ஷிர்டி சாயி சத் சரிதம்
அணிமா, மகிமா, லகிமா என்னும் அஷ்டமா சித்திகளும் நவநிதிகளும் அவருடைய சன்னிதியில் கை கட்டி சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டு பொம்மையே!
புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி - அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார்.
பார்வைக்கு அவர் ஷிர்டிவாசியைப் போலத் தெரிந்தார். மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறதையும் பெற்றிருக்க வில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனதிலும் வசிக்கிறார்.
அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார். வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்த வேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனதுள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின் மேல் பாசம் இருந்தது.
அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பஹிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார்.
அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், பஹிரங்கத்தில் சில சமயம் பிசாசைப் போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
சில சமயங்களில் மக்களின் மீது பிரேமை காட்டினார். சில சமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சில சமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாக பொழிவார். சில சமயங்களில் ஆனந்தமாக அணைத்துக் கொள்வார்.
ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார்.
எப்பொழுது உள்முகமாகத் திருப்பப்பட்ட மனதுடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்து கொண்டு, இங்குமங்கும் அலைய வேண்டிய தொந்தரவு யாதுமில்லாமல், தம்முடைய சட்காவை சன்னியாசியின் தண்டமாக கொண்டு அவருடைய வாழ்வு எந்தவிதமான கவலையுமின்றி சாந்தமாக இருந்தது.
No comments:
Post a Comment