ஷீர்டி சாயி சத்சரிதம்
அன்று இரவே, தூங்கிக் கொண்டிருந்தபோது கௌரிபாய் ஒரு கனவுக்காட்சி கண்டாள். சங்கரர் கனவில் தோன்றினார். சங்கரர் என்ன சொன்னார் என்பதைக் கேளும்.
"பணம் அனைத்தும் உன்னுடையது. எவருக்கும் எதையும் கொடுக்காதே. நான் சொல்லும்படி செயல்பட்டு நிரந்தரமாக அதை நிருவாகம் செய்வாயாக.-
"இறைவனைப் பிரீதிசெய்ய என்ன செலவழிக்கிறாயோ அதைச் சனபசப்பாவின் சொற்படி செய். ஏனெனில், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். இதை ஒரு கண்டிப்பான நியதியாக அனுசரிப்பாயாக. -
"இதர காரியங்களில் பணம் செலவழிப்பதாக இருந்தால், நிர்வாக ஒழுங்கீனம் ஏதும் நேராமல் தடுக்கும் பொருட்டு, மசூதியிலிருக்கும் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் திட்டம் எதுவும் தீட்டக்கூடாது."
கௌரிபாயி தன் கனவுக்காட்சி முழுவதையும் எனக்கு விவரித்தாள். நானும் என் மனத்தில் உதித்தவாறு கனவுக்காட்சியை நம்பும்படி அவளுக்கு அறிவுரை கூறினேன்.
"உன்னுடைய அசலை நீ எடுத்துக்கொள். வட்டியில் பாதியை சனபசப்பாவுக்கு கொடு. இந்த விதியை முறைபிறழாது பின்பற்று. வீரபத்ரனுக்கு இதில் ஏதும் சம்பந்தம் இல்லை."
நானும் கௌரியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சண்டைபோட்டுக்கொண்டு அங்கு வந்தனர். இருவரையும் சாந்தமடையச் செய்ய நான் மிகவும் முயன்றேன்.
சங்கரர் கௌரிக்கு அருளிய கனவுக்காட்சியை இருவருக்கும் விவரமாக எடுத்துரைத்தேன். அதைக் கேட்ட வீரபத்திரன் உன்மத்தனானான் (வெறிகொண்டான்).
வீரபத்திரன் தன் எதிரியின்மேல் வசைமாரி பொழிந்தான். கன்னாபின்னாவென்று கத்தினான். அதைக் கேட்ட சனபசப்பா பயத்தால் வெலேவெலத்துப்போனான்.
வெறிபிடித்த வீரபத்ரப்பா எதிரியின்மேல் அபத்தமான சாபங்களை வாரியிறைத்துக்கொண்டே சூளுரைத்தான், "உன்னை நான் எங்கே பிடித்தாலும் அங்கேயே அழித்துவிடுவேன்."
வெறிபிடித்த வீரபத்ரப்பா சனபசப்பாவை நோக்கிக் கத்தினான், "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லாத் துண்டுகளையும் தின்றுவிடுவேன்."
பீதியால் பீடிக்கப்பட்ட சனபசப்பா என் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், "என்னை இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்றுங்கள்". நான் அப்பொழுது அவனுக்கு அபயமளித்தேன்.
தீனனாகிய சனபசப்பாவுக்கு அந்நேரத்தில் தைரியமளித்துச் சொன்னேன், "வீரபத்ரப்பாவின் கைகளில் நீ சாகும்படி நான் விடமாட்டேன்."

No comments:
Post a Comment