ஷிர்டி சாயி சத்சரிதம்
இதெல்லாம் கனவு என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றால், குரு எப்படி இங்கு உடலுடன் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது. பிரமையடைந்தது? சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார்.
இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகத் தம்மையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எதற்காக எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும்? நான் இங்கிருக்கிறேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன்! (என்று நினைத்தார்).
முலே சாஸ்திரி பிரதமமாக குரு கோலப்பின் பக்தர். அவருக்கு முதலில் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனதுடன் பாபாவின் பக்தராகி விட்டார்.
உயர் குல பிராமணரான அவர், வேதங்களிலும்1 வேதாங்கங்களிலும் 2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது.
------------------------------------------------------------------------------------------------------------
1 வேதங்கள் நான்கு. 1. ரிக் வேதம் 2. யஜூர் வேதம் 3. சாம வேதம் 4. அதர்வண வேதம்.
வேத வியாசரிடமிருந்து ரிக் வேதத்தைப் பைலரும், யஜூர் வேதத்தை வைசம்பாயனரும், சாம வேதத்தை ஜைமினியும், அதவர்வண வேதத்தை சுமந்தும் பெற்றுக் கொண்டதாகக் கூறுவார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சிஷ்யர்கள் பலர். அவர்கள் மூலம் பல சாகைகளாக (கிளைகளாக) வேத நெறி பெருகி வந்தது.
"அனந்தா வை வேதா:" வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய இக, பர நலனுக்கும் இதுவே போதும். அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வேதங்களை ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நாலு வேதம் என்று சொல்கிறோம். ஆனால், இது ஒவ்வொன்றிலும் பலவிதமான பாடங்கள், பாட பேதங்கள் உண்டு. பாடாந்தரம் என்று இதைச் சொல்வார்கள்.
ஒரே கீர்த்தனமானாலும், ஒரே ராகமானாலும், அதிலே மகா வைத்திய நாதையர் பாணி, கோனேரி ராஜபுரம் பாணி, சரபசாஸ்திரி பாணி என்று வெவ்வேறு தினுசு இருக்கிறது. சில பாணிகளில் அதிகம் சங்கதிகள் பாடுகிற மாதிரி, சில சுக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இருக்கும். ஒன்றுகொன்று மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும்.
இந்த பாடந்திரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை என்று சொல்வார்கள். சாகை என்றால் கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக் கொண்டு ஒரு மகா விருஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று நாலில் ஒன்றைச் சேர்ந்ததாகவே பிரிந்திருக்கிறது".
- தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி, தொகுப்பாசிரியர் - ரா. கணபதி
" வேதம் எனப்படுவது மனிதர்களுடைய வாக்கன்று. அது உற்பத்தியான காலம் குறிப்பிடப் படவில்லை. குறிப்பிட முடியாது. வேதம் அநாதி. சிருஷ்டி அளவற்றதாயும் அனாதியாயும் இருப்பது போல் வேதமும் ஆதியும் அந்தமும் அற்றது. இதன் பகுதிகள் பல ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டவை. ரிஷி என்பவர் 'மந்திர-த்ரஷ்டா ' மந்திரத்தை பார்த்தவர். மந்தரம் அவருடைய கருத்தன்று. வேதத்தின் ஒரு பகுதி ஒரு ரிஷியிடமிருந்து வந்ததென்று சொன்னால் ஏற்கெனெவே இருந்த உயரிய கருத்தை (மந்திரத்தை) அவர் கண்டார் என்பதுதான் பொருள்" - சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment