ஷிர்டி சாயி சத்சரிதம்
"தின்று விடும்" என்று திரும்ப திரும்பச் சொல்லி மகாஜனியின் கையில் வேர்க்கடலைகளை திணித்தார். அவ்வப்பொழுது தாமும் சிறிது வாயில் போட்டுக் கொண்டார். இவ்விதமாக முழுப் பையும் காலியாகியது.
வேர்க்கடலை காலியானவுடன், "தண்ணீர் கொண்டு வாரும், எனக்கு தாகமாக இருக்கிறது" என்று பாபா சொன்னார். காகா ஜாடி நிறையத் தண்ணீர் நிரப்பி பாபாவுக்குத் கொண்டுவந்தார். அதிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு, காகா மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார் பாபா.
காகா தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் சொன்னார். "இப்பொழுது போம், உம்முடைய பேதி நின்றுவிட்டது ! ஆனால், எங்கே? ஓ, எங்கே போய்விட்டனர் அந்த பிராமணர்கள் எல்லாம் போய் அவர்களை எல்லாம் அழைத்து கொண்டு வாரும்".
சிறிது நேரம் கழித்து அனைவரும் திரும்பினார். மசூதி முன்போலவே நிரம்பி வழிந்தது. மறுபடியும் தளம் போடும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. காகா மகாஜனியின் காலராவும் ஒழிந்தது!
ஆஹா! பேதிக்கு எப்படிப்பட்ட மருந்து! உண்மையான மருந்து ஞானியின் சொல் அன்றோ! எவர் அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்கிறாரோ, அவருக்கு மருந்தேதும் தேவை இல்லை.
ஹர்தா நகரத்தில் வாழ்ந்த கிருஹஸ்த்ரோருவர் சூலை நோயினால் (வயிற்று வலியால்) பதினான்கு ஆண்டுகள் அவதிப் பட்டார். எல்லா வைத்திய முறைகளையும் செய்து பார்த்தார். பிரயோஜனம் ஏதுமில்லை.
அவருடைய பெயர் தத்தோ பந்த். ஷீரடியில் சாயி என்று அழைக்கப் பட்ட மகா ஞானி ஒருவர் இருக்கிறார் என்றும் அவருடைய தரிசனமே எல்லா வியாதிகளையும் நிவிர்த்தி செய்துவிடுகிறது என்றும் ஒரு செவி வழிச் செய்தி அவரைச் சென்றடைந்தது.
இக்கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவர் ஷிர்டிக்குச் சென்று பாபாவின் பாதங்களில் தம் சிரத்தை வைத்துக் கருணை வேண்டினார்.
"பாபா, பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இச்சூலை நோய் என்னை விடமாட்டேன் என்கிறது. போதும், நான் பட்டது போதும். நான் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டேன்; இனிமேலும் இவ்வலியை அனுபவிப்பதற்கு எனக்கு சக்தி இல்லை.
"நான் யாருக்குமே துன்பம் இழைத்ததில்லை; எவரையும் ஏமாற்றியதில்லை. மாதா பிதாக்களை அவமதித்து இல்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன கர்மம் செய்தேன் என்று தெரியவில்லை; அதன் காரணமாக இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்!"
ஞானிகளுடைய கருணாகடக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை.
No comments:
Post a Comment