valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 2 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது. 

அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது.  ஆனபோதிலும், சபட்னேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியே' என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார். 

"பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன்.  நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறது!

"என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?-

"காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே;  என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியே' என்றா எழுதியிருக்கிறது?

"என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கெடு) காட்டுகிறாரோ?-

"ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்".

ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அனுக்கிரஹம் பெறும்வரை ஷிர்டியிலிருந்து நகர்வதில்லை என்று சபட்னேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார். 

முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், சாயிதரிசனம் செய்யவேண்டுமென்று தாகத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி சபட்னேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார். 

"யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன். "

இவ்வாறு சபட்னேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். 

பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலையின்மேல் வைத்தார். சபட்னேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

 


 

Thursday, 25 September 2025

ஸ்ரீ  ஷீர்டி சாயி சத் சரிதம்  


மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், "அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.-

"கோமளமான குரலில் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.'-

"எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். -

"கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்."  மனைவி கண்டா கனவின் விவரத்தைக் கேட்ட சபட்னேகர் ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். 

அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் ஷீர்டி கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர்.  உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். 

ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார். 

நகத்திலிருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (சபட்னேகரின் மனைவி ) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார். 

பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

பெண்மணியின் விநயத்தைக் கண்டு சாயிநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்லிய குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா. 

வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப் பற்றி பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார். 

உண்மையில் அது அப் பெண்மணியின் கதை.  அதை அவளிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.

"என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாக கடுமையாக வலிக்கின்றன.  மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை. (குணமடையவில்லை)

"மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அலர்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்!"

இதுதான் அப் பெண்மணியின் கதை.  பெயரைக் கூடாக குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையே!


 

Thursday, 18 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இறைவா! இது என்ன சித்திரம்?" பாபா படத்தைப் பார்த்துவிட்டு சபட்னேகரைச் சுட்டிக்காட்டியவாறு  பதிலளித்தார், "இது அவர் நண்பரின் படம்"

இவ்வாறு சொல்லிக்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. "பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?" என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை).

உடனே பாலா சிம்பி சபட்னேகரிடம்  சொன்னார், " தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்."  ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது ,, "போ வெளியே " என்ற முழக்கத்தை சபட்னேகர் செவிமடுத்தார். 


"அய்யகோ! அதே 'போ வெளியே ' இன்னும் என்னைப் பின்தொடர்கிறதே! இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?" இதுவே சபட்னேகரின் பெருவியப்பு. 

அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், "இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்!"

"சமர்த்த ஸ்வாமியே! உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது.  இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்ன! இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். -

"பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், "போ வெளியே " என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்! இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.-

"எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடிய சீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசியளியுங்கள்."  அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு. 

பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோ ! ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். 

பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர். 

மேலும் ஓராண்டு கழிந்தது.  ஆனபோதிலும், சபட்னேகரின்  மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார்.  மனக்கலக்கம் அதிகரித்தது. 

ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச்  சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 

காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது.  காசிப் பயணம் நிறுத்தப்பட்டது!

ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது  எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன்.  சாயியின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள். 

சபட்னேகரின்  மனைவி படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சா ' வின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார். 


 

Thursday, 11 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அந்த ஞானியை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் மூண்டது. ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். உறவினர் ஒருவருடன் கிளம்பினார். 

தம்முடைய பாதங்களில் பணிவதற்காக அவரை ஷிர்டிக்கு இழுத்தவர் சாயியே! சேவடே  எப்பொழுதோ சொன்ன வார்த்தைகள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்கே)! நான் இப்பொழுது சொல்லப்போவதைக் கவனத்துடன் கேளுங்கள். 

தம் இளையசகோதரர் பண்டித ராவையும் கூட்டிக்கொண்டு சபட்னேகர் ஞானி தரிசனத்திற்காக ஷிர்டிக்குக் கிளம்பினார். 

அவர்கள் இருவரும் ஷிர்டிக்கு வந்து சேர்ந்தவுடனேயே சாயிதரிசனத்திற்குச் சென்றனர். தூரத்திலிருந்து பாபாவை தரிசனம் செய்தபோதே மனங்குளிர்ந்தனர். 

தூரத்திலிருந்து பாபாவின் கண்களைச் சந்தித்தவுடன் இருகைகளையும் கட்டிக்கொண்டு விரைவாக அவரருகில் சென்று நின்றனர். 

இருவரும் மிகுந்த பணிவுடன் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். தூய்மையான உள்ளதுடனும் பிரேமையுடனும் ஒரு தேங்காயை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தனர். 

தேங்காயை பாபாவின் பாதங்களில் சபட்னேகர் சமர்ப்பித்தபோது, "போ வெளியே" என்று சத்தம் போட்டு பாபா அவரை விரட்டியடித்தார். 

பாபா கோபங்கொண்டதை கண்ட சபட்னேகர் மனக்கலக்கம் அடைந்தார். 'இதற்கு என்ன பொருள் என்பதை, குறிப்பறிந்தவர் யாரையாவது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இவ்வாறு தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். 

தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டியவர், சுடுசொல் கேட்டுத் துணுக்குற்றுப் பின்வாங்கினார். வருத்தத்துடன் முகங்கவிழ்ந்து உட்கார்ந்தார். 

'இப்பொழுது யாரிடம் செல்வது? பாபாவின் சுடுசொல்லுக்கு அர்த்தம் என்னவென்று எந்த பக்தரைக் கேட்பது? பாபாவின் என்ன ஓட்டம் என்னெவென்று யாரைக் கேட்பது ?"

அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்ட யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாலா சிம்பியின் பெயரை சிபாரிசு செய்தார்.  ஆகவே, சபட்னேகர் பாலா சிம்மியைத் தேடிச் சென்றார். 

விருத்தாந்தத்தை முழுமையாக பாலா சிம்பியிடம் விவரித்தபின், சபட்னேகர் வேண்டினார், "பாபா உக்கிரமான வார்த்தை பேசி என்னை விரட்டிவிட்டார்.-

"தாங்கள் என்னுடன் வந்தாலாவது எனக்கு சாந்தமான தரிசனம் கிடைக்கலாம். பாபா கோபப்படாமல் நம்மீது கிருபைகனிந்த பார்வையைச் செலுத்த வாய்ப்பு உண்டு".

பாலா சிம்பி இதற்கு ஒத்துக்கொண்டார். சபட்னேகர் சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். பாபாவின் படம் ஒன்றை வாங்கிக்கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு கிளம்பினார். 

பாலா சிம்பியும் உடன் சென்றார். படத்தைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டபின், பாபாவிடம் அதைக் கொடுத்துப் பணிவன்புடன் பாலா சிம்பி கேட்டார், -

 


Thursday, 4 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"பிரசித்தி பெற்ற அஹமத் நகர ஜில்லாவில் ஷீர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கீர் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற சத்புருஷர்-

"எங்கெங்கோ எத்தனையோ ஞானியர் இருக்கின்றனர். ஆயினும், அமோகமான புண்ணியம் சேர்த்திராவிட்டால், எவ்வளவு முயன்றாலும் அவர்களை தரிசனம் செய்யும் நல்வாய்ப்பு நேராது.-

"அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும்.  நடக்காமல் தடுக்க எச் சக்தியாலும் யுக முடிவுவரை முயன்றாலும் இயலாது.-

"நான் எவ்வளவு பிரயாசை செய்தாலும் இவ்வாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடையப்போவதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நான் பிரயாசையின்றியே தேர்ச்சி பெறுவேன். இது முவ்வகையிலும் சத்தியம். 

"இது அவர் எனக்களித்த வாக்குறுதி. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாகா.  இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். -

"நான் அதிசயம் ஏதும் இன்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீட்சையிலும் வெற்றி  பெறப் போகிறேன்."  இந்த வார்த்தைகள் வெறும் பிதற்றல் என்றும், கேலிக்குரியவை என்றும் சபட்னேகர் சந்தேகமற நினைத்தார். 

சபட்னேகர் விகற்பமாகச் சிந்தித்தார், " இவர் சொல்வதை எப்படி நம்ப முடியும்?" இது இவ்வாறிருக்க, சேவடே அங்கிருந்து சென்று விட்டார். பிற்காலத்தில் என்ன நடந்ததென்பதைக் கேளுங்கள். 

சிலகாலம் கடந்த பிறகு, சேவடே  சொன்னது அனுபவ பூர்வமாக உண்மையாகியது. சேவடே  இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். சபட்னேகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்!

அதன்பின் பத்தாண்டுகள் கழிந்தன. சபட்னேகருக்கு கெட்ட காலம் துவங்கியது. துரதிர்ஷ்டம் அவரை திடீரென்று தாக்கித் துயரத்தில் ஆழ்த்தியது.  அவர் சோகமானார். 

1913  ஆம் ஆண்டு சபட்னேகரின் ஒரே மகன் டிப்தீரியா ஜுரம் கண்டு இறந்து போனான்.  அவருக்கு வாழ்க்கையே வெறுத்தது. 

ஆகவே, அவர் பண்டர்பூர், கண்காபூர் போன்ற தலங்களுக்கு புனித பயணம் சென்றார். எங்கே சென்றும் மனம் நிம்மதியடையவில்லை. பின்னர் அவர் வேதாந்தம் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு சிலகாலம் கழிந்தது.  மனச்சாந்தி பெறுவது எவ்வாறு என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  திடீரென்று அவருக்கு ஒரு பாதை தென்பட்டது.  சேவடே  பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விருத்தாந்தம் ஞாபகத்திற்கு வந்தது. 

சாயிபாதங்களில் சேவடேவுக்கு  இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியும் அவருக்கு ஞாபகம் வந்தது. தாமும் சாயீ தரிசனத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. 


 

Thursday, 28 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால், சிலர் ஆரம்பகாலத்தில் ஞானிகளின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவர்.  ஆயினும், பின்னர் விசுவாசம் ஏற்பட்டால், மங்களங்கள் விளையும். 

ஓர் உண்மையான ஞானியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். ஞானியரின் ஆற்றல் அளவிடற்கரியது!

இந்தக் கருத்தைப் போதிக்கும் காதையொன்றை இப்பொழுது கவனத்துடன் கேளுங்கள். கேட்பவர்கள் ஆனந்தத்தால் நிரம்புவர்; அவ்வாறே, சொல்பவருக்கும் உற்சாகம் ததும்பும். 

அக்கல்கோட்வாசியும் சபட்னேகர் என்ற பெயர் கொண்டவருமான ஒரு வக்கீலின் அனுபங்களைக் கேளுங்கள். உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும். 

சட்டபடிப்பை முழுமுயற்சியுடன் இரவுப்பகலாகப் படித்துக் கொண்டிருந்தபோது, சேவடே என்ற சக மாணவரை இவர் சந்தித்தார். இருவரும் படிப்பு விஷயமாகப் பரஸ்பரம் கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். 

மேலும் சில சக மாணவர்களும் அங்கு வந்தனர். எல்லாரும் ஒரே அறையில் உட்கார்ந்தனர். யார், எந்த அளவிற்குப் படித்துத் தெளிவடைந்திருக்கிறார் என்பது அறிந்துகொள்ள ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.

யாருடைய விடை சரியானது என்பதையும், யார் எந்த இடத்தில எவ்விதமாகத் தவறு செய்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொண்டு மனநிறைவு பெறுவதே நோக்கம். 

சேவடேவின் விடைகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன. கடைசியில் எல்லா மாணவர்களும் சொன்னார்கள், "இவர் எப்படிப் பரீட்சையில் வெற்றி பெறப்போகிறார்?" படித்ததெல்லாம் அரைகுறையாக இருக்கிறதே!"

சக மாணவர்கள் இவ்வாறு இளக்காரமாக பேசிய போதிலும், சேவடே முழுநம்பிக்கையுடன் கூறினார், "படிப்பு அரைகுறையாக இருந்தாலும், முழுமையாக இருந்தாலும், வேளை வரும்போது நான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.-

"நான் முழுமையாக அப்பியாசம் செய்திராவிட்டாலும், என் பாபா எனக்குப் பரீட்சையில் வெற்றியளித்துவிடுவார். நான் எதற்காக கவலைப்பட வேண்டும்?"

இந்த வார்த்தைகளைக் கேட்ட ஸபத்னேகர்  ஆச்சரியமடைந்தார்.  சேவடேவைத் தனியாக அழைத்துச் சென்று கேள்வி கேட்கத் தொடங்கினார். 

"அடடா! நீர் வானளாவப் புகழும் இந்த சாயி பாபா யார் ஐயா? அவர் மீது பூரணமான விசுவாசம் வைத்திருக்கிறீரே; அவர் எங்கு வாசம் செய்கிறார்?"

இதற்கு விடையாக சேவடே சாயி பாபாவின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். கூப்பிய கைகளுடன், தாம் அவர்மீது வைத்திருந்த ஆத்ம விசுவாசத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார். 



Thursday, 21 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

சத் சரித்திரத்தைச் சொற்பொருள் அறிந்து பயபக்தியுடன் கேட்பவர்களுக்கு ஆத்மஞானம் அனாயசமாக கைகூடும். 

பக்திபாவத்துடன் சாயியின் பொன்னடிகளைத் தொழுவதாலும், சாயியை மனத்தில் நிலைபெறச் செய்வதாலும், புலன்கள் இஷ்டம்போல் செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன. பிறவிக்கடல் சுலபமாகவும் விரைவாகவும் கடக்கப்படுகிறது. 

சாயி சத் சரித்திரத்தைப் படிப்பதும் கேட்பதும், பக்தர்களாகிய சாதகப் பறவைகளுக்கு ஜீவனளிக்கும் நீராகும். கேட்பவர்கள், கேட்டதை மனத்தில் இருத்துவதால் இறைவனின் கிருபையைப் பெறுவதற்கு ஆயத்தமாகின்றனர். 

இந்தக் கதையை எந்நிலையிலும் கருத்தூன்றிக் கேட்பவர்களின் கர்மபந்தங்கள் அறுந்து, விழும்.  அவர்கள் பிறவிக்கடலை இயல்பாகக் கடந்துவிடுவார்கள். 

இப்பொழுது, கதைகேட்பவர்கள், "கதை எப்பொழுது ஆரம்பிக்கப்போகிறது?" என்று தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புவது எனக்குப் புரிகிறது.  பீடிகையை ஆரம்பித்து அவர்களுடைய சஞ்சலத்தை நிவிர்த்தி செய்கிறேன். 

விரோதம், கொலை, கடன் ஆகிய பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகப் புனர்ஜன்மம் எடுத்தாக வேண்டும் என்பதும், கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. 

மக்களுக்கு முன்ஜன்ம ஞாபகம் இருக்காது. ஆனால், ஞானிகளோ அதை மறப்பதில்லை. பக்தர்கள் எங்கு மறுபிறவி எடுத்தாலும் அவர்களை சங்கடங்களிலிருந்து ஞானிகள் விடுவிக்கின்றனர். 

கொடுப்பதிலும் வழங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் (எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும்) ஞானிகளின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள், வாழ்க்கையில் 
எவ்வாறு வெற்றியடைகிறார்கள் என்பதை விளக்கும் காதை ஒன்று இப்பொழுது சொல்லப்படும். 

ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இறைவனின் பாதங்களை நினைப்பவர்களுடைய மனக்கவலையை இறைவனே நிவாரணம் செய்கிறான். பக்தர்களும் தங்களுடைய கருமத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

'செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன்' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

ஞானிகள் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர்களாகத் துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவர்களுடைய அன்பு, லாபம் எதையும் எதிர்பார்க்காதது.  பொறுமையாகவும் தைரியமாகவும் உறவைத் தொடர்ந்தால், நமக்கு மங்களங்கள் விளைவிப்பார்கள். 

சாபங்களும் தாபங்களும் சுயநல நோக்கத்தால் ஏற்படும் ஆசாபாசங்களும், ஞானிகளின் சத் சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வென்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் ஞானிகளின் பாதங்களை வணங்க வேண்டும். 

அகந்தையை விடுத்து, விநயத்துடன் ஞானிகளை சரணாகதி அடையவேண்டும்.  நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பதைப் பிரார்த்தனையாக அவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்.  ஞானிகளின் நம்முடைய மனத்துக்குப் பெரும் திருப்தியை அளிப்பார்கள். 


 

Thursday, 14 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

தேவரீர் உருவமற்ற இறையுடன் கலந்தபோது உருவத்தை விடுத்து உருவமற்ற நிலையை அடைந்தீர்.  ஆயினும், தேகத்தை உதறிய பிறகும் பக்தர்களுக்கு மங்களங்களை விளவிக்கும் செயல்கள் தொடர்கின்றன.

தேகத்துடன் வாழ்ந்தபோது என்னென்ன செய்தீரோ அவையனைத்தும் உருவமற்ற இறையுடன் கலந்த பிறகும் தொடர்கின்றன. உம்மை பக்தியுடன் அணுகுபவர்கள் இன்றும் அதே அனுபவத்தைப் பெறுகின்றனர். 

பாமரனாகிய என்னை ஒரு கருவியாகக்கொண்டு அஞ்ஞான இருளை நீக்கி, பக்தர்களை உத்தாரணம் செய்யக்கூடிய சக்திபடைத்த உமது சரித்திரம் என்னும் சூரியனை உதிக்கச் செய்துவீட்டிர்!

ஆஸ்திக புத்தியும் சிரத்தையுடன் கூடிய பக்தியுமே, பக்தனின் இதயமாகிய அகல் விளக்கு. அன்பாகிய எண்ணையுடன் திரி பிரகாசமாக எரியும்பொழுது ஞான ஜோதி வெளிப்படுகிறது. 

அன்பில்லாத ஞானம் வறண்டது; அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? அன்பின்றி வாழ்வில் திருப்தி ஏது? அன்பு குறைவுபடாததாகவும் இருக்கவேண்டும். 

அன்பின் மஹிமையை யான் எங்கனம் எடுத்துரைப்பேன்! அன்பின் எதிரில் மற்றவை அனைத்தும் துச்சம் அல்லவோ? இதயத்தின் ஆழத்தில் அன்பில்லாதவனின் படிப்பும் கேள்விஞானமும் பயன் அளிக்காது. 

அன்பில் பக்தி உறைந்திருக்கிறது. சாந்தியும் விரக்தியும் அன்பில் பொதிந்திருக்கின்றன. சகல சம்பத்துகளுடன் கூடிய முக்தியும் அன்பின் பின்னே நிற்கிறது. 

பாவம் இன்றி அன்பு உண்டாவதில்லை. பாவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்றறிக. பாவத்தின் வயிற்றிலிந்துதான் பூரணமான அன்பு பிறக்கிறது. பாவந்தான் பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய். 

கங்கை நீர் போன்று பரம பவித்திரமான 'சாய் சத் சரித்திரத்தின் ' இனிமை அளவிடற்கரியது. சாயியே அதன் சுலோகங்களில் உறைந்திருக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே. 

சாயி சத் சரித்திரத்தைக் கேட்பதால், கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராருமே தூய்மை அடைகின்றனர். புண்ணியங்களும் பாவங்களும் அடித்துச் செல்லப்பட்டு இரு சாராருமே நித்யமுக்தி பெறுகின்றனர். 

கேட்பவர்களின் காதுகள் பாக்கியம் பெற்றவை. சொல்பவரின் நாக்கோ விசேஷமான பாக்கியம் பெற்றது. பக்தர்களால் மிகப் பவித்தரமானதாகக் கருதப்படும் ஸ்ரீ சாயி தோத்திரம் பெரும்பேறு அளிக்கக்கூடியது. 

தூய்மையான மனத்துடனும் சத்பாவத்துடனும் சரித்திரத்தைக் கேட்பவர்களின் சகல மனோரதங்களும் நிறைவேறும்; எல்லாச் செயல்களும் நற்பயன்களை அளிக்கும். 


 

Thursday, 7 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

தாமே இறையனுபவம் பெறாதவர், சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்?  எவருக்குப் பிரதட்சயமான இறையனுபவம் இல்லையோ, அவரை எக்காலத்தும் சத்குரு என்று அழைக்கலாகாது. 

எவர், தம் சிஷ்யனிடமிருந்து சேவை பெறவேண்டுமென்று கனவிலும் நினைக்காமல், அதற்கு மாறாக, சிஷ்யனுக்காகத் தமது உடலை ஓடாகத் தேய்க்க விரும்புகிறாரோ அவரையே ஒரு சத்குருவென்று அறிவீராக. 

'சிஷ்யன் ஒரு துரும்பு, குருவோ உத்தமர்களில் உத்தமமானவர்' என்ற அகம்பாவம் இல்லாத சத் குருவே நன்மை செய்யக்கூடியவர். 

சிஷ்யனை முழுமுதற்பொருளாகக் கருதி அவனைத் தம் மகனைப்போல நேசித்துத் தம்முடைய வாழ்க்கைத்தேவைகளுக்காக சிஷ்யனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத சத் குருவே, இப்புவியில் பரம சிரேஷ்டமானவர் (தலைசிறந்தவர்). 

பரம சாந்தியின் இருப்பிடமானவரும், ஞான கர்வம் இல்லதாவரும், சிறியோரையும் பெரியாரையும் சரிசமமாக மதிப்பவருமாகிய சத்குரு  எனக் கொள்வீராக. 

இவையே ஒரு சத்குருவின் சர்வசாதாரணமான லக்ஷணங்கள். இவற்றைத் தொகுத்துச் சுருக்கிக் கதைகேட்பவர்களுக்கு அடியேன் அளித்திருக்கிறேன். 

ஏற்கெனவே சாயிதரிசனம் செய்து திருப்தியடைந்த கண்களை பெற்றிருக்கும் பாக்யசாலிகளுக்கு ஒரு சத்குருவின்  லக்ஷணங்களைப் (சிறப்பு இயல்புகளைப்பற்றி ) பற்றி அடியேன் மேற்கொண்டு என்ன வர்ணனை செய்யமுடியும்?

ஜென்மஜென்மங்களாக சேமித்துவைத்த புண்ணியங்களின் விளைவாக நாம் சத் குருராயர் சாயியின் பாதங்களை வந்தடைந்தோம். 

இளமையிலேயே அவர் தமது என்று எதையும் உடைமையாக்கி கொள்ளவில்லை; வீடுவாசல் ஏதும் இன்றி நிராதரவாக வாழ்ந்தார். உடைமைகள் என்று அவர் வைத்திருந்தவை புகையிலையும் சிலீமும் மகத்தான மனவொடுக்கமுமே!

பதினெட்டு வயதிலேயே அவர் பூரண மனோஜயம் பெற்றவராக இருந்தார். தன்னிலேயே லயித்து ஏகாந்தமாகவும் நிர்ப்பயமாகவும் (பயமின்றியும்) வாழ்ந்தார். 

'நான் பக்தர்களின் அடிமை' என்னும் தம் வாக்குறுதியை நிரூபிப்பதற்காக, எங்கே சுத்தமான அன்பை பக்தர்களிடம் கண்டாரோ, அங்கே அவர் எப்பொழுதும் இருந்தார்.

பர பிரம்மமே, பழம்பொருளே, ஜய ஜய ! தீனர்களைக் கைதூக்கிவிடுபவரே, மலர்ந்த முகத்தோரே, ஜய ஜய! பிரபஞ்சப் பேருணர்வால்



நிரம்பியிருப்பவரே, பக்தர்களின் வசத்தில் இருப்பவரே, ஜய ஜய! பக்தர்களுக்கு தரிசனம் தாரும் ஸ்வாமி!

இரட்டைச் சுழல்களுக்கு அப்பாற்பட்டவரே, ஜய ஜய! உருவமுள்ளதும் உருவமில்லாதவருமான இறையே, ஜய ஜய! பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியே, ஜய ஜய! அனைத்திற்க்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜய! பக்தர் அல்லாதாருடைய புத்திக்கு நீர் எட்ட மாட்டீர்.

இவ்வுலக வாழ்வின் இன்னல்களையும் துக்கங்களையும் அழிப்பவரே, ஜய ஜய! பிறவியெனும் யானையைக் கிழித்துக் கொள்பவரே, ஜய ஜய ! அடைக்கலம் புகுந்தவர்களிடம் பூரணமான பிரேமை செலுத்துபவரே, ஜய ஜய! சங்கடங்களிலிருந்து பக்கதர்களை விடுவிக்கும் சத் குருராயரே, ஜய ஜய! 

 

 

Thursday, 31 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


48 .  சந்தேகிகளுக்கும் அருள்!


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

இந்த அத்தியாயத்தைத் தொடங்கும் சமயத்தில், கதையை மிகுந்த பக்தியுடன் கேட்பவர்களில் ஒருவர், "ஸ்ரீ சாயி ஒரு குருவா, சத்குருவா?" என்ற கேள்வியை எழுப்பினார். 

அவருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு சத்குருவின் லட்சணங்களை (சிறப்பு இயல்புகளை) சுருக்கமாக எடுத்துரைப்போமாக.  பின்னர், சமர்த்த ஸ்ரீசாயியின் பாதங்களில் அந்த லக்ஷணங்களை நம்மால் காணமுடிகிறதா என்றும் பார்ப்போமாக!

வேதங்களை ஓதுவிப்பவர்களையோ, ஆறு சாஸ்திரங்களில் அடங்கிய ஞானத்தைக் கற்பிப்பவர்களையோ, வேதாந்த நிரூபணம் செய்து அறிவைப் பெருக்குவர்களையோ, சத்குரு என அறிஞர்கள் அழைப்பதில்லை. 

சிலர் மூச்சை அடக்குகின்றனர்.  சிலர் மதச்சின்னங்களை உடம்பில் முத்திரையாக சூடுபோட்டுக்கொள்கின்றனர். சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றிக் கேட்பவர்களை மகிழ்விக்கின்றனர்.  இவர்களில் யாரையும் சத்குருவென்று  விஷயமறிந்தவர்கள் அழைப்பதில்லை. 

சிலர் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு சிஷ்யர்களுக்கு மந்திர உபதேசம் அளித்து, ஜபம் செய்யும்படியாக ஆணையிடுகின்றனர். ஜபம், எப்பொழுது என்ன பயன் அளிக்கும் என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாது!

வார்த்தை ஜாலத்துடன் செய்யப்படும் பிரம்ம தத்துவ நிரூபணம், கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கலாம். ஆனால், சுயானுபவம் விளைவிக்காத ஞானம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்!

கவனமாக நிரூபணத்தைக் கேட்பவர்களின் மனத்தில் இவ்வுலக, மேலுலக இன்பங்களின்மேல் விரக்தி ஏற்படலாம்.  ஆயினும், பிரம்ம ஞானத்தைத் தாமே அனுபவித்தவர்தாம், அந்த இனிமையான அனுப்புவதை பிறருக்குப் பிரகடனம் செய்யமுடியம். 

வேதங்களை முழுமையாக அறிந்து, பூரணமான அனுபவத்தைப் பெற்றுக் கண்கூடாக அவ்வனுபவத்தை சிஷ்யனுக்கு அளிக்கும் சக்தி பெற்றவருக்குதாம், சிஷ்யனை எழுப்பிவிடும் அதிகாரம் உண்டு. அவரைத்தாம் சத்குரு என்று அழைக்கலாம். 


 

Thursday, 24 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


காலப்போக்கில் வீரபத்ரப்பா மரணமடைந்தான். பின்னர் சர்ப்பயோனியில் (பாம்பின் வயிற்றில்) பிறந்தான். இவ்விதமாக அவன் வேறு உடலுக்கு மாறினான். 

சனபசப்பா பயந்துகொண்டே வாழ்ந்தான்; அதுவே அவனுடைய முடிவுக்குக் காரணமாகியது. அவன் மறுபிறவியில் தவளையோனியில் பிறந்தான். அவனுடைய கதை அவ்வாறு. 

பூர்வஜென்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாக பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபசப்பாவை பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான். 

தவளையாகப் பிறந்த தீனன் சனபசப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது. 

முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபசப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பாலித்தேன் (காப்பாற்றினேன்). 

பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ! அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்?

அதுவே இங்கு பிரதக்ஷ்யமான (கண்கூடான) அனுபவமாக மலர்ந்தது. வீரபத்ரப்பா எங்கோ ஓடிவிட்டான். சனபசப்பா ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டான். ஈத்தனைத்தும் இறைவனின் லீலை! 

சரி, இப்பொழுது சிலீமை நிரப்பும். புகைக்குடித்த பிறகு நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். நீரும் உமது கிராமத்திற்கு திரும்பிச் செல்வீராக. ஆயினும், என்னுடைய நாமத்தைக் குறியாகக் கொள்வீராக!

இவ்வாறு பேசிய பிறகு நாங்கள் இருவரும் சிலீம் பிடித்தோம். சத்சங்கத்தின் சௌக்கியம் எனக்குக் கிடைத்தது.  அதன்பிறகு, நான் மெதுவாக வழி நடந்து திரும்பி வந்தேன். என் உள்ளத்தில் பரம திருப்தி நிலவியது. 

(சாயி சொன்ன கதை இங்கு முடிகிறது)

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பாம்பும் தவளையும்' என்னும் நாற்பத்தேழாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


 

Thursday, 17 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அன்று இரவே, தூங்கிக் கொண்டிருந்தபோது கௌரிபாய் ஒரு கனவுக்காட்சி கண்டாள்.  சங்கரர் கனவில் தோன்றினார்.  சங்கரர் என்ன சொன்னார் என்பதைக் கேளும். 

"பணம் அனைத்தும் உன்னுடையது. எவருக்கும் எதையும் கொடுக்காதே. நான் சொல்லும்படி செயல்பட்டு நிரந்தரமாக அதை நிருவாகம் செய்வாயாக.-

"இறைவனைப் பிரீதிசெய்ய என்ன செலவழிக்கிறாயோ அதைச் சனபசப்பாவின் சொற்படி செய்.  ஏனெனில், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். இதை ஒரு கண்டிப்பான நியதியாக அனுசரிப்பாயாக. -

"இதர காரியங்களில் பணம் செலவழிப்பதாக இருந்தால், நிர்வாக ஒழுங்கீனம் ஏதும் நேராமல் தடுக்கும் பொருட்டு, மசூதியிலிருக்கும் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் திட்டம் எதுவும் தீட்டக்கூடாது."

கௌரிபாயி தன் கனவுக்காட்சி முழுவதையும் எனக்கு விவரித்தாள். நானும் என் மனத்தில் உதித்தவாறு கனவுக்காட்சியை நம்பும்படி அவளுக்கு அறிவுரை கூறினேன். 

"உன்னுடைய அசலை நீ எடுத்துக்கொள். வட்டியில் பாதியை சனபசப்பாவுக்கு கொடு. இந்த விதியை முறைபிறழாது பின்பற்று. வீரபத்ரனுக்கு இதில் ஏதும் சம்பந்தம் இல்லை."

நானும் கௌரியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சண்டைபோட்டுக்கொண்டு அங்கு வந்தனர். இருவரையும் சாந்தமடையச் செய்ய நான் மிகவும் முயன்றேன். 

சங்கரர் கௌரிக்கு அருளிய கனவுக்காட்சியை இருவருக்கும் விவரமாக எடுத்துரைத்தேன். அதைக் கேட்ட வீரபத்திரன் உன்மத்தனானான் (வெறிகொண்டான்).

வீரபத்திரன் தன் எதிரியின்மேல் வசைமாரி பொழிந்தான். கன்னாபின்னாவென்று கத்தினான்.  அதைக் கேட்ட சனபசப்பா பயத்தால் வெலேவெலத்துப்போனான். 

வெறிபிடித்த வீரபத்ரப்பா எதிரியின்மேல் அபத்தமான சாபங்களை வாரியிறைத்துக்கொண்டே சூளுரைத்தான், "உன்னை நான் எங்கே பிடித்தாலும் அங்கேயே அழித்துவிடுவேன்."

வெறிபிடித்த வீரபத்ரப்பா சனபசப்பாவை நோக்கிக் கத்தினான், "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லாத் துண்டுகளையும் தின்றுவிடுவேன்."

பீதியால் பீடிக்கப்பட்ட சனபசப்பா என் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், "என்னை இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்றுங்கள்". நான் அப்பொழுது அவனுக்கு அபயமளித்தேன். 

தீனனாகிய சனபசப்பாவுக்கு அந்நேரத்தில் தைரியமளித்துச் சொன்னேன், "வீரபத்ரப்பாவின் கைகளில் நீ சாகும்படி நான் விடமாட்டேன்."


 

Thursday, 10 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

வீரபத்ரப்பா எதையும் கொடுக்க விரும்பவில்லை. சனபசப்பாவும்  விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இருவரும் என்னிடம் வந்தனர். 

நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "அந்த நிலத்தின் பூரண உரியமையாளர் சங்கரரே.  வேறு எவருக்கும் அது உபயோகப்படாது. ஆகவே, நீங்கள் இருவரும் வீணாகப் பேராசையில் மூழ்கவேண்டா.-

"நிர்ணயிக்கப்பட்ட விலை, சங்கரரைப் பிரீதி செய்ய அர்ப்பணம் செய்யப்பட்ட நிலத்தினையுடையதுதான் என்பது சர்வ நிச்சயம்.  கௌரியைத் தவிர வேறு எவனாவது இப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அவன் பட்டினி கிடந்தது சாக நேரிடும்.-

"இறைவனின் சம்மதிமின்றி இந்தப் பணத்தை எவனாவது தொட்டால், அவன் இறைவனின் கோபத்திற்கு காரணமாவான்.  ஏனெனில், இந்தச் செல்வம் சம்பூரணமாக இறைவனுடையது."

அந்த நிலம் பூஜாரிக்குச் சொந்தம். பூஜாரியின் வாரிசான கௌரிக்குதான் நிலத்தின்மேல் உரிமை உண்டு. வெளியார் இது விஷயமாக என்ன செய்யமுடியும்? செல்வம் முழுவதும் கௌரிக்கே சொந்தம். 

ஆகவே, நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "செல்வம் கௌரியினுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவளுடைய அனுமதியின்படி நடந்தால்தான் நீங்கள் இருவரும் பேறுபெற்றவர்கள் ஆவீர்கள். -

"அப்படியின்றி அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நீங்கள் நடந்தால், அது இறைவனுக்கு சம்மதமாகாது. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வீரபத்ரபாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை."

நான் என்னுடைய புடம்போட்ட அபிப்பிராயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியதால், வீரபத்திரன் என்மேல் கடுங்கோபம் கொண்டான்; என்னை இகழ்ந்து பேசினான். 

அவன் சொன்னான், "பாபா, என் மனைவியின் சொத்து உரிமையை நிர்த்தாரணம் செய்தபின், மொத்தப் பணத்தையும் விழுங்கிவிட்டு சுகமாக வாழலாம் என்ற சுயநல நோக்கம் உங்கள் மனத்தில் இருக்கிறது."

அவன் அவ்வாறு பேசியதைக் கேட்ட நான் வியப்பால் பேச்சிழந்துபோனேன்! அல்லாமியாவின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ! ஆகையால், நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்?

வீரபத்ரப்பா என்னிடம் இவ்வாறு பேசினான்.  வீட்டிலோ மனைவியின்மேல் கடுஞ்சினங்கொண்டு நெருப்பைக் கக்கினான். ஆகவே, பிற்பகலில் அவள் தரிசனம் செய்ய வந்தாள்; என்னிடம் கெஞ்சினாள்.   

"பாபா, வேறெவரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கிருபை செய்யாது அலட்சியப்படுத்திவிடாதீர்கள். பயபக்தியுடன் நான் வேண்டுகிறேன். உங்கள் மகளாகிய என்னிடம் இரக்கம் காட்டுங்கள்."

அவள் அவ்விதம் கெஞ்சியத்தைக் கேட்டு நான் அவளுக்கு மீண்டும் பூரணமாக உறுதியளிக்கும் வகையில் சொன்னேன், "என்னுடைய கிருபையால் உனக்கு எழுகடலையும் பரிசளிப்பேன் (ஏழு கடல்களையும் தாண்டிவந்து உன்னைப் பாதுகாப்பேன்). நீ சிறிதும் வருத்தப்படாதே."


 

Friday, 4 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பணம் என்பது ஒரு கண்ணி. பெரியோர்களும் பணக்காரர்களும் கூட அதன் அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. வீரபத்ரனையும் அவ்வப்பொழுது பணத்தட்டுப்பாடு கிள்ள ஆரம்பித்தது. பணத்தின் சேஷ்டை அத்தகையது! 

"பாபா, இல்லறத்தின் தளைகள் மிகத் துன்பமூட்டுபவை.  பணத்தட்டுப்பாட்டால் நான் துன்பப்படுகிறேன். குடும்பப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு வழி காட்டுங்கள். -

"உங்களுடைய பாதங்களில் விழுகிறேன். இவ்விதம் என்னை ஏமாற்றுவது தகாது. என்னுடைய சங்கடத்தை நிவாரணம் செய்யுங்கள். நீர்தான் என்னுடைய திருமணத்திற்குக் காரண கர்த்தா!"

நானும் அவனுக்குப் பல தருணங்களில் போதனை அளித்தேன்.  "இதை அல்லா மாலிக்தான் அறிவார்.  அவர்தான் உன் சங்கடத்தையும் நிவாரணம் செய்வார்" எண்டு சொல்லி அவனைப் பிரேமையுடன் ஆசீர்வாதமும் செய்தேன். 

வீரபத்ரனின் மனப்போக்கை அறிந்து, அவனுடைய மனோரதம் நிறைவேறவேண்டும் என்பதற்காக நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். 'சிறிதளவும் கவலைப்பட வேண்டா' என்றும் சொல்லுவேன். -

"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாகக் கிளர்ச்சியடையாதே.  கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்குச் செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதியாவாய்". (பாபாவின் நல்வாக்கு)

"செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ 'இந்தக் கொண்டுவா, அதைக் கொண்டுவா' என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கௌரவமே வேண்டா" (வீரபத்ரனின் பதில்) 

ஆனால், பின்னர் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கௌரியின் கிரகயோகத்தைப் பாரும்! தரிசு நிலத்தின் மதிப்பு திடீரென்று உயர்ந்தது. இறைவனின் லீலை மனித அறிவுக்கெட்டாதது!

ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்கத் தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார். பாதிப்பணத்தை ரொக்கமாக கொடுத்தார். மீதிப்பணத்தைத் தவணைகளில் செலுத்துவதாக வாக்களித்தார். 

அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ரூபாய், வட்டியுடன் சேர்த்துச் செலுத்தவேண்டும் என்றும், இவ்விதமாக மீதிப்பணம் முழுவதையும் அடுத்த இருப்பைத்தந்து ஆண்டுகளுக்குள் கொடுத்துத் தீர்த்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்முறையில் கௌரி பெரும்பணம் சேர்ப்பாள். 

இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சனபசப்பா எழுந்து நின்று சொன்னான், "சங்கரருக்கு எது சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு எஜமானன் குரவர் வம்சத்தவனே".

அவன் மேலும் சொன்னான், "வருடாந்திர வட்டியில், குரவரின் பங்கான பாதி வட்டித்தொகை என்னிடம் வந்து சேரவேண்டும். அது வராமல் நான் திருப்தி அடையமாட்டேன்."


 

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ! 


 

Thursday, 19 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை.  செல்வத்தைத் தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை!

நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன்! இந்த தானத்தால் என்ன புண்ணியம்? 

மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம்  (தூய்மையான செயல்), கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுபாவச் செயல். கடைசியில் துக்கத்தையே  தரும். 

சிவன் கோவிலில் பூஜை செய்துவந்த ஏழை அந்தணர், கோயில் மானியமாக நிலம் சம்பாதிக்கப்பட்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

ஆனாலும், சிறிது காலம் கழிந்த பிறகு ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிருத்திகை நட்சத்திர நாளன்று பயங்கரமாகப் புயல் அடித்தது. அடைமழை பெய்தது. பெருஞ்சேதத்தை விளைவித்தது. 

மின்னலுக்குமேல் மின்னலாக அடித்தது. வீடுகள் நாசமாயின. உரிமையாளர் எவர் என்று தெரியாதுபோயினும், வீடுகள் இருந்த பூமி மட்டும் ஆபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மற்றதனைத்தும் மிச்சம் மீதமின்றி எரிந்துபோயின. 

பணக்காரனும் வீழ்ச்சிக்குள்ளானான்.  அவனும் மனைவியுடன் இறந்து போனான். டு ப கீயும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டாள். மூவரின் வாழ்க்கையும் முடிந்துபோயிற்று. 

பின்னர் அப் பணக்காரன் மதுரா நகரத்தில் ஓர் ஏழைப் பிராமணனுக்கு மகனாகப் பிறந்தான். பக்தையான அவன் மனைவி ஒரு பூஜாரியின் குடும்பத்தில் பிறந்தாள். 

அவள் கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகீயின் விதியோ வேறுவிதமாக அமைந்தது. அவள் ஒரு சிவன் கோயில் 'குரவரின்' (கோயிலில் சுற்றுவேலை செய்பவரின்) மகனாகப் பிறந்தாள். 

நாமகரண தினத்தன்று இந்தப் பையன் சனபசப்பா என்று பெயரிடப்பட்டான். இவ்வாறாக இம்மூவரும் அவரவரின் கர்மபலனுக்கேற்ப  நிலைமாறினர். (அடுத்த ஜென்மம் எடுத்தனர்).

புனர்ஜன்மம் எடுத்த பணக்காரன் வீரபத்ரன் என்று பெயரிடப்பட்டான். பிரார்ப்த கர்மத்தின் (பழவினையின்) செயல்பாடு இவ்வாறே. முற்றிலும் நாம் அனுபவித்த பிறகுதான் வினைதீரும். 

சிவன் கோவில் பூஜாரியின் மேல் எனக்கு மிகுந்த பிரியம். அவர் தினமும் என்னுடைய வீட்டுக்கு வருவார். என்னுடன் சேர்ந்து புகை (சிலீம்) குடிப்பார். 

பிறகு நாங்கள் இருவரும் ஆனந்தம் நிரம்பியவர்களாய் இரவு முழுவுதும் பேசிக்கொண்டிருப்போம். ஆண்டுகள் கடந்தன. கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். அவளையும் பூஜாரி தம்முடன் அழைத்துக்கொண்டு வருவார். 


 

Thursday, 12 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான். 

பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-

'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'

ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான். 

அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -

"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".

கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள். 

டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று. 

ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான். 

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட  வலையில் மாட்டிக்கொள்ளலாகாது. 

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. 




Thursday, 5 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

"அதை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், நாம் முற்றும் ஏமாறிப்போவோம். தூக்கம் கெட்டதால் ஏற்பட்ட கனவை யாராவது வாஸ்தவமானதாக ஏற்றுக்கொள்வார்களா?" பணக்காரன் கடைசியில் வந்தடைந்த சித்தாந்தம் (முடிந்த முடிவு) இதுவே!

இதைக் கேட்ட மனைவி பேச்சிழந்துபோனாள்.  அவளால் கணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் நிதி திரட்டியது என்னவோ உண்மைதான்; ஆயினும், சந்தோஷத்துடன் கொடுத்தவர்கள் மிகச் சிலரே. 

தெய்வக்குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின் உந்துதலுக்கு இணங்கியோ, தர்மசங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துனைச் சிறியதனாலும் அதை விலையுர்ந்த பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். 

எப்போதெல்லாம் நிதி திரட்டப்பட்டதோ அப்போதெல்லாம் வேலை முன்னேறியது. பணம் வருவது நின்றபோது வேலையும் நின்றது. இவ்வாறாக வேலை தாமதமாகிக்கொண்டே போயிற்று. 

பணக்காரக் கஞ்சன் தன்னுடைய பணப்பையிலிருந்து ஒரு பைசாவும் செலவழிக்க மறுத்த நிலையில், அவன் மனைவிக்கு மறுபடியும் ஒரு கனவுக்காட்சி ஏற்பட்டது. எப்படியென்று சொல்கிறேன்; கேளும். 

"கோயிலுக்காகப் பணம் செலவிட வேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு. -

"உன்னுடையை பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய். -

"வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.-

"இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடு' என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள். -

"ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமானதன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை. 

"பாவம் இல்லாது எவன் கொடுக்கிறானோ, அவன் தருவது எந்த மதிப்பையும் பெறாது. கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமேதுமின்றி அனுபவப்பூர்மவாக அறிந்து கொள்வான்."

கனவுக்காட்சியில் இந்தச் சொற்களைக் கேட்ட பிறகு, தன் தந்தையால் சீதனமாக அளிக்கப்பட்ட அலங்கார ஆபரணங்களை விற்று, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வது என்று அவள் நிச்சயம் செய்துகொண்டாள். 


 

Thursday, 29 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறாக, மேற்கொண்டும் நிதி திரட்டப்பட்டு நேர்மையான முறையில் கஞ்சனின் கைக்கு வந்துசேர்ந்தது. அப்படியும் ஒரு பயனும் ஏற்படவில்லை. பணக்காரன் ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டான்.

இவ்வாறு சில நாள்கள் கழிந்தபின் மனம் வைத்தான். அந்த சமயத்தில் கஞ்சனின் மனைவிக்கு ஒரு சொப்பனக்காட்சி ஏற்பட்டது.

"நீயாவது எழுந்துபோய்க் கோயிலின் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழிப்பதைப்போல நூறுமடங்கு நீலகண்டன் (சிவன்) உனக்கு அளிப்பான்."

மறுநாள் காலையில், தன கனவுக்காட்சி விவரங்களை அவள் தன கணவனின் காதில் போட்டாள்.  கணவனோ ஒரு பைசா செலவழிப்பதற்கும் உயிரை விடுபவன். ஆகவே, இச் செய்தி அவனைக் கலவரமடையச் செய்தது.

இரவுபகலாகப் பணம் பண்ணுவதைத் தவிர வேறு விஷயம் எதைப்பற்றியும் சிந்திக்காதவன், பணம் செலவழிக்கும்படி வந்த சொப்பனச் செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வான்?

அவன் தன் மனைவியிடம் சொன்னான், "நான் இந்தக் கனவுக்காட்சியை நம்பமாட்டேன். இது விஷயமாக எனக்கு அறவே விசுவாசம் இல்லை."  மேலும் அவளை பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தான்.

ஒருவருடைய மனப்போக்கு எப்படியோ, அப்படியே அவருக்கு உலகம் காட்சியளிக்கன்றதன்றோ ! வஞ்சக இயல்பு உடையவனுக்கு மற்றவர்களும் வஞ்சகர்களாகவே தெரிகின்றனர்!

"கடவுள் என்னிடமிருந்துதான் தானம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாரானால், நான் என்ன உன்னிடமிருந்து வெகுதூரத்திலா இருந்தேன்? ஏன் அவர் உனக்கு மட்டும் கனவில் தோன்றினார்?-

"உனக்கு மட்டும் ஏன் கனவுக்காட்சி ஏற்பட்டது? எனக்கு ஏன் கடவுள் காட்சியளிக்கவில்லை? ஆகவே, இது ஏதும் பொருள் பொதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. கனவுக்காட்சியின் முக்கியத்துவமும் எனக்குப் பிடிபடவில்லை. -

"இந்த சொப்பனம் ஒரு போலி; அல்லது, கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்த விரும்பும் ஒரு தெய்வ எத்தனம். எனக்கு இந்த அறிகுறிதான் தெரிகிறது. -

"ஜீரணோத்தாரணப் பணியில் என்னுடைய நன்கொடை கம்மியா என்ன? மாதந்தோறும் நாம் நிரப்பிவைக்கும் பணப்பை காலியாகிவிடுகிறது. -

"மக்கள் ஏராளமான நிதியைக் கொண்டுவருவதுபோல வெளிபார்வைக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், இந்தப் பத்ததியில் (முறையில்) கணக்கு வைத்துக்கொள்வது என்பது எனக்குப் பெருநஷ்டம்.-

"ஆயினும், மக்களுக்கே விளங்காததை நீ எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்? ஆகவே, நீ கண்ட சொப்பனக்காட்சியை யதார்த்தமென்று ஏற்றுக்கொள்ள முடியாது.-


 

Friday, 23 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"சரி, சரி; முதலில் நாம் ஒரு மரத்தடிக்குச் செல்வோம். கொன்ஜம் சிலீம் பிடிப்போம். பிறகு நான் உம்முடைய விஷய ஆர்வத்தைப் பூர்த்திசெய்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய வசிப்பிடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்."

நாங்கள் இருவரும் ஒரு நிழலடர்ந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மறுபடியும் சிலீம் பற்றவைக்கப்பட்டது.

வழிப்போக்கர் முதலில் புகைக்குடித்தார். பிறகு சிலீமை என் கையில் கொடுத்தார். நான் புகைக்குடித்துக்கொண்டே அவருக்கு அந்தக் கவர்ச்சியான கதையைச் சொன்னேன்.

என்னுடைய இடத்திலிருந்த ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் ஒரு மஹிமை வாய்ந்த, பவித்திரமான புண்ணியத்தலம் இருந்தது.

அங்கே புராதனமான, பாழடைந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. அதை ஜீரணோத்தாரணம் (பழுதுபார்த்துப் புதுப்பித்தல்) செய்யவேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பினர்.

மக்கள் அதன்பொருட்டு நன்கொடை வசூலித்தனர். ஒரு பெரிய நிதி வசூலாகியது. நித்திய பூஜை, அர்ச்சனை ஆகிய வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரைபடங்களுடன் முழுமையான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அவ்வூரிலிருந்த ஒரு பெரிய பணக்காரன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டது. முழுப்பணமும் பூரணமான, முடிவெடுக்கும் அதிகாரமும் அவனிடம் அளிக்கப்பட்டன.

கோயிலுக்கென்று அவன் தனிக்கணக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய நன்கொடையைப் பணமாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இச்செயல்களை அவன் நேர்மையாகவும் பிழையின்றியும் செய்வான் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அம்மனிதன் இயல்பாகவே ஒரு பெருங்கஞ்சன். எச்சிற்க்கையால் காக்காய் ஓட்டாதவன். அதே தோரணையில் வேலையை நடத்த முயன்றான். இதன் விளைவாக, வேலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்லாப் பணமும் செலவழிந்துவிட்டது. அனால், வேலையோ அரைகுறையாகத்தான் முடிந்திருந்தது, தன்னுடைய ஜேபியிலிருந்து எதையும் அவன் செலவழிக்கவில்லை. ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு பெரிய லேவாதேவிக்காரன்; ஆயினும், கஞ்சத்தனத்தின் பூரணமான அவதாரம். பேச்சிலோ எப்பொழுதும் இனிமை; ஆனால், வேலை நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், பணம் வசூலித்த மக்கள் எல்லாரும் அவனுடைய வீட்டில் கூடினர். "உமது வட்டிக்கடை வியாபாரத்தால் என்ன பயன்?-

"உமது கையால் பாரம் தூக்காமல், சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி எவ்வாறு நிறைவேறும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே! இதைபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். -

"மக்களை இசையச் செய்து, மறுபடியும் நிதி வசூல் செய்கிறோம். அந்தத் தொகையையும் உம்மிடம் தருகிறோம். ஆனால், நீங்கள் சிவன் கோயில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டும்."

 


 

Thursday, 15 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-

"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"

சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.

மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.

அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா.  அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."

அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.

"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-

"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"

என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது.  சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.

மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-

"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"




Thursday, 8 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தாங்கள் என்னுடைய இல்லத்திலேயே கொஞ்சம் சோளரொட்டி உண்ணலாம். பின்னர் சிறிது ஓய்வெடுக்கலாம். வெயில் தாழ்ந்த பின் சௌகரியமாகத் திரும்பி செல்லலாம்.

"திரும்புகாலில் நானும் உங்களுடன் வருகிறேன்". இவ்வாறு என்னிடம் அந்த வழிப்போக்கர் சிலீமைத் தயார் செய்து, பயபக்தியுடன் என்னிடம் புகைகுடிக்கக் கொடுத்தார்.

அங்கோ, தவளை பரிதாபகரமான குரலில் கதற ஆரம்பித்தது. ஆகவே, அந்த வழிப்போக்கர் என்னை வினவினார், "யார் இப்படி அலறுவது?".

அவருக்கு நான் பதில் சொன்னேன், "ஒரு தவளை நதிக்கரை அருகில் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அவனுடைய கர்மவினை அவனைத் துரத்துகிறது.  நான் உமக்குச் சொல்லப் போகும் கதையைக் கேளும்."

போன ஜென்மத்தில் என்ன செய்தாயோ அதற்கேற்ப இந்த ஜென்மத்தில் அனுபவி. கர்மவினையின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். இப்பொழுது அலறுவதால் என்ன பயன்? (தவளைக்கு உபதேசம்)

இதைக் கேட்ட வழிப்போக்கர் சிலீமை என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நிதானமாக நடந்தவாறே சொன்னார், "நான் போய்ப் பார்க்கிறேன்.-

"இவ்விதம் கத்துவது தவளையா அல்லது வேறு ஏதாவது பிராணியா? மனத்திலிருந்து சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு நேர்ந்திருக்கும் ஆபத்து என்னவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்."

அவருடைய நாட்டம் அதுவே என்று தெரிந்து கொண்ட பின் நான் சொன்னேன், "நீரே போய்ப்பாரும். பெரிய பாம்பு ஒன்றின் வாயில் பிடிபட்டு ஒரு தவளை ஓலமிடுகிறது. -

"இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜென்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்."

இதைபற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண்டிருந்ததை பிரத்யட்சமாக பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், "நீக்கினால் சொன்ன விவரம் உண்மைதான்.-

"விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது. -

"இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி! சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்!"

ஆகவே, நான் அவரிடம் கூறினேன்,"ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும்! பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-


 

Thursday, 1 May 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இது சம்பந்தமாக, சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்க்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை சாயி மாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.

சாயியே தம்முடைய கதைக்குச் சரித்திரக்காரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்திரதாரி அவரே!

(ஹேமாட் சொன்ன கதை இங்கு ஆரம்பம்)

ஒருநாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.

வழி நடந்து, நடந்து களைத்துபோனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.

அந்த நதியும்  ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இரு கறைகளை தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.

அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.

மெல்லிய பூங்காற்று வீசி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழலில் நிம்மதியாக உட்கார்ந்தேன்.

புகை குடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியை' நீரில் நனைப்பதற்காக துறைக்குச் சென்றேன். அப்பொழுது "க்ரோக், க்ரோக்" என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒலி என்று நான் நினைத்தேன்.

அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கி முக்கிக்கல்லை கையிலெடுத்தேன்.

சிக்கிமுக்கிகல் நெருப்பு பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.

மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், "நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்!-

"மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம். -


 

Thursday, 24 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

கர்மவினையின் சூத்திரம் ஆகாயத்தைப் போலப் பெரியது. அதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மஹா பண்டிதர்களும் இந்த விஷயத்தில் ஏமாற்றமடைகின்றனர். (BHA)  பாவமுள்ள பக்தர்களோ, அதிகம் படிக்காதவர்களாயினும் காப்பாற்றப்படுகின்றனர்.

அதுபோலவே, இறைவனின் நியமத்தைத் தாண்டுவது இயலாத காரியம். அதனுடைய கிரமத்தை எவரால் மீறமுடியும்? ஆகையால், உலகியல் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தருமநெறிகளின்படி ஒழுகி, எப்பொழுதும் கடமைகளைச் செவ்வனே செய்யுங்கள்.

அவ்வாறு செய்யாமல் அதருமநெறியில் வாழ்வபவன், மரணத்திற்குப் பிறகு, தான் என்னென்ன தீவினைகளை செய்தானோ, அவற்றுக்கேற்றவாறு அடுத்த ஜன்மம் எடுக்கிறான்.

மரணத்திற்குப் பிறகு, தன்னுடைய கர்மவினைகளுக்கும் கேள்விஞானத்திற்கும் ஏற்றவாறு சுக்கிலபீஜமாக (விந்தாக) மாறி, யோனித்துவாரத்திற்குள் அவர் பிரவேசிக்கிறான். மறுபடியும் மனிதஜென்மம் எடுக்கிறான். வேறொருவன் அதே சட்டத்தின்படி ஸ்தாவர (நகரமுடியாத பொருளாக) ஜன்மம் எடுக்கிறான்.

'கடைசி பிரக்ஞை  எப்படியோ அப்படியே மறுபிறப்பு' என்னும் வேதவசனத்தின் பொருளை அறியாதவர் யார்? இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்று விரும்புபவர், அவர் ஆசைப்படும் பிறவியைப் பெறவேண்டாமா?

இன்னுமொரு சரீரமும் எடுக்கவேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மூடர்கள், அவர்கள் சம்பாதித்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் அடுத்த சரீரம் கிடைக்கும் என்பதை நன்கு அறிய வேண்டும்.

ஆகையால், விலைமதிப்பற்ற மனிதஜென்மம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தேகம் கீழே விழுவதற்கு முன்னதாகவே ஆத்மஞானம் பெறுபவனை உண்மையிலேயே விவேகமுள்ளவன் என்று சொல்லுவேன்.

அவனே சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைகிறான். மற்றவர்கள் வாழ்க்கைச் சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள்.  அவர்களால் இன்னுமொரு பிறவி எடுப்பதைத் தவிர்க்கமுடியாது. மறுபிறவியின் யாதனைகளையும் தடுக்கமுடியாது.

இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், 'இந்த உடல்தான் நான்' என்னும் தீய இயல்பு கீழே அமிழ்த்தப்பட்டு சாத்துவிகமான அஷ்டபாவம் எழுப்பப்படும்.

கோடிகோடியாய்ப் பணத்தை வைத்துக்கொண்டு சுபாவத்தில் கடுங்கஞ்சனாக வாழ்பவனின் ஜீவன் பரிதாபத்திற்குரியது. மரணப்பரியந்தம்  (மரணடையும்வரை) அவன் அலுப்பையும் சலிப்பையுமே அனுபவிப்பான்.

மேலும், விரோதத்தை வளர்ப்பது எக்காலத்தும் நன்றன்று. விரோதம் தோன்ற முயலும்போது, உன் மனத்தால் அதை அடக்கு. அடக்காவிட்டால், அது உன் வாழ்வையே நாசம் செய்துவிடும்.

பரஸ்பர விரோதம் உத்தமமான ஜன்மத்திலிருந்து இழிவான ஜன்மத்துக்கு இழுத்துச் செல்லும். கடம், விரோதம், கொலை இவற்றின் விளைவுகள், ஒரு மனிதனை ஜன்மத்தை அடுத்து ஜென்மமாக, வினை தீரும்வரை தொடரும்.

 


 

Thursday, 17 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மஹானுபவரான சாயி, அவரே சொல்லும் கதையின் அற்புதத்தைக்  கேட்டுக் கதை கேட்பவர்கள் மெய்மறந்து போவார்கள். அன்பால் விளையும் அஷ்டபாவம் அவர்களை ஆட்கொள்ளும்!

இக் கதை சாயியின் நேரிடைத் திருவாய்மொழி.  இதனுடைய  தாத்பரியத்தின்மீது (உட்கருத்தின்மீது) கண்வைத்து நுண்பொருள் உணர்பவர் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவர் ஆவார்.

கதைகேட்பவர்களே, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பீர்களாக. நான்தான் இக் கதையைச் சொல்லுபவன். ஆயினும், நான் சாரமறிந்து ஈடுபாட்டுடன் சொல்லாவிட்டால், நானும் உங்களுக்குச் சமானமாகிவிடுவேன் (கதை சொல்லும் தகுதியை இழந்துவிடுவேன்).

பக்தர்களின்பால் சாயி வைத்திருந்த பிரேமையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது, மனம் தன்னுடைய இயல்பாய் மறந்துவிடுகிறது. உலகவாழ்க்கையின் நடுக்கம் மறைந்து, சாந்தி பிறக்கிறது. இதைவிடப் பெரிய லாபம் ஏதும் உண்டோ?

கதைகேட்பவர்களே, முன்பு சொன்ன கதைக்கும் இந்தக் கதைக்கும் உண்டான தொடர்பைக் கவனத்துடன் கேளுங்கள். மனம் சிதறாமல் கேட்டால், உங்களுடைய ஜீவன் திருப்தியடையும்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் ஆடுகளின் கதையைக் கேட்டீர்கள். பாபாவுக்கு ஆடுகளின் மீது ஏற்பட்ட பிரீத்திபற்றியும், அவற்றின் பூர்வஜென்ம வரலாறு அவருக்கு ஞாபகம் வந்த விவரத்தையும் கேட்டீர்கள்.

அந்தக் காதையைப் போலவே, பணத்தாசை எவ்வாறு மனிதனை பரம அவஸ்தைக்குள்ளாக்கி அதலபாதாளத்தில் வீழ்த்துகிறது என்பதை விளக்கும் இந்தக் கதையையும் கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே பூரணமான அருள்நோக்குடன் ஒன்றன்பின் ஒன்றாக எந்தக் கதையைச் சொல்லவேண்டுமென்று சூசகமாகத் தெரிவித்துக் கதை கேட்பதில் தடங்கல் ஏதும் வராமல் செய்கிறார்.  இதனால், கேட்பவர்களின் சுகமும் திருப்தியும் அதிகமாகின்றன அல்லவோ?

கதையும் கதையைச் சொல்லுபவரும் விவரணமும் சாயியாக இருக்கும்போது, இந்த ஹேமாட் பந்துக்கு இங்கென்ன வேலை? அது வெறும் புனைபெயர் அன்றோ!

சாயிகதை என்னும் சமுத்திரக்கனியில் உட்கார்ந்திருக்கும் நாம், கதைகளுக்காக கல்லுடைத்துக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பவரின் ஆசை, உதித்தக்கனமே நிறைவேறும் அன்றோ!

சூரியனின் இல்லத்தில் விளைக்கைப்பற்றி எவராவது கவலைப்படுவாரா? நிரந்தரமாக தேவாமிர்தத்தை அருந்திக்கொண்டிருப்பவருடைய மனத்தில் விஷத்தைப்பற்றிய எண்ண அலைகள் எழுமா?

சாயியைப் போன்ற தெய்வம் நம்மை என்றும் காத்து அருள் செய்யும்போது, அமிர்தம் போன்று இனிக்கும் கதைகளுக்கு நமக்கென்ன பஞ்சம்? உங்கள் இதயம் திருப்தியடையும் வரை கதைகளை ருசித்து அருந்துங்கள். 



Thursday, 10 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


47. பாம்பும் தவளையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் ஸ்ரீம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜென்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான சாயியின் முகம் புனிதமானது.

சாயியின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.

எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.

உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாதத்துளிக்காக (அடிபொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.

'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?" என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.

சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான சமர்த்த சாயியின் திருவாய்மொழி  இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பக்தியுடன் கேளுங்கள்.

இக் கதையின் மகத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்)  கதை இது!

எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒலியுமான சாயி, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார். 



Thursday, 3 April 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சதையில் நெருங்கிக்கொண்டிருக்கும் முள் இவன். இம் முள்ளை எடுத்துவிட்டால் செல்வத்திற்குக் குறைவே இருக்காது. ' இவ்விதமான எண்ணத்தாலும் பேராசையாலும் மூழ்கடிக்கப்பட்டு அண்ணன் கெட்ட வழிகளில் இறங்கினான்.-

"இம்மாதிரியான பணத்தாசையும் பேராசையும் கண்ணை மறைத்துவிடும். ஆகவே, கண்ணிருந்தும் குருடனாகி சகோதர பாசத்தையே மறந்துவிட்டான். தம்பியைக் கொன்று விடவேண்டும் என முடிவு செய்து, செயலிலும் இறங்கிவிட்டான்.-

"பிராப்தம் (பூர்வஜென்மவினை) கொண்டுவரும் துன்பம் மிகக் கொடுமையானதன்றோ! அது அனாவசியமான பகையை விதைத்தது. பேராசை கட்டுக்கடங்காமல் போய், கொடுமையானதும் மருமமாகத் தீட்டப்பட்டதுமான சாதியொன்று உருவாகியது.-

"அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிட்டது. ஆகவே, சகோதர பாசத்தை அறவே மறந்துவிட்டு அஹங்காரத்தினால் கோபமடைந்தனர். பரம வைரிகள் போல இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். -

"ஒருவன் மற்றவனைத் தடியெடுத்து பலமாக மண்டையில் அடித்தான். மற்றவன் முதல்வனைக் கோடரிக்கொண்டு தாக்கினான். சகோதரர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டனர். -

"இருவரும் ரத்தக்களரி ரணகளரியாக மூர்ச்சையடைந்து கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் இரு உடல்களிலிருந்தும் உயிர் பிரிந்தது. இவ்வாறு அவ்விருவரும் மரணமடைந்தனர். -

"அவ்வாறு இறந்த பிறகு, இந்த யோனியில் புகுந்தனர். இதுவே அவர்களுடைய காதை; அவர்களைப் பார்த்தவுடனே எனக்கு விரிவாக ஞாபகம் வந்தது. -

"அவர்களுடைய கர்மவினையைத் தீர்ப்பதற்காக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். மந்தையில் அவர்களைப் பார்த்ததும் எனக்குப் பிரேம ஆவேசம் ஏற்பட்டது. -

"ஆகவே, என்னுடைய பையிலிருந்தும் பணம் செலவழித்து அவர்களுக்குச் சிறிது விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளிக்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால், உங்களுடைய ரூபத்தில் அவர்களுடைய கர்மவினை அதைத் தடுத்துவிட்டது. -

"ஆடுகளின்மேல் எனக்கு கருணைபிறந்தது; ஆயினும் உங்களுடைய நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, நானும் கடைசியில் ஆடுகளை இடையரிடம் திருப்பி அனுப்பிவிட்டேன். "

ஆக, இக் காதை இங்கு முடிகிறது. வாசகர்களே, என்னை மன்னிப்பீர்களாக! பிறகு, அடுத்த அத்தியாயத்தை படிக்கும்பொழுது உங்கள்  மனம் மகிழும்.

அடுத்த அத்தியாயம் சாயியின் திருவாய்மொழி அடங்கியதாகையால் , அன்பு பொங்கிவழியும் அத்தியாயமாகும்.  சாயியின் பாதகமலங்களில் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, ஹேமாட் கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காசி - கயா புனிதப் பயணம், மேலும் ஆடுகளின் பூர்வஜன்மக் காதை' என்னும் நாற்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday, 27 March 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் இருவருடைய கட்டாயத்தால் பாபாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு வீடு வாசலில்லை; உட்காருவதற்கென்றும்கூட ஓர் இடமில்லை; எனக்குச் சொத்துபத்துக்கள் எதற்காக?-

"முதலில் கடைக்குப் போய் ஒரு சேர் தனிப்பருப்பு வாங்கிக்கொண்டு வாருங்கள். ஆடுகளை வயிறுமுட்டும் வரை தின்னவையுங்கள். பிறகு ஆடுகளை ஆட்டிடையரிடமே திருப்பி அனுப்பி விடுங்கள்."

ஆணையை நிறைவேற்றும் வகையில் உடனே ஆடுகளுக்குப் பருப்பு தீனியாகக் கொடுக்கப்பட்டது. காலந்தாழ்த்தாமல் உடனே ஆடுகள் ஆட்டிடையரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

பரோபகாரமே உருவெடுத்த சாயி உண்மையிலேயே ஓர் அவதாரபுருஷர். தாத்யாவோ வேறெவரோ, நல்லெண்ணத்தையோ இரக்கத்தையோ அவர் மனத்தில் ஊட்டிவிட முடியுமா என்ன!

அன்புடன் ஆடுகளுக்குப் பருப்பை ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது என்று தெரிந்த பின்னர், "இவ்வாடுகளை சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மந்தையுடன் போய்ச் சேரட்டும்" என்று பாபா சொன்னார்.

இவ்விதமாகப் பணமும் போயிற்று! ஆடுகளும் போயின! அப்பொழுது பாபா ஆடுகளுடைய வினோதமான பூர்வஜென்ம கதையை முழுக்க எடுத்துரைத்தார்.

பாபாவுக்குத் தாத்யாவும் சாமாவும் ஒன்றே. இருவரிடமுமே அவர் சமமாக அன்பு செலுத்தினார். அவர்களுடைய கோபத்தை தணிப்பதற்காக, பாபா மனோரஞ்சிதமான இக் கதையை விரிவாகச் சொன்னார்.

சாயி தாமாகவே அவ்வாடுகளின் முன்ஜன்ம கதையை எடுத்தியம்பினார். நீங்களும் கேளுங்கள்.

"முற்பிறவியில் இவ்விரு ஆடுகளும் அதிருஷ்டம் வாய்ந்தவை. மனிதர்களாகப் பிறந்து என்னுடன் இருந்தார்கள். ஆனால், அவர்களும் கர்மவினையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

"நீங்கள் பார்த்த இவ்விரு ஆடுகள் இதற்கு முந்தைய பிறவியில் சகோதரர்கள். ஒருவரோடுவர் கோரமாக சண்டையிட்டுக்கொண்டு இறந்தார்கள்; விளைவு இவ்விதம் ஆகியது. -

"ஆரம்பகாலத்தில் இருவருக்குமிடையே மிக்க பாசம் இருந்தது; சகோதரர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள்; ஒன்றாகவே தூங்குவார்கள். பரஸ்பரம் நல்வாழவையே விரும்பினர். இருவருக்குமிடையே மகத்தான ஒற்றுமை நிலவியது,-

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாயினும், கர்மவினையாலும் விதிவசத்தாலும் பணம் குவிக்கவேண்டுமென்ற பேராசை அவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கியது.-

"அண்ணன் ஒரு படு சோம்பேறி; ஆனால், தம்பியோ ஊக்கமுள்ளவன்; இரவுபகல் பாராமல் உழைப்பவன். உழைப்பின் விளைவாகத் தம்பி பெரும்பொருள் குவித்தான். இதைப் பார்த்த அண்ணனிடம் பொறாமை விளைந்தது.-