valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 21 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பஞ்சீகரணம் (ஐம்பூதக் கூறுகளின் சேர்க்கை) என்று எது அழைக்கப்படுகிறதோ அது மாயையின் ரூபதரிசனம்.  அதைப் புரிந்துகொள்ள உதவுவன அத்யாரோபம்! அபவாதம் என்னும் இரண்டு தத்துவங்களே. 

பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று கலக்காத நிலையில், பஞ்சதன்மாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்திரியங்களையும் மனத்தையும் புத்தியையும் ஆத்மாவின் சூக்கும சரீரத்தையும் பிராணனுடன் ஒன்றுசேர்ப்பதே அவற்றின் செயல். 

பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்ந்த நிலையைப் பாருங்கள்.  அந் நிலையில்தான் விராட்புருஷன் உதயமானான். பரமாத்மாவின் ஸ்தூல தேகத்தையே (பருவுடலையே) ஞானியர் விராட்புருஷன் என்று அழைக்கின்றனர். 

பருவுடல், சூக்குமவுடல் ஆகிய மனத்தோற்றங்களுக்கு காரணம், சுயசொரூபம் பற்றிய அஞ்ஞானமே.  பருவுடல், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளிலிருந்த தோன்றியது என்பதையும் உடலுக்குக் காரணம் ஆத்மாவே என்பதையும் அறிவீர்களாக. 

கியாதிபெற்ற (புகழ்பெற்ற)  காரண சரீரம் (ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்) சைதன்னியத்தின் பிரதிபிம்பமே.  அது கேவலம் அஞ்ஞானத்தால் விளைந்தது.  அதன் உண்மையான பெயர், அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரமான பொருளின் தோன்றாநிலை என்பதே. 

இதற்கு காரணம் ஆத்மா பற்றிய அஞ்ஞானமே.  ஆத்மா, அவயங்களுடன் சேர்ந்ததும் இல்லை; சேராததும் இல்லை; இரண்டுமே இல்லை. பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றே எனும் ஞானத்தால்தான் இந்த தேகத்தை அழிக்க முடியும். 

தன்னில் மூழ்கியிருப்பதே மோட்சம்.  இதைத் தவிர மோட்சம் ஏதும் இல்லை.  தன்னை அறிவதே மோட்சம்!

பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயெனும் ஞானத்தால்தான் அஞ்ஞானத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  ஆகவே, அஞ்ஞானம் எது என்பதைப் புரிந்துகொள்ள அதுபற்றிய விவரணம் அவசியமாகிறது. 

அஞ்ஞானத்தால் சபல் விளைந்தது.  சபல் (பல வர்ணங்களால் சாயம் பூசப்பட்ட நிலை என்று பொருள்) பிரம்மத்திற்கு மாறுபாட்டைக் கொணர்ந்தது.  பிரம்மம், 'சத்' என்று பெயரிடப்பட்டது.  இவ்வாறாக அது பேசுவதற்கு உரிய பொருளாகியது! 

 


 

Thursday, 14 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஜீவன் ஆசையாலும் கோவத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது.  இவ்வுணர்ச்சிகள் ஞானத்துடன் கூடவே இருந்து, அதை மறைத்தவாறு, பிரம்ம சொரூபத்தின்மேல் வட்டமிடுகின்றன. 

இவ்வுணர்ச்சிகள் நம்மைத் தண்ணீரில்லாமலேயே மூழ்கடிக்கின்றன;  அக்கினி இல்லாமலேயே எரித்துவிடுகின்றன;  ஆயுதம் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றன;  கயிறு இல்லாமலேயே கட்டிவிடுகின்றன. 

இவற்றுக்கு எதிராக எந்த ஞானியாலும் தாக்குப்பிடிக்க இயலாது.  இவை எந்த ஞானியையும் பந்தயத்தில் வென்றுவிடும்.  ஒரு பிராணிக்குத் தெரியாமலேயே அதை விழுங்கிவிடும்.  இவை ஊழிக்காலத்தையும் உண்டாக்கும் சாமர்த்தியம் படைத்தவை. 

சந்தனமரத்தின் வேரில் காலசர்ப்பம் (பாம்புருவில் மரணம்) சுருட்டிக்கொண்டு படுத்திருப்பதைப்போல, ஞானமெனும் கர்ப்பத்தை ஆசையும் கோவமும் பனிக்குடமாய்ச் சூழ்ந்திருக்கின்றன. 

புலனுறுப்புகளும் புத்தியும் மனமும் ஆசையின் இல்லங்கள்.  மாயை, அவற்றின் மூலமாகச் செயலாற்றி ஞானத்தை மறைத்து ஜீவனை மோகவசப்படுத்துகிறது. 

உமக்குச் சந்தனம் வேண்டுமென்றால், பாம்பை அழிக்கவும்.  ஆசை, கோவம் ஆகிய உணர்ச்சிகள் வேய்ந்திருக்கும் முகமூடியை எடுத்தெறிந்து ஞானபொக்கிஷத்தைப் பெறவும். 

பாம்பைக் கொல்லாமல் யாராலாவது சந்தனத்தை அடைய முடியுமா?  கருநாகத்தை சம்ஹாரம் செய்யாமல் (அழிக்காமல்) யாரால் பூமிக்குள் இருக்கும் புதையலை எடுத்து லாபமடைய முடியும்?

அதுபோலவே, ஆத்ம ஞானம் பெறவும் பரம்பொருளை அடையவும் அவற்றை மறைத்திருக்கும் மாயையாகிய திரையை விலக்குவதுதான், அதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரே சாதனை. 

ஆதலால், முதலாவதாகப் புலன்களை வெல்லவேண்டும்.  அந்த வெற்றி, ஆசையையும் கோபத்தையும் நிர்த்துளியாக்கும் (முற்றும் அழிக்கும்). ஆசை , கோவம் இவற்றின் ஆதீனத்தில் ஜீவன் இருப்பதால், அஞ்ஞானம் ஞானத்தை முழுவதுமாக மூடியிருக்கிறது. 

தேகத்தைக் காட்டிலும் புலன்கள் சூக்குமம்;  புலன்களைக் காட்டிலும் மனம் சூக்குமம்;  மனத்தைக் காட்டிலும் புத்தி சூக்குமம்;  புத்தியைக் காட்டிலும் பரம்பொருள் சூக்குமம். 

உலகியல் தருமநீதிகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பது, உயர்ந்ததிலும் உயர்ந்ததான, என்றும் நிலைத்திருக்கும் பரம சத்தியம்.  அதுவே, மிகச் சிறந்த நன்மையை அளிக்கும் பரமாத்மா. அதுவே,  அமிருதம் போன்ற நம் உண்மையான உருவம். 

அந்தத் தத்துவமே தூயதும் ஞானமடைந்ததும் என்றும் அழியாததும் தளைகளிலிருந்து விடுபட்டதுமாகிய பேதமற்று நிற்கும் நிலை.  அந்தத் தத்துவமே பரமானந்தத்தில் உறைகிறது. அதுவே நம்முள் இருக்கும் சைதன்னியம். 

 


 

Thursday, 7 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கு, யாகம் செய்பவர் எஜமானர்.  அவர் அஞ்ஞானத்தைத் தீயில் நெய்யாகப் பொழிகிறார்.  ஆத்மானந்தத்தில் அவர் மூழ்குவதே அவபிரத ஸ்நானம் (வேள்வியை வெற்றிகரமாக முடித்த பின் செய்யும் நீராடுகை)

தாத்பர்யம் என்னவென்றால், அஞ்ஞானம் என்னும் நெய் இல்லாது, ஞானமெனும் அக்கினியைத் தூண்ட முடியாது.  இத் தீயால் ஜீவேசுவர பேதத்தை அழித்தால்தான், அபேத ஞானம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே எனும் ஞானம்) வெளிப்படும்.

முகம் பார்க்கும் கண்ணாடி மாசுபடுவதால் மங்குவது போலவும், புகை மூடுவதால் அக்கினியின் பிரகாசம் குறைவது போலவும், காமம் குரோதம் ஆகிய தீவிர உணர்வுகளால் தோற்கடிக்கப்படும் ஞானம், அஞ்ஞானத்தால் மூடப்படுகிறது. 

ராகு சந்திரனைப் பிடிப்பது போலவும் (கிரஹணம்), நீரைப் பாசி மூடுவது போலவும், கயஞ்சோதியான ஞானத்தை மாயை மூடிவிடுகிறது. 

மஹா பெரிய ஞானிகளும் மனம் தடுமாறி அதோகதி (தாழ்நிலை) அடைகிறார்கள்.  விடுபடும் உபாயம் தெரிந்திருந்தும், இஷ்டம்போல் நடந்தது கொள்கின்றனர். 

அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். சத்சங்கத்தை விடுத்து, விலக்க வேண்டியவர்களின் கூட்டுறவை நாடுகிறார்கள்.  துர்ச்சங்கம் அவர்களைப் பலமாகப் பிடித்துக்கொள்கிறது.  துர்ச்சங்கத்தின் (கெட்ட சேர்க்கையின்)  பலவந்தத்தால் இஷ்டப்படி நடந்து கொள்கின்றனர். 

வானப்ரஸ்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இல்லறத்தில் நுழைந்து, எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கின்றனர்.  எதை வெறுத்து ஒதுங்கினார்களோ அதையே (இல்லறத்தையே) திரும்பவும் ஆவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். 

பாவம் செய்யக்கூடாது என்று முயற்சி செய்பவர்கள் விதிவசத்தால் பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள்.  இந்த நிலையைப் பற்றி என் சொல்வது?  இவர்களையும் ஞானியரில் ஒருவகை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமோ!

பாவத்தின் நிழலையும் தொடாது வாழவேண்டும் என்று விரும்பும் மஹா ஞானியுங்கூட, விளக்கால் கவரப்படும் வீட்டில் பூச்சியைப் போன்று, செய்யத் தகுந்த காரியம் எது, செய்யத் தகாத காரியம் எது, என்று சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார். 

பாவம் செய்வது அஞ்ஞானம்.  இதை அவர் நன்கு அறிவார்.  ஆயினும், ஆசைகளின் உந்துதலால் அவர் அதைபற்றிக் கவலைப்படுவதில்லை. 

இவ்வகையான செயல்கள் அனைத்தும் ஆசையின் சேட்டைகள். ஆசையே எல்லா அனர்த்தங்களுக்கும் காரணம்.  நிறைவேறாத ஆசை கோவரூபமும் ஏற்கும். 

ஆசையின் ஓட்டம் தடுக்கப்படும்போது ஆசையே கோவமாக மாறும்.  மோட்ச மார்க்கத்தின் ஒவ்வொரு படியிலும் தடுக்கிவிடுவது இதுவே.  இந்த இயல்பே ஞானத்துக்குத் தடை. 


 

Thursday, 30 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஒரு பானையைக் கல்லால் அடித்தால், அதனுடைய உருவம் அழிந்து போகிறது; உடைந்துபோன துண்டுகளே மீதி.  பானையின் உருவம் மறைந்துவிட்ட போதிலும், அது இருந்ததை ஓட்டாஞ்சில்லுகள் காட்டுகின்றன. 

பானையின் உபயோகம் நாசமாகிவிட்டிருக்கலாம்.  ஆனால், பானையின் இருப்புக்கு முடிவென்பதே இல்லை.  பானை இருந்ததற்கும்  அதற்கு ஓர் உபயோகம் இருந்தது என்னும் உண்மைக்கும் ஓட்டாஞ்சில்லுகளே சாட்சி. 

எந்தச் செயலின் முடிவும் சூனியமாகாது!  முடிவு என்பதே, இருந்தது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது அன்றோ?  மனச்சாட்சியை மதிக்கும் நற்குணம், நற்புத்தியைக் குறிப்பால் உணர்த்துவதே இதற்குப் பிரமாணம். 

எல்லா க்ஷேத்திரங்களும் (புனிதத் தலங்களும்) தீர்த்தங்களும் விரதங்களும் புனிதமானவையே.  ஆனால், புனிதத்தில் புனிதமானது ஞானம்.  பிரம்ம ஞானம் இல்லாது செய்யப்படும் பஜனையும் பூஜையும் அர்த்தமற்ற செயல்கள். 

சித்தம் அஞ்ஞானத்தால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.  இறைவனிடம் பக்தி செலுத்தாமல் சித்தத்தைத் தூய்மைப்படுத்த முடியாது.  பக்தியின்றி ஞானம் முளைப்பதில்லை!

ஆகவே, முதலில் அஞ்ஞானம் எதுவென்று அடையாளம் கண்டுபிடி.  அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டுமெனில், அதன் இயல்பையும் விவரங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்.  பக்தியே இதை அறிய உதவும் சாதனம். 

கால்கள் முதலாக வெளிவந்து பிறந்த குழந்தையின் கண்களுக்கு மை தடவினால், பூமியினடியில் இருக்கும் புதையல் அதன் கண்களுக்குப் புலப்படும்.  அதுபோலவே, பக்தியிடம் சரணடைந்து கைதூக்கிவிடும்படி வேண்டிக்கொண்டால், அஞ்ஞானம் அகலும்;  ஞானம் உதயமாகும். 

ஞானம் பெறுவதே தன்னையறிதல். அதற்கு மூலாதாரம் அஞ்ஞான நிவிர்த்தி.  ஆனால், இறைவனிடம் பக்தி ஏற்படாமல் மாயையின்  சக்தியை வெல்லமுடியாது. 

ஞானமும் அஞ்ஞானமும் கலந்து இருக்கின்றன.  கற்களைப் பொறுக்கி எடுத்த பின்னரே அரிசியைக் கொதிநீரில் இடுவதைப்போல, அஞ்ஞானத்தை  ஜாக்கிரதையாகப் பிரித்தெடுக்க வேண்டும். 

எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பதோடல்லாமல், ஞானக்யம் போன்ற உபாசனைகளைச் செய்பவர், பிரபஞ்சத்தையே முகமாக உடைய ஸ்ரீகிருஷ்ணனைக் காண்கிறார்.  ஞானத்தைப் பெற அவர் அஞ்ஞானத்தை எரித்துவிடுகிறார். 

இப்பொழுது ஞானயாகத்தின் சொரூபத்தைக் கவனியுங்கள்.  "அஹம் ப்ரம்ம அஸ்மி (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன்)" என்னும் வேதவசனமே இதன் வேள்வித்தூண்.  பஞ்சபூதங்களே (நிலம், நீர், தீ, காற்று, வானம்)  யாகமண்டபம்.  ஜீவேசுவர பேதமே (இறைவனுக்கும் அவனுடைய படைப்பான ஜீவராசிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே) வேள்விக்குரிய விலங்கு. 

ஐம்புலன்களும் பஞ்சபிராணன்களும் இந்த யாகத்தில் இடவேண்டிய பண்டங்கள்.  மனமும் புத்தியும் யாககுண்டம்.  ஞானமெனும் அக்கினியால் யாககுண்டத்தில் வேள்வித்தீ மூட்டப்படுகிறது.







Thursday, 23 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆதியந்தமில்லாத மாயையால் சூழப்பட்டிருக்கின்றன.  விருப்பு, வெறுப்பு போன்ற மனவிகாரங்களின்மீது மோகம் கொண்டு அனைத்து உயிரினங்களும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கின்றன. 

ஜீவன் அஞ்ஞானத்தால் கட்டப்பட்டிருக்கிறது.  அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கர்மபந்தகளையும் துண்டித்துவிட்டால், ஜீவனின் சுத்தமான உருவம் வெளிப்படும். 

பசுவின் மடி நிறைந்து முலைக்காம்புகளில் பால் ஒழுகிக்கொண்டிருக்கிறது. இறுக்கமாக மடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகளுக்கோ, அசுத்தமான ரத்தத்தின்மீது தான் பேராசை. பாலின்மேல் அவற்றுக்கென்ன இச்சை?

தவளையையும் வண்டையும் கவனியுங்கள்.  அழகான தாமரை மலர்களே அவை  வாழும் சூழல். வண்டு, வாசனை மிகுந்த மகரந்தத்தைச் சுவைக்கிறது.  தவளையோ சேற்றில் இருப்பதைத்தான் புசிக்கிறது. 

தனக்கு எதிரிலேயே ஞானப் பொக்கிஷம் இருப்பதை மூடன் காண்கிறான். ஆயினும், அஞ்ஞானத்தின்மீதே அவன் ஆவல் காட்டுகிறான்.  மூடனுக்கு அஞ்ஞானமே ஞானமாகத் தெரிகிறது!

அஞ்ஞானத்தை நிர்மூலமாக்கிவிட்டால், பிரம்ம ஞானம் தானாகவே தோன்றுகிறது.  ஆதலின், அஞ்ஞானம் எது என்று ஆரம்பித்திலேயே தீர்மானம் செய்வது அவசியம் என்று அறிவீர்களாக. 

பிரம்ம ஞானத்திற்கு சமமாகப் பவித்திரமானது மூவுலகங்கிலும் எதுவும் இல்லை.  அதனுள் உயிரையும் உபதேசம் மாபெரும் முக்கியவத்துவம் வாய்ந்தது.  அது இன்று ஜீவனுக்குப் பயனில்லை. 

அறிவு சம்பந்தமான விஷயமாக பிரம்மம் இருந்திருந்தால், புலன்களில் ஏதாவது ஒன்று அதைக் காட்டியிருக்கும்;  அல்லது நிரூபித்திருக்கும். 

'பிரம்ம தத்துவம் புலன்களுக்கு அப்பாற்பட்டதெனினும், அரிவாள் கிரஹிக்கக்கூடியது' என்று ஸ்ம்ருதிகள் (வாழ்நெறி நூல்கள்)  அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஆயினும், சுருதிக்கு (வேதத்திற்கு) இக் கருத்து சம்மதம் இல்லை. 

புத்திசக்தி போன்றவை இல்லாது போய்விட்டால், எதையும் கிரஹித்துக் கொள்ளவேண்டிய தேவையே இல்லாமல் போகிறது; முழுமுதற்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள இடமில்லாமல் போகிறது. 

'எவையெவையெல்லாம் புலன்களால் உணரக்கூடியனவோ, அவையவையெல்லாம் இருக்கின்றன; மற்றவை இல்லை' என்பது எல்லாரும் அறிந்த பிரசித்தியான ஒரு கோட்பாடு. இக் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரம்மம் என்று ஒன்று எப்பொழுதுமே இருந்திருக்கமுடியாது என்றாகிறது. 

விளக்கம் இவ்வாறு அமைகிறது.  ஆனால், இது அனர்த்தம்! புத்தி, என்றும் அழிவின்றி நிரந்தரமாக இருக்கிறது என்பதே ஆழ்ந்ததும் பரந்ததுமான ஆராய்ச்சி சிந்தனையால் விளைந்த பாரம்பரியமான விளக்கம். 

பிரளய காலத்தில் புத்தி மறைந்து போகலாம். ஆனாலும், தான் இருந்த அனுபவத்தால் அது தொடர்ந்து வாழ்கிறது. ஆத்மாவே, பிரபஞ்சத்தின் மூலம். இதில் சந்தேகமே இல்லை. 

 


 

Thursday, 16 April 2026

 ஷீர்டி சாய் சத்சரிதம் 


நித்தியம் எது, அநித்தியம் எது? இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்;  செவிகளால் கேட்க வேண்டும்; இடைவிடாது தியானம் செய்ய வேண்டும்.  சமம், தமம் ஆகிய ஆறு சாதனைகளில் வெற்றிபெற வேண்டும்.  அப்பொழுதுதான் அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைய முடியும்.

'இவ்வுலகம் என்னிடமிருந்து வேறுபட்டது - ஓர் அளவுக்கு உட்பட்டவன் நான் - இனத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தனியன் நான் - இந்த உடலே நான்';  ஈதனைத்தும் கலப்படமற்ற அஞ்ஞானம். 

ஞானத்தைப்பற்றி எடுத்துக்கூறி விவரித்திருக்கும் பரம கருணாமூர்த்திகளான வேதாந்த சாஸ்திர பாஷ்யகாரர்கள், அனுபந்த சதுஷ்டத்தின் பிரகாரம் விஸ்தாரமாக விவரித்திருக்கின்றனர். 

அதிகாரி, விஷயம், சம்பந்தம் ஆகியவை முதல் மூன்று அனுபந்தங்கள். நான்காவது அனுபந்தம், பிரயோஜனம்.  பிரயோஜனம் குறித்த விரிவுரையில் 'அஞ்ஞான நிவிர்த்தியே பிரயோஜனம்' என்று அவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

வேதாந்தத்தின் முக்கிய விஷயம் 'ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே' என்பதுதான். இந்த ஐக்கிய தத்துவத்தின் உள்ளே எப்படியோ புகுந்துவிட்ட ஐயமே அஞ்ஞானம்.  அதிலிருந்து நிவிர்த்தி பெறுவதே பிரயோஜனம். 

மூலமான இந்த அஞ்ஞானத்திலிருந்து நிவிர்த்தி அடைவதே தன்னை உணர்வதால் பெறும் ஆனந்தம்.  ஆதலால், ஏதாவதொரு யுக்தியை உபயோகித்து அஞ்ஞானத்தை நாசம் செய்வது அவசியமாகிறது. 

பேத சிந்தனையைக் கைவிடாத மனிதரை ஞானியென்று கருதமுடியாது.  தேகாபிமானம் உள்ளவரின் ஞானம் பூரணமான அஞ்ஞானமே. 

தம்மை ஞானமுள்ளவர் என்று பகட்டிக்கொண்டு அயோக்கியச் செயல்களில் ஈடுபடுவர், சபிக்கப்பட்ட உணர்வு நிலையில் வாழ்கிறார்.  அவர் கும்பகர்ணனைப் போல் நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். 

வேதங்களின்படி வாழ்க்கை நடத்த இயலாமலும், வருணாசிரம தர்மத்தை அனுஷ்டிக்க முடியாமலும் வாழ்பவருக்கு, சித்தத்தை தூய்மைப்படுத்த அஞ்ஞானத்தை அகற்றுவதுதான் ஒரேவழி. 

சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களாலும், ஒலி முதலாகிய இன்ப நுகர்ச்சிகளாலும், பிறவி உறுப்பு மற்றும் வாய் போன்ற துவாரங்களின் மூலமாகவும், படைக்கும் தெய்வமாகிய பிரம்மதேவர் உட்பட அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். 


 

Thursday, 9 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

'ஞானத்தால்தான் மோட்சம் அடையப்படுகிறது' என்னும் வேத சித்தாந்தம் அப்பட்டமான உண்மை.  ஆனால், பாவச்செயல்கள் நாசமாகாதவரையில் ஞானம் உதயமாகாது. 

தூய ஞானத்தில் மூழ்கியவரிடமிருந்து விருப்பங்கள் விலகிவிடும்.  மாயையின் பந்தங்கள் அவருக்கு கிடையா.  தீய குணங்களுக்கும் அவரிடம் இடமில்லை. 

பரம ஞானியான சுகதேவருக்கும் விகற்பத்தால் (சந்தேகத்தால்)  கேடு விளைந்தது. விகற்பத்தால் விளையும் அஞ்ஞானத்தை குருவைத் தவிர வேறு எவராலும் அகற்றமுடியாது. 

விகற்பம் (கோணல் சிந்தனை) ஞானத்துள் புகுந்தவுடன், ஞானியும் பற்றுடையவர் ஆகிறார்.  ஒரு குடம் பாலில் ஒருதுளி புளித்த கஞ்சி விழுந்துவிட்டாலும், பால் முழுவதும் திரிந்து போகின்றதன்றோ?

ஆதலின், முதலில் அஞ்ஞானத்தை அடையாளம் கண்டுகொள். அதிலிருந்து விடுபட்டால் மனம் தூய்மையடைகிறது.  அதன் பிறகே எல்லையற்ற ஞானம் தோன்றும்;  பேதமில்லாத சமாதி நிலை கிடைக்கும். 

எந்நேரமும் செல்வத்தின் மாட்சிமையைப்பற்றியே நினைத்துக்கொண்டு, உலகியல் சுகங்களில் திருப்தி அடையாமல், மனைவியையும் மக்களையும்பற்றி இடைவிடாது சிந்தனை செய்பவரின் ஞானம் ஞானமன்று; அது அஞ்ஞானம். 

செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மோகம் கொண்டவர் ஞானியாக இருப்பினும் , தமக்கு எது நல்லது என்பதை அறியாதவர்.  ஆகவே, பக்தி இல்லாத அவருடைய ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. 

ஜீவசமுதாயமே அஞ்ஞானத்தால் மூழ்கிக் கிடக்கிறது. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானியாகி,  ஞானத்தையும் கடந்த நிலையை அடைவதே முழுமுதற்பொருளுடன் ஒன்றிய நிலை என்பது உறுதி. 

அஞ்ஞானம் வெளியே சென்றுவிட்டால், ஞானம் தோன்றும்.  மன்னிப்பதில் விரைவு காட்டுபவர் ஞானமுள்ளவர்.  ஆனால், பற்றுகளை விடாதவரையில் அவர் மாயைக்கு வசப்பட்டே வாழ்கிறார். 

மற்ற எல்லா மனிதர்களையும் மயக்கிய மாயை, ராமர் கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கும், சனகர் சனத்குமாரர் போன்ற முனிவர்களுக்கும், ஆணைக்கு அடிபணிந்த வேலையாளாக இருந்தது. 

அனைத்து உயிர்களிலும் இதயவாசியாக இறைவன் உறைகின்றான். ஆயினும், யாருமே இந் நிலையை அறிந்தாரில்லை! மாயையின் கற்பனைக்கப்பாற்பட்ட அந்தஸ்தும் அளவிடமுடியாத சக்தியும் அத்தகையன!

ஆதலால், 'நான்தான் செய்வோன்; நான்தான் செயலால் விளையும் இன்பங்களை அனுபவிப்பவன்'  என்னும் பொய்யான அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு இதயவாசியிடம் சரணடையாதவரையில், நாம் முக்தி அடையமுடியாது.