ஷீர்டி சாயி சத்சரிதம்
சந்திர சேனிய காயஸ்த ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தவர் ஒருவர் பம்பாயில் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பிரசவ நேரம் வரும்போது உயிருக்குப் போராடுவாள்.
எத்தனையோ வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தனர். எதுவும் குணமளிக்கவில்லை. பிரசவ நேரத்தில் பெண்மணியின் ஜீவன் கலங்கும். கணவர் கவலையில் மூழ்குவார்.
ஸ்ரீராம மாருதி என்ற பெயர்கொண்ட, பிரசித்திபெற்ற சாயி பக்தரொருவர் அளித்த அறிவுரையின்படி கணவர் ஷிர்டிக்குப் போவதென்று முடிவுகட்டினார்.
பிரசவ சமயம் நெருங்கும்போது, இருவருமே பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆகவே, ஷிரிடிக்குப் போவதால் பயத்திலிருந்து பயத்திலிருந்து விடுபடுவதென்று இருவரும் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.
என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் சந்நிதியில்தானே நடந்தாகவேண்டும்? இந்த திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருவரும் வந்து ஷிர்டியில் தங்கினர்.
ஷிர்டியில் அவர்கள் ஆனந்தமாக பாபாவுக்குப் பூஜை செய்துகொண்டும் அவருடைய சகவாசத்தை அனுபவித்துக்கொண்டும் பல மாதங்கள் வசித்தனர்.
இவ்வாறு சிலகாலம் கழிந்தபிறகு, பிரசவக்காலம் நெருங்கியது. சங்கடத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற மனக்கலத்தையும் கூடவே கொண்டுவந்தது.
இவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பிரசவம் ஆகவேண்டிய நாள் வந்துவிட்டது. கர்ப்பப்பையின் வாய் அடைந்திருப்பது கண்டு எல்லோரும் விசாரமடைந்தனர்.
பெண்மணி மிகுந்த யாதனைக்கு (நரக வேதனைக்கு) உள்ளானார். யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபாவை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை ஓடியது. அவரன்றி வேறு யார் கருணைகாட்டப்போகிறார்?
அக்கம்பக்கத்திலிருந்த மகளிர் ஓடிவந்தனர்; அவர்களில் ஒருவர் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டே ஒரு லோட்டாவில் கொஞ்சம் நீர் எடுத்து அதில் உதீயைக் கரைத்து அப் பெண்மணியைக் குடிக்கவைத்தார்.
ஐந்து நிமிடங்களுக்குள் அப் பெண்மணி பிரசவித்தாள். கர்ப்பதிலேயே உயிரிலிந்த சிசு, ஜீவனற்றுக் காணப்பட்டது.
அதுவே சிசுவின் கர்மகதி. பிற்காலத்தில் அப் பெண்மணிக்கு நல்ல குழந்தை பிறக்கலாம். தற்சமயத்திற்கு உயிர் பிழைத்துக்கொண்டாள்; பயத்திலிருந்து விடுதலை பெற்றாள்.
வேதனையின்றி கர்ப்பத்தை வெளிக்கொணர்ந்தாள்; உடல் அங்கங்கள் ஆரோக்கியமாக இருந்தன. மிகுந்த அபாயகரமான கட்டம் தாண்டிவிட்டது. அப்பெண்மணி பாபாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் ஆனாள்.
அடுத்த அத்தியாயம் மேலும் சிறப்பானது. கேட்பவர்களின் ஆவல் செழிப்பாக நிறைவேறும். எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும் கெட்ட குணம் விலகும்; பக்தி வளரும்.