ஷீர்டி சாய் சத்சரிதம்
தூங்கினாலும் விளித்தாலும் ராமனே
எங்கு நோக்கினும் பூர்ணகாமன் ராமனே தெரிகிறான் (2)
ஜனார்த்தருடைய சிஷ்யன் ஏகநாதன்
எங்கும் எப்பொழுதும் ராமனையே காணும்
உன்னதமும் புனிதமும் அடைகிறான் ." (3)
மனம் ஏற்கெனவே ராமநாமத்தின் மீது ஒருமுகப்படவேண்டும் என்று நிச்சயம் செய்து விட்டது. இந்த நிச்சயத்தைச் செயல்படுத்திய உடனே, இப் பாட்டிலிருந்து ஊர்ஜிதமும் கிடைத்தது.
இதன் விளைவாக, கருணாமூர்த்தியான சமர்த்த சாயி என்னுடைய தீர்மானம் என்னும் நாற்றின்மீது இப்பாட்டு என்னும் நீரைத் தெளிக்கிறாரோ என்று தோன்றியது.
தம்பூராவை ஏந்தி, மசூதியின் முற்றத்தில் சாயிநாதருக்கு எதிராக நின்று கொண்டு ஒளரங்காபாத்கர் உச்சஸ்தாயியில் பயாடிக் கொண்டிருந்தபோது கேட்டேன்.
ஒளரங்காபாத் பாபா பக்தர்; என்னைப் போலவே பாபாவிடம் அனுரக்தி (மிகுந்த அன்பு) கொண்டவர். எவ்வளவோ பாட்டுகள் பாடாந்தரமாகத் தெரிந்த இவர், இந்த நேரத்தில் இந்தப் பாட்டைப் பாட வேண்டுமென்று எவ்வாறு உணர்வூட்டப் பட்டார்?
என்னுடைய மனதில் நான் என்ன தீர்மானம் செய்துகொண்டேன் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், அவர் இந்த நேரத்தில் இக்குறிப்பிட்ட பாட்டை ஏன் பாட வேண்டும்? பாபா எவ்வாறு நூலை இழுக்கிறாரோ, அவ்வாறே நாம் உள்ளுணர்வு பெறுகிறோம்!
நாமெல்லாரும் பொம்மைகளே; சாயிமாதாவே பொம்மலாட்டத்தின் சூத்ரதாரி. ஒரு வார்த்தையும் பேசாமலேயே, உபாசனை செய்ய வேண்டிய முறையை என் கைகளில் அளித்துவிட்டார்.
என்னுடைய மனத்தின் ஆழமான எண்ணங்கள் பாபாவின் மனதில் பிரதிபலித்தன போலும்! இந்த வழியில் எனக்குப் பிரத்யக்ஷமாகவும் நிச்சயமாகவும் ஓர் அனுபவத்தை அளித்துவிட்டார்.
ஞானிகளும் மதகுருமார்களும் விளக்கியவாறு, நாமத்தின் மஹிமைதான் என்னே! என்னைப் போன்ற ஒரு பாமரன் மேற்கொண்டு என்ன விளக்க முடியும்? நாமத்தின் மூலமாகத்தான் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியும்.
'ராம' என்னும் இரண்டெழுத்து சொல் தலைகீழாக திருப்பப்பட்டு (மரா) ஜபம் செய்யப்பட்டதாலேயே , வேடனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனும் ஆகியவன், வால்மீகி என்று பெயர் பெற்ற ரிஷி நிலைக்கு உயர்த்தப்பட்டான். தான் பாடியதெல்லாம் உண்மையாக நிகழும் வாக்கு சித்தியையும் பெற்றான்.
'மரா' 'மரா' என்று 'ராம' என்னும் நாமத்தைத் தலைகீழாக ஜபித்த அவருடைய நாவை ஸ்ரீ ராமர் ஆசிர்வதித்தார். ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை வால்மீகி எழுதிவிட்டார்!
No comments:
Post a Comment