valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 8 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அப்பொழுது, உடன் வந்தவர்கள் அவரிடம் கூறினார், "நீங்கள் எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?  கேவலம், கொடிகள் ஏன் உங்கள் மனத்தை இவ்வாறு கலவரமடையச் செய்கின்றன?-

"நாம் இப்பொழுது மிக அருகில் வந்துவிட்டோம்.  தேர், பல்லக்கு, குதிரை, இத்தியாதி பரிவாரங்களைப் பார்த்தால், நீர் இன்னும் எவ்வளவு கலவரமடைவீர்!"

இந்தக் கேட்ட சுவாமி மேலும் எரிச்சலுற்றார்.  "முரசுகளையும் பல்லக்குகளையும் குதிரைகளையும் வைத்துக்கொண்டு ஜம்பம் காட்டும் சாதுக்கள் - ஆஹா ! இவர்களை நான் கொஞ்சமாகவா பார்த்திருக்கிறேன்!"

இவ்வாறான எண்ணங்கள் மனத்துள்ளே ஓட, சோமதேவஜி திரும்பிவிடத் தயாரானார்.  அவர் நினைத்தார், "ஷீர்டி செல்வது பற்றிய எண்ணம் நல்லதில்லை. நதிக்குச் (கோதாவரிக்குச்) செல்லும் பாதையில் திரும்புவதே நல்லது!"

ஆனால், உடன் வந்தவர்கள் அவரை இல்லை. "நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் தயவுசெய்து திரும்பிச் செல்லாதீர்!-

"இவ்வளவு தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் வாருங்கள்.  தர்க்கம் செய்ய வேண்டா.  மசூதியின்மேல் பறக்கும் கொடிக்கும் சாதுவுக்கும் சம்பந்தம் இல்லை.-

"ஏனெனில், இந்த சாதுவுக்குக் கோடி தேவையில்லை; புகழ் தேவையில்லை; கௌரவமும் தேவையில்லை. கிராமத்தில் வசிக்கும் மக்கள்தாம் பக்திக்குப் பிரமாணமாக இம்மாதிரியான பூஷணங்களை (அணிகலன்களை) விரும்புகின்றனர். 

"ஆகவே, நீங்கள் கொடியைப் பார்க்க வேண்டா.  சும்மா சென்று தரிசனம் செய்யுங்கள்.  அங்கு ஒரு கணமும் அதிகமாகாத் தங்க வேண்டா; உடனே திரும்பிவிடுங்கள்."

இதனிடையே குதிரைவண்டி ஷிர்டியை நெருங்கிவிட்டது.  ஆகவே, மேற்கண்ட நேர்மையான உபதேசத்தைக் கேட்ட சுவாமி நினைத்தார், 'மனக்கலக்கத்தை ஒருவழியாக ஒழித்துவிடலாமே.  குற்றவுணர்ச்சியாவது இல்லாது போகும்!'

சமர்த்த சாயியின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது.  அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது.  பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது. 

சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன.  பாபாவின் பாததூளியில் ஸ்நானம்  செய்வதற்கு மனம் துடித்தது. 

அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன.  மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது.  தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது.  பாபாவின் சகுணரூபம் கண்களில் பதிந்தது.  புவா (சுவாமி)  ஆனந்தக்கடலில் மிதந்தார்!

கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார்.  தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார்.  அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார். 


 

Thursday, 1 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஆனால், சுவாமிஜியின் மனத்தியல்பு நானாவிதமான தர்க்கங்களையும் குதர்க்கங்களையுமே நாடியது.  தூரத்திலிருந்தே ஷிர்டியின் கொடிகளைப் பார்த்த அவருக்குக் கற்பனைகள் பல உதித்தன. 

அவருடன் கூட இருந்தவர்கள் மசூதியின் கலசத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கிடைக்கப்போகும் சாயிதரிசனம்பற்றி சுவாமிஜியின் மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கொடியை தரிசனம் செய்யும்போதே பக்தி பூரித்தெழுகிறது.  இதுதான் எல்லாரும் அடையும் அனுபவம். இதுவே பக்திப்பிரேமையின் லக்ஷணம் (இயல்பு).  இதில் வழக்கத்திற்கு மாறானது ஏதும் இல்லை. 

ஆனால், தூரத்திலிருந்தே கொடியைப் பார்த்த சுவாமியின் அற்பமனத்தில் கற்பனைக்குமேல் கற்பனையாக உதித்தன.  அவருடைய மனத்தின் விசித்திரமான இயல்பு அது!

பதாகைகளின் மீது (விருதுக்கொடிகளின்மீது)இவ்வளவு விருப்பம் வைத்தல் சாதுவின் குணமாகுமா?  தேவாலயத்தின்மேல் கொடி பறக்கவிடுவது சாதுத்துவத்திற்கு  கறை அன்றோ!

ஒரு சாது இவ் வழியில் மரியாதை தேடுவது, அவர், கேவலம் கௌரவத்தையும் புகழையும் நாடுவதையே காட்டுகிறது.  இவ்வகையான சாதுத்துவம் மனத்தை ஈர்ப்பதில்லை. உண்மையில் இது இவர்களின் பெருங்குறைபாடு!

சாராம்சம் என்னவென்றால், ஒருவரின் மனச்சாயல் எப்படியோ அப்படியே அவர் சாதுக்களை அணுகும் முறையும் அமையும்.  சுவாமியின் மனம் தீர்மானித்தது, ""எனக்கு ஸாயீயின் அனுக்கிரஹம் வேண்டா.-

"நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்." சுவாமி பாபாவின் மீது இழிவுணர்ச்சி கொண்டார்.  அங்கிருந்து உடனே திரும்பிவிட அவசர முடிவெடுத்தார். 

"இது புகழுக்கும் பகட்டுக்கும் ஆசைப்படும் வீண்பெருமையன்றி வேறெதுவும் இல்லை.  ஒரு சாதுவுக்குப் படாடோபம் எதற்கு? கொடியைப்பற்றி என்னால் வேறெந்த காரணத்தையும் அனுமானிக்க முடியவில்லை.-

"இந்த சாது கொடியைப் பறக்கவிட்டுத் தம்முடைய பெருமையைப் பீத்துகிறார்.  இதுவே இவருடைய சாதுத்வத்திற்குப் பெருங்குறையாக ஆகிவிட்டது.  இந்த சாதுவை நான் எதற்காக தரிசிக்கவேண்டும்?"-

"இம்மாதிரியான தரிசனத்தால் மனம் என்ன நிம்மதி பெரும்? ஆஹா! பறக்கும் இந்தக் கொடி டம்பத்தையே பறைசாற்றுகிறது! இதிலிருந்து எந்த விதமான மனவொருமைப்பாடும் கிடைக்காது."

ஆகவே, அவர் தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார், "நான் வந்தவழியே திரும்பிச் செல்வதே நல்லது.  தரிசனம் செய்ய நினைப்பது நற்சிந்தனையாகத் தெரியவில்லை.  அடடா! நான் எப்படி ஏமாறிப்போனேன்!" 

 


 

 

Thursday, 25 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

முதலில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  பின்னர், வழியில் பரஸ்பரம் சந்தித்தபோது குசலம் விசாரித்தனர்.  சந்தோஷமாக உரையாடினர். 

பேசப் பேச, நட்பு மலர்ந்தது; பிரேமை வளர்ந்தது; ஒருவரையொருவர், வசிப்பிடம் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டனர். 

"நீங்கள் ஹரித்துவாரில் வசிக்கிறீர்கள்.    நாங்கள் நாகபுரியில் (நாக்பூரில்) வசிக்கிறோம்.  நீங்கள் எப்பொழுதாவது அந்தப் பக்கம் வரும்படி நேர்ந்தால் எங்களுக்கு தரிசனம் தாருங்கள். -
 
"திருத்தலப் பயணமாக நாகபுரிக்கு வந்தால், எங்களுடைய இல்லதைப் புனிதப்படுத்துங்கள்.  மறுபடியும் தரிசனம் தாருங்கள்.  சிறிய சேவைகள் செய்ய எங்களை அனுமதியுங்கள்.-

"எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  எங்களுடைய இல்லத்தில் பாதம் பதித்து அதை புனிதமாக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை." (பாயீஜி) சுவாமிஜி பதில் கூறினார். "நாராயணர் உமது இச்சையைப் பூர்த்திசெய்வாராக."

1906 ஆம் ஆண்டு, உத்தரகாசிப் பிரதேசத்தில் இவ்விருவருக்குமிடையே நடந்த சம்பாஷணை மேற்கண்டவாறு. 

பரஸ்பரம் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.  மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரிந்தனர். 

ஐந்தாண்டுக் காலம் கழிந்தது.  சுவாமிஜி சாயியை சந்திக்கவேண்டிய வேளை நெருங்கியது.  பாயீஜியைக் காணவேண்டுமென்ற உந்துதல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. 

ஆகவே, 1911 ஆம் ஆண்டு,  சுவாமிஜி நாக்பூருக்கு வந்தார்.  சாயீநாதரின் பவித்திரமான சரித்திரத்தை கேட்டு ஆனந்தமடைந்தார். 

ஷீர்டி க்ஷேத்திரத்தை சுவாமிஜி சென்றடைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின்,  பாயீஜி ஒரு சிபாரிசு கடிதமும் கொடுத்தார். இதன் பிறகு சுவாமி நாக்பூரை விட்டுக் கிளம்பினார். 

மன்மாடில் இறங்கியபோது கோபர்காங்வ் ரயில்வண்டி தயாராகக் காத்திருந்தது.  கோபர்காங்வில் ஒரு குதிரைவண்டியில் ஏறி ஆனந்தம் நிரம்பியவராக சுவாமிஜி சாயீதரிசனத்திற்குச் சென்றார். 

எங்கே சென்று பார்த்தாலும் சாதுக்களுடைய பழக்கவழக்கங்களும் நடையுடைபாவனைகளும் ஒரே சீராக இருப்பதில்லை. ஒருவர் ஒருவிதம், இன்னொருவர் வேறுவிதம்.  அவர்கள் ஒரே விதமாக எங்கும் இருப்பதில்லை. 

ஒரு ஞானியின் பழக்கவழக்கங்களும் அனுஷ்டானமும் இன்னொரு ஞானிக்குப் பிரமாணம் (அளவுகோல்) ஆகா. இவற்றில் எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அனுமானிக்க நம்மிடம் சாதனம் ஏதும் இல்லை. 

கேட்கப்போனால், ஞானியை தரிசனம் செய்யச் செல்பவர் இதைப்பற்றி எதற்காக மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? ஒரு ஞானியின் நடைமுறையை ஆராய்ச்சி செய்யப் புகுபவர் தமக்கே தீங்கு இழைத்துக்கொள்வார் அல்லரோ?

 


 

Thursday, 18 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கோடி ஜென்மங்களின் புண்ணியம் ஒன்றுசேரும்போதுதான் ஞானிகளின் அருகே செல்லமுடியும். ஞானிகளைச் சென்றடையும் பாக்கியம் கிடைப்பவர்களுக்குத்தான் பக்தி மலரும்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் உலகியல்வாழ்வுதான்.  நம்முடைய பற்றுகளும் அதன்மீதே.  அதிலிருந்து விடுபடும் வழியை அறியோம். மனத்தின் இயல்பு இவ்வாறிருக்கும்போது பக்தி எப்படி உண்டாகும்?

நம்முடைய பக்தி எவ்வளவோ, அவ்வளவே நாம் அடையும் பேறுகளும். இந்த விதி எக் காலத்துக்கும் பொருந்தும்; இதன்படியே எல்லாம் நடக்கும்; இதைப்பற்றி எள்ளளவும் பிராந்தி (மனமயக்கம்) வேண்டா. 

இரவுபகலாகப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக நாம் சாயியைச் சுற்றிக் குழுமியுள்ளோம்.  ஆகவே, நமக்கு கிடைப்பனவும் அவையாகத்தான் இருக்கும்!  அதேசமயம், பரமார்த்ததை (வீடுபேறு)  நாடுபவர்களுக்குப் பரமார்த்தம் கிடைக்கும். 

ஆக, இப்பொழுது, சோமதேவ சுவாமி என்னும் பெயர் கொண்டவரும் சாயியை சோதித்துப் பார்க்க ஷிர்டிக்கு நேரில் வந்தவருமான இன்னொரு நபரின் கதையைக் கேளுங்கள். 

1906 ஆம் ஆண்டு, உத்தரகாசியில் ஒரு தருமசத்திரத்தில் தங்கியிருந்த காலத்தில், சோமதேவ சுவாமி, பாயீஜி என்று மனிதரை சந்தித்தார். 

கைலாஸவாசியும் பிரசித்தி பெற்றவருமான ஹரி சீதாராம் தீக்ஷிதரின் சகோதரர் இந்த பாயீஜி. பத்ரிகேதார் புனிதப் பயணம் சென்றபோது வழியில் பாயீஜி சோமதேவ சுவாமியை சந்தித்தார். 

பத்ரிநாத், கேதார்நாத் தரிசனத்தை முடித்துக்கொண்டு பாயீஜி மலைப்பாதையில் கீழே இறங்கினார்.  வழியில் ஒவ்வோர் ஊராகக் கடந்து வந்தபோது பல சத்திரங்களைக் கண்டார். ஒரு சத்திரத்தில் யாத்திரிகர்கள் சிலர் அமர்ந்திருப்பதை பார்த்தார். 

அவர்களில் ஒருவர், பிற்காலத்தில், ஹரித்துவார் சுவாமி என்னும் பெயரால் எல்லாராலும் அறியப்பட்டார். அவர் பாபாவின் வசீகரிப்புக்கு உள்ளானார். 

அவருடைய கதை இது; நற்போதனை அளிக்கும்; பாபாவின் சொரூபத்தை விளக்கும்;  கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்; எல்லாருக்கும் ஆனந்தமளிக்கும். 

பாயீஜி காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சத்திரத்திலிருந்து வெளியே சென்றபோது இந்த சுவாமிஜியை வழியில் சந்தித்தார்.  சகஜமான உரையாடல் மூலமாக இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகியது. 

இந்த சந்திப்பு ஏற்பட்டது கங்கோத்திரிக்குக் கீழ்ப் பிரதேசத்தில், டேரா டூனிலிருந்து நூற்றுநாற்பது மைல் தூரத்திலிருக்கும் உத்தரகாசி என்னும் ஊரில் சகவாசம் ஏற்பட்டது. 

கையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்காக சுவாமி காலைநேரத்தில் சென்றார்.  பாயீஜியும் அந்த இடத்திற்கு அதே நோக்கத்துடன் சென்றார். 


 

Thursday, 11 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


முடிவில், பையனுக்கு நம்பிக்கை பிறந்தது.  செருப்புகளை ஹரிபாவூவிடம் ஒப்படைத்தான்.  ஹரிபாவூவின் மனோரதம் நிறைவேறியது.   சாயி ஒரு ஞானி என்ற சுயானுபவம் ஏற்பட்டது!

"என்னுடைய தலைப்பாகைக்கு ஜரிகைக் கரை உண்டென்பது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.  எல்லாரும் காணும்படியாக அது என் தலைமேல் இருக்கிறது.-

"ஆயினும், நான் ஒரு அசலூரான். ஷிர்டிக்கு முதல் தடவையாக இன்றுதான் வந்திருக்கிறேன்.  என் பெயர் ஹரி என்பது பாபாவுக்கு தெரியும்?"-

"இங்கிருப்பவர் எவருமே என் பிதா கானோபாவைப் பார்த்ததில்லை. ஆயினும், 'கா' என்ற எழுத்தால் அவருடைய பெயர் கோடிகாண்பிக்கப்பட்டது.  இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. 

"அப்பொழுது, என் நண்பர்கள் ஞானி சாயியின் மஹிமையை விளக்கியபோது நான் அவர்களுடைய வார்த்தைகளை அவமதித்தேன்.  அதுபற்றி எனக்கு இப்பொழுது பச்சாதாபம் (செய்த குற்றத்தைக் குறித்து வருத்தம்) ஏற்படுகிறது. 

"இப்பொழுது, எனக்கே அனுபவம் கிடைத்தபின் சாயியின் பிரபாவத்தை அறிந்துகொண்டேன்.  ஸ்ரீஸாயி ஒரு மஹானுபவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை."

மனம் எப்படியோ அப்படியே பாவம். ஹரிபாவூவின் அனுபவமும் அவ்வாறே.  ஞானிகளை பரீட்சை செய்து பார்க்கவேண்டுமென்ற ஆசையே அவருடைய சுபாவம் (இயல்பு).  ஆன்மீக முன்னேற்றத்தில் அவர் மனம் பதிக்கவில்லை. 

சமர்த்த சாயி ஒரு மஹானுபாவர் என்பதை நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடைய அனுபவங்களால் விவரித்தனர்.  அந்தப் பதுமைத் தாமே நேரில் பார்க்கவேண்டும் என்பது ஒன்றுதான், அவர் ஷீர்டி சென்றதற்கே காரணம். 

'ஞானியின் பாதங்களில் ஜீவனை வைத்து இறைவனை அடையவேண்டும்' என்னும் விருப்பம் அவர் மனத்தில் சிறிதளவும் இல்லை.  பச்சோந்தியால் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்?

அற்புதம் காணவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் ஞானியின் வாயிற்படிக்குச் சென்றவருடைய தொலைந்துபோன புத்தம்புதிய ஜோடி செருப்பு, அவர் இருந்த இடத்தைத் தேடிக் கொண்டுவந்தது. 

கேவலம், ஒரு ஜோடி செருப்பு தொலைந்துபோனதால் என்ன பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கமுடியும்?  ஆயினும், அதைப்பற்றி அவருடைய மனம் ஓயாமல் அரித்துக்கொண்டிருந்ததால், செருப்பு திரும்பி வரும்வரை மனம் அமைதியடைவில்லை. 

ஞானிகளை அடைவதற்குண்டான மார்க்கங்கள் இரண்டு. ஒன்று பக்தி, இரண்டாவது ஞானம்.  ஆனால்,  ஞானமார்க்கத்தில் ஆயாசம் (களைப்பு) விண்ணவளவு; பக்தி மார்க்கத்தின் முயற்சிகள் சுலபமானவை. 

பக்தி மார்க்கம் அவ்வளவு சுலபமெனில், ஏன் எல்லாரும் அந்த வழியில் நடப்பதில்லை?  ஏனெனில்,  அதற்குப் பெரும்பாக்கியம் தேவைப்படுகிறது.  அது இருந்தால்தான் அவ்வழியில் நடக்கமுடியும்.  

 


 

Thursday, 4 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

சஞ்சலமும் வருத்தமும் அவர் மனத்தை நிரப்பின.  அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. கோஷ்டியுடன் அவரும் கை கழுவ வெளியே வந்தார். 

எதிர்பாராது அங்கு ஒரு மராட்டிப் பையன் திடீரன்று தோன்றினான். ஒரு கோலை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தான்.  கோலின் நுனியில் காணாமற்போன செருப்புகள் தொங்கிக்கொண்டிருந்தன!.

சாப்பிட்டபின் மக்கள் கையைக் கழுவிக்கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில், யாரையோ தேடிக்கொண்டு வந்த அந்தப் பையன் சொன்னான், "பாபா இந்தக் கோலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். -

"பாபா பாடம் சொன்னார், 'மகனே, ஹரீ கா பேட்டா, ஜரீ கா பேடா  (ஹரி, கானோபாவின் மகன், ஜரிகைத் தலைப்பாகை அணிந்தவர்) என்று கூவிக்கொண்டே போ.  இவை என்னுடையவை என்று தெரிவித்து எவர் உன்னிடம் உற்சாகமாக ஒட்டிக்கொள்கிறாரோ, அவரிடம் கொடுத்துவிடு. -

"ஆனால், முதலில் அவர்தாம் ஹரி கா பேடா என்பது, ஜரீ கா பேடா என்பதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும். நீ முதலில் அதிகம் பேசாதே.  ஊர்ஜிதம் ஆனபின் செருப்புகளைக் கொடுத்துவிடு."

கூவலைக் கேட்டுத் தம்முடைய செருப்பை அடையாளம் கண்டுகொண்ட ஹரிபாவூ ஆச்சரியம் நிரம்பிய மனத்துடன் தாவியடித்து முன்னேறினார். 

விழிகளில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.  உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது.  தொலைந்துபோன செருப்பை மீண்டும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார். 

ஹரிபாவூ பையனைக் கூவியழைத்தார், "ஏய் , ஏய், இங்கு வா.  அந்தச் செருப்பை என்னிடம் கொண்டுவா  !"  செருப்புகளைக் கருத்துடன் பரிசோதித்தபின் கேட்டார், "இவற்றை நீ எங்கே கண்டெடுத்தாய்?  விவரத்தை எனக்கு சீக்கிரமாகச் சொல்!".

பையன் பதிலுரைத்தான், "அது எனக்குத் தெரியாது. நான் பாபாவின் ஆணையை மதித்து நடக்க வேண்டும். ஹரீ கா பேடா யாரோ, அவர் தம்முடைய ஜரிகைத் தலைப்பாகையை என்னிடம் காட்டவேண்டும். -

"அவரிடந்தான் நான் செருப்பைக் கொடுப்பேன்.  வேறு யாரையும் நான் அங்கீகரிக்கமாட்டேன். பாபா அளித்த குறிப்புகளோடு யார் சரியாகப் பொருந்துகிறாரோ, அவர்தம் செருப்பை எடுத்துக்கொள்ள முடியும்".

ஹரிபாவூ சொன்னார், "ஏ பையா, இவை என்னுடையவை."  ஆனால், பையன் கொடுக்க மறுத்தான்.  ஆகவே, பாபா அளித்த குறிப்புகள் பற்றிய விவரங்களை அளித்துப் பையனை ஹரிபாவூ நம்பவைத்தார். 

ஹரிபாவூ சொன்னார், "பையா, என்னுடைய பெயர் ஹரி.  நான் கானோபா என்பவரின் மகன். பாபா சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மை.  அவை எனக்கு முழுமையாக பொருந்துகின்றன. 

"இதோ, இந்த ஜரிகைத் தலைப்பாகையைப் பார். உன்னுடைய மனத்திலிருந்து சந்தேகம் விலகும்.  செருப்புக்கு நான்தான் சொந்தக்காரன் என்பது ருசுவாகும்.  வேறு யாரும் செருப்புக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது."

 


 

Thursday, 27 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஹரிபாவூ, ஷிர்டியை நோக்கிக் கிளம்பியபோதே சமர்த்த சாயிக்கு ஹரிபாவூ, வரும் காரணம் தெரிந்துவிட்டது!  வெறும் அற்புதங்களை அனுபவிக்க விரும்புவர்; அவருடைய தகுதி அவ்வளவே!

ஆகவே, அவருக்கு அதுவே அளிக்கப்பட்டது.  அவரும் ஆட்கொள்ளப்பட்டார்!  அவ்விதமாக, அவர் பட்ட சிரமும் பயனுடையதாயிற்று. யுக்திகளைப் பிரயோகிப்பதில் (எய்தலில்) ஞானிகள் எத்தகைய வித்தகர்கள்!

கோபர்கங்காவில் ஹரிபாவூ தம் நண்பருடன் ஒரு குதிரைவண்டியில் ஏறினார்.  கோதாவரி நதியில் ஸ்நானம் செய்த பிறகு ஷிர்டிக்குப் பயணமானார். 

ஷீர்டி வந்துசேர்ந்தார்.  கால்களையும் கைகளையும் கழுவிக்கொண்டு ஞானியைப் பார்பதற்காகக் கிளம்பினார். 

தலையில் ஒரு ஜரிகைத் தலைப்பாகையையும் கால்களில் புத்தம்புதிய ஜோடி செருப்பையும் அணிந்துகொண்டு ஹரிபாவூ சாயி பாபாவை தரிசனம் செய்ய உற்சாகமாக வந்தார். 

மசூதியை நெருங்கியபோது சாயியை தூரத்திலிருந்தே பார்த்த ஹரிபாவூ, பாபாவின் சந்நிதிக்குச் சென்று நமஸ்காரம் செய்ய விரும்பினார். 

ஆனால், புதிய ஜோடி செருப்பு இதற்கு ஒரு தடங்கலாக அமைந்தது.  அதை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. கடைசியில், ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அவற்றை உள்ளே தள்ளினார். 

பிறகு தரிசனத்திற்காக மேலே சென்றார். அன்புடன் சாயிபாதங்களில் வணங்கினார். உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு திரும்பினார். வாடாவுக்குத் திரும்ப முனைந்தார். 

ஆனால், செருப்புகளை அணியச் சென்றபோது, அங்கு அவை காணப்படவில்லை. எங்கெங்கோ தேடினார்; கிடைக்கவில்லை. நம்பிக்கையை அறவே உதறிவிட்டு வாடிய முகத்துடன் வெறும் காலோடு வாடாவுக்குத் திரும்பி வந்தார். 

அங்கு எத்தனையோ மனிதர்கள் சதா போவதும் வருவதுமாக இருந்தனர். யாரிடம் சென்று கேட்பது?  அவருக்கு யோசனை ஏதும் தோன்றவில்லை. 

அவருடைய மனம் நிம்மதியிழந்து குழம்பியது.  தொலைந்துபோன செருப்பு மனக்கண்முன்னே வந்து நின்றது. அவருடைய மனத்தைச் செருப்புப் பற்றிக்கொண்டது. சிந்தனையெல்லாம் செருப்புமயம் ஆயிற்று! 

"அய்யகோ! எவ்வளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அது வாங்கப்பட்டது! அந்தச் செருப்புத் தொலைந்துபோய்விட்டது; தொலைந்துபோவிட்டது!  யாரோ ஒரு திருடன் அவற்றைத் திருடிவிட்டான். இது நிச்சயம் ." (ஹரிபாவூவின் புலம்பல்)

ஆனபோதிலும், பிறகு அவர் ஸ்நானம் செய்தார். பூஜை, நைவேத்தியம் ஆகியவை முடிந்தபிறகு பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்தார். ஆனால், மனம் சமாதானமடையவில்லை. 

"சபாமண்டபம் சாயியின் இடம். சாயியின் கண்ணில் படாமல் யார் என்னுடைய செருப்பைத் திருடியிருக்க முடியும்? பெரிய ஆச்சரியமாக இருக்கிறதே!"