ஷீர்டி சாயி சத்சரிதம்
'உண், என்று வேண்டி, யாராவது ஒரு சோளரொட்டித்துண்டு அளித்தால், அதை உங்களுடைய காரியத்தை நிர்விக்கினமாக (இடையூறின்றி) முடித்துக்கொடுக்கும் சுபசகுணமாகக் கருதி ஏற்றுக்கொள்ளுங்கள்.-
'இப்பொழுது சொற்பமாக ஆகாரத்தை உட்கொள்ளுங்கள். சிறிது இளைப்பாறி உடலையும் மனத்தையும் திடப்படுத்திக்கொள்ளுங்கள்'. ஆனால், மற்ற மூவரும் இந்த நல்ல வார்த்தையை நிராகரித்துவிட்டனர். ஏதும் உண்ணாமலேயே மறுபடியும் அங்கிருந்து கிளம்பினர்.-
தேடலில் வெற்றி பெறாமல் நாங்கள் உணவுண்ணப் போவதில்லை, என்று சொல்லிக்கொண்டு அவர்களுடைய முரண்டுக்கு அவர்களே பலியானவர்கள்.-
எனக்கோ நல்ல பசி; தொண்டையும் வறண்டு போயிருந்தது. மேலும், நான் வண்ஜாரியின் உலகியல் நடப்பிற்கு அப்பாற்பட்ட பிரேமையைக் கண்டு அவர்மீது வாஞ்சடையுடன் பெருமதிப்புக் கொண்டேன்.-
மெத்தப் படித்த பண்டிதர்களாகிய எங்களுக்குக் கருணையோ இரக்கமோ இல்லை. செல்வராக இருந்தாலும், எச்சிற்கையால் காக்கை ஒட்டாதவர் எத்தனையோ பேர்.-
ஆனால், காட்டில் சந்தித்த மனிதரோ தாழ்குலத்தோர்; வண்ஜாரி சாதி; படிப்பறிவில்லாதவர்; அந்தஸ்தில்லாதவர். ஆயினும், 'கொஞ்சம் சோளரொட்டியும் வியஞ்சனுமும் (உணவுக்குரிய கறிகள்) சாப்பிடுங்கள்' என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய இதயத்தில் இயல்பாகவே எவ்வளவு பிரேமை இருந்திருக்கவேண்டும்!-
லாபம் கருதாது இவ்விதமாக அன்பு செலுத்துபவரே சிறந்த புத்திமான். ஆகவே, அவருக்கு மரியாதை செலுத்துவதே உயர்ந்த ஞானத்தை அடையும் உத்தமமான மார்க்கம் என்று நான் உணர்ந்தேன். -
ஆகவே நான் மிகப் பணிவுடன் வண்ஜாரி அளித்த கால் ரொட்டியைத் தின்று சிறிது தண்ணீரும் குடித்தேன். ஆஹா! எவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடந்தது!-
எங்கிருந்தோ, எதிர்பாராமலேயே குருராஜர் தோன்றினார். எங்களிடம் கேட்டார், 'எதற்காக இந்த வாதப்பிரதிவாதங்கள்?" நான் அப்பொழுது அவரிடம், நடந்த விருத்தாந்தத்தை சொன்னேன்.-
'நீங்கள் என்னுடன் வருகிறீர்களா? நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.'- (குருராஜர்)
மற்ற மூவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; அனால், நான் அவருடைய அழைப்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டேன். மற்ற மூவரும் அங்கிருந்து வெளியேறினர். குருராயர் என்னை மட்டும் தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார்.-
அவர் என்னை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்று கால்களை ஒரு கயிற்றால் கட்டி கிணற்றினுள் என்னைத் தலைகீழாகத் தொங்க விட்டார். -