valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 24 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.

இவ்வாறு அவரை நிதித்யாசனம் (ஈடுபாட்டுடன் திரும்ப திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உள்மன  நிலையில் நுழைந்து விடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் சச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.

இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.

பாவ பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுதிருப்தி கிடைக்காது!

ஆகவே, கதை  கேட்பவர்களே! இன்னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையை  பெறுவீர்கள்.

வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆசனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. சகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.

சத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பது போன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனதிற்கொண்டு, இறைவனின் சேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.

'சத்' எனும் தத்துவத்திடம் (முழுமுதற் பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பல' என்னும் தத்துவத்தை கைக்கொள்பவர் ஜனன மரணச் சூழலில் மாட்டிக் கொள்வார்.

துவதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது. தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.

அவித்யயைலிருந்து (அஞ்ஞானத்தில் இருந்து) விடுபடுவதே'இருப்பது ஒன்றே' என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்?

ப்ரம்மாவிலிருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழு முதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழு முதற்பொருளில் இருந்து வேறுபட்டவனாகத் தெரியலாம். 


Thursday 18 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மேகமண்டலத்தில் கணநேரமே ஒளிரும் மின்னலைப் போன்று நிலையில்லாதது இம்மனித வாழ்க்கை. பூமியில் வாழும் மனிதர்கள் காலன் என்னும் சர்ப்பத்தால் விழுங்கப்பட்டிருப்பதால், கனமேனும் சுகம் காண்பது அரிது. 

மாத, பிதா, சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமன் ஆகியவர்களனைவரும் நதிப்பிரவஹதில் கட்டைகள் அடித்துக் கொண்டு வருவதுபோல் குறுகிய காலத்துக்கு ஒன்று சேர்கிறார்கள். 

ஒரு கணத்தில் கட்டைகள் ஒன்று சேர்கின்றன; அடுத்த கணமே அலைகளால் சிதறியடிக்கப்படுகின்றன. ஒருமுறை பிரிவினை வந்துவிட்டால், மறுபடியும் முன்போன்றே ஒன்றுசேர்வது என்பது நடக்காத காரியம். 

ஆத்மாவுக்கு ஹிதமானத்தை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியை கொடுதத்டு வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையாவிடின் அவனுடைய வாழ்கையே வீண். 

ஒரு பிராணி பிறந்தவுடனே, சாவின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. 'சாவு இன்று வராது, நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ தான் வரும்' என்று நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். 

காலனைப் பற்றிய நினைவு மனதைவிட்டு மறைய வேண்டா. இந்த தேஹமானது கேவலம் காலனுக்கு உணவே. இதுதான் இவ்வுலக வாழ்வின் லக்ஷணம். ஆகவே, உஷார்!

எவர் உலக விவகாரங்களை விவேகத்தோடும் ஞானத்தோடும் அணுகுகிறாரோ  , அவர் பிரயாசை இன்றியே  ஆன்மீக முன்னேற்றம் அடைவார். ஆகவே, உலகியல் விவகாரங்களில் மந்தமோ சோம்பேறித் தனமோ உதவாது. மனித வாழ்வின் நான்கு புருஷார்தாங்களில் (ஆறாம் - பொருள் - இன்பம்- வீடு) ஆர்வமின்மையோ உதாசீனமோ உதவாது. 

சாயியின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்கையில் உயர்ந்த சிறேயசை (மேன்மையை) அடைவார்கள். அவர்களுக்கு சாயியின் பாதங்களின் மேல் பக்தி வளர்ந்து சந்தோஷ மென்னும்  பெருநிதி அவர்களுடையதாகும். 

சாயியின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்கதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் சாயியின் பொற்கமலப் பாதங்களை நினைவுகொள்வார்கள். 

இக்கதைகள் நிசப்தமானதைப் பற்றிய சப்தம் மிகுந்த வர்ணனை; இந்திர்யங்களுக்கு அப்பாற்பட்டதை இந்திரியங்களால் சுவைத்த அனுபவம். ஆகவே, இந்த அமிருதபானத்தை எவ்வளவு அருந்தினாலும் திருப்தி கிடைப்பது துர்லபம் (அரிது)!

ஞானிகளுடைய மகிமை சொல்லுக்கப்பாற்பட்டது; அவர்களுடைய லீலையோ கற்பனைக்கப்பாற்பட்டது; வார்த்தைகளால் முழுமையாக விளக்கும் சாமர்த்தியம் யாருக்கு உண்டு?

இக்காதைகள் எப்பொழுதெல்லாம் கத்தில் விழுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் சாயி கண்முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்து விடுவார். 



Thursday 11 December 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

எவ்வாறு சாயியினுடைய அருளால் பீமாஜி சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார் என்பதையும், எவ்வாறு அவர் நன்றியுணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் சாயி பாதங்களில் சரணடைந்தார் என்பதையும் சொன்னேன். 

சொல்லப்போகும் நிகழ்ச்சியும் அதுபோன்றே விநோதமானது. யாரும் ஏற்கெனவே கண்டிராத அற்புதம். கதை கேட்பவர்கள் மேலும் கேட்பதற்கு எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், அதை இப்பொழுது சொல்கிறேன். 

கேட்பவர்களுக்கு ஆர்வமில்லையெனில், கதை சொல்பவர் எப்படி உணர்வூட்டப்படுவார்? கதை எவ்வாறு சிறக்கும்? எவ்வாறு ரசபூர்ணமாக (ஆனந்தம் நிரம்பியதாக) இருக்கும்? 

இந்நிலையில் பிரவசனம் செய்வபர் என்ன செய்யமுடியும்? அவர் முழுக்க முழுக்கக் கேட்பவர்களின் ஆதீனத்தில் அன்றோ இருக்கிறார். கதை கேட்பவர்களே அவருக்கு முக்கிய ஆதாரம்; அவர்களுடைய உற்சாகத்தினால்தான் கதை இனிமை நிம்பியதாகிறது; 

ஒரு ஞானியின் சரித்திரமாக இருப்பதால், சுபாவத்திலேயே காதை உள்ளும் புறமும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், அவருடைய வாழ்க்கை நெறி, ஆகாரப் பழக்கம், நடத்தை, போக்குவரத்து அனைத்துமே கவர்ச்சியானவை; அவருடைய சஹஜமான சொல்லே இனிமையானது. 

இது வெறும் வாழ்கைச் சரித்திரம் அன்று; ஆத்மானந்ததின் ஜீவனாகும். இதை தயாசாகரமான சாயி மகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார். 

பிரவிருத்தி மார்காதைப் பற்றிப் (உலகியல் வாழ்முறைப் பற்றிப்) பேசியே அவர்களுக்கு நிவிர்த்தி மார்க்கத்தை (ஆன்மீக் வாழ்முறையை) க் காண்பித்தார். சத்புருஷர்களின் கதைகள் இவ்விதமாக, இவ்வுலக வாழ்வையும் பரவுலக வாழ்வைப் பற்றி பேசும். 

இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். 

அனந்தமான புண்ணியங்களின் பலத்தால் நரஜன்மம் எதிர்பாராமலேயே ஏற்படுகிறது. மனிதன் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்தால் அது மிகப் பெரும் பாக்கியம். 

இந்த நல்வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளாதவன் தன்னைப் பூமிக்கு அர்த்தமற்ற பாரமாகிக் கொள்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சி, ஒரு மிருகத்தின் மகிழ்ச்சியைவிட எப்படி அதிகமாக இருக்க முடியும்?

அம்மாதிரியான மனிதன் கொம்புகளும் வாழும் இல்லாத மிருகமே அல்லனோ! அவர்னுக்கு உண்பதும் உறங்குவதும் பயப்படுவதும் சிற்றின்பச் சேர்க்கையும் அல்லால் வேறெதுவும் தெரியாது. 

ஓ! நரஜன்மத்தின் மகிமைதான் என்னே! பக்தியும் இறை வழிபாடும் முக்தியடைவதும் இந்த நரஜன்மத்தின் மூலமாகத்தான் லாபமாகும்; தன்னையறிதலும் இதன் மூலமாகவே. 



Thursday 4 December 2014

ஷிர்டி சாயி   சத்சரிதம்

சாயிநாதா, ஞானிகளில் உத்தமரே, ஜெய ஜெய! தயாளரே, குண கம்பீரரே, ஜெய ஜெய நிர்விகாரேரே, அப்பாலுக்கும் அப்பாற்படவரே, ஜய ஜய! எல்லையற்றவரே, மாசிலாமணியே ஜய ஜய!

நிஜமான பக்தர்களின் மீதுள்ள தயையினால், அவர்களால் கண்டறிய முடியாதவற்றை மனதிற்கொண்டு அவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிப்பதற்காகப் பல உருவங்களில் தோன்றுகிறீர். 

தீனர்களை உத்தாரணம் செய்வதற்காகவும்   பக்தர்களுக்குள்ளே இருக்கும் அரக்கத்தனம், கெட்ட புத்தி, துர்நடத்தையைத் தூண்டும் பூர்வஜன்ம வாசனைகள் இவற்றை வதம் செய்வதற்காகவும் தோன்றிய லீலாவதரமே நீர். 

எவரெல்லாம் தூய மனதுடன் சாயி தரிசனத்திற்கு வந்தனரோ அவரெல்லாம் ஆத்மானந்த ரசத்தைப் பருகினர்; உள்ளே ஆனந்தம் நிரம்பி  வழிந்தது; அன்பினால் கண்ட சுகத்தில் ஊஞ்சலாடினர்.

ஹீனனும் தீனனுமாகிய நான், இக்குணங்கள் நிரம்பிய சமர்த்த சாயியினுடைய பொற்பாதங்களில் சரணாகதியாக சாஷ்டாங்கமாக விழுந்து மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம் செய்கிறேன். 

மலேரியா ஜூரத்தால் பீடிக்கப்பட்ட பக்தர், கறுப்பு நாய் தயிர்சோறு தின்றதால் குணமடைந்த (முன்பு சொன்ன) காதையிலிருந்து நான் இப்பொழுது தொடர்கிறேன். 

பயங்கரமான காலரா நோய், அவர் ஆட்காட்டி விரலை உயர்த்தியதாலும் தரண் (பாதாம், பிஸ்த, அக்ரூட் பருப்புகளைப் பாலில் வேக வைத்த பானம்) குடிகள் வைத்ததாலும் வருத்த வேர்கடலையை தின்பதற்கு கொடுத்ததாலும் மறைந்துவிட்டது எவ்வாறு என்பதுபற்றியும், - 

அதுபோலவே, ஒருவருடைய சூலைநோய், மற்றொருவர் உடைய காதுவலி, இன்னொருவருடைய க்ஷய ரோகம் ஆகியவை தரிசனமாத் திரத்திலேயே  எவ்வாறு அளிக்கப்பட்டன என்பது பற்றியும், -


Thursday 27 November 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாடீல் இது விஷயத்தில் முன்னோடியாக விளங்கினார். கிராமத்தில் அது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் அனைவரும் சத்திய சாயி விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். 

ஞானிகளின் கிருபை இவ்வாறே! உரிய காலத்தில் பிராப்தம் நேரும்போது, தரிசனத்தாலேயே பக்தர்களுடைய இன்னல்கள் அழிந்து போகின்றன. யமனும் திருப்பியனுப்பபடுகிறான். 

அடுத்த காதலி, சந்ததி இல்லையே என்று ஒருவர் பட்ட கவலையும் எல்லா ஞானிகளும் ஏகாந்தமாக இருக்கும் அற்புதத்தையும் விவரிக்கும். 

நாந்தேட் நகரத்தில் வாசித்த, பார்சி மதத்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பாபாவின் ஆசீர்வதத்தால் புத்திரபாக்கியம் பெற்றார். 

நாந்தேடில் வாசித்த மௌலிசாஹெப் என்ற ஞானியும் பாபாவும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டது. பார்சி கனவான் ஆனந்தம் பொங்க வீடு திரும்பினார். 

இக்காதை உள்ளத்தை தொடும். கேட்பவர்களே! அமைதியுடன் இக்காதையை கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பதும் அவருடைய வாத்சல்யமும் (தாயன்பும்) உங்களுக்கு நன்கு விளங்கும். 

ஹேமாட் பந்த் சாயியின் பொற்கமல பாதங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன். ஞானிகளையும் கதை கேட்பவர்களையும் வணங்குகிறேன். அடுத்த அத்தியாத்தின் விவரணத்தை பயபக்தியுடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்" என்னும் காவியத்தில், 'பீமாஜி க்ஷயரோக நிவாரணம்" என்னும் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீசத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 



சுபம் உண்டாகட்டும்.   

Thursday 20 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம்

"இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடையை நன்றிக்கடனை கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா சாயி, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதவை.!"

பாடீல் பாபாவின் மகிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுதிருப்தியுடன் வீடு திரும்பினார்.

சாயியின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப் பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனதுடன் ஷீரடிக்கு அடிக்கடி வந்து போனார்.

சாயி நாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது.

ஒருவருக்கு துன்பம் நேரும்போது, சத்தியனாராயனருக்கு பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தபின் சாங்கோபமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையை செய்கிறார்.

அதுபோலவே, பாடீல் அக்காலத்திலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழ மையும்   தூய்மையாக, ஸ்நானம் செய்து விட்டு சத்திய சாயி விரதத்தை   முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.

சத்திய நாராயண பூஜையின்போது மக்கள் சத்திய நாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்கு பதிலாக தாசகனு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம் ' என்னும் நூலிலிருந்து சாயி சரித்திரத்தை பாராயணம் செய்தார்.

இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாங்களில் தாசகனு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் சாயி நாதரின் சத்திய சாயி கதை சொல்லப் பட்டிருக்கிறது.

விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களை பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.

பாடீல், தம்முடன் பிறந்தவர்களை உறவினர்களையும்  நண்பர்களையும்  அழைத்து, இந்த சத்திய சாயி விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனதுடன் தவறாது செய்துவந்தார்.

நைவேத்தியம் (படையல்) சத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும் அதே விகிதத்திலும் கலந்து செய்யப் பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் சாயி; விரதத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

தற்காலத்தில் சாயி பக்தர்கள் 'ஸ்ரீ சாயீ சத்சரிதம்' மராட்டி நூலையோ (இம்மொழி பெயர்ப்பின் மூல நூல்) அல்லது நாகேஷ் வாசுதேவ் குணாஜி எழுதிய ஆங்கில சுருக்கத்தையோ அல்லது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையோ (திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சப்தமாகப் (ஏழு நாள்களுக்குள் ஆசாரமாக படித்து முடிப்பது) பாராயணம் செய்கின்றனர்.



Thursday 13 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 
"எந்தப் பெண்ணுக்கு வேறு வீட்டிற்குள் (தன்னுடைய வீடு தவிர) நுழைவது பாம்பின் தலைமேல் கால் வைப்பதுபோல் இருக்கிறதோ,
 எவளுடைய வாயிலிருந்து வார்த்தைகளை பெறுவது கருமியிடம் செல்வத்தை பெறுவது போன்றதோ, 
வீட்டில் செழிப்பு இல்லாது போயினும் எவளுக்கு கணவனின் சங்கம் பெரும் சந்தோஷத்தை அளிக்கிறதோ, 
கணவனுடைய அனுமதியுடன் எவள் சாந்தமாகச் செயல் புரிகிறாலோ, அவளே பதிவிரதை ஆவாள். 

ஆனால், எந்தப் பிழைக்காக இந்தத் தண்டனை என்று புரிந்துகொள்வது கடினம். ஆயினும், ஆசிரியர் பிரம்பைக் கீழே வைப்பதாக இல்லை. வெறி பிடித்தவர்போல அடித்தார். 

இதையடுத்து, பீமாஜி முதற்கனவை விட விசித்திரமான கனவொன்று கண்டார். ஒரு மனிதர் அவருடைய மார்பின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பலமாக மார்பை அமுக்கினார். 

ஒரு குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு பீமாஜியினுடைய மார்பை அம்மியாக ஆக்கி அரைத்தார். தாங்க முடியாத வழியால், பரலோகப் பயணம் கிளம்பிவிட்டோம் என்று பீமாஜி நினைக்கும் வண்ணம், உயிரே எம்பி வாய்க்கு வந்துவிட்டதை போலிரிந்தது. 

கனவு முடிந்தது. அவர் தூக்கத்தில் ஆழ்ந்தார்; தூக்கம் கொஞ்சம் சுகத்தை அளித்தது. உதயசூரியன் தோன்றினார்; பாடீல் விழித்துக் கொண்டார். 

எப்பொழுதாவது கண்டிராத வகையில் புத்துணர்ச்சி பெற்றார்! வியாதி பிடித்த உணர்வு நிர்மூலமாகியது. அம்மியும் குழவியும் பிரம்பும் சொன்ன குறிப்பு என்னெவென்று தெரிந்துகொள்வதற்கு யாருக்கு ஞாபகம் இருந்தது? 

மக்கள் கனவுகளை அர்த்தமற்றனவாகவே நினைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் நம்முடைய அனுபவம் எதிர்மாறாக இருக்கிறது. கனவு கண்ட அதே மங்களகரமான நேரத்தில் வியாதி ஒழிக்கப் பட்டது. பாடீலின் துன்பன் முடிவுற்றது. 

பாடீலின்  மனதில் சந்தோசம் பொங்கியது. தாம் புனர்ஜன்மம் எடுத்துவிட்டதாகவே நினைத்தார். பிறகு அவர் மெதுவாக சாயி தரிசனத்திற்கு கிளம்பினார். 

சந்திரனை போன்ற பாபாவின் முகத்தை பார்த்தவுடனே பாடீளுடைய மனதில் ஆனந்த சமுத்திரம் பொங்கியது. அவருடைய கண்கள் ஆனந்தமான அனுபவத்தில் செருகிக் கொண்டன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. 

பாபாவினுடைய பாதங்களில் தலை வைத்தபோது ஆனந்தக் கண்ணீர் மடை திறந்தார் போல வழிந்தது. பிரம்படியும் இதயமே வெடித்துவிடும் போன்று மார்பு அமுக்கப் பட்டதுமாகிய தண்டனைகளின் முடிவான விளைவு சந்தேகமில்லாமல் சுகத்தை அளிப்பதாகவே அமைந்தது. 

"பாமரனாகிய என்னால் என்மீது காட்டப் பட்ட கருணைக்குப் பிரதி உபகாரமாக எதுவும் என்றுமே செய்ய இயலாது. ஆகவே, நான் என்னுடைய சிரத்தை உம்முடைய பாதங்களில் வைப்பதிலேயே திருப்தி கொள்கிறேன். -



Thursday 6 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தத்தோ பந்தினுடைய அனுபவம் அவ்வாறு இருந்தது. பாபாவினுடைய கரம் அவருடைய சிரத்தின் மீது வைக்கப்பட்டு, விபூதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவருடைய மனம் அமைதி அடைந்தது. 

மகாராஜ் அவரைச் சில நாள்கள் ஷீரடியில் தங்கும்படி செய்தார். படிப்படியாக அவருஅடிய சூலை நோய் நிர்மூலமாகியது. 

மகாத்மாக்கள் இவ்விதமே! அவர்களுடைய பிரபாவத்தை நான் எங்கனம் தேவையான அளவுக்கு வர்ணிப்பேன் ? நகரும் நகராப் பொருள்கள் அனைத்தின் மீதும் சத்பாவம் கொண்ட மகான்களுக்கு பரோபகாரமே நித்திய சுபாவம். 

இப்பெருமைகளை பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மற்ற காதைகள், ஒன்றை விட மற்றொன்று அற்புதமான ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால், நாம் இப்பொழுது பிரதமாமான பீமாஜியின் காதையை விட்ட இடத்தில தொடர்வோமாக! 

ஆக, பாபா உதீயை கொண்டுவரச் செய்து, பீமாஜிக்கு அளித்துச் சிறிது அவருடைய நெற்றியிலும் இட்டு விட்டார். பிறகு பாபா தம்முடைய அருட்கரத்தை பீமாஜியின் தலைமேல் வைத்தார். 

தங்குமிடத்திற்குச் செல்லும்படி பீமாஜி ஆக்ஞை இடப்பட்டார். பாடீல் சில அடிகள் மெதுவாக எடுத்துவைத்த பிறகு, வண்டி வரை நடந்து சென்றார். தமக்குத் தெம்பு வந்துவிட்டதை உணர்ந்தார். 

பாபா ஆலோசனை கூறிய இடத்திற்குச் (பீமாபாயின் வீட்டிற்குச்) சென்றார். அவ்விடம் குறுகலாகவும் காற்றோட்டமின்றியும் இருந்தபோதிலும், பாபா அவ்வாறு செய்யச் சொல்லியிருந்தார்; அதுதான் முக்கியம். 

சமீபத்தில் களிமண்ணால் சமம் செய்யப்படிருந்ததால், தரை ஈரமாக இருந்தது. ஆனால், பாபாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பீமாஜி அவ்விடத்திலேயே தங்குவதற்கு வசதிகள் செய்துகொண்டார். 

பீமாஜிக்கு கிராமத்தில் பலர் தெரிந்து இருந்ததால், ஈரமில்லாத உலர்ந்த இடம் கிடைத்திருக்கும். ஆனா, பாபாவினுடைய திருவாய் மொழியாக வந்த இடத்திற்குப் பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றமுடியாது. 

ஆகவே, அவர் அங்கே கோணி பைகளை தரையில் விரித்துத் தம்முடைய படுக்கையை அதன்மீது அமைத்துக் கொண்டார். மன அமைதியுடன் படுக்கையில் படுத்துக் கொண்டார். 

அன்றிறேவே பீமாஜி ஒரு கனவு காணும்படி நேர்ந்தது. கனவில் அவருடைய பால பருவத்து ஆசிரியர் தோன்றி, அவரை அடிக்க ஆரம்பித்தார். 

கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு, அவரைச் சில மராட்டி செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பிக்கவைக்க, முதுகொடிந்து போகுமாறு கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். சிஷ்யனுக்கு பயங்கரமான கஷ்டத்தை கொடுத்தார். 

கதை கேட்பவர்களுக்கு இச்செய்யுள்கள் யாவை என்று அறிந்து கொள்ளும் ஆவல் மிக இருக்கும். ஆகவே, நான் கேட்டதை விரிவாகவும் பதம் பதமாகவும் இங்கே தருகிறேன். 



Thursday 30 October 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"தின்று விடும்" என்று திரும்ப திரும்பச் சொல்லி மகாஜனியின் கையில் வேர்க்கடலைகளை திணித்தார். அவ்வப்பொழுது  தாமும் சிறிது வாயில் போட்டுக் கொண்டார். இவ்விதமாக முழுப் பையும் காலியாகியது. 

வேர்க்கடலை காலியானவுடன், "தண்ணீர் கொண்டு வாரும், எனக்கு தாகமாக இருக்கிறது" என்று பாபா சொன்னார். காகா ஜாடி நிறையத் தண்ணீர் நிரப்பி பாபாவுக்குத் கொண்டுவந்தார். அதிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு, காகா மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார் பாபா. 

காகா தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் சொன்னார். "இப்பொழுது போம், உம்முடைய பேதி நின்றுவிட்டது ! ஆனால், எங்கே? ஓ, எங்கே போய்விட்டனர் அந்த பிராமணர்கள் எல்லாம் போய் அவர்களை எல்லாம் அழைத்து கொண்டு வாரும்".

சிறிது நேரம் கழித்து அனைவரும் திரும்பினார். மசூதி முன்போலவே நிரம்பி வழிந்தது. மறுபடியும் தளம் போடும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. காகா மகாஜனியின் காலராவும் ஒழிந்தது!

ஆஹா! பேதிக்கு எப்படிப்பட்ட மருந்து! உண்மையான மருந்து ஞானியின் சொல் அன்றோ! எவர் அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்கிறாரோ, அவருக்கு மருந்தேதும் தேவை இல்லை. 

ஹர்தா நகரத்தில் வாழ்ந்த கிருஹஸ்த்ரோருவர் சூலை நோயினால் (வயிற்று வலியால்) பதினான்கு ஆண்டுகள் அவதிப் பட்டார். எல்லா வைத்திய முறைகளையும் செய்து பார்த்தார். பிரயோஜனம் ஏதுமில்லை. 

அவருடைய பெயர் தத்தோ பந்த். ஷீரடியில் சாயி என்று அழைக்கப் பட்ட மகா ஞானி ஒருவர் இருக்கிறார் என்றும் அவருடைய தரிசனமே எல்லா வியாதிகளையும் நிவிர்த்தி செய்துவிடுகிறது என்றும் ஒரு செவி வழிச் செய்தி அவரைச் சென்றடைந்தது. 

இக்கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவர் ஷிர்டிக்குச் சென்று பாபாவின் பாதங்களில் தம் சிரத்தை வைத்துக் கருணை வேண்டினார். 

"பாபா, பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இச்சூலை நோய் என்னை விடமாட்டேன் என்கிறது. போதும், நான் பட்டது போதும். நான் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டேன்; இனிமேலும் இவ்வலியை அனுபவிப்பதற்கு எனக்கு சக்தி இல்லை.

"நான் யாருக்குமே துன்பம் இழைத்ததில்லை; எவரையும் ஏமாற்றியதில்லை. மாதா பிதாக்களை அவமதித்து இல்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன கர்மம் செய்தேன் என்று தெரியவில்லை; அதன் காரணமாக இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்!"

ஞானிகளுடைய கருணாகடக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை. 


Thursday 23 October 2014

ஷிர்டி சாய் சத்சரிதம் 

பிறகு பாபா திரும்பி வந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகா மகாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். 

கோபற்காங்விலிருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயிலிருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். 

இக்குழுவினருடன் அந்தேரியிலிருந்து ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காக காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில பயங்கரமாக உருட்டிக் கொண்டு, விசித்திரமான குரலில் சத்தம் போட்டார். 

"யார் அங்கே கூந்தாலியால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்" என்று கூவிக் கொண்டே தம்முடைய சட்காவை எடுத்துக் கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர். 

பணியாள் கூந்தாலியை கீழே போட்டுவிட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்' என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப் போனார். 

"நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்" என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாயும் லக்ஷ்மிபாயும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத் தம் மனம் திருப்தி அடையும் வரை கண்டபடி ஏசினார். 

முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசை மாறி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார். 

பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது,  மசூதியிலிருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையிலிருந்த இந்தப் பை விழுந்திருக்க வேண்டும். 

வேர்க்கடலை ஒரு சேராவது இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா. 

ஒரு பக்கம் வசவுகளை பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையை தேய்த்து ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப் பட்ட மஹாஜனியைத் தின்ன வைத்தார். 



Thursday 16 October 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"வீக்கம் என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே நான் மறுபடியும் மும்பை சென்றேன் -

"அதே டாக்டரிடம் சென்றேன். பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை.-

"ஆகவே டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்." சன்னியாசியின் பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையை கண்டு வியப்படைந்தனர். 

இந்த சந்தர்ப்பத்தில் இதே மாதிரியான காதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தக் காதையை சொல்லிவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறேன்.

சபா மண்டபத்தின் தரைக்கு தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மகாஜனி காலரா நோயினால் கடுமையாக தாக்கப் பட்டார். 

அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின் மீது பாரத்தை போட்டுவிட்டு, மிகவும் நொந்து போயிருந்த நிலையிலும் இந்த மருந்தையும் வைத்தியமுறையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மகாஜனிக்கு தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்கு தெரிவிக்கவில்லை. 

பாபா விருப்பப் பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டார். 

எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படி பூஜைக்கும் ஹரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக் கூடாது என்றே அவர் விரும்பினார். 

பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி சேவையை இழந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால், -

நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக் கூடிய இடத்தில மசூதியில் வைத்துக் கொண்டார். 

பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டு கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார். 

வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்கு சென்று மலம் கழித்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். 

இந்நிலையில், தாதா (கண்பத் கோதே பாடீல்) தரைக்கு தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்!

"நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்."


Thursday 9 October 2014

இதுபோலவே, புட்டி முன்னம் ஒருசமயம் பேதியாலும் வாந்தியாலும் அவதிப்பட்டார். அப்பொழுது ஷீரடியில் காலரா நோய் கண்டிருந்தது. புத்திக்குத் தாகத்தால் தொண்டை வறண்டு போயிற்று. வயிறு எந்நேரமும் குமட்டியது. 


ஷிர்டியிலேயே இருந்த டாக்டர் பிள்ளை பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். எதுவும் நிவாரணம் அளிக்காத நிலையில், முடிவாகப் பிள்ளை பாபாவிடம் சென்றார். 

பணிவுடன் பாபாவிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, பிள்ளை பாபாவைக் கேட்டார், "அவருக்கு காபி கொடுக்க வேண்டுமா? அல்லது தண்ணீரே நல்லதா?"

பாபா டாக்டரிடம் கூறினார், "அவருக்குப் பால் கொடுங்கள்; பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளையும் கொடுங்கள்! அவர் குடிப்பதற்கு அரிசி நொய்யும் பருப்பு நொய்யும் சேர்த்துக் கஞ்சி போட்டுக் கொடுங்கள்.-

"அவருடைய தாகமும் அவஸ்தையும் உடனே ஒழியும்." சாராம்சமான விஷயம் இதில் என்னவென்றால், புட்டி அந்தக் கஞ்சியை குடித்தவுடனே அவருடைய வியாதி மறைந்தது!

பாதாம், பிஸ்த, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டுக் காலரா நோய் கண்டவர் நிவாரணம் அடைவதா! இங்கு பாபாவின் வார்த்தைகளே நம்பிக்கையின் அஸ்திவாரம்; சந்தேஹம் என்பதற்கு இங்கு இடமேதுமில்லை. 

ஒரு முறை ஆலந்தியிலிருந்து ஒரு சந்நியாசி சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக ஷிரிடிக்கு வந்தார். பாபாவினுடைய ஆசிரமத்திற்கு (மசூதிக்கு) வந்து சேர்ந்தார். 

அவர், காதில் எதோ ஒரு நோயினால் இன்னல்பட்டு, சரியான தூக்கமுமின்றி அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனேவே ஓர் அறுவைச் சிகிச்சையும்  நடந்திருந்தது. ஆனால், எள்ளளவும் உபயோகம் ஏற்படவில்லை. 

காதுவலி பொறுக்க முடியாமலிருந்தது; எந்த உபாயமும் வேலை செய்யவில்லை. ஆகவே, அவர் ஆலந்தியிலிருந்து கிளம்பி பாபாவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தார். 

சந்நியாசி சாயியின் பாதங்களில் விழுந்து வணங்கி, உதீ பிரசாதம் வாங்கிக் கொண்டு, பாபாவினுடைய அருள் தமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 

மாதவராவ் சந்நியாசிக்காக, அவருடைய காதுரோகத்தை நிவிர்த்தி செய்யுமாறு பாபாவை வினயத்துடன் கேட்டுக் கொண்டார். "அல்லா சுகம் செய்துவிடுவார்" என்று மகாராஜ் உறுதி அளித்தார். 

இந்த ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு, சந்நியாசி புனேவுக்கு திரும்பினார். பொறுக்க முடியாத வலி அப்பொழுதே நின்று விட்டது, என்னும் செய்தி தாங்கிய கடிதம் எட்டு நாள்கள் கழிந்து வந்தது. 


Wednesday 1 October 2014

"ஓ, நான் இப்பொழுது என் செய்வேன்? எத்தனையோ மருந்துகளையும் கஷாயங்களையும் அருந்தி பார்த்துவிட்டேன்! நீங்களாவது இந்த ஜுரம் நீங்குவதற்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள்!"

பாபாவினுடைய இதயம் கனிந்தது. பதில் சொல்லும் வகையில் மலேரியா நீங்க வினோதமான ஓர் உபாயம் சொன்னார். அது என்னவென்று கேளுங்கள்!

"லக்ஷ்மி கோயிலுக்கருகில் இருக்கும் கருப்பு நாய் தின்பதற்குச் சில கவளங்கள் தயிர்சோறு கொடு; உடனே உன்னுடைய ஜுரம் குணமாகி விடும்!"

பாலா உணவு தேடுவதற்காகச் சிறிது பீதியுடன் வீடு திரும்பினார்; அதிர்ஷ்டவசமாக, ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சோறு இருப்பதை பார்த்தார்; அருகிலேயே தயிரும் இருந்தது; 

'தயிரும் சோறும் கிடைத்தது மிக்க நன்று. ஆயினும், இந்த வேளையில் கோயிலுக்கருகில் கறுப்புநாய் இருக்குமா? என்று பாலா யோசனை செய்துகொண்டே போனார். 

தேவை இல்லாத கவலை! குறிப்பிட்ட இடத்தை அவர் சென்றடையுமுன்பே ஒரு கறுப்பு நாய் வாலை ஆடிக் கொண்டு தம்மை நோக்கி வருவதை பார்த்தார். 

பாபா குறிப்பிட்டவாறே அனைத்தும் நடப்பது பற்றி பாலா கண்பத் மிக்க ஆனந்தமடைந்தார். உடனே அவர் நாய்க்கு தயிர் சோறு போட்டார். பிறகு, பாபாவிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னார். 

யார் இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன சொன்னாலும், சாராம்சம் என்னவென்றால், அப்பொழுதே மலேரியா ஜுரம் பாலாவை விட்டு நீங்கியது. பாலா நிவாரணம் அடைந்தார். 

அதுபோலவே, பாபுசாஹெப் புட்டிக்கு ஒரு சமயம் குடல் சீதலத்தினால் பேதியும் வாந்தியும் கண்டது. 

அலமாரி பூராவும் பலவகையான மருந்துகளால் நிரம்பி இருந்தது. ஆயினும், அம்மருந்துகளில் எதுவமே நிவாரணம் அளிக்கவில்லை. பாபு சாஹேப் மனத்தில் கலவரம் அடைந்தார். கவலைப்பட ஆரம்பித்தார். 

பல தடவைகள் பேதியும் வாந்தியும் ஆகி, பாபுசாஹீப் க்ஷணமடைந்து போனார். தினப்படி பழக்கமான 'பாபா தரிசனத்திற்கு ' செல்வதற்கு கூட சக்தியற்று இருந்தார். 

இச் செய்தி பாபாவின் காதுக்கு எட்டியது; அவர் புட்டியை அழைத்து வரச் சொல்லி, தம்மெதிரில் உட்கார வைத்தார். பாபா கூறினார், "இதோ பார், இப்பொழுதிலிருந்து நீ மலம் கழிக்கப் போகமாட்டாய்!-

"அத்தோடு, ஞாபகம் இருக்கட்டும், வாந்தியும் நின்று விட வேண்டும் ." புட்டியை நேருக்கு நேராகப் பார்த்து, ஆட்காட்டி விரலை ஆட்டிக் கொண்டே அதே வார்த்தைகளை மறுபடியும் கூறினார். 

அவ்வார்த்தைகளின் தாத்பரியத்தை கேட்டு பயந்து போய், வியாதி உடனே ஓட்டம் பிடித்தது! ஸ்ரீமான் புட்டி சொஸ்தமடைந்தார். 


Thursday 25 September 2014

ஷிர்டி சாய் சத்சரிதம் 

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அடங்கி விட்டது. 

பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியுனுடைய வேரை அறுத்து விட்டது. 

அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வசந்த காலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும். 

ரோகம் எது, ஆரோக்கியம் எது? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது. 

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எதனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு  முன்பு, எந்த உபாயமும் எடுபடாது. 

இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் ஞானியின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப் பட்டவர் வியாதியை சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக் கொள்வார். 

வியாதி பொறுக்க முடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஞானி தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார். 

இங்கே பாபாவின் சொற்களே பிரமாணம். அதுவே ராமபாணம் போன்ற, குறிதவறாத ஒளஷதம். இதுபோலவே, கருப்பு நாய்க்கு தயிர் சோறு போட்டதால் மலேரியா ஜுரம் நிவாரணம் ஆகியது. 

இம்மாதிரியான கிளைக்கதைகள் பிரதமமான கதையிலிருந்து விலகிச் செல்வது போலத் தோன்றலாம். கேட்டு, சாராம்சத்தை புரிந்துகொண்டால், அவற்றின் சம்பந்தம் நன்கு விளங்கும். மேலும், என்னுடைய மனதிற்கு இக்கிளைக் கதைகளை கொண்டுவருபவர் சாயிதானே!

'என்னுடைய காதையை நானே விவரிக்கிறேன்' என்று சாயி சொல்லியிருக்கிறார். ஆர்தான் இந்த சமயத்தில் எனக்கு இக்காதைகளை ஞாபகப் படுத்தியிருக்கிறார். 

பாலா கண்பத் என்னும் பெயர் கொண்ட சிம்பி (தையற்கார) ஜாதியை சேர்ந்த தீவிர பக்தரொருவர் ஒருசமயம் மசூதிக்கு வந்து பாபாவின் எதிரில் வந்து நின்று, தீனமான குரலில் வேண்டினார்,- 

"நான் என்ன பெரும் பாவம் செய்துவிட்டேன்? ஏன் இந்த மலேரியா ஜுரம் என்னை விட மாட்டேன் என்கிறது? பாபா, எத்தனையோ உபாயங்களை செய்து பார்த்துவிட்டேன்; ஆனால், இந்த ஜுரம் என் உடலை விட்டு நீங்க மாட்டேன் என்கிறது. -  


Thursday 18 September 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு திட நிச்சயமாக பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு சாயி தரிசனத்திற்காக ஷீரடிக்கு பயணமானார். 

தம்முடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு, எப்படி ஷீரடிக்கு போய்ச் சேர்வது எனும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனதுடன் பீமாஜி ஷீரடிக்கு கிளம்பினார். 

பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில்   இருந்த சவுக்குதிற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்து சேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜியை கைகளால் தூக்கிக் கொண்டு வந்தனர். 

நானா சாஹேபும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்து வைக்கும் மாதவராவும் ஏற்கனேவே அங்கு வந்திருந்தார்!

பாடீலை பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், "சாமா, இன்னும் எதனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?"

பீமாஜி சாயிபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், "சாயிநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள்! தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்!"

பாடீலுனுடைய துன்பத்தைப் பார்த்த சாய்நாத் பரிதாபப் பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதை உணர்ந்தார். 

பீமாஜியினுடைய பரிதாபகரமான நிலையில் பார்த்த கருணா சாகரமான சமர்த சாயி மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், -

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப் படுவதில்லை. ஷீரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்--

"நீர் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கி இருக்கலாம். துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறு கிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -

"இவ்விடத்தில் இருக்கும் பக்கீர் மகா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாகிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்-  

"ஆகவே, நீர் அமைதி கொள்ளும்; பீமாபாயின் வீட்டில் தங்கும்; போய் வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்".

ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது. 

சாயியின் திருமுகத்திலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாஹத்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்தாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.   


Saturday 13 September 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன். அவனே அழிப்பவன். அவன் ஒருவனே செயலாளி.

பாடீல் சாந்தொர்கருக்கு எழுதினார், "எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.

"இந்த வியாதியைக் குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்கும் கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.

"ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை வினயத்துடன் கடைசியாக கேட்கிறேன்! என்னுடைய மனதில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாக சந்திக்க வேண்டுமென்பதுதான்."

கடிதத்தை படித்த சாந்தோர்கரின் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. பீமாஜி பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப் போனார்.

நானா எழுதினார், "உங்களுடைய கடிதத்திற்கு பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தை பரிந்துரை செய்கிறேன். சாயி பாபாவின் பாதங்களை பற்றிகொள்ளுங்கள்! அவரே நம் அன்னையும் தந்தையும்!-

"அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அனைத்து கொள்வாள். தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.-

"கொடிய குஷ்டரோஹம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷய ரோஹாம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் சந்தேஹம் வேண்டா; போய் சாயியின் திருவடிகளை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள். -

"யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்கு கட்டுப் பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாக சென்று சாயி தரிசனம் செய்யவும்.-

"மரண பயத்தைவிட பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, சாயியின் பாதங்களை பற்றிக் கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தை போக்க முடியும். "

பொறுக்க முடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதொவென்ற  பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், "நான் எப்பொழுது சாயினாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்கு காரிய சித்தி ஆகும்?"

பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. "உடனே வேண்டியதையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள். சீக்கிரமாக ஷிர்டிக்குப் போவோம்".

Wednesday 10 September 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பாடீல் மனமுடைந்து போனார். உயிர் நாள் கணக்கில்தான் தாங்கும் போலிருந்தது. நாளுக்கு நாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன. 

குல தேவதைக்கும் ஆராதனைகள் செய்து பார்த்தார். பயனில்லை. குல தேவதை நால்லாரோக்கியத்தை மீட்டு தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டு கேட்டு அலுத்துப் போனார். 

சிலர் கூறினர். "இது என்ன அங்கொரஹம்! இவ்வளவு இன்னலை தரும் விதிதான் என்னே! ஓ, மானிட எத்தனம் அனைத்தும் வீண் போல இருக்கிறதே!"

டாக்டர்கள் முயன்று பார்த்தனர் ; ஹகீம்கள் (யுனானி மருத்துவர்கள்)அழைக்கப் பட்டனர். பீமாஜிக்கும் வைத்தியம் செய்தவதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை; முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராக தமக்குள்ளேயே பேசிக் கொண்டார். "ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவி விட்டன? இம்மாதிரி இன்னல் படுவதற்கு எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்? "

இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது! சந்தோஷமாக இருப்பவரால் ஒரு கணம் கூட அவர் நினைக்கப் படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 

அவர் வேண்டும்போது வரிசையாக இன்னல்களை தந்து மனிதனை தம்மை ஞாபகப் படுத்திகொள்ளும்படி செய்து, துயரத்தில், "ஓ நாராயாண! என்னைக் காப்பாற்றும்" என்று கதறும்படி செய்கிறார். 

துயரத்தில் பீமாஜி பாடீல் கதறியதை கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார். பீமாஜிக்கு திடீரென்று நானாவுக்கு (நானா சாஹேப் சந்தோர்கருக்கு ) கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 

'மற்றவர்களால் சாதிக்க முடியாததை நானவால் சாதிகக் முடியும். பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.'

இதுவே, பாடீலுக்கு ஒரு சுப சகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியது! அவர் நானாவுக்கு ஒரு விபரமான கடிதம் எழுதினார். 

நானா சாஹேபை பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு சாயி நாதரின் உந்துதலே அன்றி வேறொன்றுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உத்பவம் (உற்பத்தி) ஆயிற்று. ஞானிகளின் செயல் முறைகள் அற்புதமானவை!

கால சக்கரத்தின் சுழற்சியிலும் கூட இறைவனின் திட்டம் இருக்கும் போல தெரிகிறது. ஆகவே, வேறு விதமான கற்பனைகள் செய்து கொண்டு வீண் பெருமை பேச வேண்டாம்.


Thursday 28 August 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

சுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் புண்ணிய காரியங்களை செழிப்பாக செய்திருப்பான்.

ஆனால், எந்த மனிதனும் சுதந்திர முள்ளவன் அல்லன். கர்மத் தளைகள் அவனை பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை. மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.

இதன் காரணமாக, புண்ணியத்தை நாம் லட்சியமாக கொண்டாலும், பாவத்தை நோக்கி வலிமையாக இழுக்கப் படுகிறோம். நற்செயல்களை தேடும் பணியிலே நம்முடல் பாவங்களை தொட்டு விடுகிறது.

என்னிடம் கதை கேட்பவர்களே! புனே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண் காங்கவ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜி பாடீலின் காதையை கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

பீமாஜி பாடீல் ஒரு தன வந்தர். விருந்தோம்பலில், முக்கியமாக அன்னமிடுவ்தில் உற்சாகம் கொண்டிருந்தார். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் மலர்ந்த முகமாகவே இருந்தார்.

ஆனால், விதியின் வழிமுறைகள் விளக்க முடியாதவை. லாபத்தையும் நஷ்டத்தையும் மாறி மாறி கொடுக்கும். அந்தக் கணக்கு நமக்குப் புரியாது. கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன. நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மை துன்புறுத்துகின்றன.

1909 ஆம் ஆண்டு பீமாஜியை பீடை பிடித்தது. நுரையீரல்களை சயரோகம் தாக்கி, ஜூரம் வர ஆரம்பித்தது;

பிறகு, பொறுக்க முடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது; ஜுரம் நாளுக்கு நாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது; பீமாஜி இடிந்து போனார்.

வாயில் சதா நுரை கட்டியது; கோழையிலும் எச்சிலிலும் உறைந்த ரத்தம் வெளியாகியது. வயிறு எந்நேரமும் குமட்டியது; ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

பீமாஜி படுத்த படுக்கையாகிவிட்டார்.  எத்தனையோ நிவாரணங்களை  முயன்று பார்த்தும் பயனில்லாது போயிற்று. உடல் மெலிந்து, காய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜி.

அவருக்கு சோறோ, நீரோ, எதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதி இழக்க செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்க முடியாததாக இருந்தது.

தெய்வங்களை பிரீதி செய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. வைத்தியர்களும் கைவிட்டு விட்டனர். பீமாஜயும் 'பிழைக்க மாட்டேன்' என்று நினைத்து விசாரமடைந்தார்.

Thursday 21 August 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தயாளமுள்ள துணைவரும் சரணாகதி யடைந்தவர்களைப் பாதுகாப்பவரும் பக்தர்களோடு பிணைந்தவருமான சாயியால் எப்படிப்பட்ட அற்புதம் விளைவிக்கப் பட்டது என்று சற்று பாருங்கள்!

கவனத்தை சிதறவிடாது முழுமையாக ஈடுபட்டு நான் சொல்லப் போகும் புதிய காதையை முழுக்க கேளுங்கள்; செய்வன திருந்தச் செய்தவர்களாகிய நன்மையடைவீர்கள். 

சாயியின் முகத்திலிருந்து வெளிப்படும் அமுதமழை, புஷ்டியையும் திருப்தியையும் அளிக்கும் அருட்புனலாக இருக்கும்போது, தம்முடைய நல்வாழ்வுபற்றிய  அக்கறை கொண்டவர் எவராவது ஷீரடிக்கு போகும் யத்தனத்தை கஷ்டமாக நினைப்பாரா?

கடந்த அத்தியாத்தில், சித்தியாகிவிட்ட தம் குருவின் தரிசனம் பெற்றதால் அளவிலா ஆனந்தமடைந்த அக்கினி ஹோத்திரி பிராமணரின் காதை சொல்லப் பட்டது. 

இந்த அத்தியாயம் முன்னதை விட இனிமையானது. க்ஷய ரோகத்தால் (காச நோயால்) ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் கனவுக் காட்சியால் நிவாரணம் பெற்று நல்லாரோக்கிய மடைந்தார். 

ஆகவே, விசுவாசமுள்ள பக்தர்களே! கல்மஷங்களைஎல்லாம் (மன மலங்களைஎல்லாம்) எரித்து விடும் சக்தியுடைய இவ்வற்புதமான சாயி நாத சரித்திரத்தை முழு கவனத்துடன் கேளுங்கள். 

இச் சரித்திரம் கங்கை நீரைப் போன்று புண்ணியமானது; பவித்திரமானது; இஹத்திலும் பரத்திலும் சாதகங்களை அளிக்கக் கூடியது. இதைக் கேட்பவர்களின் காதுகள் எல்லாப் பேறுகளையும் பெற்றவை!

இச் சரித்திரத்தை தேவாமிர்ததிற்கு  உபமானமாக சிலர் சொல்லலாம். ஆயினும் தேவாமிருதம் இவ்வளவு இனிக்குமா என்ன? அமிருதம் உயிரைத்தான் ரட்சிக்கும்; இச்சரித்திரமோ மேற்கொண்டு ஜனனமே இல்லாமல் செய்துவிடும்!

உயிருள்ள ஜீவன்கள் எல்லா சக்திகளும் தங்களுக்கு இருக்கின்றன என்று நினைக்கின்றன. தாம் நினைத்ததைச் செய்ய முடியும் என்று யாராவது நினைத்தால், அவர் இக்காதையை கேட்க வேண்டும். 

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவனை விடுவதாக இல்லை. 

இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தை தவிர்ப்பதில் சாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை. 

அதை உதறித் தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவிகிறது! இரவு பகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப் போகிறது. 

மனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாட மாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேகமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்ல மாட்டான் அல்லனோ?

Thursday 14 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாசாகரமான சாயி திருவாய் மலர்ந்தருளிய சத்தியமான வார்த்தைகளை மிகுந்த வினயத்துடன் கேளுங்கள். 

"யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டு விட்டனவோ அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். -

"சாயி, சாயி என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். -

"எனக்கு அஷ்டோபசார பூஜையோ சோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்."

பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப் படுத்திக் கொள்வதில்தான் மனத்தை திருப்தி செய்து கொள்ள வேண்டும். (நேரில் கேட்க முடியாது).

(இந்த அத்தியாயம் மகாசமாதிக்குப்    பிறகு எழுதப் பட்டது என்பதற்கு இந்த சுலோகத்தை அகச் சான்றாக கொள்ளலாம்.) 


Thursday 7 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

13. பிணி தீர்த்த பெம்மான்

வெளிப்படும் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;- 

பாபாவினுடைய திருவாய் மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமசீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது. வீண் போகாதது. 

"ஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப் போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து! எது பிராப்தமென்று விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட! எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு! சஞ்சலத்திற்கோ  கவலைக்கோ எப்பொழுதும்  இடம் கொடுக்காதே! -

"கவனி ! வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் சலிப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போதே, -

"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிகொள்கிறாள்!-

"அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மவாதி தேவர்களையே நிலை தடுமாறுமாறு  செய்திருக்கிறாள்! இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்க முடியும்?

"ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது."

பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மகிமை இதுவே. மாயையின் பிடியிலிருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளை பாடும் சேவையையே பாபா பரிந்துரை செய்தார். 

"ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீ ஹரியால் உத்தவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதவர் யார்? 


Thursday 31 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப் போகின்றனர். இவ்வாறு இருந்த போதிலும் முக்தியடைந்து கொண்டிருப்பதாக தம்பட்ட மடிக்கின்றனர். 

அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தை விட சுவாரஸ்யமானது. சாயி தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும். 

பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷய ரோகத்திலிருந்து நிவாரண ளிக்கப் பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப் படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன். 

சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையும் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் சமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது. 

மகா யோகிகளால் கண்வீச்சாலேயே  நாஸ்திகர்களையும் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய முடியுமென்றால், ஆஸ்திகருடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அளிக்கப்படுகிறதன்றோ?  

பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மகாத்மா, தம்முடைய கண்நோக்காலேயே கடக்க முடியாத கொடிய பாவங்களையும் அழித்து விடுகிறார். 

பாபாவினுடைய புரிந்து கொள்ள முடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள் மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள். 

எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்   
மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியை பார்க்க முடியும். 

அனன்னியமாக சரணடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான சாயியின் திருவடிகளில் ஹெமாத் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை சாயியின் பொன்னடிகள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு,  சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப் பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்' என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 

Thursday 24 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மூன்தூர் நாள்கள் கழிந்தன; நான்காது நாள் பொழுது விடிந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனமாகக் கேளுங்கள். 

கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக சாயி தரிசனத்துக்காக ஷீரடிக்கு வந்தார். 

ஒன்பது வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே! டாக்டரும் நண்பருடன் மசூதிக்கு சென்றார்; 

போனவுடனே, டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார். "ஆக, டாக்டரே! உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முதலில் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?"

பாணம் போன்ற இந்தக் கேள்வியை கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப் பட்டார். அவருடைய  சங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச் சியால் சோகமாடைந்தார். 

ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய   அருள் அவர் மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமாந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார். 

பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். சாயியின் மீது அவருடைய பக்தி வளர்ந்தது. 

ஒன்றை விட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான சாயி அனுபவங்கள் எத்தனை எத்தனையோ! அவையனைத்தும் இக்காவியத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்கு மெனினும், விரிவுக் கஞ்சி என்னையே நான் கட்டுபடுத்திக் கொள்கிறேன். 

செவி மடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின்   காதையைக் கேட்டு வியப்படைந்திருக்க வேண்டும். அதனுடைய சாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

"ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்   மீது திடமான விசுவாசம் வைக்க வேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது. " இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனதில் பதிக்க வேண்டும். 

இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாக தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை. 

மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப் பெரியதாக இருக்கலாம். நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி எதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின் மேல்தான் இருக்க வேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம். 

எத்தனை இதிகாசங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தை பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவதைப் போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை. 

உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்ம நிஷ்டன்" (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத் திரும்ப திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது. 

Thursday 17 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்ல மாட்டார்" மாம்லதார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் ஷிர்டி செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார். 

தம் நண்பரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார். 

அதிசயத்திலும் அதிசயம்! ஷிர்டியை அடைந்து மசூதிக்கு சென்றவுடனே முதன்முதலில் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்! நண்பரோ பெருவியப்படைந்தார். 

மாம்லத்தார் டாக்டரை கேட்டார், "உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?"

அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார். "நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீ ராமனின் உருவத்தையே! அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமள ரூபமுடையவருமுமான ஸ்ரீ ராமரை வணங்கினேன்.- 

"பாருங்கள், ஸ்ரீ ராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்" டாக்டர் இந்த வார்த்தைகளை சொல்லிகொண்டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தை பார்க்க ஆரம்பித்தார். 

இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்! "இதை எப்படி நான் கனவென்று சொல்ல முடியும்? இவர் எப்படி  ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவே இல்லை! இவர் மகா யோகீஸ்வரனான அவதார புருஷர்."

சோகமேளா என்ற மகா ஞானி ஜாதியில் மகார (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. சஜன் கசாய் என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்?

உலக ஷேமதிற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலிருந்து விடுவிப்பதர்காக்கவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள். 

இந்த சாயி பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதை தரும் தேவ லோக மரம்! இந்தக் கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்! என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து  என்னை தண்ட நமஸ்காரம் செய்ய வைத்து விட்டார். 

அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக் கொண்டார்; ஷீரடியில் உண்ணா விரதம் மேற்கொண்டார். 



Thursday 10 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவை தாம் முதலில் அணுகிய முறையை கைவிட்டு விட்டார். 

பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின! தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார். 

அவருடைய மனம் சமாதனமடைந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார். 

அவர் கொண்டு வந்திருந்த தட்சிணையை பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க் கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார். 

தொண்டை அடைத்தது. "என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்து விட்டேன்" என்று அவர் கூறியபோது அஷ்டபாவம் இதயத்தை அடைத்தது. 

முலே சாஸ்த்ரி உட்பட அங்கிருந்தவர்களைனவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையை கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்படனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு காவிசாயத்தின் மர்மம் விளங்கியது.!

சாயி மகாராஜ் பழையவர்தான். முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளை புரிந்து கொள்ள முடியும்? அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

சாயி தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர் நண்பருடன் ஷீரடிக்கு கிளம்பிய மாம்லதாருடைய அனுபவமும் இது போன்றே  அற்புதமானது. 

அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீ ராமரை உபாசனை செய்தவர். நியம நிஷ்டையுடன் ஸ்நானம், சந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர். 

சாயி பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்ட தேவதையோ ஜானகி ராமன். ஆகவே அவர், தாம் சாயிபாபாவை வணங்க மாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முதலிலேயே எச்சரித்துவிட்டார். 

"நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஷிர்டி செல்வதில் விருப்பம் இல்லை" (என்று டாக்டர் சொன்னார்).

"உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களை தொடச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராகிரஹம் (உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய மாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு ஷிரிடிக்கு போவதற்கு முடிவெடுங்கள்.- 


Thursday 3 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப் நாத்) பாதங்களிலேயே வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார். 

குரு கோலப் சுவாமியை சந்நியாசிகளின் காவி உடையில் பார்த்தவுடனே, முலே சாஸ்திரி ஓடிச் சென்று அவருடைய பாதங்களை கட்டிக் கொண்டார். 

ஒரே கணத்தில் அவருடைய ஜாதி அபிமானம் ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில் கண்டதால் ஞானமென்னும் மையைப் பூசிக் கொண்டு அவருடைய கண்கள் பரிசுத்தமாயின. நிரஞ்சனரான (மாசில்லாத) குருவை கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால் நிரம்பி வழிந்தது. 

கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் ஒழிந்தன; பாபாவின் மேல் அன்பு பீறிட்டது. பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார். 

பல ஜன்மங்களில் செய்த நற்செய்கைகள் பழுத்து, அவருக்கு சாயி தரிசனம் கிடைத்தது. சாயிபாதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்த பொது, தெய்வ அனுக்கிரஹம் தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார். 

'சிறிது தூரத்திலிருந்தே பாபாவின் மீது பூச்சொரிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்கினார்?' கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். 

மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப் பாட்டை பாடிக் கொண்டிருந்த போது, முலே சாஸ்த்ரி மட்டும் குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப் பாட மேலும் மேலும் அவருக்கு குருவின் மேல் பிரேமை பொங்கியது. 

சிறப்பான மடி ஆசார நியதிகள் பற்றிய கர்வம் பிசுபிசுத்துப் போயிற்று. மேல்ஜாதிக்காரனை  தொடலாம், கீழ் ஜாதிக்காரனை தொடக் கூடாது என்னும் பிடிவாதம் உருகிப் போய்விட்டது. மாறாக, ஆனந்தத்தில் கண்களை மூடிக் கொண்டு சாஷ்டங்கமாக பாபாவுக்கு  தண்டனிட்டார். 

கண்களை திறந்து பார்த்தபோது, கோலப் சுவாமி மறைந்து விட்டிருந்தார். அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்து கொண்டு  தக்ஷிணை கேட்டதை பார்த்தார்!

------------------------------------------------------------------------------------------------------------

134 - 2. வேத அங்கங்கள் (வேதாங்கம்) ஆறு 

1. சிக்ஷா - வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு, ஓதும் பொது ஸ்வரத்தை எங்கு உயர்த்துவது, எங்கே தாழ்த்துவது, எங்கே சாதரணமாக ஒலிப்பது என்பது பற்றிய கல்வி. 

2. சந்தஸ் - விருத்தம் அல்லது மெட்டு பற்றிய கல்வி. சமஸ்கிருத மொழியில் சுலோகங்கள், பல மெட்டுகளில் இயற்றப் பட்டிருக்கின்றன. 

3. வியாகரணம் - சமஸ்கிருத பாஷையின் இலக்கணக் கல்வி. 

4. நிருக்தம் - கடினமான பதங்களுக்கு அர்த்தம் - சொல்மூலம், சொல் வடிவம், இவை பற்றிய கல்வி. 

5. கல்பம் - வேத மந்திரங்களை பிரயோகம் செய்து வைதீகச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது பற்றிய கல்வி. 

6. ஜ்யோதிஷம் - வான சாஸ்திரம், சோதிடம், நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கண்டறிவது, இவை பற்றிய கல்வி. 


Thursday 26 June 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

இதெல்லாம் கனவு என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றால், குரு எப்படி இங்கு உடலுடன் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது. பிரமையடைந்தது? சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார். 

இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகத் தம்மையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எதற்காக  எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும்? நான் இங்கிருக்கிறேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன்! (என்று நினைத்தார்). 

முலே சாஸ்திரி பிரதமமாக குரு கோலப்பின் பக்தர். அவருக்கு முதலில் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனதுடன் பாபாவின் பக்தராகி விட்டார். 

உயர் குல பிராமணரான அவர், வேதங்களிலும்1 வேதாங்கங்களிலும் 2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது. 

------------------------------------------------------------------------------------------------------------

1 வேதங்கள் நான்கு. 1. ரிக் வேதம் 2. யஜூர் வேதம் 3. சாம வேதம் 4. அதர்வண வேதம். 
வேத வியாசரிடமிருந்து ரிக் வேதத்தைப் பைலரும், யஜூர் வேதத்தை வைசம்பாயனரும், சாம வேதத்தை ஜைமினியும், அதவர்வண வேதத்தை சுமந்தும் பெற்றுக் கொண்டதாகக் கூறுவார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சிஷ்யர்கள் பலர். அவர்கள் மூலம் பல சாகைகளாக (கிளைகளாக) வேத நெறி பெருகி வந்தது. 

"அனந்தா வை வேதா:" வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய இக, பர நலனுக்கும் இதுவே போதும். அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான  அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வேதங்களை ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நாலு வேதம் என்று சொல்கிறோம். ஆனால், இது ஒவ்வொன்றிலும் பலவிதமான பாடங்கள், பாட பேதங்கள் உண்டு. பாடாந்தரம் என்று இதைச் சொல்வார்கள். 

ஒரே கீர்த்தனமானாலும், ஒரே ராகமானாலும், அதிலே மகா வைத்திய நாதையர் பாணி, கோனேரி ராஜபுரம் பாணி, சரபசாஸ்திரி பாணி என்று வெவ்வேறு தினுசு இருக்கிறது. சில பாணிகளில் அதிகம் சங்கதிகள் பாடுகிற மாதிரி, சில சுக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இருக்கும். ஒன்றுகொன்று  மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும். 

இந்த பாடந்திரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை என்று சொல்வார்கள். சாகை என்றால் கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக் கொண்டு ஒரு மகா விருஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று நாலில் ஒன்றைச் சேர்ந்ததாகவே பிரிந்திருக்கிறது".

- தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி, தொகுப்பாசிரியர் - ரா. கணபதி 

" வேதம் எனப்படுவது மனிதர்களுடைய வாக்கன்று. அது உற்பத்தியான காலம் குறிப்பிடப் படவில்லை. குறிப்பிட முடியாது. வேதம் அநாதி. சிருஷ்டி அளவற்றதாயும் அனாதியாயும் இருப்பது போல் வேதமும் ஆதியும் அந்தமும் அற்றது. இதன் பகுதிகள் பல ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டவை. ரிஷி என்பவர் 'மந்திர-த்ரஷ்டா ' மந்திரத்தை பார்த்தவர். மந்தரம் அவருடைய கருத்தன்று. வேதத்தின் ஒரு பகுதி ஒரு ரிஷியிடமிருந்து வந்ததென்று சொன்னால் ஏற்கெனெவே இருந்த உயரிய கருத்தை (மந்திரத்தை) அவர் கண்டார் என்பதுதான் பொருள்" - சுவாமி விவேகானந்தர்.