ஷீர்டி சாயி சத்சரிதம்
இப்படியும் இருக்கலாமோ? சாயி தம் பக்தர்களுக்கு மங்களங்களை விளைவிப்பதற்காக, எங்கெங்கு எவ்வெப்படித் தேவைப்பட்டது அங்கங்கு அவ்வப்படி நாடகமாடி ஆன்மீக போதனையை அளித்தாரோ?
இந்தப் பின்னணியில் ஒரு சிறிய காதை சொல்கிறேன். கதைகேட்பவர்களே, பயபக்தியுடன் கேளுங்கள். ஒரு ஞானி மற்றொரு ஞானியை யாரும் சொல்லாமலேயே எவ்வாறு அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
ஒருசமயம், ஸ்ரீ வாசுதேவானந்தா என்ற பெயர் கொண்டவரும், சரஸ்வதி என்னும் துறவிப் பிரிவைச் சார்ந்தவருமான சுவாமி ஒருவர் கோதாவரிக் கரையில் இருக்கும் பிரசித்தி பெற்ற நகரமான ராஜமஹேந்திரபுரத்திற்கு வந்தார்.
அவர் மஹா அந்தர் ஞானி (பிறர் மனம் அறியும் ஆற்றல் படைத்தவர்). கர்ம மார்க்கத்தில் பெரும் அபிமானம் கொண்டவர். அவருடைய அகண்ட கீர்த்தி இவ்வுலகில் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
செவிவழிச் செய்தியாகப் பரவிய இக் கீர்த்தியைக் கேட்டு, நாந்தேட் நகரத்தில் வசித்துவந்த பிரபல வக்கீல் புண்டலீகராவும் மேலும் சில பக்தர்களும் ஸ்ரீ வாஸுதேவானந்த சரஸ்வதி சுவாமியை தரிசனம் செய்ய நிச்சயத்தினர்.
ஆகவே, தக்க தருணத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்து ராஜமஹேந்திரபுரம் சென்றடைந்தனர். காலை நேரத்தில் சுவாமியை தரிசிக்க கோதாவரி நதிக்கரைக்குச் சென்றனர்.
நாந்தேடிலிருந்து வந்த குழுவினர் அனைவரும் வைகறைப் பொழுதில் தோத்திர பாடல்களை ஓதியவாறு ஸ்னானம் செய்ய கோதாவரி நதிக்குச் சென்றனர்.
அங்கு சுவாமி நின்றுகொண்டிருந்தந்தைப் பார்த்த அனைவரும் பயபக்தியுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். இயல்பான குசலப்பிரசனம் (நலன் கேட்டல்) முடிந்த பிறகு ஷீர்டி பற்றிய பேச்சு எழுந்தது.
சாயி நாமம் காதில் விழுந்த உடனே, சுவாமி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டு சொன்னார், "அவர் நம் சகோதரர்; பற்றற்றவர்; அவரிடம் நமக்கு எல்லையற்ற பிரேமை உண்டு".
அங்கிருந்த ஒரு தேங்காயை எடுத்துப் புண்டலீகராவிடம் ஒப்படைத்தவாறு அவர் சொன்னார், "நீங்கள் ஷிர்டிக்கு செல்லும்போது நம் சகோதரரின் பாதகமலங்களில் வந்தனம் செய்தபின், இதைக் காணிக்கையாகச் செலுத்துங்கள். -
"என்னுடைய நமஸ்காரத்தை முழுமையாகத் தெரிவித்து, அவரை இந்த தீனன் என்றும் மறவாதவாறு கிருபைபுரியவேண்டும் என்றும், அவரிடம் எனுக்குள்ள பிரேமை நிரந்தரமாக வளரவேண்டுமென்றும், வேண்டியதாகச் சொல்லுங்கள்.-
"நீங்கள் ஷீர்டி கிராமத்திற்கு மறுபடியும் செல்லும் பொது ஞாபகமாக இதை என் சகோதரருக்கு பயபக்தியுடன் காணிக்கையாகச் செலுத்துங்கள். -
"சுவாமிகளாகிய நாங்கள் யாருக்கும் வந்தனம் செலுத்தக்கூடாது என்பது சாஸ்திர நிபந்தனை. ஆயினும், இந்த நியமத்தைச் சில சமயங்களில் மீறுதல் மங்களம் விளைவிக்கும்.






