valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"தீக்ஷிதர் எங்களின் கிடைத்தற்கரிய நண்பர்.  நீங்களும் அவருக்கு அறிமுகம் செய்யப்படுவீர்கள்.  அவர் ஷிர்டிக்குச் செல்வதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். உங்களுடைய வரவு அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும்."

இவ்வாறு அவருக்குச் சொன்னபின் தீக்ஷிதர்க்கும் செய்தியைத் தெரிவித்தனர்.  அதைக் கேட்ட தீக்ஷிதரின் மனஉளைச்சல் அகன்றது; மனம், மிகுந்த சந்தோஷத்தை அடைந்தது. 

மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதவராவ் தம் மாமியார் சுகமடைந்துவிட்டிருந்ததைக் கண்டார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.  'மிரீகர் அழைக்கிறார்' என்று செய்தி வந்தது. 

மிரீகரின் அழைப்புக்கு மரியாதையை கொடுத்து, வெயில் சிறிது குறைந்தபிறகு மாதவராவ் தீக்ஷிதரை சந்திக்கச் சென்றார். 

அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.  பாலா சாஹேப் ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் இரவு 10 மணி ரயிலில் ஷிர்டிக்குச் செல்வதென்று தெளிவாகத் தீர்மானம் செய்தனர். 

இவ்வாறு முடிவு செய்த பிறகு நடந்த அதிசயத்தைப் பாருங்கள்.  பாபாவின் படத்தை மூடிக்கொண்டிருந்த திரைச்சீலையை பாலா சாஹேப் விலக்கினார். 

அது பாபாவின் புகைப்படம்.  மேகாவுக்கு சொந்தமானது.  மேகா, பாபாவை முக்கண்ணனாகிய சங்கரனாகவே பாவித்து பரம பிரேமையுடன் வழிபட்டுவந்த ஈடிணையற்ற பக்தர். 

அப் படத்தின் கண்ணாடி உடைந்துபோன காரணத்தால், சரிசெய்வதற்காக ஷிர்டியிலிருந்து அஹமத் நகருக்கு பாலா சாஹிபால் முன்னமேயே கொண்டுவரப்பட்டிருந்தது. 

அதே புகைப்படைந்தான், பழுது பார்க்கப்பட்ட பின், தீக்ஷிதரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது.  மிரீகரின் வீட்டுக் கூடத்தில் ஒரு துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

குதிரைக் கண்காட்சி முடிவடைந்தபின் பாலாசாஹேப் ஷிர்டிக்குத் திரும்பச் சில நாள்கள் இருந்தன. ஆகவே, தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு அப் படம் மாதவராவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. 

படுதாவை விலக்கியபின், படம் திறந்த நிலையிலேயே விடப்பட்டது.  மிரீகர் மாதவராவிடம் படத்தை ஒப்படைத்துக்கொண்டே சொன்னார், "ஷீர்டி பரியந்தம் பாபாவின் துணையுடன் சுகமாகச் செல்வீராக!"

சர்வாங்க மனோகரமான (அங்கமெல்லாம் அழகு கொஞ்சிய) அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனே காகா சாஹேப் ஆனந்தம்  நிரம்பியவரானார்.  நமஸ்காரம் செய்தபின் படத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். 

நடக்கவொண்ணாத அந்த விசித்திரமான நிகழ்வு நடந்ததை நினைத்தும், கற்பனைக்கெட்டாத அழகு படைத்த சமர்த்த சாயியின் புனிதமான புகைப்படத்தைப் பார்த்தும், தீக்ஷிதர் சந்தோஷத்தால் மெய்மறந்தார். 





Thursday, 30 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


'யார் என்னுடன் வந்து பாபாவுக்கு அருகில் அழைத்துச்சென்று அவருடைய பாதங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்?' என்று சிந்தனையில் தீக்ஷிதர் மனவுளைச்சலுற்றார்.

தேர்தல் சம்பந்தமான வேலை முடிந்தவுடன், தீக்ஷிதர் ஷீர்டி பயணம் பற்றி விசாரப்பட்டுக் காகா சாஹேப் மிரீகரிடம் அதைப்பற்றி மரியாதையாக விசாரித்தார். 

பாலா சாஹேப் மிரீகர், காகா சாஹேப் மிரீகரின் மகன்.  'ஷிர்டிக்கு தீக்ஷிதருடன் யாரை அனுப்புவது?' என்று இருவரும் பரஸ்பரம் ஆலோசனை செய்தனர். 

அவர்கள் இருவரில் ஒருவர் செல்ல முடிந்தால், வேறு துணை ஏதும் தேவைப்படாது. ஆகவே, 'இருவரில் யார் செல்வது?' என்பதை நிச்சயிக்கத் தீவிரமாக யோசித்தனர். 

மனிதன் போடும் திட்டங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.  இறைவனின் திட்டங்களோ முற்றிலும் வேறு விதமானவை. தீக்ஷிதரின் ஷீரடிப் பயணத்துக்கு உதவுவதற்காக கற்பனை செய்யமுடியாத நிகழ்வு ஒன்று உருவாகியது. 

இங்கு இவ்விதமான மனஉளைச்சல்; அங்கு (ஷிர்டியில்) வேறுவிதமான அசைவு, பக்தனின் பேரார்வத்தைக் கண்ட சமர்த்த சாயி மனம் கனிந்தார்.

இவ்வாறு தீக்ஷிதர் சிந்தனை செய்தவாறு மனவுளைச்சலுடன் அமர்ந்திருந்தபோது எல்லா மக்களும் ஆச்சரியப்படும் வகையில் மாதவராவ் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தார்!

அஹமத்நகரத்திலிருந்து மாதவராவின் மாமனார், "உம் மாமியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக  இருக்கிறது. உடனே குடும்பத்துடன் கிளம்பி வரவும்" என்று தந்தி மூலம் செய்தி அனுப்பியிருந்தார். 

தந்தி கிடைத்தவுடன் பயணத்திற்கு ஆயத்தமாகி பாபாவின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு, மாதவராவும் மனைவியும், இருவருமாகச் சிதலீ ரயில் நிலையத்திற்குச் சென்றனர். 

மூன்று மணி ரயில் வண்டியைப் பிடித்து இருவரும் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தனர்.  குதிரைவண்டி வீட்டுவாசலில் வந்து நின்றது.  இருவரும் கீழே இறங்கினர். 

இதற்கிடையே, நானாசாஹேப் பான்ஸ்லேவும், அப்பா சாஹேப் கத்ரேவும் குதிரைக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக அதேசமயத்தில் அவ்வழியாகச் செல்லும்படி நேரிட்டது. 

மாதவராவ் வண்டியிலிருந்து இறங்குவதை எதிர்பாராதவிதமாக பார்த்த அவ்விருவரும் வியப்படைந்தனர்.  மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அவர்களால் அடக்கமுடியவில்லை. 

"ஷிர்டியின் பட்வாவான  மாதவராவ் இங்கு வந்திருப்பது எவ்வளவு தெய்வீகமான செயல்! தீக்ஷிதரை ஷிர்டிக்கு அழைத்துச்செல்ல இவரைவிடச் சிறந்தவர் எவரும் உளரோ?" என்று அவர்கள் இருவரும் கூறினர்.

பிறகு அவர்கள் மாதவராவைக் கூவியழைத்துச் சொன்னார்கள், "காகா தீக்ஷிதர் வந்திருக்கிறார்.  மிரீகரின் வீட்டில் இருக்கிறார். பாபா செய்திருக்கும் அற்புதத்தை நீங்கள் போய்ப் பாருங்கள். -




Thursday, 23 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"முழுமுதற்பொருள் அன்றி வேறு சுகம் ஏதும் இல்லை. அதுவொன்றே விலைமதிப்பில்லாத சுகம்.  இந்த விலைமதிப்பில்லாத சுகம் ஒன்றுக்காவே நான் உம் குருவுக்குத் தொண்டனாவேன். -

"காலின் முடம் இப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், என் மனத்தின் முடத்தைச் சரிசெய்து சிறந்த நிலைக்குக் கொண்டுவாருங்கள்' என்றே நான் பிரார்த்தனை செய்வேன். -

"எவ்வளவோ சிரமப்பட்டு உபாசனை செய்கிறேன்.  ஆயினும், மனம் நிச்சலம் ஆகவில்லை. சிரமப்பட்டு சுவாதீனத்திற்குக் கொண்டுவர முயல்கிறேன்.  ஆனால், அது எனக்குத் தெரியாமல் தப்பியோடி விடுகிறது. -

"மனத்தை அறவே நிக்கிரஹம் செய்யும் (அடக்கும்) முயற்சியில் எவ்வளவு உஷாராக இருந்தாலும், அது எப்பொழுது நழுவும் என்று சொல்லமுடியாது.  மனம் அளவிலா ஆச்சரியமானது!-

"ஆகையால், நானா, நான் மனப்பூர்வமாக உம் குருவை தரிசனம் செய்ய வருகிறேன்.  என் மனமுடத்தை நீக்க அவரிடம் பிரார்த்தனையும் செய்கிறேன்."

நசித்துப்போகக்கூடிய சரீர சுகங்களை உதாஸீனம் செய்து, எவர் வீட்டின்பத்தை மிகுந்த விருப்பத்துடன் நாடுகிறாரோ, அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தில் சாயி பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் காட்டுகிறார். 

அந் நாள்களில் எல்லாராலும் பேசப்பட்ட ஒரே விஷயம், நடக்கவிருந்த பம்பாய் மாகாண மேல் சட்டமன்ற தேர்தல்.  அதன் பொருட்டு, இங்கும் அங்குமாகப் பல இடங்களில் மக்கள் தேர்தல் வேளையில் ஈடுபட்டிருந்தனர். 

காகாசாஹேபும் பொதுஜன ஆதரவைத் திரட்டித் தாம் வெற்றியடைவதற்காகத் தம் நண்பர்களை சந்தித்துக்கொண்டிருந்தார்.  இந்த வேலை சம்பந்தமாக எதிர்பாராதவிதமாக அஹமதுநகரம் சென்றார். 

காகா சாஹேப் மிரீகர் என்ற பெயர்கொண்ட சர்தார் ஒருவர் அஹமதுநகரத்தில் இருந்தார்.  அவர் தீக்ஷிதரின் நெருங்கிய நண்பர்.  ஆகவே, தீக்ஷிதர் அவருடைய இல்லத்தில் தங்கினார். 

அதே சமயத்தில் அஹமத் நகரத்தில் குதிரைக் கண்காட்சி  ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அதற்காகப் பலதரப்பட்ட மக்கள் அங்கு வேலையில் மூழ்கியிருந்தனர். 

கோபர்காங்க்வின் மாம்லேதாரான பாலா சாஹேப் மிரீகரும் குதிரைக் கண்காட்சியைப் பார்த்தப்பதற்காக அஹமத் நகருக்கு வந்திருந்தார். 

தீக்ஷிதர் எதற்காக வந்தாரோ அந்தக் காரியம் முடிந்தது. 'நான் ஷிர்டிக்குப் போவதை ஏற்பாடு செய்வது எப்படி? யார் என்னை அழைத்துச் செல்வார்?' என்றெல்லாம் அவர் சிந்திக்க ஆரம்பித்தார். 

அங்கு வந்த வேலை முடிந்தவுடனே, அவருடைய பார்வை ஷீர்டி செல்லும் மார்க்கத்தை நோக்கித் திரும்பியது.  "பாபாவை தரிசனம் செய்யும் யோகம் பெறுவேனா' என்ற சிந்தனையில் மூழ்கினார். 

 


 

Thursday, 16 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


காகா சாஹேப்பின் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, நானா சாஹேப் சாந்தோர்கர் அவரை லோனாவாலாவில் ஒருமுறை சந்தித்தார். 

தீக்ஷிதரும் சாந்தோர்கரும் இளமைக்கால நண்பர்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து சந்தித்தால், தங்களுடைய சுகதுக்கங்களைப்பற்றி பரஸ்பரம் உரையாடினர். 

லண்டன் மாநகரத்தில் வசித்த காலத்தில் ஒரு பேருந்தில் ஏற முயன்றபோது, பாதம் வழுக்கியதால், தீக்ஷிதருடைய காலில் ஊனம் ஏற்பட்டது.  எத்தனையோ வைத்தியங்கள் செய்த பிறகும் அந்த ஊனம் குணமடையவில்லை. 

உரையாடலில் அந்த ஊனம் பற்றிய பேச்சு இயல்பாக எழுந்தது. அந்த சமயத்தில் நானாவுக்கு ஸ்ரீ சாயி பாபாவின் அற்புத சக்திகள் குறித்து நினைவுக்கு வந்தது. 

"கால் ஊனம் முழுமையாகக் குணமாகவேண்டுமென்று நீர் விரும்புகிறீரா அப்படியானால் என் குருவை தரிசனம் செய்ய வாரும்" என்று தீக்ஷிதரிடம் நானா உடனே சொன்னார். 

பின்னர் நானா, ஞானிகளின் சிரோன்மணியாகிய சாயியின் விருத்தாந்தத்தையும் விசேஷங்களையும் மஹிமையையும் தீக்ஷிதருக்கு ஆனந்தத்துடன் எடுத்துச் சொன்னார். 

"என் மனிதன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், எழுகடல் தாண்டி இருந்தாலும் சரி, காலில் நூல் கட்டப்பட்ட சிட்டுக்குருவியை இழுப்பதுபோல் அவனை உடனே என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்".

இவ்வாறே, பாபா எப்பொழுதும் பேசினார். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் நானா மேலும் சொன்னார், "நீர் பாபாவைச் சார்ந்தவராக இல்லாவிட்டால்.  உமக்கு அவரிடம் ஈர்ப்பு ஏற்படாது.-

"நீர் அவருக்குச் சொந்தமாக இல்லாவிடின், உமக்கு அவருடைய தரிசனம் கிடைக்காது. இதுவே பாபாவின் முக்கிய லக்ஷணம் (அடையாளம்).  உம்முடைய தீர்மானத்தால் மாத்திரம் நீர் அங்கே போகமுடியுமா என்ன?"

இவ்வாறாக,  சாயியைப்பற்றிய வர்ணனையைக் கேட்ட தீக்ஷிதர், மனத்துள் பெரும் திருப்தியடைந்தார்.  அவர் நானாவிடம் சொன்னார், "நான் பாபாவை தரிசனம் செய்ய வருகிறேன்.-

"என்னுடைய கால் என்ன பெரிய விஷயம்? முழுவுடலுமே நசித்துப் போகக்கூடியது அன்றோ? என்னுடைய கால் ஊனம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் அதைபற்றிக் கவலைப்படவில்லை.-

"நான் உம் குருவை தரிசனம் செய்ய விரும்புவது, நிரதிசய இன்பம் (அதைவிட மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம்) பெறுவதற்காகவே. அல்ப சுகங்களின்மேல் எனக்கு ஆசை இல்லை. அவற்றை யான் யாசிக்கமாட்டேன். 

 


 

Thursday, 9 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மோகம் என்பது அஞ்ஞானமே.  சொற்கள் வெவ்வேறாக இருப்பினும், பொருளில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவர். 

கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தின் முதல் சுலோகத்திலும் அர்ஜுனன் சொல்லியிருக்கிறான், "என்னைக் காத்தருளுவதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்ம தத்துவத்தைப்பற்றிய உபதேசத்தால் என் மோகம் ஒழிந்தது" என்று. 

இப்பொழுது, இந்தப் புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தில், பாபா, காகா சாஹேப் தீக்ஷிதரை வரவழைத்து எவ்வாறு ஷிர்டியில் ஸ்தாபனம் செய்தார் (நிலைநிறுத்தினார்)  என்ற ஆச்சரியமளிக்கும் விவரத்தைச் சொல்வோமாக. 

ஷிர்டியுடன் அவருக்கிருந்த ருணானுபந்தமும் (முன்ஜன்ம பந்தமும்) சாயியுடன் இருந்த திடமான சம்பந்தமும் இந்த நிகழ்வுக்கு எவ்வாறு மூலகாரணமாயிற்று என்பதை ஆரம்பத்திலிருந்து கேளுங்கள். 

காகா சாஹேப் சம்பந்தப்பட்ட பல கதைகள் சிறுவர்களிலிந்து கிழவர்கள்வரை சகலருக்கும் தெரியும்.  ஆனால், அவர் எப்படி முதன்முதலாக ஷிர்டிக்கு வந்தார் என்ற விவரம் எல்லாருக்கும் தெரியாது; ஒரு சிலருக்கே தெரியும். 

பூர்வபுண்ணியங்களின் சேமிப்பு பரமேச்வரனின் கடைக்கண்பார்வையை அளிக்கிறது. அதிலிருந்து விளைவது சத்குரு  சந்திப்பு.  அதிலிருந்து பெறுவது சிஷ்யனின் சுயானந்த புஷ்டி. 

இந்த அத்தியாயத்தின் பின்னணி இதுவே.  அபூர்வ அதிர்ஷ்டசாலிகளாகிய மூன்று பக்தர்களின் காதைகளை கதைகேட்பவர்களுக்குச் சொல்கிறேன்.  கேட்பவர்களின் இதயத்தில் ஆனந்தம் நிரம்பும். 

வீடுபேறு அடைவதற்கு கோடானுகோடி இதர உபாயங்கள் உள்ளன.  ஆனாலும், சத் குருவின் கடைக்கண்பார்வை இல்லாமல் அவற்றால் ஒரு பயனும் கிடைக்காது. 

இது விஷயமாக ஒரு சுவையான காதையைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய ஆவலை இக் கதை திருப்தி செய்யும்.  தாங்களும் சேமமடைய வேண்டும் என்னும் வேட்கை அவர்களுடைய மனத்தில் எழும். 

பரம புனிதமானதும் நன்மையளிப்பதுமான இந்த அத்தியாயத்தைக் கதைகேட்பவர்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்பார்களாக.  குருபக்தி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 

சாயி பாபாவின் பக்தர்கள் அனைவருமே அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூரும் ஹரி சீதாராம் தீக்ஷிதர், காகா சாஹேப் என்னும் பெயரால் பிரபலமாக அறியப்பட்டவர். 

கேள்விஞானம் மிகுந்த ரசிக்கப் பெருமக்களுக்கு ஆனந்தமளிக்கும் அவருடைய ஆரம்பகால வரலாற்றை, சரித்திரம் கேட்பதில் உற்சாகம் காட்டும் பக்தர்கள் ஆனந்தம் அடைவதற்காக பயபக்தியுடன் சொல்கிறேன்; கேளுங்கள். 

1909  ஆண்டு வரை சாயி என்ற பெயரையே கேட்டறியாதவர், பிற்காலத்தில் எல்லாருக்கும் நன்கு தெரிந்த பரம பக்தரானார். 

 


 

Thursday, 2 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


51 .  மூன்று பக்தர்களின் விருத்தாந்தம் 


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

பக்தர்களின் ஆதாரமான சாயியே, ஜய ஜய! கீதையின் பொருளைப் பிரகாசப்படுத்திய குருவரரே (பரமகுருவே), எல்லா சித்திகளையும் அளிக்கும் கொடைவள்ளலே எனக்குக் கிருபை காட்டுவீராக! 

உஷ்ணத்தை சமனம் செய்ய மலையகிரியில் (மேற்குத்தொடர்ச்சி மலைகளில்) சந்தனம் விளைகிறது. மேலும் உலகமக்களுக்கு சுகத்தை அளிப்பதற்காக மேகங்கள் பூமியின்மேல் மழையாகப் பொழிகின்றன. 

தேவர்களைப் பூஜை பண்ணுவதற்காக எவ்வாறு வசந்தகாலத்தில் பூக்கள் ஏராளமாக மலர்கின்றனவோ, அவ்வாறே, கேட்பவர்களைத் திருப்தி செய்வதற்காக மேலும் ஒரு கதைத் தொடர் உருவாகிறது. 

ஒரே ஒரு முறையானாலும், இந்த சாயி சரித்திரத்தை கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராரும் பவித்திரமானவர்கள்.  கேட்பவர்களின் காதுகள் தூய்மையடைகின்றன. சொல்பவர்களின் வாக்குத் தூய்மையடைகிறது. 

கடந்த அத்தியாயத்தில், 'தத்வித்தி ப்ரணிபாதனே ' என்று ஆரம்பிக்கும் சுலோகத்தில் நிரூபணம் மூலமாக, அஞ்ஞானத்தை அழித்துவிட்டால் ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது விளக்கப்பட்டது. 

பகவத் கீதையை முடிக்கும்  தருவாயில், பதினெட்டாவது அத்தியாயத்தின் முடிவில், எழுபத்திரண்டாவது சுலோகத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைக் கேட்கிறார். 

"பார்த்தா (அர்ஜுனா), ஒருமுகப்பட்ட மனத்துடன் இதுவரை நான் செய்த பிரவசனம் கேட்கப்பட்டதா? தனஞ்சயா, உன்னுடைய அஞ்ஞானத்திலிருந்து விளைந்த குழப்பம் அழிந்ததா?" தெளிவாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுவே.  "நீ ஞானம் பெற்றாயா?"  என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்கவில்லை. 

அர்ஜுனனின் பதிலும் அதுபோலவே அமைந்தது. "அச்சுதா, மோகம் அழிந்துவிட்டது.  உமது அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. ஐயங்கள் அகன்று உறுதியாக இருக்கிறேன். உமது சொற்படி செய்வேன்" என்று அர்ஜுனன் பதிலளித்தான். ஞானம் பெற்றேன் என்று சொல்லவில்லை; மோகம் ஒழிந்துவிட்டது என்றே பதில் சொன்னான். 

 


 

Thursday, 25 June 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஆகவே, இந் நூலின் ஆசிரியன் நான் அல்லேன்.  என்னுடைய செய்கையால் இங்கு யாரும் சிரமப்படவில்லை.  'சிரமத்திற்கு மன்னிக்கவும்' என்று நான் கதை கேட்டவர்களை வேண்டினால், நூல் செய்த பெருமை என் தலையில் விழும்!

இங்கு, எந்த பூஷணமும் என்னைச் சாராது; தூஷணமும் (நுந்தையும்)  என்னைச் சாராது. எதற்கு சாயியே கர்த்தாவோ, அந்த விஷயம் சம்பூர்ணம் ஆகிறது. 

சாயியின் அனுமதியைப் பெற்றபின், அஞ்ஞானத்தைப் பற்றிய இந்த விவரணத்தை எல்லாரும் கேட்பதற்காக, அவர் எவ்வாறு எனக்கு விளக்கினாரோ அவ்வாறே நான் எழுதியிருக்கிறேன். 

தம்முடைய வைபவத்தையும் பிரதாபத்தையும் கௌரவத்தையும் வெளிப்படுத்துவதற்காக, குருதேவர், தாமே அடியேன் மனத்தில் புகுந்து இவ்விஷயத்தின் (அஞ்ஞானத்தின்) நுணுக்கங்களைப் பிரகாசப்படுத்தினார். 

இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம்.  சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம்.  எது எப்படியிருப்பினும் , இரு சாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்;  அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள். 

தம் பக்தர்களின் உயர்ந்த நன்மைக்காக, சாயி தம்முடைய சரித்திரத்தைத் தாமே நிர்மாணம் செய்தார்.  ஹேமாடின் கையைத் தம் கையால் பிடித்துக்கொண்டு தம்முடைய காதையை எழுதவைத்தார். 

சரீரத்தை அவர் ஏற்றுக்கொண்டது உலகத்திற்கு அனுக்கிரஹம் செய்வதற்காக; குதர்க்கத்தையும் துராக்கிரஹத்தையும் (வன்முறையையும்) அழிப்பதற்காக;  உலக மக்களுக்கு நற்பாதை காட்டி ரட்சிப்பதற்காக. 

ஹேமாட் அவருடைய பாதங்களில் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத)  பாவத்துடன் விழுந்து வணங்குகின்றேன்.  தொடரப்போகும் சுவை மிகுந்த கதைகளை ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்குமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்!  ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'அஞ்ஞானத்தை அழித்தல்' என்னும் ஐம்பதாவது அத்தியாயம் முற்றும். 


ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும்.