ஷிர்டி சாயி சத் சரிதம்
ஓ, பாபா எவ்வளவு அடக்க முதியவராக இருந்தார்! எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்! எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை! எவ்வளவு மரியாதை!
பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டு விட்டது எனில், அதைக் காது கொடுத்து கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனில், சாயி நாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்று விடும்.
சாயியினுடைய அருள் பல ஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன், தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர் பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவது போல் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியது போல் பார்வையாளர்களுக்கு தெரிந்த போதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது.
புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிலிருந்து வரும் இன்பங்களை ஆர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிகொள்வார்?
கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை.
ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரமச்சரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்தத்தில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மச்சரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறேவரைச் சொல்ல முடியும்?
தாயே பிறவி உறுப்புகளை பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப் பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரமச்சரியமும் அவ்வாறானதே ; பூரணமானது; அபூர்வமானது.
அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதை தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக் கோளங்களை போல, இருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை.
பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்த விதமான ஆசையும் இல்லை; ஆசைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை!
சத்துவம், இராஜசம், தாமசம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பது போல் வெளிப்பார்வைக்கு தெரிந்தது; 'செயல் புரிபவரைப் போலக் கூடத் தென்பட்டார். ஆனால் , உண்மையில் அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு, உடலின்மீது எவ்விதமான பற்றும் இல்லாமல் இருந்தார்.
No comments:
Post a Comment