ஷீர்டி சாயி சத்சரிதம்
ஒரு மளிகைச் சாமானைக் கையில் எடுத்துப் பார்த்துப் பேரம் பேசிய பிறகே விலையை நிர்ணயம் செய்வார். ஏமாற்ற முயன்றவர்கள் கர்வபங்கமடைந்தனர்.
கூட்டல் கணக்குப் போடுவதுபோல் பாசாங்கு செய்வார். ஆனால், பணம் கைக்கு கை பட்டுவாடா செய்யும்போது கடைக்காரர் ஐந்து ரூபாய் கேட்ட இடத்தில் பத்து ரூபாய் கொடுப்பார்.
அவர் இவ்வேலைகளைத் தாமே செய்ய விரும்பினார். மற்றவர்கள் செய்வதை அவர் அனுமதிக்கவில்லை; மற்றவர்கள் தமக்காகச் செய்வார்கள் என்று எதிரிபார்க்கவும் இல்லை; யாரையும் அவமதிக்கவுமில்லை.
இந்த ஒரு கொள்கையில் அவர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருந்தார். ஆகவே, ஹண்டி வேலைக்கு பாபா யாருடைய உதவியையும் நாடவில்லை.
ஹண்டி வேலை மாத்திரமில்லை, துனிக்கருகில் உள்ள விறகுகிடங்கின் கிழக்குப்புறச் சுவரில் முக்கால் பங்கைத் தம்முடைய கைகளாலேயே கட்டினார்.
மஹாதூ காரையைக் கலந்து கொடுப்பார். பாபா செங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துக் கொல்லுருவை உபயோகித்து தம்முடைய கையாலேயே காரை பூசிச் சுவரை எழுப்பினார்.
ஓ, பாபா செய்யாத வேலைதான் என்ன? மசூதியின் தரையைத் தாமே சாணியால் மெழுகினார். யாரையும் எதிர்பார்க்காமல் கப்னியையும் லங்கோட்டையும் தாமே தைத்துக்கொண்டார்.
ஹண்டி கொதித்துப் பயங்கரமாக நீராவி வெளிவந்துகொண்டிருக்கும்போது கம்பனியின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு உணவை மேலுங்கீழுமாகத் தம் கையால் கிளறுவார்.
ஹண்டி தளதளவென்று கொதித்துக் கிளறுவதற்குத் தயாராகிவிட்டது என்று தெரிந்தபின் பாபா இந்த அற்புதமான லீலையைச் செய்வார்.
ஓ, ரத்தமும் சதையுமான கை எங்கே? கொதிக்கும் ஹண்டி எங்கே? ஆயினும், பீதியடைந்த முகத்தையோ கை வெந்துபோன அடையாளத்தையே சிறிதளவும் காணமுடையவில்லை!
பக்தர்களின் தலைமேல் இன்னல் விழுந்தவுடன் எடுத்தெறியும் கையை, கொதிக்கும் சோறு என்ன செய்யமுடியும்? அவருடைய மகத்துவம் அதற்குத் தெரியாதா என்ன?
ஊறவைத்த பருப்புகளை அவரே அம்மியின்மீது பரப்பிச் சுத்தம் செய்தபின் குழவியால் அரைப்பார். அரைத்த மாவைத் தம்முடைய கைகளாலேயே வடை உருவில் தட்டுவார்.
பிறகு அவற்றை லாவகமாக ஹண்டியில் நழுவவிடுவார் . அவை பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்கொள்ளாதவாறு புரட்டிவிடுவார். உணவு தயாரானவுடன் ஹண்டியைக் கீழே இறக்கி எல்லாருக்கும் பிரசாதம் அளிப்பார்.
'ஏன் எல்லாருக்கும் அளித்தார்? சாயி பாபா ஒரு முஸ்லீம். மற்றவர்களை எப்படி அவர் இம்மாதிரியாக அதர்ம வழியில் இறக்கலாம்?" என்று கதை கேட்பவர்கள் வினவலாம்.