ஷீர்டி சாயி சத்சரிதம்
முடிவில், பையனுக்கு நம்பிக்கை பிறந்தது. செருப்புகளை ஹரிபாவூவிடம் ஒப்படைத்தான். ஹரிபாவூவின் மனோரதம் நிறைவேறியது. சாயி ஒரு ஞானி என்ற சுயானுபவம் ஏற்பட்டது!
"என்னுடைய தலைப்பாகைக்கு ஜரிகைக் கரை உண்டென்பது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. எல்லாரும் காணும்படியாக அது என் தலைமேல் இருக்கிறது.-
"ஆயினும், நான் ஒரு அசலூரான். ஷிர்டிக்கு முதல் தடவையாக இன்றுதான் வந்திருக்கிறேன். என் பெயர் ஹரி என்பது பாபாவுக்கு தெரியும்?"-
"இங்கிருப்பவர் எவருமே என் பிதா கானோபாவைப் பார்த்ததில்லை. ஆயினும், 'கா' என்ற எழுத்தால் அவருடைய பெயர் கோடிகாண்பிக்கப்பட்டது. இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
"அப்பொழுது, என் நண்பர்கள் ஞானி சாயியின் மஹிமையை விளக்கியபோது நான் அவர்களுடைய வார்த்தைகளை அவமதித்தேன். அதுபற்றி எனக்கு இப்பொழுது பச்சாதாபம் (செய்த குற்றத்தைக் குறித்து வருத்தம்) ஏற்படுகிறது.
"இப்பொழுது, எனக்கே அனுபவம் கிடைத்தபின் சாயியின் பிரபாவத்தை அறிந்துகொண்டேன். ஸ்ரீஸாயி ஒரு மஹானுபவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை."
மனம் எப்படியோ அப்படியே பாவம். ஹரிபாவூவின் அனுபவமும் அவ்வாறே. ஞானிகளை பரீட்சை செய்து பார்க்கவேண்டுமென்ற ஆசையே அவருடைய சுபாவம் (இயல்பு). ஆன்மீக முன்னேற்றத்தில் அவர் மனம் பதிக்கவில்லை.
சமர்த்த சாயி ஒரு மஹானுபாவர் என்பதை நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடைய அனுபவங்களால் விவரித்தனர். அந்தப் பதுமைத் தாமே நேரில் பார்க்கவேண்டும் என்பது ஒன்றுதான், அவர் ஷீர்டி சென்றதற்கே காரணம்.
'ஞானியின் பாதங்களில் ஜீவனை வைத்து இறைவனை அடையவேண்டும்' என்னும் விருப்பம் அவர் மனத்தில் சிறிதளவும் இல்லை. பச்சோந்தியால் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்?
அற்புதம் காணவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் ஞானியின் வாயிற்படிக்குச் சென்றவருடைய தொலைந்துபோன புத்தம்புதிய ஜோடி செருப்பு, அவர் இருந்த இடத்தைத் தேடிக் கொண்டுவந்தது.
கேவலம், ஒரு ஜோடி செருப்பு தொலைந்துபோனதால் என்ன பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கமுடியும்? ஆயினும், அதைப்பற்றி அவருடைய மனம் ஓயாமல் அரித்துக்கொண்டிருந்ததால், செருப்பு திரும்பி வரும்வரை மனம் அமைதியடைவில்லை.
ஞானிகளை அடைவதற்குண்டான மார்க்கங்கள் இரண்டு. ஒன்று பக்தி, இரண்டாவது ஞானம். ஆனால், ஞானமார்க்கத்தில் ஆயாசம் (களைப்பு) விண்ணவளவு; பக்தி மார்க்கத்தின் முயற்சிகள் சுலபமானவை.
பக்தி மார்க்கம் அவ்வளவு சுலபமெனில், ஏன் எல்லாரும் அந்த வழியில் நடப்பதில்லை? ஏனெனில், அதற்குப் பெரும்பாக்கியம் தேவைப்படுகிறது. அது இருந்தால்தான் அவ்வழியில் நடக்கமுடியும்.
