ஷீர்டி சாயி சத்சரிதம்
தேவின் மனத்தில் உடனே ஒரு சந்தேகம் எழுந்து, தம் மகனிடம் சொன்னார். "இவர் நிச்சயமாக முன்பு வந்த சந்நியாசிதான். நான் பரிந்துரைத்த காலத்திற்கு முன்பாகவே நிதி திரட்ட மறுபடியும் வந்துவிட்டார். -
"ஒரு மாதங்கூட முழுவதுமாகக் கழியவில்லையே. இவர் ஏன் இங்கு வந்தார்"? முந்தைய சம்பாஷணையை மறந்துவிட்டாரா?" இதுவே தேவின் சந்தேகத்தின் வேர்.
இறங்கிய இடத்திலேயே சந்நியாசி குதிரைவண்டியை விடுவித்துவிட்டார். அங்கேயே சிறிது நேரம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தேவின் இல்லத்திற்கு வந்தார். அவர் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
அப்பொழுது காலை மணி பத்து. பிராமணர்களுக்கு போஜனம் தயாராகிக்கொண்டிருந்த நேரம். தேவின் தவிப்பை கண்ட சந்நியாசி சொன்னார், "நான் பணத்திற்காக அவசரப்படவில்லை.-
"நான் பணத்திற்காக வரவில்லை. இன்று எங்களுக்குப் போஜனந்தான் தேவை." தேவ் சொன்னார், "வாருங்கள் வாருங்கள்; ஆனந்தம்! ஆனந்தம்! இதை உங்களுடைய இல்லமாக கருதுங்கள்".
இதைக் கேட்ட சந்நியாசி சொன்னார், "என்னுடன் இரண்டு பையன்கள் இருக்கின்றனர். " தேவ் சொன்னார், "நல்லது, நிரம்பவும் நல்லது."
தேவ் மேலும் சொன்னார், "சாப்பாட்டிற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? உங்களை அழைக்க நான் எங்கே ஆள் அனுப்பவேண்டும்?"
சந்நியாசி இடைமறித்துச் சொன்னார், "அதற்கென்ன தேவை? நான் எத்தனை மணிக்கு இங்கு வரவேண்டும்? நீங்கள் சொல்லும் நேரத்திற்கு வருகிறேன்".
"நல்லது, பையன்களையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு பன்னிரண்டு மணிக்கு வாருங்கள். ஞானியே, வந்து என் இல்லத்தில் போஜனம் செய்யுங்கள்" என்று தேவ் சொன்னார்.
சந்நியாசி கிளம்பிச் சென்றுவிட்டார். சரியாகப் பகல் பன்னிரண்டு மன்னிக்குத் திரும்பிவந்தார். மூவரும் சாப்பிட அமர்ந்து யதேஷ்டமாக (திருப்தியடையும் வரை) உணவுண்டனர்.
சமையல் முடிந்தவுடன் பிராமணர்கள் பந்திகளாக (வரிசை வரிசையாக) உட்கார்ந்தனர். சந்நியாசி , அவருடன் வந்த இரு பையன்கள், பிராமணர்கள், அனைவரையும் விருந்தோம்பியவர் (தேவ்) திருப்தி செய்தார்.
சந்நியாசி இரண்டு பையன்களுடன் தாமாகவே போஜனத்திற்கு வந்தாராயினும், அவருடைய முதல் விஜயத்தின் நோக்கம் ஒரு மாயைத் திரையை விரித்துவிட்டது.
ஆகவே, தேவின் மனத்தை, 'யாரோ ஓர் எதிர்பாராத விருந்தாளி போஜனம் செய்வதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது' என்ற திடமான எண்ணம் கவ்விக்கொண்டது.
இவ்வாறாக போஜனம் முடிந்தது. போஜனம் செய்பவர்கள் கடைசியில் சம்பிரதாயமாக உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவேண்டிய நீரும் அளிக்கப்பட்டது. வாய், முகம் கழுவிக்கொள்ளக் குளிர்ந்த நறுமண நீரும் அளிக்கப்பட்டது.