valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்
திண்டின்மேல் சாய்ந்துகொண்டு இருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.

"பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டி பற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.-

"சாம்ராவ் இக்கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையை சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அனுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. (தாபோல்கர்)

இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார். "சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அனுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்?"

நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்தால் அது என் மனதில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்கு தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்கு தோன்றியது.

இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாக கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், "இதை உமது மனதில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்."

மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், "நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானது! ஆனால், அது உம்முடைய மனதில் பதிந்ததா? அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாக தெரிந்ததா?"

"பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய சந்தேங்களுக்கும் மன உளைச்சலும் பறந்து போயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தை கண்டுகொண்டேன்".

பாபா கூறினார், "நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை அல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.-

"ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடைப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனதிருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.-

"முதல் காரியமாக, ஆசைகளில் இருந்து விடுபட வேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனதிற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும். -


No comments:

Post a Comment