valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 8 April 2021


 ஷீர்டி சாய் சத்சரிதம்

'நான் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன்' என்று ஆப்பா வாய்விட்டுச் சொல்லி இருந்தால், முழுப்பணத்தையும் கொடுக்காது அவர் எப்படித் தம் வாக்கைக் காப்பாற்றமுடியும்; எப்படிக் கடனிலிருந்து விடுபடமுடியும்?

இந்தப் பக்கீர் மற்றவர்களைப் போல் அல்லர். கையில் கிடைத்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பிப்போக, அவர் என்ன ஊர் ஊராகத் திரியும் பிச்சைக்காரரா என்ன?

ஆப்பா வாய்விட்டுச் சொன்ன நாள் அஸ்தமனமாவதற்கு முன்பாகவே அவர் திரும்பி வந்தார். ஆப்பாவுக்குத்தான் அவர் வேறு யாரோ முன்பின் தெரியாத பக்கீர் என்னும் குழப்பம் ஏற்பட்டது.

பக்கீர் தக்ஷிணை கேட்டபோது அவரிடம் ஆறு ரூபாய் இருந்தது. ஆயினும் அவர் தம் வசம் இருந்த முழுப் பணத்தையும் கொடுக்கவில்லை.

ஆப்பாவின்மீது பிரேமை இல்லையென்றால், பக்கீர் வேஷத்தில் பாபா வந்திருப்பாரா? மேலும், மீண்டும் மீண்டும் தக்ஷிணை கேட்டு பாபா நாடகமாடியிருக்கவிட்டால்,  இக் காதை எப்படி ருசியாக இருந்திருக்கும்?

ஆப்பாசாஹேப் நிகழ்ச்சி ஓர் உதாரணம் மாத்திரமே. உங்களுடைய கத்தியும் என்னுடைய கதியும் வேறில்லை! நாம் எல்லாருமே ஆரம்பத்தில் பெரிய திட்டங்கள் போடுகிறோம். ஆனால், சரியான நேரம் வரும்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வேறுவிதமாகச் செயல்படுகிறோம்.


வாக்கும் உறுதிமொழியும் அளிப்பதில் நமது உற்சாகத்திற்கு குறையே இல்லை. ஆனால், கொடுக்கவேண்டும் என்று வரும்போது, சந்தேகங்கள் முளைத்தது தடுமாறுகிறோம்; திடமாகாச் செயல்படுவது துர்லபம் (எப்பொழுதோ தான்).

மிதமகாப் பேசி, அதையும் இதமாகப் பேசி, தம்முடைய வாக்கின்படி செயல்பட்டு அதை நிறைவேற்றுபவரை நம்மிடையே காண்பது அரிது.

தம்மிடம் அனன்னியமான பாவத்துடன் பக்தி செலுத்துபவருடைய இவ்வுலக விருப்பங்களையும் மேலுலக விருப்பங்களையும் சமர்த்த சாயி நிறைவேற்றிவைக்கிறார்.

ஆப்பா புத்திசாலி; ஆங்கிலப் படிப்பும் படித்திருந்தார். ஆயினும் ஆரம்பித்தில் அவருக்கு அரசாங்கம் ரூ. 40 /- மட்டுமே மாதச் சம்பளமாகக் கொடுத்தது.

பின்னர், நிழற்படத்தைக் கொண்டுவந்த பிறகு அவருக்குச் சம்பளம் படிப்படியாக உயர்ந்து நாற்பது ரூபாயை போலப் பல மடங்காக ஆயிற்று.

பாபாவுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பி கொடுக்கிறார். - பத்து மடங்கு அதிகாரம் - பத்து மடங்கு சக்தி. சகலமான பக்தர்களும் இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது அடைந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான நிஷ்டையிலிருந்து ஆன்மீக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபாவின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!

 


 

Friday, 2 April 2021

 

ஷீர்டி சாய் சத்சரிதம்

நாசிக்கில் 'காலாராமர் கோயிலுக்குச் சென்றபோது எதிர்பாராமல் நரசிங்க மஹராஜ் என்னும் ஞானியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குழாம் சூழ்ந்திருந்தபோதிலும், மஹராஜ் சட்டென்று எழுந்துவந்து கர்னிக்கின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, "என்னுடைய ரூபாயைக் கொடு" என்று கேட்டார்.

கர்னிக் ஆச்சரியமடைந்து, மிகுந்த ஆனந்தத்துடன் ரூபாயைக் கொடுத்தார். தாம் முன்னம் மனத்தளவில் சமர்ப்பணம் செய்த ஒரு ரூபாயை சாயியே இப்பொழுது வாங்கிக்கொண்டார் என்று உணர்ந்தார்.

'சாயி வாங்கிக்கொண்டார்' என்று சொல்வது முற்றிலும் சரி என்று சொல்லமுடியாது. கொடுப்பதைப்பற்றிய எண்ணம் மனத்தின் மூலையில் எங்கோ அடங்கியிருக்கும் சமயத்தில், சாயி பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்கிறார். அதுதான் இங்கு நடந்தது!

மனிதனின் நெஞ்சத்தில் எத்தனையோ சங்கற்பங்களும் விகற்பங்களும் அலைமேல் அலையாக ஓடுகின்றன. முதலில் ஒரு நல்ல எண்ணம் தோன்றுகிறது; ஆனால், அதைச் செயல்படுத்தும் தருணம் வரும்போது எத்தனையோ கற்பனைகள் குறுக்கிடுகின்றன.

ஆயினும் ஆரம்பித்தில் தோன்றிய அலைதான், அது ஒரு நல்ல எண்ணமாக இருக்கும் பட்சத்தில், ஊட்டம் பெற்று மங்களமான செய்கையாக முடிகிறது.

அந்த நல்ல திட்டத்தின்மேல் மனத்தைக் குவிக்கவேண்டும்; திடமாக அப்பியாசம் செய்யவேண்டும்; திரும்பத் திரும்ப மனத்தில் உருட்ட வேண்டும்; அதை மறந்துபோக விடக்கூடாது; எப்பாடுபட்டாவது வாக்கை (திட்டத்தை) நிறைவேற்றவேண்டும்.

ஆப்பாசாஹேப் ஒரு நேரத்தில் அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு, பிறகு மறந்துபோகும் வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆகவே அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட தினத்தன்றே அவற்றை நிறைவேற்றிவைத்து பக்தியின் பெருமையை இவ்வுலகம் அறியும்படி செய்தார் சாயி!

மொத்தமாகப் பத்தொன்பது ரூபாய் கைக்கு வந்தபின், அவர் ஏன் ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்? ஏனெனில், ஆப்பாவின் நிறைவேறாத விருப்பம் பாத்து ரூபாய்க்கு குறையாமல் கொடுக்கவேண்டும் என்பதே!

பாபாவின் கையால் தொடப்பட்ட இந்த ஒன்பது ஆணிப்பொன் நாணயங்களால் ஆன அட்டிகை, வாஸ்தவத்தில் அவர் பக்தகோடிகளுக்கு நவவிதபக்தி என்னும் ஆன்மீகப் பாதையை ஞாபகப்படுத்தும் சாதனமே.

பாபா தேகவியோகம் அடைந்த கதையை கேட்கும்போது, கடைசி நேரத்தில் அவர் ஒன்பது ரூபாய் தானம் செய்த புதுமையைப்பற்றிக் கேட்பீர்கள்.

ஆப்பாவின் மனைவி உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, ஒரே ஒரு ரூபாயை தக்ஷிணையாக அளித்தார். அதை பாபா மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் வேண்டுமென்று அவரைக் கேட்கவேயில்லை.

ஆனால், ஆப்பாவோ, தம் மனைவி கொடுத்த தக்ஷிணை அற்பமான தொகை என்று நினைத்தார். "நான் வீட்டில் இருந்திருந்தால் அந்தப் பக்கீருக்கு அங்கேயே அப்பொழுதே அதைப் போல் பத்துமடங்கு அளித்திருப்பேன்" என்று அவர் நினைத்தார்; சொன்னார். 
 

 

Thursday, 25 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நண்பர் சித்ரேவிடம் மூன்று ரூபாய் இருந்தது. ஆப்பா அதையும் வாங்கிப் பக்கீரிடம் கொடுத்தார். அப்பொழுதும் பக்கீர் மேலும் வேண்டுமென்று கேட்பதை நிறுத்தவில்லை.


ஆப்பாசாஹெப் பக்கீரிடம் சொன்னார், "வீட்டுக்கு வந்தால் மேலும் தருவேன்". பக்கீர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூவரும் ஆப்பாவின் வீட்டுக்குத் திரும்பினர்.


வீட்டுக்குத் திரும்பியவுடனே ஆப்பா மேலும் மூன்று ரூபாய் கொடுத்தார். அதுவரை மொத்தம் ஒன்பது ரூபாய் கொடுத்தாயிற்று; ஆனால், பக்கீர் அப்பொழுதும் திருப்தி அடைந்தாரில்லை!


அவர் மேலும் தக்ஷிணை கேட்டபோது ஆப்பா சொன்னார், "என்னிடம் இப்பொழுது ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டுதான் இருக்கிறது.-


"சில்லறை நாணயங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். வேறு சில்லறை இல்லை". "நோட்டைக்கொடுத்துவிடலாமே" என்று பக்கீர் சொன்னார். ஆப்பா நோட்டைக் கொடுத்துவிட்டார்.


பத்து ரூபாய் நோட்டு கைக்கு வந்தவுடன், ரூபாய் நாணயங்கள் ஒன்பதையும் திருப்பிக் கொடுத்திவிட்டுப் பக்கீர் வந்த வழியே மிக வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.


பக்தர்கள் தாமாகவே வெளிவிடும் வார்த்தைகள் என்னவோ, அவற்றை சாயி பரிபூரணமாக நிறைவேற்றிக்கொள்வார் என்னும் உறுதியே இக் காதையின் சாரமாகும்.


கேட்பவர்கள் உற்சாகம் கொண்டவர்களாக இருப்பதால், இந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வருகின்ற, இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு காதையை சொல்கிறேன். மிகுந்த பயபக்தியுடன் கேளுங்கள்.


ஹரிபாவு கர்னிக் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் இருந்தார். டஹானா என்ற கிராமத்தில் வசித்த இவர், சாயியிடம் அன்னன்னிய பக்தி வைத்திருந்தார்.


1917 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா புண்ணிய தினத்தன்று ஷிர்டிக்கு புனித பயணமாக சென்றார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியைத்தான் நான் இப்பொழுது சொல்லப்போகிறேன்.


விதிமுறைகளின்படி பூஜையை செய்தபின், உடைகளையும் தக்ஷிணையையும் அர்ப்பணம் செய்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு கிளம்பினார். மசூதியின் படிகளில் இறங்கியபோது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது.


திரும்பிச் சென்று மேலும் ஒரு ரூபாய் தக்ஷிணையாக அளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால், அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவரே அந்த ரூபாயை வைத்துக்கொள்ளும்படி நேர்ந்தது.


எவர், வீடு திரும்ப அனுமதி பெற்றுக்கொடுத்தாரோ அவர் (மாதவ்ராவ் தேச்பாண்டே ), கர்னிக் விடைபெற்றுக்கொண்டுவிட்டதால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரவேண்டுமென்றும் திரும்பி வரவேண்டாமென்றும் மேலிருந்து சைகையால் தெரிவித்தார்.


சைகையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட கர்னிக், இடத்தை விட்டு நகர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். வீடு திரும்பும் பயணத்தில் அவரும் நண்பரும் நாசிக்கில் தங்கினர்.

 


 

Thursday, 18 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆப்பாசாஹேப் பிற்பகலில் டானேவுக்குத் திரும்பினார். அவர் இல்லாதிருந்தபோது என்ன நடந்ததென்பதைக் கேட்டவுடன், கோட்டைவிட்டதற்காக மனம் வருந்தினார்.


ஒரே ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட்டதை நினைத்து லஜ்ஜையடைந்தார். "நான் இங்கு இருந்திருந்தால் தக்ஷிணையாக பத்து ரூபாயாவது கொடுக்காமல் அவரை அனுப்பியிருக்கமாட்டேன்".


ஆப்பாசாஹேப்  தமக்குத்தாமே இவ்வாறு சொல்லிக்கொண்டார். கொஞ்சம் மனம் வாடினார். பக்கீரை ஒருவேளை மசூதியில் காணமுடியலாம் என நினைத்து, சாப்பிடாமலேயே அவரைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினார்.


மசூதியிலும் தகியாவிலும், எங்கெல்லாம் பக்கீர்கள் வழக்கமாகத் தாங்குவார்களோ அங்கெல்லாமும் தேடி அலைந்தார்.


தேடித் தேடிக் களைப்புற்றாரே தவிர, பக்கீரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பசியுடனும் ஏமாற்றத்துடனும் வீடு திரும்பியபின் உணவுண்டார்.


வெறும் வயிற்றுடன் தேடும் வேலை எதையும் செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திராரில்லை. முதலில் ஜீவனைத் திருப்திசெய்ய வேண்டும். அதன் பிறகுதான் தேடும் வேலையை ஆரம்பிக்கவேண்டும்.


இந்த யதார்த்தமான உண்மையாகிய தத்துவம், பாபா சொன்ன கதையிலிருந்தே விளங்கியிருக்கும். அதை மறுபடியும் சொல்வதால் என்ன பயன்?


சென்ற அத்தியாயத்தில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் மனங்கவரும் கதையொன்று சொல்லப்பட்டது. இக் கதையில், கருணை மிகுந்த ஸ்ரீ சாயி, தம் குருவின் அறிவுரையைத் தம்முடைய திருவாய்மொழி மூலமாகவே விளக்கினார்.


அந்த வார்த்தைகளின் சத்தியம் இப்பொழுது ஆப்பாவுக்கு அனுபவமாக கிடைத்தது. உணவுண்டபின் சித்ரே என்னும் நண்பருடன் மறுபடியும் சகஜமாக வெளியே கிளம்பினார் ஆப்பா.


சிறிது தூரம் சென்றபின், ஒருவர் தம்மையே பார்த்துக்கொண்டிருந்ததையும்  தம்மை சந்திப்பதற்காக தாமிருந்த இடத்தை நோக்கி வேகமாக வந்ததையும் கண்டார்.


அவர் நெருங்கி வந்தபோது ஆபாசாஹேப் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். காலையில் தமது வீட்டுக்கு வந்த நபர் அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.


"நான் இவ்வளவு நேரம் தேடிய பக்கீர் இவர்தான் என்று தோன்றுகிறது. நகத்தின் நுனிவரை, நான் வைத்திருக்கும் நிழற்படத்தை போலவேயிருக்கிறார். எனக்கு ஒரே வியப்பாக இருக்கிறது".


இவ்வாறு ஆப்பா தமக்குள்ளேயே தெளிவு தேடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று பக்கீர் கையை நீட்டினார். நீட்டிய கையில் ஆப்பா ஒரு ரூபாயை வைத்தார்.


பக்கீர் மேலும் கேட்டபோது, ஆப்பா இன்னொரு ரூபாய் கொடுத்தார்; மேலும் ஒரு ரூபாயும் கொடுத்தார். அனால், பக்கீரோ இன்னும் வேண்டுமென்று கேட்டார். உண்மையான அதிசயம் இனிமேல்தான் மலரப்போகிறது. 

 


 

Friday, 12 March 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, ஒரு ஞானியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரயத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனைத்தையும் இயல்பாகவே அறியும் ஞானிகள் நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.


முன்பு சொன்ன காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். கேட்பவர்கள் கவனமான சித்தத்துடன் கேளுங்கள்.


ஆப்பா, டானே நகரில் வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் வேலை நிமித்தமாக பிவண்டிக்குப் போக வேண்டியிருந்தது. எட்டு நாள்கள் கழித்துத் திரும்பி வருவேன், என்று சொல்லிவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினார்.


அவர் கிளம்பி இரண்டு நாள்கள்கூட ஆகவில்லை. இங்கு, டானேவில் அபூர்வமான சம்பவமொன்று நிகழ்ந்தது. ஒரு பக்கீர் ஆப்பாவின் வீட்டு வாசலுக்கு வந்தார்!


அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் சாயியே வந்திருக்கிறார் என்று நினைத்தனர். நகத்திலிருந்து சிகைவரை, உருவத்திலும் சாயலிலும் அங்க அமைப்பிலும் அவர்கள் வைத்திருந்த நிழற்படத்தை போலவே பக்கீர் இருந்ததைக் கண்டனர்.


ஆப்பாவின் மனைவியும் குழந்தைகளும் பக்கீருடைய முகத்தையே உற்றுப்பார்த்து வியப்படைந்தனர். பாபாவே வந்திருக்கிறார் என்று நினைத்தனர்.


அவர்களில் யாருமே பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும் நிழற்படத்திற்கும் பக்கீருக்கும் இருந்த உருவ ஒற்றுமையால் அவர்தான் பாபா என்று நினைத்தனர்; உண்மையை அறிந்துகொள்ள ஆர்வமுற்றனர்.


ஆகவே பக்கீரைக் கேட்டனர். "நீங்கள்தான் ஷிர்டியில் வசிக்கும் சாயியா?" பக்கீர் என்ன பதிலுரைத்தார் என்பதைக் கருத்தூன்றிக் கேளுங்கள்.


"நானே ஷீர்டி சாயி பாபா இல்லை. ஆனால், நான் அவருடைய ஆணைக்கு கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆக்ஞயின்படி குழைந்தைகுட்டிகளின் நலன்பற்றி விசாரிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்".


பிறகு பக்கீர் தக்ஷிணை கேட்க ஆரம்பித்தார். குழந்தைகளின் தாயார் உடனே ஒரு ரூபாயை எடுத்து சம்பாவனையாகக் கொடுத்தார். அவரும் உதீ பிரசாதம் அளித்தார்.


சாயி பாபாவின் உதீயை ஒரு பொட்டலத்தில் அப் பெண்மணிக்கு அளித்தபின் பக்கீர் சொன்னார், "இதை பாபாவின் படத்திற்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். சௌக்கியமாக வாழ்வீர்கள்".


இவ்விதமாக, வந்த காரியத்தை முடித்துக்கொண்டு, "சாயி எனக்காக வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பர்" என்று சொல்லிவிட்டுப் பக்கீர் விடைபெற்றுக்கொண்டார்.


அங்கிருந்து கிளம்பியவர் தாம் வந்த வழியே சென்றார். ஆப்பாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி, உண்மையில் சாயியின் அபூர்வமான லீலைகளில் ஒன்றே!


ஆபாசாஹேப் பிவண்டிக்கென்னவோ சென்றார். ஆனால், அவருடைய வண்டிக்கு குதிரைகள் நோயுற்றதால், மேற்கொண்டு பயணத்தை தொடரமுடியாமல் வீடு திரும்ப நேர்ந்தது.


 

Thursday, 4 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, சந்தனம், அக்ஷதை, மலர்கள் இவற்றால் பூஜை சையது நைவேத்தியமும் சமர்ப்பணம் செய்துவந்தார். 

எப்பொழுது என் கர்மவினைகள் தீரும்? எப்பொழுது சாயியை பிரதக்ஷயமாக தரிசனம் செய்யும் யோகம் கிடைத்து, என் ஏக்கம் நிறைவேறும்? இதுவே ஆப்பாவின் இதயதாபமாக இருந்தது. 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயியை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம். அனால், பாவமென்னவோ பூரணமாக இருக்க வேண்டும். 

சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதையொன்றைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள். 

பலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த கீர்த்தங்கர் (பஜனை செய்பவர்) ஒருவர், நவீன துகாராம் என்று புகழ் பெற்றவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்குச் சென்றார். 

அதுதான் அவருடைய முதல் தரிசனம். அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார். 

"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்". பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். 

"பாபா ஷிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ ஷிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?"

இதுபற்றித் திரும்பத் திரும்ப யோசித்தபின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்திற்கு ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. 

பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. அவர் நினைத்தார், "ஞானியரின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவர்களுக்கு இருக்கும் தாயன்பையும் பாரீர்!-

"இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாக காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!-

"ஆயினும், 'நான் மறந்துவிட்டேன்' என்று சொல்வது சரியாகாது. நான் நிழற்படத்திற்கு நமஸ்காரம் செய்ததைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை உடனே புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் என்னிடம் இல்லாததுதான் குறை.-

"பாபாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது; எனக்கு அது கொஞ்சங்கூட தெரியவில்லையே! ஞானிகள் ஞாபகமூட்டும்போதுதான் எல்லாமே மனத்திரைக்குத் திரும்பிவருகின்றன. 

எவ்வாறு நிர்மலமான தண்ணீரிலும் கண்ணாடியில் நம்முடைய பிரதிபிம்பத்தைப் பார்க்கிறோமோ, அவ்வாறே நிழற்படமும் ஒரு பிரதிபிம்பம்; மூல உருவத்தின் தெளிவான பிரதி. 


  

Thursday, 25 February 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்


ஒருமுகப்பட்ட மனதில் சாயிசிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், இவ்வாறு மனத்தை அப்பியாசம் செய்தால், உலகியல் விஷயங்களின் மீதான மோஹம் தானாகவே விலகும். முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.

பூமியில் பிறந்த தேகம் செயல் புரிந்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆகவே, மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் யதேஷ்டமாக நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு சத்குருவைப்பற்றிய சிந்தனையில்தான் இருக்கிறது. சங்கற்பங்களும் விகற்பங்களும் நஷ்டப்பட்டுப் போகும். விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்!

மஹானுபவரான சாயி, பக்தர்களின் பாவத்தைக் கண்டு அவர்களுடைய பக்தியைப் பாராட்டுவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும்!

கதை கேட்பவர்களே! இது சம்பந்தப்பட்ட கதையொன்றை பயபக்தியுடன் கேளுங்கள். ஞானிகள் தம் பக்தர்களுக்காக இரவுபகலாக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை இக் காதை காட்டும்.

உங்களுடைய இதயக் கோயிலினுள் இக் காதை புகுமாறு, கதவுகளாகிய காதுகளைத் திறந்துவையுங்கள். பிறவி அச்சத்தையும் சங்கடங்களையும் கடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.

சமீபத்தில் முடிவுக்கு வந்த, ஜெர்மனிக்கு எதிரான முதல் உலக மகாயுத்தம், எதிரியுடன் போரிடுவதற்காக ஒரு படையைத் தயார் செய்யவேண்டிய நெருக்கடியை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் பாரத பூமியின் எல்லா நகரங்களிலும் ராணுவத்திற்கு ஆள் சேர்த்தது.

ஆண்டு 1917 , டானே ஜில்லாவில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பக்தர் ஒருவருக்கு நல்ல நேரம் வந்தது. ஒரு வினோதமான நிகழ்ச்சி நடந்தது.

பக்தருடைய பெயர் ஆப்பாசாஹெப் குல்கர்நீ. சாயியின்  பிரபாவத்தாலும் கற்பனைக்கு எட்டாத லீலையாலும் அவருக்கு பக்திபாவம் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாலாசாஹேப் பாடே அவர்களால் அளிக்கப்பட்ட பாபாவின் நிழற்படத்தை அவர் ஏற்கெனவே வழிபட்டுவந்தார்.