பாபாவின் பக்தர்களில் ஒருவரான சாடே சாஹேப், சமாதியைச் சேர்த்து அதைச் சுற்றியிருந்த நிலத்தையும் வேப்ப மரத்தையும் விலைக்கு வாங்கி, நான்கு தாழ்வாரங்கள் மத்தியில் கூடும்படி ஒரு கட்டடம் எழுப்பினர்.
இக் கட்டடம்தான், இச் சத்திரம்தான் ஆரம்பகாலத்தில் புனிதப் பயணிகளுக்குப் பொதுவான தங்கும் இடமாக இருந்தது. எப்பொழுதும் வருவோரும் போவோருமாக ஜனசந்தடி மிகுந்து இருந்தது.
சாடே வேப்பமரதைச் சுற்றி ஒரு மேடை கட்டினார். தெற்கு வடக்காகக் கட்டடத்தின் மேல்மாடியையும் கட்டினார். வடக்குப் பக்க மாடிப்படியை குருஸ்தானதைப் பார்த்தவாறு கட்டினார்.
மாடிப்படியின் கீழே, தெற்கே பார்த்தவாறு ஒரு அழகான மாடம் இருக்கிறது. அதனெதிரில் வடக்கு நோக்கி பக்தர்கள் மேடையில் உட்கார்ந்துகொள்கிறார்கள்.
"வியாழக் கிழமைகளிலும் வெள்ளிக் கிழமைகளிலும் இவ்விடத்தை சாணியால் மழுகி, சூரிய அஸ்தமன சமயத்தில் ஊதுவத்தி சிறிது நேரமாவது ஏற்றுபவர்களை ஸ்ரீ ஹரி நிச்சயமாக ஆசிர்வதிப்பார். " (சாயியின் திரிவாய் மொழி)
கதை கேட்பவர்களுக்கு இது உண்மையா, மிகை மொழியா என்று மனத்துள் சந்தேகம் எழலாம். இவை சாயியின் முகத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள். என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்.
அனுப்பிரமானமும் சந்தேகப் படாதீர்கள். இது நானே தயாரித்த பிரகடனம் அன்று; இதை நேரில் கேட்டவர்களில் பலர் இன்னும் நம்மிடை வாழ்கிறார்கள்.
பிற்காலத்தில், தீட்சிதர் சத்திரம் விசாலமாகப் பலர் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டது. குறுகிய காலத்துக்குள்ளாகவே முற்பக்கத்தில் புட்டியால் ஒரு கற்கட்டடமும் (இன்றைய சமாதி மந்திர்) கட்டப்பட்டது.
தீஷிதர் ஏற்கனவே புண்ணியகீர்த்தி உடையவர்; விசுவாசமும் பக்தியும் உருவானவர். அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கான விதை, அவர் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றபோது போடப்பட்டது.
'ஹிந்து சம்பிரதாயத்தில் பரிந்துரைக்கப்பட்ட மதுரா, காசி, துவாரகா போன்ற ஷேதிரங்களை எல்லாம் விட்டு விட்டு, இங்கிலாந்திற்குப் போனது எப்படி ஆன்மீக வாழ்வுக்கு வித்தாக அமைந்தது? என்று கதை கேட்பவர்கள் கேள்வி மன்னிக்க வேண்டுகிறேன். வாஸ்தவத்தில் அவர்கள் இதை மெச்சுவார்கள்.
காசி, பிரயாகை, பத்ரிநாத், கேதார்நாத், மதுரா, பிருந்தாவனம், துவாரகாபுரி இத்தியாதி சேத்திரங்களுக்கு புனித பயணம் செய்து, தீட்சிதர் ஏற்கனவே மிகுந்த புண்ணியம் சேர்த்திருந்தனர்.