடிதமும் கொடுத்தார். இதன் பிறகு சுவாமி நாக்பூரை விட்டுக் கிளம்பினார். 

மன்மாடில் இறங்கியபோது கோபர்காங்வ் ரயில்வண்டி தயாராகக் காத்திருந்தது.  கோபர்காங்வில் ஒரு குதிரைவண்டியில் ஏறி ஆனந்தம் நிரம்பியவராக சுவாமிஜி சாயீதரிசனத்திற்குச் சென்றார். 

எங்கே சென்று பார்த்தாலும் சாதுக்களுடைய பழக்கவழக்கங்களும் நடையுடைபாவனைகளும் ஒரே சீராக இருப்பதில்லை. ஒருவர் ஒருவிதம், இன்னொருவர் வேறுவிதம்.  அவர்கள் ஒரே விதமாக எங்கும் இருப்பதில்லை. 

ஒரு ஞானியின் பழக்கவழக்கங்களும் அனுஷ்டானமும் இன்னொரு ஞானிக்குப் பிரமாணம் (அளவுகோல்) ஆகா. இவற்றில் எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அனுமானிக்க நம்மிடம் சாதனம் ஏதும் இல்லை. 

கேட்கப்போனால், ஞானியை தரிசனம் செய்யச் செல்பவர் இதைப்பற்றி எதற்காக மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? ஒரு ஞானியின் நடைமுறையை ஆராய்ச்சி செய்யப் புகுபவர் தமக்கே தீங்கு இழைத்துக்கொள்வார் அல்லரோ?