ஷீர்டி சாயி சத்சரிதம்
"ஆகவே, சாயியே எனக்குப் பிரேமையையும் உணர்வையும் ஊட்டி 'வாசி' என்று அருள் பாலித்த பிறகுதான், மன உளைச்சல் ஏதுமின்றி மறுபடியும் ஞானேச்வரி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன்.-
"சாயி ஆணையிட்ட பிறகே, அவருடைய பாதங்களில் நிட்டை வைத்து நான் ஞானேச்வரி படிக்கப் போகிறேன். இவ்வாறு நிச்சயம் செய்தபின் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டேன். " (தேவின் கூற்று)
ஒரு மஹோதயப்பருவ நாளன்று குருபூஜை உற்சவத்தைக் காண்பதற்காகத் தாயார், சகோதரி, இன்னும் சிலருடன் தேவ் ஷிர்டிக்குச் சென்றார்.
அங்கு ஜோக், தேவ் அவர்களைக் கேட்டார், "நீர் ஏன் இப்பொழுதெல்லாம் தினமும் ஞானேச்வரி வாசிப்பதில்லை?" தேவ் அளித்த பதிலைக் கேளுங்கள்.
"ஞானேச்வரியின் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஆனால், அது எனக்கு சித்தியாகவில்லை. இந்த நிலையில், பாபா என்னை எப்பொழுது படிக்கச் சொல்கிறாரோ அப்பொழுதுதான் படிக்கப்போகிறேன்".
ஜோக் ஒரு யுக்தி சொல்லில்கொடுத்தார், "ஞானேச்வரி புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்து சாயி பாபாவின் கைகளில் கொடுங்கள். அவர் அதைத் திருப்பிக் கொடுத்த பிறகு நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்." தேவ் பதிலளித்தார்.
"எனக்கு அதுமாதிரி யுக்திகள் தேவையில்லை. பாபா என் அந்தரங்கத்தை அறிவார். ஆயினும், அவர் ஏன் என்னை 'வாசி' என்று தெளிவாகச் சொல்லி என்னுடைய மனத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை?"
பிறகு தேவ் சமர்த்தரை தரிசனம் செய்தபோது ஒரு ரூபாயை தக்ஷிணையாக அர்ப்பணம் செய்தார். "ஏன் ஒன்று? இருபது கொண்டுவாரும்" என்று பாபா அவரிடம் சொன்னார்.
ஆகவே, தேவ் இருபது ரூபாயைக் கொண்டுவந்து பாபாவிடம் அளித்தார். அன்று இரவு தேவ் பாலக்ராமைச் சந்தித்தார். முன்பு நடந்த நிகழ்ச்சியொன்றால், பாபாவின் கிருபையைப் பெற்ற விவரத்தைச் சொல்லும்படி அவரைக் கேட்டார்.
"நாளைக்கு ஆரத்தி முடிந்தபின் எல்லாவற்றையும் உங்களுக்கு விவரமாகச் சொல்கிறேன்" என்று சொல்லி பாலக்ராம், தேவ் அவர்களை ஆசுவாசப்படுத்தினார். தேவும் 'சரி' என்று சொல்லிவிட்டார்.
அடுத்த நாள் தரிசனத்திற்காக தேவ் மசூதிக்குச் சென்றபோது பாபா அவரிடம் மேலும் இருபது ரூபாய் கேட்டார். தேவும் மிகுந்த சந்தோஷத்துடன் கொடுத்தார்.
மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தேவ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பாபா கேட்டார், "எங்கே? இந்தக் கூட்டத்தின் ஒரு மூலையில் தேவ் எங்கே மறைந்து கொண்டிருக்கிறார்?"