valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 10 September 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இப்படியும் இருக்கலாமோ?  சாயி தம் பக்தர்களுக்கு மங்களங்களை விளைவிப்பதற்காக, எங்கெங்கு எவ்வெப்படித் தேவைப்பட்டது அங்கங்கு அவ்வப்படி நாடகமாடி ஆன்மீக போதனையை அளித்தாரோ?

இந்தப் பின்னணியில் ஒரு சிறிய காதை சொல்கிறேன். கதைகேட்பவர்களே, பயபக்தியுடன் கேளுங்கள்.  ஒரு ஞானி மற்றொரு ஞானியை யாரும் சொல்லாமலேயே எவ்வாறு அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். 

ஒருசமயம், ஸ்ரீ வாசுதேவானந்தா என்ற பெயர் கொண்டவரும், சரஸ்வதி என்னும் துறவிப் பிரிவைச் சார்ந்தவருமான சுவாமி ஒருவர் கோதாவரிக் கரையில் இருக்கும் பிரசித்தி பெற்ற நகரமான ராஜமஹேந்திரபுரத்திற்கு வந்தார். 

அவர் மஹா அந்தர் ஞானி (பிறர் மனம் அறியும் ஆற்றல் படைத்தவர்). கர்ம மார்க்கத்தில் பெரும் அபிமானம் கொண்டவர்.  அவருடைய அகண்ட கீர்த்தி இவ்வுலகில் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 

செவிவழிச் செய்தியாகப் பரவிய இக் கீர்த்தியைக் கேட்டு, நாந்தேட் நகரத்தில் வசித்துவந்த பிரபல வக்கீல் புண்டலீகராவும் மேலும் சில பக்தர்களும் ஸ்ரீ வாஸுதேவானந்த சரஸ்வதி சுவாமியை தரிசனம் செய்ய நிச்சயத்தினர். 

ஆகவே, தக்க தருணத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்து ராஜமஹேந்திரபுரம் சென்றடைந்தனர். காலை நேரத்தில் சுவாமியை தரிசிக்க கோதாவரி நதிக்கரைக்குச் சென்றனர். 

நாந்தேடிலிருந்து வந்த குழுவினர் அனைவரும் வைகறைப் பொழுதில் தோத்திர பாடல்களை ஓதியவாறு ஸ்னானம் செய்ய கோதாவரி நதிக்குச் சென்றனர். 

அங்கு சுவாமி நின்றுகொண்டிருந்தந்தைப் பார்த்த அனைவரும் பயபக்தியுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். இயல்பான குசலப்பிரசனம் (நலன் கேட்டல்) முடிந்த பிறகு ஷீர்டி பற்றிய பேச்சு எழுந்தது. 

சாயி நாமம் காதில் விழுந்த உடனே, சுவாமி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டு சொன்னார், "அவர் நம் சகோதரர்; பற்றற்றவர்; அவரிடம் நமக்கு எல்லையற்ற பிரேமை உண்டு". 

அங்கிருந்த ஒரு தேங்காயை எடுத்துப் புண்டலீகராவிடம் ஒப்படைத்தவாறு அவர் சொன்னார், "நீங்கள் ஷிர்டிக்கு செல்லும்போது நம் சகோதரரின் பாதகமலங்களில் வந்தனம் செய்தபின், இதைக் காணிக்கையாகச் செலுத்துங்கள். -

"என்னுடைய நமஸ்காரத்தை முழுமையாகத் தெரிவித்து, அவரை இந்த தீனன் என்றும் மறவாதவாறு கிருபைபுரியவேண்டும் என்றும், அவரிடம் எனுக்குள்ள பிரேமை நிரந்தரமாக வளரவேண்டுமென்றும், வேண்டியதாகச் சொல்லுங்கள்.-

"நீங்கள் ஷீர்டி கிராமத்திற்கு மறுபடியும் செல்லும் பொது ஞாபகமாக இதை என் சகோதரருக்கு பயபக்தியுடன் காணிக்கையாகச் செலுத்துங்கள். -

"சுவாமிகளாகிய நாங்கள் யாருக்கும் வந்தனம் செலுத்தக்கூடாது என்பது சாஸ்திர நிபந்தனை. ஆயினும், இந்த நியமத்தைச் சில சமயங்களில் மீறுதல் மங்களம் விளைவிக்கும். 


 

Thursday, 3 September 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சிந்தாமணியைக் கொடுத்தாலும், எப்பொழுதும் இருக்கும் கவலைகள் அதிகரிக்கத்தான் செய்யும்.  அந்தச் சிந்தனைக்கெட்டாத தானத்திற்குப் பிரதியாகச் சிந்தாமணியைக் கொடுத்துவிட்டேன் என்று யாராவது நினைத்தால், அவருடைய விவேகமும் விளக்கமும் குழந்தைத்தனமானவை. 

கற்பக விருட்சத்தைக் கொடுத்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கலாம்.  ஆனால், இணையில்லாததும் விகற்பம் இல்லாததுமான தானத்தை அளிப்பதில் சாயி கைதேர்ந்தவர் அல்லரோ!  அதை எப்படித் திரும்பிச் செலுத்த முடியும்?

ஆக, இவற்றுடன் சேர்த்துப் பரிசனவேதியைக் குருவுக்குக் கொடுத்தால், அந்தப் பரிசனவேதி தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாகத்தான் மாற்றும்.  இது இப்படி இருக்கையில், நாம் குடிப்பதற்கு பிரமானந்தத்தைக் கொடுக்கக்கூடியவர் அல்லரோ குரு!

காமதேனுவை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்குப் பதிலுதவி செய்துவிட்டோம்  என்று நினைத்தால், உழைப்புதான் மிஞ்சும்.  மாறாக, பற்றேதும் இல்லாத குரு அளிப்பவற்றில் உழைப்போ சங்கடங்களோ இரா. 

அகில உலகத்திலும் உள்ள சம்பத்துக்களை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்கு கைம்மாறு செய்துவிடலாம் என்று சிலர் விரும்பலாம்.  மாயையைக் கடந்த உண்மைப்பொருளை வழங்குபவருக்கு, மாயையால் விளைந்த பொருளைக் கொடுத்துக் கடனை என்றாவது அடைக்க முடியுமா?

பரமகுருவுக்கு தேகத்தை அர்ப்பணம் செய்வோமென்றால், அதுவும் கேவலம் அழியக்கூடிய பொருள். ஜீவனை சரணடையச் செய்தாலும், அது இயல்பிலேயே மித்தியம் (பொய்). 

சத்குரு  சத்தியவஸ்துவை (உண்மைப்பொருளை)  வழங்குபவர்.  அவருக்கு மித்தியவஸ்துக்களை (பொய்யான பொருள்களை) அர்ப்பணம் செய்து எப்படிப் பிரதியுதவி செய்ய முடியும்?இது இயலாத காரியம் அன்றோ?

ஆதலின், அனன்னியமானதும் பூரணமானதுமான சிரத்தையுடன், சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, சத் குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து, அவர் செய்த அருட்செயல்களை மனத்தில் இருத்தி அவரை வழிபடுவோமாக. 

குரு செய்த அருட்செயல்களை அகண்டமாக (இடையறாது) நினைவில் கொள்வதே சிஷ்யனுக்கு அணிகலன். கைம்மாறு செய்ய முயலும் சிஷ்யர்கள் தங்களுடைய சுகத்தை இழப்பர்!

கதைகளை இதுவரை கேட்டவர்கள் மேலும் கேட்கத் தாகம் கொண்டுள்ளனர்.  அவர்களுடைய பூரணமான விஷய ஆர்வத்தையும் பரபரப்பையும் காணும் நான், இப்பொழுது இன்னொரு காதையையும் சொல்கிறேன். 

சம்சாரிகளுக்குச் சமமாக, ஞானியரும் தம் சுற்றத்தின் மீதான பிரேமையை வெளிப்படுத்துகின்றனர்.  அதாவது, உலக மக்களை ஒன்று சேர்ப்பதிலும் நல்வழிப் படுத்துதலிலும், அவர்கள் நேரம் தவறாது செயல்படுவதை சூக்குமமாக தெரிவிக்கின்றனர். 


 

Thursday, 27 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


எண்ணற்ற சாதகப் பறவைகள் மேகத்துக்காக ஏங்குகின்றன; ஆயினும், அத்தனை சாதகப் பறவைகளுக்கும் கிடைக்கக்கூடிய மேகம் ஒன்றே.  அதுபோலவே, அவருக்கு அநேக பக்தர்கள் உள்ளனர்;  ஆயினும், தந்தையும் தாயும் ஆனவர் அவர் ஒருவரே. 

எவரெவர்கள் ஸத்பாவத்துடனும் இயல்பாகவும் சரணடைகிறார்களோ, அவரவர்களுடைய மானத்தை ரட்சித்து மட்டுமல்லாமல் வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து வைக்கிறார்.  இதை இன்றும் (மஹாசமாதி அடைந்த பிறகும்) பிரத்யட்சமாகக் (கண்கூடாகக்) காணலாம். 

இவ்வுலகில் எந்தெந்தப் பிராணிகள் உயிருடனும் இருக்கின்றனவோ, அவை அனைத்திற்கும் மரணம் முடிவை உண்டாக்கும்.  ஆயினும், சாயி, தீக்ஷிதருக்கு அபயம் அளித்தார், "உம்மை நான் ஓர் ஆகாயவிமானத்தில் அழைத்துச் செல்கிறேன்."

சாயி எவ்விதமாக வாக்களித்தரோ, அவ்விதமாகவே தீக்ஷிதரின் அந்தம் (முடிவு)  ஏற்பட்டது.  சாயியின் குணநலன்களைப் பாடிக்கொண்டே  தீக்ஷிதர் உயிர்நீத்தார். இதை நான் என்னுடைய கண்களாலேயே பார்த்தேன். 

நாங்கள் இருவரும் ஒரு ரயில்வண்டியில் அமர்ந்து சமர்த்த சாயியின் பெருமைகளைப் பரஸ்பரம் பேசிக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தபோது, யாரோ அவரைச் சட்டென்று ஓர் ஆகாயவிமானத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதுபோல் தோன்றியது. 

சரியான சந்தர்பத்தைச் சட்டெனப் பயன்படுத்தித் தம்முடைய தலையை என் தோளின்மேல் சாய்த்தவாறு, எதிர்பாராதவிதமாக ஆகாயவிமானத்தில் ஏறி தீக்ஷிதர் எல்லையற்ற சுகத்தை அடைந்தார். 

முக்கவோ முனகவோ இல்லை; தொண்டையில் 'கர்புர்' என்று இழுக்கவுமில்லை;  வலி ஏதும் இல்லை. எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தபோதே, பேசிக்கொண்டிருந்தவரின் உடல் அசைவற்றுப் போயிற்று. 

இவ்விதமாக, மனிதர்கள் வாழும் இப்பூமியை உதறிவிட்டு, நிஜமான ரூபமும் நிஜமான ஜோதியும் கிடைத்த காரணத்தால், ஆகாயமார்க்கத்தில் சென்று பரஞ்சோதியுடன் இரண்டற கலந்துவிட்டார். 

உயிர் பிரியும் தருவாயில் சாயிபாத தியானத்தில் லயித்திருந்ததால், அவருடைய தேகாபிமானமும் முழுவதுமாக துறக்கப்பட்டது.  மனம் ஒருமைப்பட்ட நிலையில், தேகத்தைப் பூரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணம் செய்தார். 

1926 ஆம் ஆண்டு ஆனிமாதத்துத் தேய்பிறை ஏகாதசி நாளன்று, இந்தக் கர்மபூமியை விடுத்து பிரம்மபதம் அடைந்தார் தீக்ஷிதர். 

அவர் மரணமடைந்தார் என்றோ, ஆகாயவிமானத்தில் ஏறிச் சென்று விட்டார் என்றோ சொல்லலாம். ஆனால், அவர் சாயி பாதங்களில் இரண்டற கலந்துவிட்டார். இதை சாயிபக்தர்கள் அனைவரும் பிரமாணமாக ஏற்றுக்கொள்வர். 

இம்மாதிரியான உபகாரத்திற்கு கைம்மாறு செய்துவிடமுடியும் என்று நினைப்பவன் முழுமையான அபக்தன் (பக்தியே இல்லாதவன்). ஏனெனில், இக் கடனைக் கண்ணுக்குத் தெரியும் எப்பொருளையும் கொடுத்துக் கனவிலும் அடைக்கமுடியாது. 




Thursday, 20 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அப்பொழுது, ரயில் நிலையத்தில் நானா சாஹேப் சார்ந்தோர்கரை கண்ட தீக்ஷிதர் ஆனந்தத்தால் நிரம்பினார்.  இருவரும் சற்றும் எதிர்பாராதவிதமாக சந்தித்தனர். 

சாந்தோர்க்கரும் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்குச் சென்று கொண்டிருந்தார். விரும்பிக் கேட்காதததும் எதிர்பாராததுமான இந்த யோகத்தால் மூவரும் வியப்பிலாழ்ந்தனர். 

பின்னர், மூவரும் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு உரையாடியவாறே கிளம்பினர். வழியில் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தனர். இவ்வாறாக, மூவரும் புனித ஷிர்டிக்கு வந்து சேர்ந்தனர். 

பின்னர், சாயியை தரிசனம் செய்தபோது தீக்ஷிதரின் மனம் உருகியது; கண்கள் குளமாயின; சுயானந்த வெள்ளம் பெருகியது. 

சாயி ஸ்பஷ்டமாக (தெளிவாகச்) சொன்னார், "நானும் உங்களைப் பார்க்க காத்துக்கொண்டிருந்தேன். உங்களை சந்திக்க சாம்யாவை  (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) நேராக அஹமத் நகருக்கு அனுப்பினேன்." இதைக் கேட்ட,-

தீக்ஷிதரின் உடல் மயிர்கூச்செறிந்தது; கண்ணீர்ப் பெருக்கால் தொண்டை அடைத்தது; மனத்தில் ஆனந்த அலைகள் பொங்கின; எல்லா அங்கங்களும் வியர்த்துகொட்டின; 

தேகம் சூக்குமமாக நடுங்கியது. மனம் சுயானந்தத்தில் மூழ்கியது. ஆனந்தத்தின் கனத்தைத் தாங்கமுடியாமல் கண்கள் பாதி மூடிக்கொண்டன:

"இன்று நான் பார்வை பெற்ற பயனை அடைந்தேன்" என்று சொல்லிக்கொண்டே தீக்ஷிதர் பாபாவின் பாதங்களை பற்றினார். அவருடைய மனம், பெரும்பாக்கியம் பெற்றதை உணர்ந்தது.  அவர் அடைந்த ஆனந்தத்திற்கு சிருஷ்டியில் சமானம் ஏதும் இல்லை. 

பல ஆண்டுகள் கடந்தன. சாயி பாதங்களின் மீது தவம் வளர்ந்தது. சாயியின் பூரணமான கிருபையை சம்பாதித்தார். உடலை சேவைக்கு அர்ப்பணம் செய்தார். 

சேவையை சாங்கோபாங்கமாகச் (முழுமையாகச்) செய்வதற்காக ஷிர்டியில் ஓர் ஆசிரமும் கட்டினார்.  பல ஆண்டுகள் ஷிர்டியில் வாழ்ந்து சாயியின் மஹிமையைப் பரப்பினார். 

சாராம்சம் என்னவென்றால், சாயியை தரிசனம் செய்ய ஆசைப்படுபவரின் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  சாயி, பக்தர் இளைப்பாறும் பூஞ்சோலை; பக்தர்களுக்குப் பரம சுகத்தை அளிப்பவர். 

சந்திரனை நாடும் சகோரப் பறவைகள் அபரிமிதம் (ஏராளம், ஏராளம்).  ஆனால், நட்சத்திர நாதனாகிய சந்திரன், ஒருவனே.  அதுபோலவே, ஓர் அன்னைக்குப் பல மகன்கள் இருக்கலாம்.  ஆயினும், அவர்கள் அனைவர்க்கும் அன்னை ஒருத்தியே. 

சூரியனுக்கு அளவற்ற தாமரைகள்; ஆயினும் எல்லாத் தாமரைகளுக்கும் இருப்பது ஒரு சூரியனே. சாயிபக்தர்களுக்குக் கணக்கே இல்லை; ஆயினும், அவர் ஒருவரே அனைவர்க்கும் பிதாவும் பரமகுருவும். 

 


 

Thursday, 13 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

யாரை தரிசனம் செய்யத் துடித்துக்கொண்டிருந்தாரோ, அவருடைய உருவப்படத்தை வழியிலேயே காண நேர்ந்த பாக்கியம் அவரைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 

மேலும் சொல்லப் போனால், அப் படம் ஷிர்டியிலிருந்து காகா சாஹேப் மிரீகரின் இல்லத்திற்கு வர நேர்ந்ததும், அந்த வேளையில் தீக்ஷிதர் அங்கு வந்து சேர்ந்ததும், ஒரு விசித்திரமான யோகம் (நற்பேறு) அன்றோ?

தீக்ஷிதரின் மனநாட்டம் எப்படி இருந்ததோ, அதை அப்படியே சமர்த்த சாயி திருப்தி செய்தார். ஏதோவொரு சாக்குபோக்கில், அவரே மிரீகர் என்னும் பக்தரின் இல்லத்தில் எழுந்தருளினாரோ!

லோனாவாலாவில் சாந்தோர்கரைச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் பாபாவின் காந்த சக்தி ஈர்ப்பின் ஆரம்பம்;  அதுவே பின்னர் நடந்த பேட்டிக்கு விதையிட்டது எனலாம். 

இல்லையென்றால், வேறு எதற்காக அப் படம் ஷிர்டியிலிருந்து அந் நாள்களில் அங்கு வர வேண்டும்? ஏன் அவ்வளவு நாள்களாக மிரீகரின் இல்லத்தில் மூடிவைக்கப்பட்டிருந்தது?

எது எப்படியோ, ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்தவாறு, புகைப்படத்தை உடன் எடுத்துக்கொண்டு மாதவராவும் தீக்ஷிதரும் ஆனந்தமான மனத்துடன் ஷிர்டிக்குக் கிளம்பினார். 

அன்று இரவே, உணவுண்டபின் இருவரும் ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.  இரண்டாவது வகுப்புப் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு தங்களுடன் எடுத்துச் சென்றனர். 

பத்து மணி அடித்தபோது ரயில் வரும் சத்தம் கேட்டது.  இரண்டாவது வகுப்புப் பேட்டி முழுதும் நிரம்பிக் காணப்பட்டது!

இந்தப் பிரச்சினையைக் கண்ட இருவரும் கவலையுற்றனர்.  ரயில் கிளம்புவதற்குச் சிறிது நேரமே இருந்தது. வேறு என்ன ஏற்பாடு செய்ய முடியும்?

ஆகவே, கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்த இருவரும், கிளம்பிய இடங்களுக்கே திரும்பிச் சென்றுவிடுவதென்றும், ஷிர்டிக்கு மறுநாள் போய்க்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். 

இதனிடையே, எதிர்பாராத விதமாக, ரயிலின் காவலர் (Guard ) தமக்குத் தெரிந்தவர் என்பதை தீக்ஷிதர் கவனித்தார்.  காவலர் அவர்கள் இருவரையும் முதல் வகுப்பில் சௌகரியமாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்தார். 

வசதியாக முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தபின், பாபாவைப்பற்றிய சம்பாஷனை அவர்களுடைய மனத்தில் தோன்றியவாறு பெருகி ஓடியது.  மாதவராவ் அமுதினும் இனிய காதைகளைச் சொன்னார்.  காதைகளைக் கேட்டு தீக்ஷிதர் ஆனந்தமடைந்தார். 

இவ்வாறாக, பிரயாணத்தின்போது பல சுகங்களை அனுபவித்ததால், காலம் மிக வேகமாக ஓடியது.  ரயில் கோபர்காங்வ் வந்து சேர்ந்தது. இருவரும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இறங்கினர். 

 


 

Thursday, 6 August 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"தீக்ஷிதர் எங்களின் கிடைத்தற்கரிய நண்பர்.  நீங்களும் அவருக்கு அறிமுகம் செய்யப்படுவீர்கள்.  அவர் ஷிர்டிக்குச் செல்வதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். உங்களுடைய வரவு அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும்."

இவ்வாறு அவருக்குச் சொன்னபின் தீக்ஷிதர்க்கும் செய்தியைத் தெரிவித்தனர்.  அதைக் கேட்ட தீக்ஷிதரின் மனஉளைச்சல் அகன்றது; மனம், மிகுந்த சந்தோஷத்தை அடைந்தது. 

மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதவராவ் தம் மாமியார் சுகமடைந்துவிட்டிருந்ததைக் கண்டார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.  'மிரீகர் அழைக்கிறார்' என்று செய்தி வந்தது. 

மிரீகரின் அழைப்புக்கு மரியாதையை கொடுத்து, வெயில் சிறிது குறைந்தபிறகு மாதவராவ் தீக்ஷிதரை சந்திக்கச் சென்றார். 

அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.  பாலா சாஹேப் ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் இரவு 10 மணி ரயிலில் ஷிர்டிக்குச் செல்வதென்று தெளிவாகத் தீர்மானம் செய்தனர். 

இவ்வாறு முடிவு செய்த பிறகு நடந்த அதிசயத்தைப் பாருங்கள்.  பாபாவின் படத்தை மூடிக்கொண்டிருந்த திரைச்சீலையை பாலா சாஹேப் விலக்கினார். 

அது பாபாவின் புகைப்படம்.  மேகாவுக்கு சொந்தமானது.  மேகா, பாபாவை முக்கண்ணனாகிய சங்கரனாகவே பாவித்து பரம பிரேமையுடன் வழிபட்டுவந்த ஈடிணையற்ற பக்தர். 

அப் படத்தின் கண்ணாடி உடைந்துபோன காரணத்தால், சரிசெய்வதற்காக ஷிர்டியிலிருந்து அஹமத் நகருக்கு பாலா சாஹிபால் முன்னமேயே கொண்டுவரப்பட்டிருந்தது. 

அதே புகைப்படைந்தான், பழுது பார்க்கப்பட்ட பின், தீக்ஷிதரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாற்போல் தோன்றியது.  மிரீகரின் வீட்டுக் கூடத்தில் ஒரு துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

குதிரைக் கண்காட்சி முடிவடைந்தபின் பாலாசாஹேப் ஷிர்டிக்குத் திரும்பச் சில நாள்கள் இருந்தன. ஆகவே, தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு அப் படம் மாதவராவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. 

படுதாவை விலக்கியபின், படம் திறந்த நிலையிலேயே விடப்பட்டது.  மிரீகர் மாதவராவிடம் படத்தை ஒப்படைத்துக்கொண்டே சொன்னார், "ஷீர்டி பரியந்தம் பாபாவின் துணையுடன் சுகமாகச் செல்வீராக!"

சர்வாங்க மனோகரமான (அங்கமெல்லாம் அழகு கொஞ்சிய) அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனே காகா சாஹேப் ஆனந்தம்  நிரம்பியவரானார்.  நமஸ்காரம் செய்தபின் படத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். 

நடக்கவொண்ணாத அந்த விசித்திரமான நிகழ்வு நடந்ததை நினைத்தும், கற்பனைக்கெட்டாத அழகு படைத்த சமர்த்த சாயியின் புனிதமான புகைப்படத்தைப் பார்த்தும், தீக்ஷிதர் சந்தோஷத்தால் மெய்மறந்தார். 





Thursday, 30 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


'யார் என்னுடன் வந்து பாபாவுக்கு அருகில் அழைத்துச்சென்று அவருடைய பாதங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்?' என்று சிந்தனையில் தீக்ஷிதர் மனவுளைச்சலுற்றார்.

தேர்தல் சம்பந்தமான வேலை முடிந்தவுடன், தீக்ஷிதர் ஷீர்டி பயணம் பற்றி விசாரப்பட்டுக் காகா சாஹேப் மிரீகரிடம் அதைப்பற்றி மரியாதையாக விசாரித்தார். 

பாலா சாஹேப் மிரீகர், காகா சாஹேப் மிரீகரின் மகன்.  'ஷிர்டிக்கு தீக்ஷிதருடன் யாரை அனுப்புவது?' என்று இருவரும் பரஸ்பரம் ஆலோசனை செய்தனர். 

அவர்கள் இருவரில் ஒருவர் செல்ல முடிந்தால், வேறு துணை ஏதும் தேவைப்படாது. ஆகவே, 'இருவரில் யார் செல்வது?' என்பதை நிச்சயிக்கத் தீவிரமாக யோசித்தனர். 

மனிதன் போடும் திட்டங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.  இறைவனின் திட்டங்களோ முற்றிலும் வேறு விதமானவை. தீக்ஷிதரின் ஷீரடிப் பயணத்துக்கு உதவுவதற்காக கற்பனை செய்யமுடியாத நிகழ்வு ஒன்று உருவாகியது. 

இங்கு இவ்விதமான மனஉளைச்சல்; அங்கு (ஷிர்டியில்) வேறுவிதமான அசைவு, பக்தனின் பேரார்வத்தைக் கண்ட சமர்த்த சாயி மனம் கனிந்தார்.

இவ்வாறு தீக்ஷிதர் சிந்தனை செய்தவாறு மனவுளைச்சலுடன் அமர்ந்திருந்தபோது எல்லா மக்களும் ஆச்சரியப்படும் வகையில் மாதவராவ் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தார்!

அஹமத்நகரத்திலிருந்து மாதவராவின் மாமனார், "உம் மாமியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக  இருக்கிறது. உடனே குடும்பத்துடன் கிளம்பி வரவும்" என்று தந்தி மூலம் செய்தி அனுப்பியிருந்தார். 

தந்தி கிடைத்தவுடன் பயணத்திற்கு ஆயத்தமாகி பாபாவின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு, மாதவராவும் மனைவியும், இருவருமாகச் சிதலீ ரயில் நிலையத்திற்குச் சென்றனர். 

மூன்று மணி ரயில் வண்டியைப் பிடித்து இருவரும் அஹமத் நகருக்கு வந்து சேர்ந்தனர்.  குதிரைவண்டி வீட்டுவாசலில் வந்து நின்றது.  இருவரும் கீழே இறங்கினர். 

இதற்கிடையே, நானாசாஹேப் பான்ஸ்லேவும், அப்பா சாஹேப் கத்ரேவும் குதிரைக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக அதேசமயத்தில் அவ்வழியாகச் செல்லும்படி நேரிட்டது. 

மாதவராவ் வண்டியிலிருந்து இறங்குவதை எதிர்பாராதவிதமாக பார்த்த அவ்விருவரும் வியப்படைந்தனர்.  மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியை அவர்களால் அடக்கமுடியவில்லை. 

"ஷிர்டியின் பட்வாவான  மாதவராவ் இங்கு வந்திருப்பது எவ்வளவு தெய்வீகமான செயல்! தீக்ஷிதரை ஷிர்டிக்கு அழைத்துச்செல்ல இவரைவிடச் சிறந்தவர் எவரும் உளரோ?" என்று அவர்கள் இருவரும் கூறினர்.

பிறகு அவர்கள் மாதவராவைக் கூவியழைத்துச் சொன்னார்கள், "காகா தீக்ஷிதர் வந்திருக்கிறார்.  மிரீகரின் வீட்டில் இருக்கிறார். பாபா செய்திருக்கும் அற்புதத்தை நீங்கள் போய்ப் பாருங்கள். -