ஷீர்டி சாயி சத்சரிதம்
இக் கூட்டத்தில், பாபாவிடம் மிகுந்த பிராயம் கொண்ட உயர்ந்த பக்தரான சந்தோர்க்கரும் இருந்தார். தரிசனம் செய்ய ஆர்வமுற்று தம் சகலபாடி பினீவாலேயுடன் வந்திருந்தார்.
சாயிநாதர்க்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருவரும் அவருடைய முன்னிலையில் அமர்ந்தனர். குசலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது பாபா திடீரென்று கோபமடைந்தார்.
பாபா கேட்டார், "நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாள்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா?-
என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்த பிறகு இந்த கதியைத்தான் அடைந்தீரா? ஓ, உம்முடைய மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்! அனைத்தையும் என்னிடம் விவரமாகச் சொல்லும்."
இதைக் கேட்ட நானா தலையைக் குனிந்துகொண்டார். கோபத்தின் காரணத்தை ஆராய ஆரம்பித்தார். அவரால் எதையும் யூகிக்க முடியவில்லை; மனம் குழம்பினார்.
என்ன தவறு செய்தோம் என்று அவருக்கு விளங்கவில்லை. கோபத்திற்கு காரணமும் தெரியவில்லை. ஆனால், பாபா காரணமின்றி எவர் மனத்தையும் புண்படுத்தமாட்டார்.
ஆகவே, அவர் பாபாவின் பாதங்களை பற்றிக்கொண்டு பலவிதமாக கெஞ்சினார். கடைசியாக தம்முடைய அங்கவஸ்திரத்தை பாபாவின் சன்னிதியில் விரித்து, "ஏன் என்மீது இவ்வளவு கோபம் கொள்கிறீர்?" என்று கேட்டார்.
பாபா நானாவைக் கேட்டார், "என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக் கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?-
"நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தடைந்தீர்? வழியில் என்ன நேர்ந்தது? நீர் வழியில் எங்காவது இறங்கினீரா, அல்லது குதிரைவண்டியில் நேராக இங்கு வந்தீரா?-
"வழியில் வினோதமாக ஏதாவது நடந்ததா? எல்லாவற்றையும் விவரமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் எங்கு, என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்லும்".
இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. அவருடைய முகம் கவிழ்ந்தது. உள்ளூர அவமானமாக இருந்தாலும், நானா விவரமனைத்தும் பாபாவிடம் சொன்னார்.
இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.
அசத்தியம் சாயியிடத்தில் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.
குருவை வஞ்சிப்பது மஹா பாதகச் செயல். அதிலிருந்து விடுபடவேமுடியாது. இதை நன்கு அறிந்த நானா, ஆரம்பித்திலிருந்து கடைசிவரை என்ன நடந்ததென்பதை பாபாவிடம் சொன்னார்.