valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஷீர்டி கிராமவாசியான ரகு பாடீல் என்பவர் ஒரு சமயம் நெவாஸா  கிராமத்திற்கு சென்று பாலாஜி பாடீல் நெவாஸ்கரின் விருந்தாளியாக அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.

ஒருநாள் இரவு, மாடுகள் எல்லாம் தறியில் கட்டப்பட்டிருந்த நேரத்தில், மாட்டுக் கொட்டகைக்குள் ஒரு நல்லபாம்பு புகுந்து 'புஸ்' என்று சீறியது.

இந்த ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். பாம்போ படமெடுத்த நிலையில் அங்கு சுகமாக அமர்ந்துகொண்டது.

மாடுகளோ நிலைகொள்ளாது கட்டுத்தறியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றன. ஆயினும் வந்திருப்பது சாயியே என்று நெவாஸ்கர் தீவிரமாக நம்பினார்.

மாடுகளை அவிழ்த்துவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மாடுகளில் ஒன்று தப்பித்தவறி பாம்பை மிதித்துவிட்டால் பெரும் நாசம் விளையும்.

தூரத்திலிருந்து புஜங்கத்தை பார்த்த நெவாஸ்கர், தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்கு மயிர்க்கூச்செரிந்தது. நல்லபாம்பை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

'புஜங்க ரூபத்தில் பாபா நமக்குத் பேட்டி அளிக்க வந்திருப்பது சாயியின் கிருபா கடாட்சமே" என்று சொன்னார். பிறகு, பாம்பிற்கு ஒரு கிண்ணம் நிறையப் பால் கொண்டுவந்தார்.

அணுவளவும் பயமில்லாமல் இருப்பதற்கு நெவாஸ்கருக்கு எவ்வளவு பக்தியும் விசுவாசமும் இருந்திருக்கவேண்டும்? அவர் நல்லபாம்பிடம் என்ன சொன்னார் என்பதை சாவதனாமாகக் கேளுங்கள்!

"பாபா, ஏன் இப்படிக் கோபமாகப் புஸ்ஸென்று சீறுகிறீர்கள்? எங்களை பயமுறுத்திப் பார்க்கிறீர்களா என்ன? எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலை நிம்மதியாக அருந்துங்கள்."

பாம்பிற்கு ஒரு கிண்ணம் பால் போதுமா? ஆகவே நெவாஸ்கர் ஒரு பெரிய பாத்திரம் நிறையப் பாலைக் கொண்டுவந்து பயமின்றிப் பாம்புக்கெதிரில் வைத்தார். உண்மையில் பயம் என்பது மனத்தில் உற்பத்தியாவதுதானே!

பால் நிரம்பிய பாத்திரத்தைப் பாம்புக்கு எதிரில் வைத்துவிட்டு, நெவாஸ்கர் அகலாதும் அணுகாதும் பழைய இடத்திற்குப் போய் உட்கார்ந்துகொண்டார். அகமும் முகமும் மலர்ந்து பாம்பைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.

பாம்பு நுழைவது பீதியைத்தான் அளிக்கும். ஆயினும், இச் சம்பவத்திற்கு எல்லாருடைய பிரதிபலிப்பும் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? இந்த ஆபத்திலிருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துப்போய், எல்லாரும் விசாரமடைந்தனர்.

'நாம் வெளியே சென்றால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடும். அங்கிருந்து பாம்பு வெளியே வருவது கடினம்' என்று நினைத்து எல்லாரும் அங்கேயே காவலாக உட்கார்ந்திருந்தனர்.