இதுபோலவே, புட்டி முன்னம் ஒருசமயம் பேதியாலும் வாந்தியாலும் அவதிப்பட்டார். அப்பொழுது ஷீரடியில் காலரா நோய் கண்டிருந்தது. புத்திக்குத் தாகத்தால் தொண்டை வறண்டு போயிற்று. வயிறு எந்நேரமும் குமட்டியது.
ஷிர்டியிலேயே இருந்த டாக்டர் பிள்ளை பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். எதுவும் நிவாரணம் அளிக்காத நிலையில், முடிவாகப் பிள்ளை பாபாவிடம் சென்றார்.
பணிவுடன் பாபாவிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, பிள்ளை பாபாவைக் கேட்டார், "அவருக்கு காபி கொடுக்க வேண்டுமா? அல்லது தண்ணீரே நல்லதா?"
பாபா டாக்டரிடம் கூறினார், "அவருக்குப் பால் கொடுங்கள்; பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளையும் கொடுங்கள்! அவர் குடிப்பதற்கு அரிசி நொய்யும் பருப்பு நொய்யும் சேர்த்துக் கஞ்சி போட்டுக் கொடுங்கள்.-
"அவருடைய தாகமும் அவஸ்தையும் உடனே ஒழியும்." சாராம்சமான விஷயம் இதில் என்னவென்றால், புட்டி அந்தக் கஞ்சியை குடித்தவுடனே அவருடைய வியாதி மறைந்தது!
பாதாம், பிஸ்த, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டுக் காலரா நோய் கண்டவர் நிவாரணம் அடைவதா! இங்கு பாபாவின் வார்த்தைகளே நம்பிக்கையின் அஸ்திவாரம்; சந்தேஹம் என்பதற்கு இங்கு இடமேதுமில்லை.
ஒரு முறை ஆலந்தியிலிருந்து ஒரு சந்நியாசி சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக ஷிரிடிக்கு வந்தார். பாபாவினுடைய ஆசிரமத்திற்கு (மசூதிக்கு) வந்து சேர்ந்தார்.
அவர், காதில் எதோ ஒரு நோயினால் இன்னல்பட்டு, சரியான தூக்கமுமின்றி அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனேவே ஓர் அறுவைச் சிகிச்சையும் நடந்திருந்தது. ஆனால், எள்ளளவும் உபயோகம் ஏற்படவில்லை.
காதுவலி பொறுக்க முடியாமலிருந்தது; எந்த உபாயமும் வேலை செய்யவில்லை. ஆகவே, அவர் ஆலந்தியிலிருந்து கிளம்பி பாபாவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தார்.
சந்நியாசி சாயியின் பாதங்களில் விழுந்து வணங்கி, உதீ பிரசாதம் வாங்கிக் கொண்டு, பாபாவினுடைய அருள் தமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
மாதவராவ் சந்நியாசிக்காக, அவருடைய காதுரோகத்தை நிவிர்த்தி செய்யுமாறு பாபாவை வினயத்துடன் கேட்டுக் கொண்டார். "அல்லா சுகம் செய்துவிடுவார்" என்று மகாராஜ் உறுதி அளித்தார்.
இந்த ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு, சந்நியாசி புனேவுக்கு திரும்பினார். பொறுக்க முடியாத வலி அப்பொழுதே நின்று விட்டது, என்னும் செய்தி தாங்கிய கடிதம் எட்டு நாள்கள் கழிந்து வந்தது.
No comments:
Post a Comment