valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 2 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


நமஸ்கரித்தும் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள்.  தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். கீதை 4  - 34  (பொழிப்புரை)

இதுதான் கீதையின் மூல சுலோகம்.  இந்த சுலோகத்தின் இரண்டாவது அடியில் ஞானம் எனும் சொல்லுக்கு முன்னால், அகாரம் தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்தால், அச் சொல் அஞ்ஞானம் என்று மாறுபடும். 

அகாரம் தொக்கிநிற்கும் குறியைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டால், ஞானம் என்பதுதான் பதம். இதில் சந்தேகமேயில்லை.  அதற்கு விரோதமாக, துராகிருதம் (உரிமை இல்லாத இடத்தில் வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய விரும்புபவர் யாரும் இல்லை.  ஏனெனில், அந்தப் பதமும் அர்த்தமும் எல்லாராலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். 

"ஞானத்தால்தான் கைவல்லியம் (வீடுபேறு) அடையப்படுகிறது." இந்த வேதவசனம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும், 'தத்துவம் அறிந்தவர்களின் உபதேசத்தின் மூலமாகத்தான் ஞானம் பெறப்படவேண்டும்' என்று இந்த வேதவசனத்தை நீட்டித்துக் கருத்தைக் கட்டுப்படுத்துவது அனாவசியம். 

நான் ஆத்மா; நிர்மலன்; சுத்தன்; புத்தன்; சுதந்திரமானவன்; ஆதியந்தமில்லாத சாட்சி மாத்திரமே. எல்லா உயிர்களிலும் ஒளிரும் தூய உணர்வு நான்.  'இருப்பது ஒன்றே; இரண்டாவதாக ஏதும் இல்லை' எனும் உணர்வு விளைவிக்கும் ஆனந்தத்தால் நான் நிறைந்திருக்கிறேன். 

மேலும், நான் அஞ்ஞானம் அல்லேன்; அஞ்ஞானம் என்னுடைய செயல் அன்று.  அதர்வண வேதத்தின் மஹாவாக்கியமான 'அயம் ஆத்மா ப்ரஹ்ம' (இந்த ஆத்மா முழுமுதற்பொருள்) என்னும் சொற்றொடரில் இடம்பெறும் ஆத்மா நானே.  இருக்கு வேதத்தின் 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம ' (ஆத்மாவின் சஞ்சலமற்ற ஒருங்கிணைந்த தூய அறிவுநிலை முழுமுதற்பொருள் ) என்னும் மஹாவாக்கியத்தின் பொக்கிஷமும் நானே. 

யஜுர் வேதத்தின் 'அஹம் ப்ரம்மாஸ்மி ' (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன் ) என்னும் மஹாவாக்கியத்தை இடைவிடாது மனத்தில் இருத்துதலே வித்யா (மெய்ஞ்ஞானம்)  என்று அறிக.  நான் பாவி,  பாக்கியமற்றவன், தெய்வ அருள் இல்லாதவன் என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதே அவித்யா (அஞ்ஞானம்).

இரண்டுமே ஆதியந்தமில்லாத மாயையின் புராதனமான சக்திகள். ஒன்று (அவித்யா) பந்தத்தை விளைவிக்கும்.  மற்றொன்று (வித்யா) பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும். 

பெயர், உருவம் ஆகிய சகலமான பிரமைகளும் மாயை விளைவிக்கும் குழப்பங்களே.  மாயையின் சக்தியை விளக்கமுடியாது; கடப்பது அதனினும் கடினம். 

கற்பனையில் என்னென்ன உதிக்கின்றனவோ அவை அனைத்தும் மாயையின் வசிப்பிடங்கள்.  கட்டுக்குப்பட்ட நிலை, முக்தியடைந்த நிலை, ஆகிய கருத்துக்கள் நிச்சயமாகக் கற்பனையிலிருந்து பிறந்தவையே! 

 


 

Thursday, 26 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பாபாவுக்கு எப்படி சம்ஸ்கிருத ஞானம் இருந்திருக்க முடியும்?  சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம்.  ஞானிகளுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றும், சந்தேகத்திற்குக் காரணம் வேறெங்கேயோ புதைந்து இருக்கிறது என்றும் அறிவீர்களாக.

கதை கேட்பவர்களே, 'ஒன்றைக் (பரம்பொருளைக்) கண்டவன் அனைத்தையும் கண்டவனாகிறான்' என்பது பிரமாணம்.  இந்த வேதவசனத்தை ஒப்புக்கொள்ளாதவர் எவரும் உளரோ?  இந்த அபரோட்ச ஞானம் (காட்சி அறிவு) சாயி பாபாவுக்கு இருந்தது. 

பிரபஞ்சம் முழுவதையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சம்பூரணமாக (முழுமையாகப்) பார்க்கும் சக்தி பெற்ற ஞானிகள் அறியாத விஷயம் ஏதும் உண்டோ?" சூரியன் பிரகாசிப்பதும் அவர்களாலேயே அன்றோ!

அத்தகைய ஞானம் படைத்தவர்களிடம் அஞ்ஞான இருள் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும்?  அவர்களிடம் அனைத்து வித்தைகளும் பொதிந்துகிடக்கின்றன. சம்ஸ்கிருத மொழி மட்டும் என்ன பெரிய கொக்கு?

ஆயினும், சாயி லீலா வாசகர்களில் சிலர் சொல்கின்றனர். "நானாவை நம்பமுடியாது.  ஞானம்  எனும் சொல்லை அஞ்ஞானமாக மாற்றும் அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்துக்கொள்வது.  நானா சுயமாகச் செய்த கற்பனையே. -

"தம்முடைய புலமையை முழுமையாகப் பறைசாற்றுவதற்காக அகாரம் தொக்கி நிற்கும் இந்த அஞ்ஞான காண்டத்தை அவரே ஜோடித்திருக்கிறார்.  அர்த்தமில்லாத ஒரு விதண்டாவாதத்தைக் கிளறி விட்டிருக்கிறார். -

"அகாரம் தொக்கி நிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்து, ஞானைத்தை அஞ்ஞானமாக்கி, கீதைக்கு விபரீதமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்."

ஆயினும், உண்மையான நிலையைக் கவனித்து சூட்சமமாக சிந்தித்தால், சாயி லீலா பத்திரிகையில் வெளிவந்த முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் கருத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது நன்கு விளங்கும். 

நானா நம்பத் தகுந்தவரா, நம்பத் தகாதவரா என்பதுபற்றி எவரெவருக்கு என்னென்ன அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும், அவர் அளித்திருக்கும் விருத்தாந்தத்தைப் பயனற்றதாகவோ அர்த்தமில்லாத பிதற்றலாகவோ நாம் கருதக்கூடாது. 

நானாவின் மீதிருக்கும் வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திரிபுக்கு உட்படாமல் கண்ணோட்ட தோஷத்தைத் தூர விரட்டிவிட்டால், சந்தேகிகளுக்கு குற்றமற்ற காட்சி முழுமையாக கிடைக்கும். 

சாயி லீலாவின் உத்தமோத்தமமான முப்பத்தொன்பதாவது  அத்தியாயத்தை மறுபடியும் படிக்காமல், இந்த அத்தியாயத்தில் மேற்கொண்டு சுலபமாக முன்னேற முடியாது. 

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவாய்மொழியாக வெளிவந்த ஸ்ரீ மத் பகவத் கீதையில் ஞானகர்மசந்யாச யோகம் என்னும் நான்காவது அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது சுலோகத்தில் 'அஞ்ஞானம்' தொடர்பான உபதேசம் நிகழ்ந்தது. 

தத்வித்தி ப்ரணிப்பாதேன பரிப்ரச்னேன சேவாய!
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சினஹ !! கீதை 4  - 34  (மூலம்)

 


 

Thursday, 19 March 2026

 

ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், "நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்."

"சரி சரி; அதே இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால் , எனக்குக் கேட்கும்படியாக தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்" என்று சாயி சொன்னார்.

நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிப்பாதென' என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குரலில் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.

பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாக்கப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாச்சார்யார்கள் (பண்டைய குருமார்கள் ) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.

பாபா நானாவை மறுபடியும் கேட்டார், "நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியை பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்' என்னும் சொற்களின் பொருள் பற்றிச் சிந்தனை செய்யும்.-

"ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச் சொல் 'அஞ்ஞானம்' என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும் யோசியும். -

"சங்கரானந்தர், ஞானேச்வரர் , ஆனந்தகிரி, ஸ்ரீதரர் , மதுஸூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்' என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.

"அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தை தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டை விடவேண்டும்?"

இவ்வாறு கூறியபின், கருணாமேகமான சாயி, சகோரபட்சிகளும் சாதகப்பட்சிகளுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39 )

ஆனால் , சாயி லீலா பத்திரிக்கை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆகவே, சில பிரமாணங்களால் , 'அஞ்ஞானம்' என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக melum ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்

 


 

Thursday, 12 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் சாயியைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார்.  இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. 

காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ?  சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

இந்தக் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது.  கேட்பவர்கள் தங்களை மனத்தால் சாயியாகவோ பாவித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர்.  அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக்க காப்பாற்றுங்கள். 

அந் நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் சாயியின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றும். நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ?  அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும்! 

அந் நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்;  கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொழிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர்.  இவ்வாறாக, இக் காவியம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்!

முன்னதாக, இந்த சத் சரித்திரத்தின் முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தில், ஓர் உத்தமமான பக்தருக்கு சமர்த்த சாயி உபதேசம் அளித்த விவரம் எடுத்துரைக்கப்பட்டது. 

ஆக, பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த பக்தர் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்து ஒப்பித்துக்கொண்டிருந்தார். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே மெல்லிய குரலில் கீதையை ஓதிக்கொண்டிருந்தார். முப்பத்துமூன்றாவது சுலோகம் முடிந்தபின் முப்பத்துநான்காவது சுலோகத்தை ஆரம்பித்தார். 

லயமடைந்த நிச்சலமான மனத்துடன் சன்னமான குரலில் ஓதுகை நிகழ்ந்ததால், மற்றவர்களுக்கு அது கேட்கவில்லை.  ஆகவே, ஓதுகையின் மூலநூல் எதுவென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

முப்பத்துநான்காவது சுலோகத்தை அவர் ஆரம்பித்தபோது, அந்த உத்தமமான பக்தருக்கு சன்மார்க்கத்தைக் காட்டி அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாபாவின் இதயத்தில் உதித்தது. 

அந்த பக்தரின் பெயர் நானா (நாராயண கோவிந்த சாந்தோர்கர்).  பாபா அவரிடம் கேட்டார், "நானா, நீர் எதை முணுமுணுவென்று ஓதுகிறீர் ஓய்?  அதை வாய்திறந்து ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஓதினால் என்ன?

"இத்தனை நேரமாக முணுமுணுவென்று ஏதோ ஓதுகை நடப்பதை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், சொற்களின் ஒலி தெளிவாக வெளிப்படவில்லை.  ஓய்! இவ்வாறு ஓதுவதன் சூக்குமம் என்ன?"

 


 

Thursday, 5 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது.  ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான்.  சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது.  ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன்.  சாயி எப்பொழுதும் சம்பூர்ணமானவர் அல்லரோ!

அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகிறேன்.  இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன். 

நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது .  ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும்.  கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும்.  ஆஹா! அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்!

சாலோக்யம் (இஷ்ட தேவதையின் உலகத்தில் உறைதல்)   போன்ற நான்கு வகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை.  சாயியிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும்.  அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர்! ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்?  'ஞானிகளின் மீது பக்தி' என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே, இதயத்தைப் பரிசுத்தமாகிவிடும். 

'நான்/நீ' என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக.  அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும்.  அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும்.  சாயியிடம் நாம் வேண்டுவது இதையே. 

போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும்.  இதுவே கதை கேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள். 

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்;  காரணம், சத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக சாயியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர். 

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துசிப்பையைத் தூக்கியெறிப்பவர் அதுனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார்.  நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது.  அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே! 


 

 

Thursday, 26 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சம்சார இருளை அகற்றும் சூரியனே! ஆத்மானுவபம் பெட்ரா ஞானிகளின் மணிமகுடமே! பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே; கற்பகத்தருவே! குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன். 

குருராயரின் மஹிமை எல்லையற்றது.  அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது.  ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று. 

பூர்வஜென்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்?  நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

சாயி பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார்.  தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர்.  அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

கிருபாளுவான சாயி, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ!

----------------------------------------------------------------------------

சாயியின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது.  'அதுவே நான்' என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது.  பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. 

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்?  அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் ? பக்தர்களின் மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அந்த சாயியின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன்.  கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன்.  ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன்.  அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன். (தழுவுகிறேன்)

சாயி சஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியாசந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபங்களைப் பெறுகின்றனர். 

 


 

Thursday, 19 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 

எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குடலில் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர். 

குருடனாகவோ முடவனாகவோ ஊமையனவாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரசவ வேதனையைக் கொடுக்கவில்லை.  ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன். 

எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன்.  இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது. 

நாம் கோடானுகோடி ஜென்மங்கள் எடுக்கிறோம்.  ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழலிருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது. 

ஜன்மத்திற்கு காரணமானவர் முதலாவது தந்தை.  பூணுல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை.  அன்னமளித்துப் பாவிப்பவர் மூன்றாவது தந்தை.  பயத்திலிருந்தும் பீதியிலிருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை. 

உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள்.  ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) சத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை.  சத்குருவின்  அற்புதமான லீலைகளைப் பாருங்கள்!

அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா.  ஆனால், சத்குருவோ உலகநடையிலிருந்து வேறுபட்ட பிதா. 

சத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அனுக்கிரஹம் செய்கிறார். 

நம்மை ஜனனமரணச் சுழலிலிருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை விளக்கி நமக்குப் புரியவைப்பவரும்  எங்கும் நிறைந்திருப்பவருமான சத்குருவை  நான் வணங்குகிறேன்.