valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ! 


 

Thursday, 19 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை.  செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!

நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன்! இந்த தானத்தால் என்ன புண்ணியம்? 

மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம்  (தூய்மையான செயல்), கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுபாவச் செயல். கடைசியில் துக்கத்தையே  தரும். 

சிவன் கோவிலில் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது. 

மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம் மீதமின்றி எரிந்துபோயின. 

பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான்.  அவனும் மனைவியுடன் இறந்து போனான். டு ப கீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று. 

பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள். 

அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'குரவரின்' (கோயிலில் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள். 

நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபசப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப  நிலைமாறினர். (அடுத்த ஜென்மம் எடுத்தனர்).

புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிரார்ப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும். 

சிவன் கோவில் பூஜாரியின் மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை (சிலீம்) குடிப்பார். 

பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவுதும் பேசிக்கொண்டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார். 


 

Thursday, 12 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான். 

பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-

'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'

ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான். 

அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -

"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".

கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள். 

டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று. 

ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான். 

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட  வலையில் மாட்டிக்கொள்ளலாகாது. 

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. 




Thursday, 5 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!

இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள்.  அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே. 

தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். 

எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று. 

பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும். 

"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -

"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -

"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-

"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -

"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை. 

"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."

கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள். 


 

Thursday, 29 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறாக, மேற்கொண்டும் நிதி திரட்டப்பட்டு நேர்மையான முறையில் கஞ்சனின் கைக்கு வந்துசேர்ந்தது. அப்படியும் ஒரு பயனும் ஏற்படவில்லை. பணக்காரன் ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான்.

இவ்வாறு சில நாள்கள் கழிந்தபின் மனம் வைத்தான். அந்த சமயத்தில் கஞ்சனின் மனைவிக்கு ஒரு சொப்பனக்காட்சி ஏற்பட்டது.

"நீயாவது எழுந்துபோய்க் கோயிலின் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழிப்பதைப்போல நூறுமடங்கு நீலகண்டன் (சிவன்) உனக்கு அளிப்பான்."

மறுநாள் காலையில், தன கனவுக்காட்சி விவரங்களை அவள் தன கணவனின் காதில் போட்டாள்.  கணவனோ ஒரு பைசா செலவழிப்பதற்கும் உயிரை விடுபவன். ஆகவே, இச் செய்தி அவனைக் கலவரமடையச் செய்தது.

இரவுபகலாகப் பணம் பண்ணுவதைத் தவிர வேறு விஷயம் எதைப்பற்றியும் சிந்திக்காதவன், பணம் செலவழிக்கும்படி வந்த சொப்பனச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வான்?

அவன் தன் மனைவியிடம் சொன்னான், "நான் இந்தக் கனவுக்காட்சியை நம்பமாட்டேன். இது விஷயமாக எனக்கு அறவே விசுவாசம் இல்லை."  மேலும் அவளை பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருவருடைய மனப்போக்கு எப்படியோ, அப்படியே அவருக்கு உலகம் காட்சியளிக்கன்றதன்றோ ! வஞ்சக இயல்பு உடையவனுக்கு மற்றவர்களும் வஞ்சகர்களாகவே தெரிகின்றனர்!

"கடவுள் என்னிடமிருந்துதான் தானம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாரானால், நான் என்ன உன்னிடமிருந்து வெகுதூரத்திலா இருந்தேன்? ஏன் அவர் உனக்கு மட்டும் கனவில் தோன்றினார்?-

"உனக்கு மட்டும் ஏன் கனவுக்காட்சி ஏற்பட்டது? எனக்கு ஏன் கடவுள் காட்சியளிக்கவில்லை? ஆகவே, இது ஏதும் பொருள் பொதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. கனவுக்காட்சியின் முக்கியத்துவமும் எனக்குப் பிடிபடவில்லை. -

"இந்த சொப்பனம் ஒரு போலி; அல்லது, கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்த விரும்பும் ஒரு தெய்வ எத்தனம். எனக்கு இந்த அறிகுறிதான் தெரிகிறது. -

"ஜீரணோத்தாரணப் பணியில் என்னுடைய நன்கொடை கம்மியா என்ன? மாதந்தோறும் நாம் நிரப்பிவைக்கும் பணப்பை காலியாகிவிடுகிறது. -

"மக்கள் ஏராளமான நிதியைக் கொண்டுவருவதுபோல வெளிபார்வைக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், இந்தப் பத்ததியில் (முறையில்) கணக்கு வைத்துக்கொள்வது என்பது எனக்குப் பெருநஷ்டம்.-

"ஆயினும், மக்களுக்கே விளங்காததை நீ எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்? ஆகவே, நீ கண்ட சொப்பனக்காட்சியை யதார்த்தமென்று ஏற்றுக்கொள்ள முடியாது.-


 

Friday, 23 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"சரி, சரி; முதலில் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொன்ஜம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்."

நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

வழிப்போக்கர் முதலில் புகைக்குடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைக்குடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

என்னுடைய இடத்திலிருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமை வாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூலித்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அவ்வூரிலிருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது. முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச்செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்க்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. அனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியிலிருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால், வேலை நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், பணம் வசூலித்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். "உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?-

"உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே! இதைபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். -

"மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும்."

 


 

Thursday, 15 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-

"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"

சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.

மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா.  அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."

அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-

"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"

என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது.  சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-

"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"




Thursday, 8 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்த பின் சௌகரியமாகத் திரும்பி செல்லலாம்.

"திரும்புகாலில் நானும் உங்களுடன் வருகிறேன்". இவ்வாறு என்னிடம் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார் செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.

அங்கோ, தவளை பரிதாபகரமான குரலில் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், "யார் இப்படி அலறுவது?".

அவருக்கு நான் பதில் சொன்னேன், "ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது.  நான் உமக்குச் சொல்லப் போகும் கதையைக் கேளும்."

போன ஜென்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜென்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)

இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், "நான் போய்ப் பார்க்கிறேன்.-

"இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்திலிருந்து சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்."

அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்து கொண்ட பின் நான் சொன்னேன், "நீரே போய்ப்பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை ஓலமிடுகிறது. -

"இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜென்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்."

இதைபற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண்டிருந்ததை பிரத்யட்சமாக பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், "நீக்கினால் சொன்ன விவரம் உண்மைதான்.-

"விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது. -

"இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி! சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்!"

ஆகவே, நான் அவரிடம் கூறினேன்,"ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும்! பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-


 

Thursday, 1 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இது சம்பந்தமாக, சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்க்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை சாயி மாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.

சாயியே தம்முடைய கதைக்குச் சரித்திரக்காரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்திரதாரி அவரே!

(ஹேமாட் சொன்ன கதை இங்கு ஆரம்பம்)

ஒருநாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.

வழி நடந்து, நடந்து களைத்துபோனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.

அந்த நதியும்  ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இரு கறைகளை தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.

அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.

மெல்லிய பூங்காற்று வீசி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழலில் நிம்மதியாக உட்கார்ந்தேன்.

புகை குடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியை' நீரில் நனைப்பதற்காக துறைக்குச் சென்றேன். அப்பொழுது "க்ரோக், க்ரோக்" என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒலி என்று நான் நினைத்தேன்.

அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கி முக்கிக்கல்லை கையிலெடுத்தேன்.

சிக்கிமுக்கிகல் நெருப்பு பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.

மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், "நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்!-

"மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம். -


 

Thursday, 24 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

கர்மவினையின் சூத்திரம் ஆகாயத்தைப் போலப் பெரியது. அதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மஹா பண்டிதர்களும் இந்த விஷயத்தில் ஏமாற்றமடைகின்றனர். (BHA)  பாவமுள்ள பக்தர்களோ, அதிகம் படிக்காதவர்களாயினும் காப்பாற்றப்படுகின்றனர்.

அதுபோலவே, இறைவனின் நியமத்தைத் தாண்டுவது இயலாத காரியம். அதனுடைய கிரமத்தை எவரால் மீறமுடியும்? ஆகையால், உலகியல் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தருமநெறிகளின்படி ஒழுகி, எப்பொழுதும் கடமைகளைச் செவ்வனே செய்யுங்கள்.

அவ்வாறு செய்யாமல் அதருமநெறியில் வாழ்வபவன், மரணத்திற்குப் பிறகு, தான் என்னென்ன தீவினைகளை செய்தானோ, அவற்றுக்கேற்றவாறு அடுத்த ஜன்மம் எடுக்கிறான்.

மரணத்திற்குப் பிறகு, தன்னுடைய கர்மவினைகளுக்கும் கேள்விஞானத்திற்கும் ஏற்றவாறு சுக்கிலபீஜமாக (விந்தாக) மாறி, யோனித்துவாரத்திற்குள் அவர் பிரவேசிக்கிறான். மறுபடியும் மனிதஜென்மம் எடுக்கிறான். வேறொருவன் அதே சட்டத்தின்படி ஸ்தாவர (நகரமுடியாத பொருளாக) ஜன்மம் எடுக்கிறான்.

'கடைசி பிரக்ஞை  எப்படியோ அப்படியே மறுபிறப்பு' என்னும் வேதவசனத்தின் பொருளை அறியாதவர் யார்? இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்று விரும்புபவர், அவர் ஆசைப்படும் பிறவியைப் பெறவேண்டாமா?

இன்னுமொரு சரீரமும் எடுக்கவேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மூடர்கள், அவர்கள் சம்பாதித்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் அடுத்த சரீரம் கிடைக்கும் என்பதை நன்கு அறிய வேண்டும்.

ஆகையால், விலைமதிப்பற்ற மனிதஜென்மம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தேகம் கீழே விழுவதற்கு முன்னதாகவே ஆத்மஞானம் பெறுபவனை உண்மையிலேயே விவேகமுள்ளவன் என்று சொல்லுவேன்.

அவனே சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைகிறான். மற்றவர்கள் வாழ்க்கைச் சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள்.  அவர்களால் இன்னுமொரு பிறவி எடுப்பதைத் தவிர்க்கமுடியாது. மறுபிறவியின் யாதனைகளையும் தடுக்கமுடியாது.

இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், 'இந்த உடல்தான் நான்' என்னும் தீய இயல்பு கீழே அமிழ்த்தப்பட்டு சாத்துவிகமான அஷ்டபாவம் எழுப்பப்படும்.

கோடிகோடியாய்ப் பணத்தை வைத்துக்கொண்டு சுபாவத்தில் கடுங்கஞ்சனாக வாழ்பவனின் ஜீவன் பரிதாபத்திற்குரியது. மரணப்பரியந்தம்  (மரணடையும்வரை) அவன் அலுப்பையும் சலிப்பையுமே அனுபவிப்பான்.

மேலும், விரோதத்தை வளர்ப்பது எக்காலத்தும் நன்றன்று. விரோதம் தோன்ற முயலும்போது, உன் மனத்தால் அதை அடக்கு. அடக்காவிட்டால், அது உன் வாழ்வையே நாசம் செய்துவிடும்.

பரஸ்பர விரோதம் உத்தமமான ஜன்மத்திலிருந்து இழிவான ஜன்மத்துக்கு இழுத்துச் செல்லும். கடம், விரோதம், கொலை இவற்றின் விளைவுகள், ஒரு மனிதனை ஜன்மத்தை அடுத்து ஜென்மமாக, வினை தீரும்வரை தொடரும்.

 


 

Thursday, 17 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மஹானுபவரான சாயி, அவரே சொல்லும் கதையின் அற்புதத்தைக்  கேட்டுக் கதை கேட்பவர்கள் மெய்மறந்து போவார்கள். அன்பால் விளையும் அஷ்டபாவம் அவர்களை ஆட்கொள்ளும்!

இக் கதை சாயியின் நேரிடைத் திருவாய்மொழி.  இதனுடைய  தாத்பரியத்தின்மீது (உட்கருத்தின்மீது) கண்வைத்து நுண்பொருள் உணர்பவர் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவர் ஆவார்.

கதைகேட்பவர்களே, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பீர்களாக. நான்தான் இக் கதையைச் சொல்லுபவன். ஆயினும், நான் சாரமறிந்து ஈடுபாட்டுடன் சொல்லாவிட்டால், நானும் உங்களுக்குச் சமானமாகிவிடுவேன் (கதை சொல்லும் தகுதியை இழந்துவிடுவேன்).

பக்தர்களின்பால் சாயி வைத்திருந்த பிரேமையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது, மனம் தன்னுடைய இயல்பாய் மறந்துவிடுகிறது. உலகவாழ்க்கையின் நடுக்கம் மறைந்து, சாந்தி பிறக்கிறது. இதைவிடப் பெரிய லாபம் ஏதும் உண்டோ?

கதைகேட்பவர்களே, முன்பு சொன்ன கதைக்கும் இந்தக் கதைக்கும் உண்டான தொடர்பைக் கவனத்துடன் கேளுங்கள். மனம் சிதறாமல் கேட்டால், உங்களுடைய ஜீவன் திருப்தியடையும்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் ஆடுகளின் கதையைக் கேட்டீர்கள். பாபாவுக்கு ஆடுகளின் மீது ஏற்பட்ட பிரீத்திபற்றியும், அவற்றின் பூர்வஜென்ம வரலாறு அவருக்கு ஞாபகம் வந்த விவரத்தையும் கேட்டீர்கள்.

அந்தக் காதையைப் போலவே, பணத்தாசை எவ்வாறு மனிதனை பரம அவஸ்தைக்குள்ளாக்கி அதலபாதாளத்தில் வீழ்த்துகிறது என்பதை விளக்கும் இந்தக் கதையையும் கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே பூரணமான அருள்நோக்குடன் ஒன்றன்பின் ஒன்றாக எந்தக் கதையைச் சொல்லவேண்டுமென்று சூசகமாகத் தெரிவித்துக் கதை கேட்பதில் தடங்கல் ஏதும் வராமல் செய்கிறார்.  இதனால், கேட்பவர்களின் சுகமும் திருப்தியும் அதிகமாகின்றன அல்லவோ?

கதையும் கதையைச் சொல்லுபவரும் விவரணமும் சாயியாக இருக்கும்போது, இந்த ஹேமாட் பந்துக்கு இங்கென்ன வேலை? அது வெறும் புனைபெயர் அன்றோ!

சாயிகதை என்னும் சமுத்திரக்கனியில் உட்கார்ந்திருக்கும் நாம், கதைகளுக்காக கல்லுடைத்துக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பவரின் ஆசை, உதித்தக்கனமே நிறைவேறும் அன்றோ!

சூரியனின் இல்லத்தில் விளைக்கைப்பற்றி எவராவது கவலைப்படுவாரா? நிரந்தரமாக தேவாமிர்தத்தை அருந்திக்கொண்டிருப்பவருடைய மனத்தில் விஷத்தைப்பற்றிய எண்ண அலைகள் எழுமா?

சாயியைப் போன்ற தெய்வம் நம்மை என்றும் காத்து அருள் செய்யும்போது, அமிர்தம் போன்று இனிக்கும் கதைகளுக்கு நமக்கென்ன பஞ்சம்? உங்கள் இதயம் திருப்தியடையும் வரை கதைகளை ருசித்து அருந்துங்கள். 



Thursday, 10 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


47. பாம்பும் தவளையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் ஸ்ரீம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜென்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான சாயியின் முகம் புனிதமானது.

சாயியின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.

எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.

உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாதத்துளிக்காக (அடிபொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.

'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?" என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.

சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான சமர்த்த சாயியின் திருவாய்மொழி  இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பக்தியுடன் கேளுங்கள்.

இக் கதையின் மகத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்)  கதை இது!

எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒலியுமான சாயி, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார். 



Thursday, 3 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சதையில் நெருங்கிக்கொண்டிருக்கும் முள் இவன். இம் முள்ளை எடுத்துவிட்டால் செல்வத்திற்குக் குறைவே இருக்காது. ' இவ்விதமான எண்ணத்தாலும் பேராசையாலும் மூழ்கடிக்கப்பட்டு அண்ணன் கெட்ட வழிகளில் இறங்கினான்.-

"இம்மாதிரியான பணத்தாசையும் பேராசையும் கண்ணை மறைத்துவிடும். ஆகவே, கண்ணிருந்தும் குருடனாகி சகோதர பாசத்தையே மறந்துவிட்டான். தம்பியைக் கொன்று விடவேண்டும் என முடிவு செய்து, செயலிலும் இறங்கிவிட்டான்.-

"பிராப்தம் (பூர்வஜென்மவினை) கொண்டுவரும் துன்பம் மிகக் கொடுமையானதன்றோ! அது அனாவசியமான பகையை விதைத்தது. பேராசை கட்டுக்கடங்காமல் போய், கொடுமையானதும் மருமமாகத் தீட்டப்பட்டதுமான சாதியொன்று உருவாகியது.-

"அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிட்டது. ஆகவே, சகோதர பாசத்தை அறவே மறந்துவிட்டு அஹங்காரத்தினால் கோபமடைந்தனர். பரம வைரிகள் போல இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். -

"ஒருவன் மற்றவனைத் தடியெடுத்து பலமாக மண்டையில் அடித்தான். மற்றவன் முதல்வனைக் கோடரிக்கொண்டு தாக்கினான். சகோதரர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டனர். -

"இருவரும் ரத்தக்களரி ரணகளரியாக மூர்ச்சையடைந்து கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் இரு உடல்களிலிருந்தும் உயிர் பிரிந்தது. இவ்வாறு அவ்விருவரும் மரணமடைந்தனர். -

"அவ்வாறு இறந்த பிறகு, இந்த யோனியில் புகுந்தனர். இதுவே அவர்களுடைய காதை; அவர்களைப் பார்த்தவுடனே எனக்கு விரிவாக ஞாபகம் வந்தது. -

"அவர்களுடைய கர்மவினையைத் தீர்ப்பதற்காக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். மந்தையில் அவர்களைப் பார்த்ததும் எனக்குப் பிரேம ஆவேசம் ஏற்பட்டது. -

"ஆகவே, என்னுடைய பையிலிருந்தும் பணம் செலவழித்து அவர்களுக்குச் சிறிது விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளிக்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், உங்களுடைய ரூபத்தில் அவர்களுடைய கர்மவினை அதைத் தடுத்துவிட்டது. -

"ஆடுகளின்மேல் எனக்கு கருணைபிறந்தது; ஆயினும் உங்களுடைய நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, நானும் கடைசியில் ஆடுகளை இடையரிடம் திருப்பி அனுப்பிவிட்டேன். "

ஆக, இக் காதை இங்கு முடிகிறது. வாசகர்களே, என்னை மன்னிப்பீர்களாக! பிறகு, அடுத்த அத்தியாயத்தை படிக்கும்பொழுது உங்கள்  மனம் மகிழும்.

அடுத்த அத்தியாயம் சாயியின் திருவாய்மொழி அடங்கியதாகையால் , அன்பு பொங்கிவழியும் அத்தியாயமாகும்.  சாயியின் பாதகமலங்களில் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, ஹேமாட் கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காசி - கயா புனிதப் பயணம், மேலும் ஆடுகளின் பூர்வஜன்மக் காதை' என்னும் நாற்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 27 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் இருவருடைய கட்டாயத்தால் பாபாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு வீடு வாசலில்லை; உட்காருவதற்கென்றும்கூட ஓர் இடமில்லை; எனக்குச் சொத்துபத்துக்கள் எதற்காக?-

"முதலில் கடைக்குப் போய் ஒரு சேர் தனிப்பருப்பு வாங்கிக்கொண்டு வாருங்கள். ஆடுகளை வயிறுமுட்டும் வரை தின்னவையுங்கள். பிறகு ஆடுகளை ஆட்டிடையரிடமே திருப்பி அனுப்பி விடுங்கள்."

ஆணையை நிறைவேற்றும் வகையில் உடனே ஆடுகளுக்குப் பருப்பு தீனியாகக் கொடுக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல் உடனே ஆடுகள் ஆட்டிடையரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

பரோபகாரமே உருவெடுத்த சாயி உண்மையிலேயே ஓர் அவதாரபுருஷர். தாத்யாவோ வேறெவரோ, நல்லெண்ணத்தையோ இரக்கத்தையோ அவர் மனத்தில் ஊட்டிவிட முடியுமா என்ன!

அன்புடன் ஆடுகளுக்குப் பருப்பை ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது என்று தெரிந்த பின்னர், "இவ்வாடுகளை சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மந்தையுடன் போய்ச் சேரட்டும்" என்று பாபா சொன்னார்.

இவ்விதமாகப் பணமும் போயிற்று! ஆடுகளும் போயின! அப்பொழுது பாபா ஆடுகளுடைய வினோதமான பூர்வஜென்ம கதையை முழுக்க எடுத்துரைத்தார்.

பாபாவுக்குத் தாத்யாவும் சாமாவும் ஒன்றே. இருவரிடமுமே அவர் சமமாக அன்பு செலுத்தினார். அவர்களுடைய கோபத்தை தணிப்பதற்காக, பாபா மனோரஞ்சிதமான இக் கதையை விரிவாகச் சொன்னார்.

சாயி தாமாகவே அவ்வாடுகளின் முன்ஜன்ம கதையை எடுத்தியம்பினார். நீங்களும் கேளுங்கள்.

"முற்பிறவியில் இவ்விரு ஆடுகளும் அதிருஷ்டம் வாய்ந்தவை. மனிதர்களாகப் பிறந்து என்னுடன் இருந்தார்கள். ஆனால், அவர்களும் கர்மவினையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

"நீங்கள் பார்த்த இவ்விரு ஆடுகள் இதற்கு முந்தைய பிறவியில் சகோதரர்கள். ஒருவரோடுவர் கோரமாக சண்டையிட்டுக்கொண்டு இறந்தார்கள்; விளைவு இவ்விதம் ஆகியது. -

"ஆரம்பகாலத்தில் இருவருக்குமிடையே மிக்க பாசம் இருந்தது; சகோதரர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள்; ஒன்றாகவே தூங்குவார்கள். பரஸ்பரம் நல்வாழவையே விரும்பினர். இருவருக்குமிடையே மகத்தான ஒற்றுமை நிலவியது,-

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாயினும், கர்மவினையாலும் விதிவசத்தாலும் பணம் குவிக்கவேண்டுமென்ற பேராசை அவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கியது.-

"அண்ணன் ஒரு படு சோம்பேறி; ஆனால், தம்பியோ ஊக்கமுள்ளவன்; இரவுபகல் பாராமல் உழைப்பவன். உழைப்பின் விளைவாகத் தம்பி பெரும்பொருள் குவித்தான். இதைப் பார்த்த அண்ணனிடம் பொறாமை விளைந்தது.-


 

Thursday, 20 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இரண்டு அல்லது மூன்று அதிகம் போனால் நான்கு ரூபாய் மதிப்புள்ள ஆட்டுக்குப் பதினாறு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தாத்யாபா (தாத்யா கோதே பாடீல்) இந்த வினோதமான செயலைக்கண்டு வியந்துபோனார்.

ஆட்டுக்காரன் கேட்ட அதிக விலையை பேரமே ஏதுமின்றி அப்படியே கொடுத்து பாபா வாங்கியதை அவர்கள் கண்கூடாகக் கண்டதால், தாத்யாவும் மாதவராவும் பாபாவின் செய்கையை வெறுப்புடனும் கோபத்துடனும் எதிர்த்தனர்.

'இரண்டே ரூபாய் பெறுமானமுள்ள பொருளுக்கு பதினாறு ரூபாய் எதற்காகக் கொடுத்தார்? பாபாவுக்குப் பணத்தின் அருமை தெரியாததால் தம் இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் செய்கிறாரோ? இந்த வாதமும் திருப்திகரமானதாக இல்லையே! -

'எதற்காக பாபா இவ்வளவு மோசமான பேரமொன்றைச் செய்தார்? இப்படியா யாராவது பேரம் செய்வார்கள்? பேரமா இது"? என்றெல்லாம் இருவரும் மனதுக்குள்ளேயே பொருமிப் பிராண்டிக்கொண்டனர். இருவருமே பாபாவை தூஷித்தனர். (நிந்தித்தனர்).

பாபாவை எப்படி அவ்வாறு ஏமாற்ற முடியும்? கிராமத்து மக்கள் இதைப் பார்க்க  ஒன்றுகூடினர். ஆனால், பாபா ஒரு துரும்பும் நஷ்டம் ஏற்படாததுபோலச் சலனமேதுமின்றி அமைதியாக இருந்தார்.!

தாத்யாவும் சாமாவும் இவ்விஷயத்தில் கட்டுப்படைந்து பாபாவின்மேல் தப்புக் கண்டுபிடித்தாலும், பாபாவென்னவோ சிறிதும் அமைதியிழக்கவில்லை. அவர் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.

பணிவுடன் அவர்கள் இருவரும் பாபாவைக் கேட்டனர், "இது என்ன விசித்திரமான உதாரச் செய்கை? 32  ரூபாய் வீணாகிப் போய்விட்டதல்லவா?"

பணத்தைப்பற்றிய பேச்சு வந்தவுடன் பாபா புன்னகையுடன் தமக்குத் தாமே பேசிக்கொண்டார். "சரியான பைத்தியக்கார பயல்கள் இவர்கள். ஓ! எப்படி இவர்களுக்கு புரியவைப்பேன்.?"

ஆயினும் பாபாவினுடைய சாந்தமும் அமைதியும் அருமையிலும் அருமை. பாபாவின் திடசித்த நிலை அணுவளவும் குறையவில்லை; இதுவே பரமசாந்தியின் லட்சணம்  (அடையாளம்); கூடியிருந்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

கோபத்தை அறியாதவரும் பரமசாந்தியை அனுபவிப்பவரும் எவ்வுயிரிலும் இறைவனைக் காண்பவருமான ஒருவரை விவேகமின்மை எப்படித் தொடமுடியும்?

விவேகஞானம் உள்ளவர் எவரும், எக்காலத்திலும் கோபத்தை அனுமதிக்கமாட்டார். எதிர்பாராதவிதமாக அதுமாதிரி சந்தர்ப்பம் ஏதாவது எழுந்தால், சாந்தி என்னும் பொக்கிஷம் திறந்துகொள்ளும்.

சதாசர்வகாலமும் 'அல்லாமாலிக்' தியானம் செய்பவரின் பெருமையை எவ்வாறு எடுத்தியம்புவது? அவருடைய வாழ்க்கை புரிந்துகொள்ளமுடியாததும் பூரணமானதும் மிகப்புனிதமானதும் நலம் பல தரக்கூடியதுமாகும்.

காருண்யமூர்த்தியும் ஞானகர்ப்பமும் வைராக்கியவாதியும் சாந்திக்கடலுமான அவர் முக்காலத்திற்கும் உண்மையாக என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். 



Thursday, 13 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கயாவாளி பெரும் பணக்காரர். வீட்டுக்கு வெளியில் யானைகள் சவாரிக்காகக் காத்திருந்தன! தாம் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சாமாவை யானைச்சவாரி செய்யும்படி செய்தார்.

பூஜை திரவியங்களை எடுத்துக்கொண்டு இருவரும் விஷ்ணுபாதம் என்னுமிடத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகமும் பூஜையும் மனமகிழ்ச்சியுடன் செய்தனர். பிறகு அட்சயவடம் என்ற இடத்திற்குச் சென்று, மூதாதையர்களுக்குப் பிண்டதானமும் (ஈமச்ச சடங்கும்) செய்தனர்.

அதன் பின்னர் தெய்வங்களுக்கு நிவேதனம் செய்தபின், பிராமணர்களுக்குத் திருப்தியாக போஜனம் செய்வித்து தக்ஷிணையும் கொடுத்தனர். இவ்விதமாக அவர்களுடைய புனிதப் பயணம் இனிதே நிறைவடைந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாபாவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது.

பாபாவின் திருவாய்மொழிச்சொல்லுக்குச் சொல் உண்மையாகிறது; நிறைவேறுகிறது. இதுவே இக் கதையின் சாரம். மேலும், பக்தர்களிடம் அவருடைய அன்பு அளவற்றது.

இக் காதை பாபா தம் பக்தர்களிடம் காட்டிய அன்புபற்றியது மட்டுமே. வாஸ்தவமாக, மற்ற ஜீவராசிகளையும் சமமாகவே பாபா பாவித்தார். ஜீவராசிகளிடம் பாசத்துடன் இருந்தது மட்டுமின்றி, அவற்றின் ஆத்மாவுடன் ஒன்றியவராகவே இருந்தார்.

லெண்டித் தோட்டத்திலிருந்து மசூதிக்கு சாவதானமாகத்  திரும்பி வரும்போது, எப்பொழுதாவது ஓர் ஆட்டு மந்தையைச் சந்தித்தால் பாபா மிகவும் குஷியாகிவிடுவார்.

அமுதம் பொழியும் கண்வீச்சை எல்லா ஆடுகளின்மீது செலுத்துவார். சில சமயம் ஓரிரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்.

உரிமையாளர் என்ன விலை கேட்டாலும் பாபா உடனே பணம் கொடுத்து ஆடுகளை வாங்கி, கொண்டாஜியிடம் ஒப்படைத்துவிடுவார். இதுவே பாபாவினுடைய பழக்கமாக இருந்தது.

ஒருநாள் பாபா இரண்டு ஆடுகளை 32  ரூபாய் கொடுத்து வாங்கினார். எல்லாருக்கும் அது விநோதமாகத் தெரிந்தது.

அவ்விரண்டு ஆடுகளைப் பார்த்ததும் திடீரென்று அவற்றின்மேல் பாசமேற்பட்டு அருகில் சென்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

மிருகப்பிறவி எடுத்த அவற்றைப் பார்த்து பாபாவின் மனத்தில் காருண்யம் ததும்பியது. அவை இருந்த நிலையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார். அன்பின் அலைகளில் அமிழ்ந்துபோனார்.

அவ்விரண்டு ஆடுகளைத் தம்மருகே இழுத்துக்கொண்ட பின், வாஞ்சையுடன் முதுகில் தடவிக்கொடுத்தார். பாபாவின் அவ்விநோதமான செயலைக்கண்ட பக்தர்கள் வியப்பெய்தினர்.

முன் ஜென்மத்தில் அவர்கள் மீது தாம் வைத்திருந்த பாசம் ஞாபகத்திற்கு வந்தபோது பாபாவிடமிருந்து அன்பு பீறிட்டது. ஆடுகளாகப் பிறந்த அவர்களைப் பார்த்தபோது பாபா மிகுந்த பரிதாபமுற்றார். 



Thursday, 6 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆவல் கொண்ட சாமாவே (மாதவராவே) கயாவாளியை நோக்கி இக் கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கு இந்தப் படம் எப்படிக் கிடைத்தது? அனைத்து விவரங்களையும் எங்களுக்குச் சொல்லுங்கள்."

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தப் பேரதிசயத்தை கயாவாளி மாதவராவுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மன்மாட், புண்தாம்பே (மகாராஷ்டிரா மாநிலம்) போன்ற இடங்களில் மொத்தம் இருநூறு முன்னூறு முகவர்கள் காயவாளிக்கு வேலை செய்து வந்தனர். யாத்திரிகர்கள் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து கயாவாளியின் தொழிலை விருத்தி செய்துவந்தனர்.

யாத்திரீகர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே கயாவாளியின் நிரந்தரமான தொழில். அவருடைய தொழில் இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது கயாவாளி ஷிர்டிக்குச் சென்றார்.

சமர்த்த சாயிநாதர் ஒரு பெரிய மஹான் என்று அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, அவரை தரிசனம் செய்து, ஆசிகளைப் பெறவேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அவர் சாயியை தரிசனம் செய்தார்.  பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பாபாவின் படம் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தீவிரமான ஆவலையும் உணர்ந்தார்.

சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படம் ஒன்று மாதாவாராவிடம் இருந்தது. அதை கயாவாளி தமக்கு கொடுக்குமாறு கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்ற பிறகு மாதவராவ் அப் படத்தை கயாவாளிக்குக் கொடுத்தார்.

"என்னிடம் இருந்த அதே படந்தான் இது, அந்த கயாவாளி இவரேதான்" என்று மாதவராவுக்கு ஞாபகம் வந்தது. "மேலும், எப்படி பாபா என்னை அதே இடத்திற்கு அனுப்பினார்? எப்படி இவ்வளவு காலம் கழித்து இந்த சந்திப்பை ஏற்படுத்தினார்!-

"சொல்லப் போனால், யார், எதற்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்? என் மனத்தில் இது அறவே தோன்றவில்லை. "

ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! அவர் சாமாவை அதே இடத்திற்கு அனுப்பி அங்கே தரிசனம் தந்தார். கயாவாளியும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

'பாபாவினுடைய அனுமதி பெற்றபின் நான் கொடுத்த அதே படந்தான் இது, அதே கயாவாளிதான் இவர்' என்று சாமாவுக்கு ஞாபகம் வந்தது.

'இவருடைய வீட்டில்தான் நான் அப்பொழுது ஷிர்டிக்குச் சென்றபோது தங்கினேன்.  இவர்தான் எனக்கு பாபாவை தரிசனம் செய்வித்தார்' என்று கயாவாளிக்கும் ஞாபகம் வந்தது.

ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளை நினைத்து அவர்களுடைய மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. கயாவாளி சாமாவுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை கயாவில் செய்துகொடுத்தார். 




Thursday, 27 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அதற்கு கயாவாளி பதிலுரைத்தார், "ஓ, நீங்களே வந்து பாருங்களேன். அதுமாதிரி வியாதி இங்கு ஒன்றும் இல்லை. சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் என்னுடன் வாருங்கள்."

ஆகவே, அவர்கள் இருவரும் கயாவாளியின் இடத்திற்குச் சென்றனர்; அவருடைய விசாலமான வீட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.

அவர்களுடைய சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வீட்டிற்குள் போய் உட்காருவதற்கு முன்னமேயே, பாபாவின் படமொன்றைக் கண்ட மாதவராவ் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப் போனார்.

எங்கோ தூரதேசத்தில் இருக்கும் கயாவில், பாபாவின் படத்தைக் காண்போம் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம் அவர்களை மூழ்கடித்தது!

ஆனந்தக்கண்ணீர் பொங்கிவர, மாதவராவ் அன்பின் பெருக்கால் தன்வசமிழந்தார். இதை பார்த்த கயாவாளி, "ஏன் ஐயா நீர் அழுகிறீர்" என்று கேட்டார்.

காரணம் ஏதுமின்றி மாதவராவ் அழுவதை பார்த்தவுடன் கயாவாளி சந்தேகப்பட்டு மனம் நொந்து போனார்.

'பிளேக் நோய் இருக்கும் இந்த கயாவில் திட்டமிட்டபடி நாம் எப்படிப் புனிதப் பயணத்தை நிறைவேற்றப்போகிறோம்?' என மாதவராவ் மனச்சஞ்சலமுருகிறார் என்று நினைத்து கயாவாளி மிகவும் கவலையுற்றார். கயாவாளி ஆறுதலித்தார். -

"இவ்விடம் பிளேக் நோய் இல்லை என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டபோதிலும் நீர் கவலைகொள்கிறீர். இதைக் கண்டு நான் வாஸ்தவமாகவே வியப்படைகிறேன்!-

"என்னிடம் நம்பிக்கை இல்லை என்றால் இங்கிருக்கும் எல்லாரையும் கேளுங்கள்! இவ்விடத்தில் உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குகூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படியிருக்க, நீர் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்?"

'பிளேக் நோயைப்பற்றிய பிராந்தியை மனத்தில் ஏற்றிக்கொண்டு தைரியத்தை சுத்தமாக இழந்துபோய் அனாவசியமாக இம் மனிதர் அழுதுகொண்டேயிருக்கிறார். '

இவ்வாறு நினைத்த கயாவாளி, விவரம் சொல்லி மாதவராவை சாந்தப்படுத்த முயன்றார். ஆனால், மாதவராவின் மனத்தில் இருந்த எண்ணமோ, 'எவ்வாறு என் தாய் (சாயி) எனக்கு முன்பாகவே இன்று இவ்விடத்திற்கு வந்து சேர்ந்துருக்கிறார்' என்பதே.

ஏற்கெனவே பாபா சொல்லியிருந்தார், "காசிக்கும் பிரயாகைக்கும் சீக்கிரமாகச் சென்ற பிறகு நான் மாதவராவுக்கு முன்னாடியே வந்து சேருவேன்". இதோ, இங்கே, அந்தச் சொற்கள் நேரிடையான அனுபவமாகிவிட்டன.

வீட்டினுள் நுழைந்தவுடனேயே பாபாவின் படம் தென்பட்டது. இந்த எதிர்பாராத அனுபவம் அவர்களுக்கு மஹா ஆச்சரியத்தை அளித்தது.

அன்பின் மிகுதியால் தொண்டை அடைத்துக்கொண்டது; கண்களிலிருந்து ஆனந்தபாஷ்யம் பொங்கியது; மயிர்க்கூச்செரிந்தது; உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது.

மாதவராவினுடைய நிலை இவ்வாறு இருந்தபோது கயாவாளி வேறுவிதமாக நினைத்தார். மாதவராவ் பிளேக் நோய்க்கு பயந்துதான் அழுவதாக அவர் வாஸ்தவமாகவே எண்ணினார். 



Thursday, 20 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அங்கிருந்து அவர்கள் திருமணவிழாவிற்காக குவாலியர்க்குச் சென்றனர். அப்பொழுது சாந்தோர்க்கர் மாதவராவுக்கு நூறு ரூபாய் அளித்தார்.

மணப்பெண்ணின் தகப்பனார் ஸ்ரீமான் ஜடாரும் அவருக்கு நூறு ரூபாய் அளித்தார். இவ்வாறு, சாந்தோர்க்கருடைய குருபந்துவாகிய (ஒரே குருவினைப் போற்றி வழிபடுவதால் உறவினர் போன்று நெருக்கமாக ஆகிவிட்டவராகிய) மாதவராவுக்கு அன்பளிப்பாக நிறைய வருமானம் கிடைத்தது.

காசியில் 'மங்கள்காட்டில்' (ஒரு படித்துறையின் பெயர்) வெள்ளியும் பொன்னும் மணிகளும் இழைக்கப்பட்ட, அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய லக்ஷ்மிநாராயணர் கோயில் ஒன்று உண்டு. இக் கோயில் ஜடாருக்குச் சொந்தமானது.

ஜடாருக்குச் சொந்தமான ராமர் கோயில் ஒன்று அயோத்தியாவிலும் இருந்தது. இவ்விரண்டு புண்ணிய க்ஷேத்திரங்களிலும், மாதவராவையும் ஆபா கோதேவையும் மரியாதையுடன் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஜடார் தம் மணியக்காரரிடம் ஒப்படைத்தார்.

குவாலியரிலிருந்து அவர்கள் மதுராவிற்குச் (வடமதுரை - ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி) சென்றனர். அவர்களுடன் கூட ஓஜயேயும் பினீவாலேயும் பேன்டார்கரும் சென்றனர். ஆனால், அவர்கள் மூவரும் மதுராவிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.

மாதவ்ராவென்னவோ, ஆபா கோதேவுடன் பிரயாகைக்குச் (அலஹாபாத் - திரிவேணி சங்கமம் ஆகும் இடம்) சென்றுவிட்டு அங்கிருந்து ஸ்ரீ ராமநவமி விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தக்க சமயத்தில் அயோத்தியை வந்தடைந்தார்.

அவர்களிருவரும் அயோத்தியில் இருபத்தொன்று நாள்களும் காசியில் இரண்டு மாதங்களும் கழித்தனர்.  சூரியகிரஹணமும் சந்திரகிரஹணமும் சம்பவித்து முடிந்த பிறகு, இருவரும் கயாவிற்கு கிளம்பினர்.

கயா அப்பொழுது பிளேக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தெருக்களிலும் வீதிகளிலும் மக்கள் பீதியுடன் கவலை தோய்ந்து காணப்பட்டனர். எப்படியோ இச்செய்தி புகைவண்டியில் இருந்தபோதே மாதவராவுக்கு எட்டிவிட்டது.

புகைவண்டி கயா ரயில் நிலையத்திற்குள் இரவு நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆகவே, இருவரும் அருகிலிருந்த தர்மசத்திரத்தில் அன்றிரவைக் கழித்தனர்.

காலையில் கயாவளி (யாத்திரீகர்களுக்குச் சடங்குகளும் பூஜைகளும் செய்வித்து சம்பாதிப்பவர்) ஒருவர் அவர்களை சந்திப்பதற்காக வந்தார். வரும்போதே, "சீக்கிரம் கிளம்புங்கள், யாத்திரீகர்களின் கூட்டம் முழுவதும் வெளியே போவதற்குத் தயாராகிவிட்டது" என்று துரிதப்படுத்திக்கொண்டே வந்தார்.

மனச்சஞ்சலம் பீதியும் கொண்டிருந்த மாதவராவ் மெல்லிய குரலில் அவரை வினவினார், "வருகிறோம், வருகிறோம், ஆனால், உங்கள் பேட்டையில் கொள்ளைநோய் இருக்கிறது போலிருக்கிறதே ?" 




Thursday, 13 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"குவாலியருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டேனானால் அங்கிருந்து காசி எவ்வளவு தூரம் இருக்கிறதோ!" என்று சாப்பாடு முடிந்தவுடன் மாதவராவ் தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.

செலவுக்காக நந்தராமிடமிருந்து ரூ 100 /- கடன் வாங்கிக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றுக்கொள்வதற்காகச் சென்று மிகப் பணிவுடன் விண்ணப்பித்தார்.

"குவாலியர் வரையில் நான் பூணுல் கல்யாணத்திற்காகவும் திருமணத்திற்காகவும் செல்வதாக இப்போது நேர்ந்திருப்பதால், வாய்ப்புக்கேற்றவாறு காசிக்கும் கயைக்கும் சென்றுவருவதே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். -

"ஆகவே ஓ பகவானே! உமது பாதங்களில் விழுந்து பிரார்த்தனை செய்கிறேன். காசிக்கும் கையைக்கும் கூட போய்வரட்டுமா?" பாபா அப்பொழுது மகிழ்ச்சியுடன் மாதவராவுக்கு அனுமதியளித்தார்.

மேலும் பாபா கூறினார், "நீர் கேட்பதில் முறைகேடு என்ன இருக்கிறது? முயற்சி ஏதுமில்லாமலும் சுலபமாகவும் எது நமக்கு வாய்க்கிறதோ அதைத் தவறவிடாது கட்டாயம் பயன்படுத்தவேண்டும். "

இவ்வாறு ஆணையிடப்பட்டது. மாதாராவ் ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கோபர்காங்கவிற்கு கிளம்பினார்; வழியில் ஆபா கோதேவை சந்தித்தார்.

ஆபா தம் பேத்தியை வீட்டிற்குத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவதற்காக சாந்த்வடாவிற்குப் போய்க்கொண்டிருந்தார். காசிப் புனிதப் பயணத்தைக் பற்றிக் கேள்விப்பட்டவுடன் தம்முடைய குதிரை வண்டியிலிருந்து எகிறிக் குதித்தார்.

காசிப் பயணத்திற்குக் கையில் பணமில்லை; ஆயினும் மாதவராவுடன் சகபயணம் செய்யும் அருமையான வாய்ப்பை விட்டுவிட மனமில்லை.

ஆகவே, மாதவராவ் தைரியமூட்டியபோது ஆபா கோதேவுக்குத் தயக்கம் எங்கிருந்து வரும்? நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சட்டென்று ஏறி மாட்டுவண்டியில் உட்கார்ந்துவிட்டார்.

ஆபா கோதே பாடீல் ஒரு பணக்காரர். ஆயினும், பயணம் செய்துகொண்டிருக்கும்போது பணம் புரட்டுவது எவ்வாறு? காசிக்குப் போவது பணத்தினால் தடைபட்டுவிடுமோ என்பதுதான் அவருடைய பெரிய கவலை.

கதவைத் தட்டும் புனிதப் பயண நல்வாய்ப்பை, அதுவும் மாதவராவின் தோழமையுடன் செல்வதை பயன்படுத்தியே தீரவேண்டும் என்று அவருடைய ஆழ்மனம் விரும்பியது.

அவருடைய பிரச்சினையைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில்


அவருக்கு தைரியம் அளித்துக் காசிப் பயணத்தின் புண்ணியம் அவருக்குக் கிடைக்கும் வகையில், ஆபா கோதேவைத் தம்முடன் மாதவராவ் சேர்த்துக்கொண்டார்.

பிறகு அவர்கள் இருவரும் நாக்பூரில் நடந்த பூணுல் கல்யாணத்திற்குச் சென்றார்கள். செலவுக்காக மாதவராவுக்கு தீக்ஷிதர் இருநூறு ரூபாய் அளித்தார். 





Thursday, 6 February 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார்.

பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயீ அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.

இப்பொழுது அதே முக்கியத்துவத்துடன் ஒரு புதுமையான காதை சொல்லுகிறேன். இதைக் கேட்பவர்கள் ஆச்சரியத்திலாழ்த்து மனமகிழ்ச்சி அடைவார்கள்.

நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் சாயியின் இவ்வமுதமொழிகளைக் கேட்பவர்கள் ஆத்மானந்தத்தில் பொங்குவார்கள். யோகசமாதி நிலை அளிக்கும் ஆனந்தங்கூட இந் நிலைக்கு ஈடாகாது.

அற்புதமான திருப்பங்களைக் கொண்ட இவ்வினிமையான காதை, கேட்பவருடைய இதயத்தில் உணர்ச்சி பொங்கும்படி செய்து தம்மையே மறக்கச் செய்யும்.

காகசாஹெப் தீக்ஷிதரின் மூத்த மகன் பாபுவிற்கு உபநயனம் (பூணுல் கலியாணம்) நாக்பூரில் நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.

அதுபோலவே, நானா சாந்தோர்க்கரின் மூத்த மகனின் திருமணமும் குவாலியர் நகரத்திற்குச் சென்று நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.

பூணுல் கலியாணத்தை முடித்துவிட்டு, குவாலியரில் நடக்கும் கலியாணத்திற்கு தீக்ஷிதர் நேரத்தில் வந்துசேர இயலாது என்று சாந்தோர்க்கருக்குத் தோன்றியது.

இதைத் தவிர்ப்பதற்காக, நாக்பூரிலிருந்து குவாலியருக்கு உரிய நேரத்தில் சௌகரியமாக தீக்ஷிதர்  வந்து சேரும் வகையில், இருதரப்பினருக்கும் வசதியான ஒரு முகூர்த்த நாள் நிச்சயிக்கப்பட்டது.

இதன் பிறகு, பக்தமணியான சாந்தோர்க்கர் சாயியை தரிசனம் செய்யவும், மகனின் கலியாணத்திற்கு வரும்படி அவரை நேரில் அழைப்பதற்காகவும் உற்சாகத்துடன் ஷிர்டிக்கு வந்தார்.

தீக்ஷிதர் ஏற்கெனவே ஷிர்டியில் இருந்தார். சாந்தோர்க்கர் மசூதிக்குச் சென்று கைகூப்பி வணங்கி பாபாவைக் கலியாணத்திற்கு விஜயம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.

பாபா சிறிது யோசித்துவிட்டு, "சரி, சரி, சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்" என்று சொன்னார். இரண்டு நாள்கள் களைத்து தீக்ஷிதரும் பாபாவைத் தம் மகனின் பூணுல் கலியாணத்திற்கு விஜயம் செய்யும்படி வேண்டிக்கொண்டார்.

அவருக்கும் பாபாவை, "சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்" என்று அதே பதிலை அளித்தார். தீக்ஷிதர் பாபவையே நேரில் வரும்படி மன்றாடி வேண்டினார்.

அதற்கும் பளிச்சென்று பதில் வந்தது, "காசிக்கும் பிரயாகுக்கும் (அலஹாபாத் - திரிவேணி சங்கமம் ஆகும் இடம் ) வேகமாகச் சென்றபின் சாமாவுக்கும் முன்னாடி நான் வந்து சேருவேன். நான் அங்கு வருவதை யாரால் தாமதம் செய்ய இயலும்?"

கதைகேட்பவர்கள் இங்கே கவனமாகக் கேட்டு இவ்வார்த்தைகளின் பரிமாணத்தை நன்றாகக் புரிந்து கொள்ளவேண்டும்; அப்பொழுதுதான் இவ்வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உண்மையையும் பாபா எங்கும் நிறைந்திருப்பதையும் நன்கு உணரமுடியும். 




Thursday, 30 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆகவே, நாங்கள் எங்களுடைய எண்ணம், சொல், செயல், இவற்றைத் தங்கள் பாதகமலங்களில் செலுத்திவிட்டு இடைவிடாமல் உம்முடைய திவ்விய நாமத்தை ஜெபிப்போமாக! அவ்வழியேதான் எங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும்.

வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறீர்; வேண்டுதல் ஏதும் இல்லாதவர்களுக்கு பரமபதத்தை அளிக்கிறீர். பக்தர்களுக்கு இனிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் மிக்க சுலபமான வழியன்றோ உமது நாமம்!

உமது நாமஜபத்தினால் பாவம் அழிகிறது; ராஜஸ குணமும் தாமச குணமும் மறைகின்றன. சத்துவ குணம் மேலோங்குகிறது. இதில் சந்தேகம் ஏதுமில்லை. படிப்படியாக வாழ்வில் தருமநெறி வளர்கிறது.

கடவுள் பக்தியும் அறநெறி வாழ்வும் இவ்வாறு விழித்துக்கொண்ட நிலையில், பற்றற்ற மனப்பான்மை வேகமாகத் தொடர்கிறது; புலன் அவாக்கள் அறவே அழிக்கப்படுகின்றன; ஆத்மஞானம் அக்கணமே பளிச்சென்று தோன்றுகிறது.

விவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே லயிக்கும் (அமிழ்ந்து போகும்) மன ஒருமையே. இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் விழுந்துகிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.

சாயியின் பாதகமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம் ஒன்றே ஒன்றுதான். பக்தன் பரமசாந்த நிலையை எய்துகிறான்; நிஜமான பக்தி பொங்கிவழிகிறது.

குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே அறநெறியாகும். "அனைத்தும் நானே" என்பதே ஞானத்தின் சாரம். புலனின்பங்களின்மேல் விருப்பமின்மையே பெரும் வைராக்கியமாகும். இந்த நிலை எய்திவிட்டால் உலகியல் வாழ்க்கை மறைந்துபோகிறது.

என்னே இந்த பக்தியின் மஹிமை! குவிந்த மனத்துடன் அனுஷ்டானம் செய்யப்படும்போது, தன் சக்தியுள் பொதிந்து கிடக்கும் சாந்தி, விரக்தி, கீர்த்தி, இம் மூன்றையும் வெளிப்படுத்துகிறது.

அவ்வகை குருபக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ?  அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் பிரயாசை (உழைப்பு) ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.

அவ்வகை குருபக்திக்கு, திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் சொத்துகள்போல இந்திர பதவியும் அடிமைபட்டுக் கிடக்கிறது. புண்ணிய க்ஷேத்திரங்களே காலடியில் கிடக்கும் அந் நிலையில் மோக்ஷத்திற்கு முக்கியத்துவம் யாருமே கொடுப்பதில்லை.

தீக்ஷிதரின் பாகவத பாராயணத்தைப்பற்றியும் நவயோகீந்திரர்கள் பற்றியும் சாயிபாத தரிசனம் பற்றியும் சென்ற அத்தியாயத்தில் விவரணம் கண்டோம்.

ஆனந்தராவ் பாகாடேயின் அற்புதக் கனவுபற்றியும் சாயிபக்தியின் பெருமையையும் எடுத்துரைத்தேன். 



Thursday, 23 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


46 .  காசி - கயா புனிதப் பயணம் - இரண்டு ஆடுகளின் காதை


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஸ்ரீ சாயி பாபா! உம்முடைய பொற்கமலப் பாதங்கள் புனிதமானவை; உம்முடைய நினைவு புனிதமானது; உம்முடைய தரிசனம் புனிதமானது. இம் மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.

தற்காலம் உருவமற்ற நிலையில் இருந்தாலும், விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றிவிட்டால், சமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது. பக்தர்கள் இன்றும் இதை அனுபவபூர்மாக உணர்கின்றனர்.

எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்; அவ்வளவு மெல்லியதாக நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படியிருந்தால் என்ன? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்த நூலால் உம் திருவடிகளுக்கு இழுத்துவிடுகிறீர் அல்லீரோ?

அவ்வாறு இழுத்துவந்து அவர்களைக் கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தைகளை போஷிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாகப் பராமரிக்கிறீர்.

நீர் எங்கிருக்கிறீர் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறீர்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் நீர் எந்நேரமும் அரணாக நிற்கிறீர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்கின்றன.

மெத்தப் படித்த பண்டிதர்களும் சாமர்த்தியசாலிகளும் அழகர்களும் அகந்தையால் இவ்வுலக வாழ்வெனும் சேற்றில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நீரோ , எளிமையும் நம்பிக்கையும் உடையவர்களுடனும், அப்பாவி மக்களுடனும் உம்முடைய சக்தி கொண்டு விளையாடுகிறீர்.

அகமுகமாக வியூகங்களை வகுத்து எல்லா விளையாட்டுகளையும் நீர் ஆடுகிறீர்; ஆனாலும், வெளிபார்வைக்குத் தனிமைவிரும்பி போலவும் சம்மந்தமில்லாதவர்போலவும் பாசாங்கு செய்கிறீர். எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு 'நான் செயலற்றவன்' என்று சொல்லிக்கொள்கிறீர். உம்முடைய செயல்முறைகளை அறிந்தவர் எவரும் உளரோ! 




Thursday, 9 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"அதை விடுத்து ஒரே தூங்கிவிழுகிறார். அவருடைய கை, கல் போலக் கனக்கிறது. "பகத்" என்று நான் விளிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து தூக்கம் கலைந்து அவரை நிலைகுலையைச் செய்கிறது.-

"தரையிலேயே நிலைப்பட உட்காரமுடியாதவர், ஸ்திரமான ஆசனம் இல்லாதவர், தூக்கத்திற்கு அடிமையாகிய மனிதர், உயரத்தில் எப்படித் தூங்கமுடியும்?"

'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;  மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வலையில் அவர் நடக்கட்டும். (பிறரைப் பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராகச் செயல்படாதே.)  இந்த அறிவுரையை பக்தர்களின்மீது இருந்த அநுராகத்தினால் (காதலால்) பாபா சமயம் பார்த்து அளித்தார்.

சாயிநாதரின் செய்கைகள் மனித அறிவுக்கெட்டாதவை ! ஹேமாட் அவருடைய பாதாரவிந்தங்களில் இணைந்து கொள்கிறேன்.  கிருபையுடன் என்னை ஆசீர்வதித்த காரணத்தால், அவரும் என்னை அகண்டமாக நினைவுகொள்கிறார்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில் , 'குருபாத மஹிமை' என்னும் நாற்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 2 January 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒரு சமயம் மகால்சாபதியுடன் பாபா மசூதியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று தாம் ஒருகாலத்தில் பலகையின்மேல் படுத்துறங்கிய ஞாபகம் வந்தது.

ஒன்றேகால்சாண் (சுமார் பதினொன்று அங்குலம்) அகலமிருந்த மரப்பலகை, இரு பக்கங்களிலும் கிழிந்த ஆடைகளால் பிணைக்கப்பட்டு மசூதியின் கூரையிலிருந்து ஓர் ஊஞ்சலைப் போலத்  தொங்கவிடப்பட்டது.

யாரும் இருட்டில் படுத்து உறங்கக்கூடாது. ஆகவே, தலைமாட்டிலும் கால்மாட்டிலும் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பாபா இரவில் மரப்பலகையின்மேல் படுத்து உறங்குவார்.

இந்தப் பலகையின் விருத்தாந்தம் முந்தைய அத்தியாயம் ஒன்றில் (அத். 10 ) விவரிக்கப்பட்டுவிட்டது.  ஆகவே, இப்போது அப் பலகையின் மகத்துவத்தை மட்டும் கேளுங்கள்.

ஒருசமயம், அந்தப் பலகையின் மஹிமையை பாபா உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்தார். அதைக் கேட்ட காகா சாஹிபின் மனத்தில் எழுந்த எண்ணம் என்னவென்று விவரம் கேளுங்கள்.

அவர் பாபாவிடம் கூறினார், "நீங்கள் மரப்பலகையில் தூங்க விரும்பினால் நான் பிரீதியுடன் மறுபடியும் ஒரு பலகையைத் தொங்கவிடுகிறேன்.  அதன் பின்னர், நீங்கள் பலகையின்மேல் நிம்மதியாகப் படுக்கலாம். "

பாபா அவருக்குப் பதிலுரைத்தார். "மகால்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் எப்படித் தனியாகத் தூங்க முடியும்?  தற்பொழுது இருப்பது போலக்   கீழே இருப்பதே எனக்குத் திருப்தி. "

இதைக் கேட்ட காகா மிகுந்த அன்புடன் மீண்டும் சொன்னார், "அப்படியானால், நான் இன்னுமொரு பலகையையும் தொங்கவிடுகிறேன். நீங்கள் ஒரு பலகையிலும் மகல்சாபதி இரண்டாவது பலகையிலும் படுத்துறங்கலாம்."

பாபா இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள், "மகால்சாபதியால் பலகையில் தூங்க முடியுமா என்ன? எவர் அங்கமெல்லாம் நற்குணங்கள் நிரம்பியவரோ, அவரே மரப்பலகையில்  படுத்து உறங்க முடியும்.-

"பலகையில் படுப்பது சுலபமா என்ன? என்னைத் தவிர வேறு யாரால் பலகையில் படுக்கமுடியும்? தூக்கத்தை விரட்டிவிட்டுக் கண்களைத் திறந்துகொண்டு இருக்க முடிந்தவர்தாம் பலகையில் படுக்கலாம். -

"நான் படுக்கப் போகும்போது மகால்சாபதிக்கு ஆணையிடுகிறேன், 'கையை என்னுடைய இதயத்தின்மேல் வைத்துக்கொண்டு எதிரில் உட்கார்ந்திரும்' என்று, -

"அந்த வேலையைக் கூட அவரால் செய்யமுடியவதில்லை. உட்கார்ந்தவாறே தூங்கிவிடுகிறார். அவருக்குப் பலகையால் பயன் ஏதும் இல்லை. மரப்பலகை எனக்குதான் படுக்கையாகும்.-

"'என்னுடைய இதயத்தில் நாமஸ்மரணம்  இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறது. நீர் உம்முடைய கையை வைத்து என்னைக் கண்காணியும். நான் தூங்குவதாகத் தெரிந்தால் என்னை எழுப்பிவிடும். ' இவ்வாறு நான் ஆணையிட்டிருக்கும்போது ,-